சனி, 6 மார்ச், 2010

சிட்டுக்குருவி


குளிர் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணம் கொண்ட ஒரு சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது. இலையுதிர் காலத்தின் இறுதிக்கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென் திசை நோக்கி பறக்க தயாராகின. ஆனால், இந்த சிட்டுக்குருவி மட்டும் அவைகளோடு செல்லக்கூடாது என்று தீர்மானித்துக்கொண்டது.

குளிர்காலம் வந்தது. குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குருவி கலங்கிவிட்டது. கடைசியில் அது தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்தபோது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து, இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது.

அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்க விடாமல் செய்தது. அடுத்த நொடியே அது மரத்திலிருந்து கீழே விழுந்தது. அந்த குருவி விழுந்த இடம் ஒரு விவசாயின் வீட்டு முற்றம்.

அந்த வழியாக வந்த ஒரு பசுமாடு, கீழே கிடந்த அந்த சிட்டுக்குருவி மீது சாணம் போட்டுவிட்டு சென்றது. சிட்டுக்குருவிக்கு மூச்சு திணறினாலும், சாணத்தின் வெப்பம் அதற்கு இதமாக இருந்தது. உடனே அந்த குருவி மகிழ்ச்சியில் பாட ஆரம்பித்துவிட்டது.


இதைக்கேட்ட அந்த வழியாக சென்ற ஒரு பூனை அங்கு வந்தது. சிட்டுக்குருவியை பார்த்ததும், அதை லபக்கென்று பிடித்து விழுங்கிவிட்டது.
இந்த கதையில் 3 கருத்துகள் உள்ளன. அவை :

1. உன் மீது சாணம் போடுபவன் உன் எதிரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

2. உன்னை சாணத்தில் இருந்து அகற்றுபவன் உன் நண்பனாக இருக்க வேண்டும் என்பதில்லை.

3. நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்றால் அதை அமைதியாய் அனுபவி.

- இந்த கதையை சொன்னவர் ஓஷோ.
Share:

0 கருத்துகள்: