செவ்வாய், 28 செப்டம்பர், 2010

சைவ உணவுகளில் தாய்ப்பால் ரகசியம்

பிறந்த குழந்தைக்கு ஏற்ற உணவு தாய்ப்பால் தான். ஆனால் ஏனோ, இன்றைய தாய்மார்களில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு புட்டிப்பால் தான் கொடுக்கிறார்கள். தாய்ப்பால் சரியாக சுரக்கவில்லை, அழகு கெட்டுப்போய்விடும் என்றெல்லாம் அதற்கு காரணம் சொல்கிறார்கள்.


குழந்தை பெற்ற தாய்மார்கள், தினமும் உண்ணும் உணவில் அத்தியாவசியமான சில பொருட்களை சேர்த்துக்கொண்டாலே போதும். தாய்ப்பால் தாராளமாக சுரக்க ஆரம்பித்துவிடும்.

இதற்கு என்ன செய்யலாம்?

கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் மற்றும் பச்சைக்காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் அதிகம் உள்ளன. இவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதச்சத்தும், மாவுச்சத்தும், வைட்டமின்களும் உள்ளன. இவை, பெண்களின் புரோகஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் உற்பத்தியை பெருக்கி, தாய்ப்பால் அதிகம் சுரக்க வழிவகை செய்கின்றன.

அதிக புரதச்சத்து கொண்ட உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் மற்றும் பால் வகை பொருட்கள், மீன் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பேரீச்சம்பழம், திராட்சை, கேழ்வரகு, அவல், கோதுமை, சோயாபீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதும் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும்.

இவற்றுடன், தினமும் 5 முதல் 6 கப் வரையிலான பசும்பால் உட்கொண்டு வந்தாலும் தாய்ப்பால் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துவதில் சைவ உணவு வகைகள் தான் முதலிடம் பெறுகின்றன. அதனால், மேற்படி உணவு வகைகளை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் செய்துவிடலாம்.


Share:

அந்த விஷயத்தில் இவர்கள் கொஞ்சம் 'வீக்'


காண்டம் அணியும் விஷயத்தில் இன்றைய இளைஞர்கள் தடுமாடுகிறார்கள் என்று சொல்கிறது சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட சர்வே ஒன்று.

செக்ஸ் மற்றும் அதனால் ஏற்படுகிற பெண் கருத்தரித்தல் குறித்து ஆண்கள், பெண்கள் இடையே இந்த சர்வே நடத்தப்பட்டது. திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத இளைஞர்கள், இளைஞிகள் இதில் பங்கேற்றனர்.

உடலுறவின்போது என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுகிறீர்கள்? கருத்தடை சாதனம் பயன்படுத்தினீர்களா?

எச்.ஐ.வி. எப்படி தொற்றுகிறது என்று தெரியுமா? என்கிற விழிப்புணர்வு கேள்விகளுடன், அவர்களது திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் அனுபவங்கள் பற்றியும் கேள்விகள் கேட்டனர்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் எய்ட்ஸ் பற்றியும், அது தொற்றும் விதம் பற்றியும் தெரிந்து வைத்திருந்தனர். ஆனால், எச்.ஐ.வி. தவிர்த்து பிற பால்வினை நோய்கள் பற்றிய விழிப்புணர்வு அவர்களிடம் குறைவாகவே இருந்தது. 31 சதவீத ஆண்களும், 12 சதவீத பெண்களுமே அதுபற்றி தங்களுக்கு தெரியும் என்று கூறியிருந்தனர். மற்றவர்கள் தெரியாது என்று கைவிரித்துவிட்டனர்.

கருத்தடை சாதனங்கள் பற்றிய கேள்விகளுக்கு ஆர்வமாகவே பதில் அளித்தனர். ஆணுறை மூலம் பாதுகாப்பான உடலுறவு மேற்கொள்ளலாம், எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம் என்ற விழிப்புணர்வை 77 சதவீத ஆண்களும், 39 சதவீத பெண்களும் பெற்றிருந்தனர். வாய் வழியாக உட்கொள்ளும் கருத்தடை மாத்திரை பற்றிய விஷயத்தில் ஆண்கள் கொஞ்சம் தடுமாறித்தான் போய்விட்டனர். 20 சதவீத ஆண்கள் மட்டுமே அதுபற்றி தங்களுக்கு தெரியும் என்றனர். பெண்களில் 24 சதவீதம்பேர் கருத்தடை மாத்திரை பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளதாக கூறினர்.

திருமணம் ஆனவர்களிடம், திருமணத்திற்கு முன்னர் இந்த விழிப்புணர்வு பற்றி தெரியுமா? என்று கேட்டபோது தெரியாது என்று கைவிரித்துவிட்டனர். அவர்களில் 22 சதவீத ஆண்களும், 6 சதவீத பெண்களும் செக்ஸ் மற்றும் கருத்தடை தொடர்பான விஷயங்களை கேள்விப்படவே இல்லை என்று அப்பாவியாகச் சொன்னபோது, இந்த காலத்திலும் இப்படி இருக்குதா? என்று மூக்கின் மேல் விரலை வைத்தனர் ஆய்வாளர்கள்.

ஆக, கூட்டிக் கழித்து கணக்குப் போட்ட அவர்கள், இந்திய ஆண்களும், பெண்களும் கருத்தடை சாதனங்கள் மற்றும் செக்ஸ் விழிப்புணர்வு பற்றி தெரியாமலேயே திருமண வாழ்க்கைக்குள் நுழைகின்றனர் என்ற முடிவுக்கு வந்தனர்.

திருமணத்திற்கு முன்னரான செக்ஸ் உறவு பற்றிய கேள்விக்கு பதில் அளித்தவர்களில் ஆண்கள்தான் மெஜாரிட்டி. 74 சதவீத ஆண்கள் தங்களது காதலியோடு பழகியதாகவும், அவர்களில் நான்கில் ஒரு பகுதியினரே காதலியுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டதாகவும் வாய் திறந்தனர்.

பெண்களைப் பொறுத்தவரை ஐந்தில் 3 பேர் காதலன்களுடன் காதல் வளர்த்ததாக கூறினர். ஆனால், அவர்களில் 10 சதவீதம் பேரே உடலுறவில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

மேலும், திருமணத்திற்கு முன்பு காதலியுடனோ அல்லது விலை மாதுடனோ அல்லது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பெண்ணுடனோ உறவு கொண்ட ஆண்களில் பெரும்பாலானவர்கள், தாங்கள் பாதுகாப்பாற்ற உறவில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். அதேபோல், பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தாங்கள் விரும்பாமலேயே அந்த உறவில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

ஆக, எங்கேயோ போய் கொண்டு இருக்கிறது இந்த உறவு. இந்த விஷயத்தில் இன்றைய இளைஞர்களிடம் போதிய விழிப்புணர்வு இன்னமும் ஏற்படவில்லை என்பதையே மேற்படி ஆய்வு உணர்த்துகிறது.

Share:

சனி, 25 செப்டம்பர், 2010

அய்யா வைகுண்டர் - பகுதி 1


1.நாஞ்சில் நாட்டின் கதை
- நெல்லை விவேகநந்தா -


கேரளாவிற்கும் சென்னை மாகாணமாக இருந்த தமிழ்நாட்டிற்கும் இயற்கை அள்ளிக் கொடுத்த பரிசுகள் ஏராளம். மேற்குத் தொடர்ச்சி மலையைத் தன்னகத்தே கொண்ட கேரளாவிலும், தமிழகத்தின் தென்பகுதியிலும் உள்ள மலைப் பகுதிகளில் நன்கு வளர்ந்த ரப்பர் மரங்கள் நிறைந்த தோட்டங்கள், மிகப் பெரிய கனிகளைத் தரும் முக்கனிகளுள் இரண்டாவதான பலா மரங்கள் மற்றும் வாழைத் தோட்டங்கள், தென்னை மரங்கள், பனை மரங்கள், மிளகு, காபி, தேயிலைச் செடிகளின் அணிவகுப்புகள்... என்று, காணும் திசையெங்கும் பசுமையின் பாய் விரிப்பு. வருடத்தின் எல்லா நாட்களும் சலசலத்துக்கொண்டு ஓடும் நீரோடைகள், இறைச்சலுடன் பாயும் ஆறுகள், வெள்ளியை உருக்கிக் கொட்டுவது போன்ற நீர்வீழ்ச்சிகள்... என்று கேரளத்தின் அடையாளங்கள் ஏராளம்.

இந்த கேரள மாநிலத்தின் தென் பகுதிகளையும், இன்றைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கி இருந்த ஒரு சமஸ்தானம்தான் திருவிதாங்கூர். திருவனந்தபுரம் இவர்களது தலைநகரமாக இருந்தது. வெள்ளி நிறத்தில் வலம்புரிச் சங்கு பொறித்த செம்மை நிறக் கொடி, இந்த சமஸ்தானக் கொடியாக திகழ்ந்தது. 

இந்த சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்ததுதான் நாஞ்சில் நாடு. வயலில் உழுவதற்கு பயன்படும் கலப்பைக்கு நாஞ்சில் என்ற பெயரும் உண்டு. இந்த பகுதியில் உழவுத் தொழில் அதிக அளவில் நடந்ததால், இப்பகுதி நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்டது. இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம், பூக்களுக்கு பெயர்போன தோவாளை ஆகிய வட்டங்களை உள்ளடக்கி பகுதிதான் நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்டது.

இந்த நாஞ்சில் நாடு 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பாண்டிய மன்னர்களின் ஆட்சிப் பகுதியாக இருந்தது. அதன்பின், சேரர்கள் வசம் வந்தது. அவர்களுக்குப் பின் ஹோய்சாளர்கள் கை ஓங்கவே... சேரர்கள் வலுவிழந்து போனார்கள். இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கேரளாவின் வேனாடு மன்னர்கள், நாஞ்சில் நாட்டை தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். ஏறக்குறைய 4 நூற்றாண்டுகாலம் அவர்கள் நாஞ்சில் நாட்டை தங்கள் வசம் வைத்திருந்தனர். இவர்களுக்கும், பக்கத்து அரசான பாண்டிய மன்னர்களுக்கும் இடையில் அடிக்கடி எல்லைப் பிரச்சினை இருந்து வந்தது. 

கி.பி.1609ல் வடக்கே இருந்து வந்த விஜயநகர மன்னர்கள் பாண்டியர்களை வென்று, மதுரையைத் தங்கள் வசம் கொண்டு வந்தனர். அதே நேரத்தில், வேனாடு அரசியலில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டு, ஆற்காடு சந்தா சாகிபுவின் படையெடுப்புக்கு உள்ளானது. அப்போது வேனாட்டை ஆண்டை மார்த்தாண்ட வர்மாவின் வீரர்கள் போர்க்களத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வாங்கினர். மார்த்தாண்ட வர்மாவுக்கு பிறகு வந்த வேனாட்டு மன்னர்கள் வலுவிழந்தவர்களாக இருந்ததால், அப்போது இந்தியா முழுவதுமே நாடு பிடிக்கும் கொள்ளை(க)யில் ஈடுபட்ட ஆங்கிலேயர்கள், நாஞ்சில் நாட்டை உள்ளடக்கி வேனாட்டையும் தங்கள் வசம் கொண்டு வந்தனர்.

அப்போது, அவர்களது ஆசியுடன் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களின் ஆட்சி ஏற்பட்டது. ஆங்கிலேயர்களின் கைப்பாவையாக இருந்த அவர்கள், ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டிக் கொண்டு வழி வழியாக நாட்டை ஆண்டு வந்தனர். கி.பி.1729 முதல் 1956 வரை இவர்களே ஆட்சி புரிந்தனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்தவர் 'சித்திரை திருநாள்' (திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள், நட்சத்திரங்களின் பெயரையே தங்களுக்கு சூட்டிக்கொள்வார்கள்). 1798 முதல் 1810 வரை அவிட்டம் திருநாள் என்ற பாலராம வர்மா என்பவர் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னராக இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில்தான் அய்யா வைகுண்டர் முத்துக்குட்டியாக 1809-ஆம் ஆண்டு நாஞ்சில் நாட்டில் நாகர்கோவிலில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாமித்தோப்பில் நாடார் சமூகத்தில் பொன்னுமாடன் - வெயிலாள் என்ற தம்பதியருக்கு மகனாக அவதரித்தார். 

1947 ஆகஸ்ட் 15-ம் தேதி ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்தாலும், நாஞ்சில் நாட்டை உள்ளடக்கி திருவிதாங்கூர் சமஸ்தானம் 1956 வரை தொடர்ந்து இயங்கி வந்தது. அதன் பிறகு, அன்றைய தமிழகத்துடன் (சென்னை மாகாணம்) இணைந்தது. 1956 நவம்பர் 1-ம் தேதி புதிய மாநிலமாக கேரளா உருவாக்கப்பட்டபோது, அதனுடன் சேர்க்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நாஞ்சில் நாடு தமிழகத்துடன் இணைக்கப்பட்டு 'கன்னியாகுமரி' என்ற புதிய மாவட்டம் உதயமானது.

ஆன்மிக ரீதியாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தை அணுகினால், அதனை ஆண்டவர்கள், விஷ்ணுவின் ஒரு அம்சமான திருவனந்தபுரத்து பத்மநாபசுவாமியின் அடியவர்கள் என்னும் பொருள்பட தங்களை “பத்மநாததாசர்” என்று அழைத்துக் கொண்டனர். பரசுராமர், தனது கோடாரியைக் கடலுக்குள் எறிந்த போது உருவானதுதான் கேரளா என்று தனது ரகுவம்ச காவியத்தில் குறிப்பிடுகிறார் காளிதாசர்.

கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள மருந்துவாழ் மலையும் புகழ் பெற்றது. ராமர் மற்றும் ராவணன் யுத்தத்தின் போது, ஆஞ்சநேயர் கயிலாயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு வரும் போது, அதில் இருந்து உடைந்து விழுந்த ஒரு பகுதிதான் இந்த மருந்து வாழ் மலை என்கிறார்கள். இந்த மலையில் அரிய வகை மூலிகைகள் இன்றும் விளைகின்றன. அவற்றை உருவம் இல்லாமல் என்றும் சிரஞ்சீவியான சித்தர்கள் பயிரிடுவதாக ஒரு நம்பிக்கை உண்டு. 

மேலும், கணவனையே கண்கண்ட தெய்வமாக நினைத்து, கடவுளைக் குழந்தையாக்கிய கற்புக்கரசியான  அனுசுயாதேவி இங்கேதான் வாழ்ந்தாள். அவளது கற்பின் மகிமையை நாரதமுனி மூலம் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் அறிந்து வியப்புற்றனர். அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணிய அவர்கள் முறையே தங்களது கணவர்களான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளையும் அனுசுயாவின் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்களும், தேவியர் சொன்னபடியே வயோதிகர் வேடத்தில் அங்கு சென்றனர்.

தன் இல்லத்திற்கு வந்தவர்களுக்கெல்லாம் அமுது படைத்து ஆதரிக்கும் நற்குணங்களைப் பெற்ற அனுசுயா, வயோதிகர் வேடத்தில் வந்த மும்மூர்த்திகளையும் வரவேற்று ஆசிரமத்தில் அமர வைத்தாள். பின்னர் அவர்களுக்கு அமுது படைக்கத் தயாரானாள். ஆனால், அவர்கள் அதை ஏற்க மறுத்தனர். மாறாக, "நீ பிறந்த மேனியாக (நிர்வாண கோலம்) உணவு பரிமாறினால்தான் அவற்றை சாப்பிடுவோம்" என்று கூறி அவளை அதிர்ச்சியடையச் செய்தனர்.

உடனே அனுசுயா தனது கணவர் அத்திரி முனிவரை கண்மூடி தியானித்தாள். அப்போது அங்கு வயோதிகர்கள் வேடத்தில் வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்பதை அவள் உணர்ந்தாள். தன் கற்பின் நிலையை அவர்களுக்கு உணர்த்த விரும்பிய அவள், தன் கணவரின் பாதநீரை எடுத்து மும்மூர்த்திகளின் தலையிலும் தெளித்தாள். அந்த நிமிடமே மூவரும் தவழும் குழந்தைகளாக உருமாறினார்கள்.

குழந்தைப் பருவம் என்பது ஒன்றும் அறியாத பருவம் அல்லவா? எனவே, அந்த மூன்று குழந்தைகளையும் வாரி எடுத்து மார்போடு அணைத்த அனுசுயா, நிர்வாண கோலத்தில் அவர்களுக்குப் பாலூட்டி அவர்களின் பசியினை போக்கினாள். பின்னர், அங்கு வந்த தனது கணவர் அத்திரி முனிவரிடம் நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறினாள். மனைவியின் செயலைக் கண்டு பெருமிதப்பட்டார் அவர்.
நாட்கள் வேகமாக நகர்ந்தன. பூலோகம் சென்ற தங்களது கணவன்மார்களைக் காணாமல் முப்பெரும் தேவியரும் தவித்தனர். அவர்களிடம் நாரதர், நடந்த சம்பவத்தைக் கூறினார். 

உடனே, தேவியர் மூவரும் அனுசுயாவின் ஆசிரமத்திற்கு சென்று மாங்கல்யப் பிச்சை கேட்டனர். அங்கு குழந்தைகளாக இருந்த மும்மூர்த்திகளையும் எடுத்துச் செல்ல அனுசுயா அனுமதித்தாள். மூன்று குழந்தைகளும் ஒரே மாதிரியாக இருந்ததால் தங்களது கணவர் யார் என்று தெரியாமல் தேவியர் மூவரும் குழம்பி நின்றனர்.
பின்பு அவர்கள் அனுசுயாதேவியின் ஆலோசனைப்படி, மூன்று நீர்ச்சுனைகளை அங்கே உருவாக்கி, அதில் நீராடி, ஆதிபராசக்தியை நோக்கித் தவம் செய்தனர். அவர்களின் தவத்தை மெச்சிய ஆதிபராசக்தி மும்மூர்த்திகளையும் மீண்டும் உருப்பெற செய்தார்.  

இதுதான் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் புகழ் பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவிலின் தலவரலாறு. இங்குதான் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே வடிவத்தில் மூலவராக - தாணுமாலயனாக ஒருவித லிங்க வடிவில் காட்சி தருகின்றனர். இதில் தாணு என்பது சிவனையும், மால் என்பது விஷ்ணுவையும், அயன் என்பது பிரம்மாவையும் குறிக்கிறது. இந்தக் கோவில் நாகர்கோவில் - கன்னியாகுமரி சாலையில், நாகர்கோவிலில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

அனுசுயா போல், மற்றொரு ரிஷி பத்தினியான அகல்யாவும் இந்த நாஞ்சில் நாட்டோடு தொடர்புடையவள்தான். ஒருமுறை பூலோகத்தை வலம் வந்த தேவேந்திரன் பேரழகியான அகல்யாவைப் பார்த்து, அவளது அழகில் மயங்கிப் போனான். போதை தலைக்கேறிய அவன், அவளை நெருங்க சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
ஒரு நாள் நள்ளிரவில் அகல்யாவை அடைந்து விட வேண்டும் என்ற ஆவலில் அவன், சேவல் உருவத்திற்கு மாறிக் கூவினான். ஆசிரமத்தில் உறங்கிக் கொண்டிருந்த அகல்யாவின் கணவரான கவுதம முனிவர், பொழுது விடிந்து விட்டது என்று கருதி ஆற்றில் நீராடி வர  வெளியேறிச் சென்றார். இதைப் பயன்படுத்தி ஆசிரமத்திற்குள் சேவலாகப் புகுந்த தேவேந்திரன், கவுதம ரிஷி உருவம் எடுத்து அகல்யாவை நெருங்கினான். அவளை தனது விருப்பத்திற்கு உட்படுத்தினான்.

அதேநேரம், நீராடச் சென்ற கவுதமர், சலனமற்று கிடந்த ஆற்றைப் பார்த்து, இன்னும் விடியவில்லை என்பதை அறிந்தார். உடனே, ஆசிரமத்திற்கு திரும்பினார். இந்திரன் அங்கிருந்து பூனை உருவம் எடுத்து வெளியேறினான். அங்கே, நடந்தவைகளை தன் ஞான திருஷ்டியில் அறிந்தார். தனது மனைவியை இந்திரன் அடைந்து விட்டுச் சென்றதை அறிந்தார். அவர் கோபத்துடன் இந்திரனை "எதற்கு நீ ஆசைப்பட்டாயோ, உன் உடல் முழுவதும் அதுவாகவே ஆகட்டும்..." என்று சாபமிட்டார்.

அடுத்த நிமிடமே தேவேந்திரன் உடல் முழுவதும் யோனி (பெண் உறுப்பு) உருவம் தோன்றியது. கலங்கிப் போன அவன் முனிவரிடம் தான் செய்த தவறுக்காக வருந்தினான். அதனால், முனிவர் அவனுக்குப் பாவ விமோசனமும் அளித்தார்.

"சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே மூர்த்தியாக இருக்கும் தருணத்தில் அவர்களைப் பூஜித்தால் நீ உண்மையான நிலையை அடையலாம்’ என்பதுதான் அது. உடனே, தேவேந்திரன் சுசீந்திரம் வந்தான். அங்கே, அத்திரி மகரிஷிக்கும், அவரது தர்மபத்தினியான அகல்யாவுக்கும் (முந்தைய சம்பவ கற்புக்கரசி) மும்மூர்த்திகளும் தரிசனம் தந்த நேரத்தில், தானும் அந்த தரிசனத்தை பெறுவதற்காக முயன்றான். அதையொட்டி, தனது வெள்ளை யானையான ஐராவதத்திடம் தண்ணீர் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.

அது, தேவேந்திரன் உத்தரவுபடி ஒரு பெரிய மலையைப் பிளந்து தண்ணீர் எடுத்து வந்தது. அப்போது அங்கே தோன்றிய ஊற்று நீர் அந்த பகுதிகளில் வேகமாக பரவி, அப்பகுதி முழுவதையும் செழிப்பாக்கியது. அவ்வாறு ஐராவதத்தால் உருவானதுதான், கோட்டாறு என்கிற பழையாறு. சாமித்தோப்பை ஓட்டி இந்த ஆறு ஓடிக் கொண்டிருப்பதை இன்றும் பார்க்கலாம்.

(தொடரும்...)

     
Share:

பிள்ளைக் கறி வேண்டிய இறைவன்




தினமும் ஒரு சிவனடியாருக்காவது அமுது படைத்து விட்டு உண்பதுதான் சிவத் தொண்டரான பரஞ்ஜோதியார் குடும்பத்தின் வழக்கம். அன்று என்னவோ சிவனடியார் யாரும் அவர்களது இல்லத்திற்கு வருவதாக தெரியவில்லை. பக்கத்தில் எங்கேனும் சிவனடியார்கள் இருக்கிறார்களா என்பதை அறிய, பரஞ்ஜோதியார் வெளியில் சென்றார். 

ஆனால், எந்த சிவனடியாரும் அவரது பார்வைக்குக் கிடைக்கவில்லை.
மிகுந்த களைப்போடு வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அடுத்து என்ன செய்வது? என்பது போல் யோசித்தார்.

அப்போது, வீட்டிற்குள் இருந்து அவரது மனைவி வெளியே வந்தாள்.
“என்னங்க... இவ்வளவு நேரமா எங்கே போனீங்க?”

“ஒரு சிவனடியாராவது நம் பார்வைக்குக் கிடைக்க மாட்டாரா என்று தேடிப் போய் இருந்தேன். யாரும் கிடைக்காததால் வரத் தாமதமாகி விட்டது”.

“அந்தக் கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். சிறிது நேரத்திற்கு முன்புதான் நம் வீட்டிற்கு ஒரு சிவனடியார் வந்தார். அவரது தோற்றம் சற்று பயத்தை ஏற்படுத்தினாலும், மிகச் சிறந்த சிவனடியார் போன்று தெரிந்தது. நம் ஊரை ஒட்டியுள்ள ஆத்தி மரத்தடியில் இருப்பதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். அவரை அழைத்து வாருங்கள்...” என்றாள், கணவனைப் போலவே சிவநெறி வழுவாத பரஞ்ஜோதியாரின் மனைவி.

“சரி... நான் அவரை அழைத்து வருகிறேன். வீட்டில் நல்ல உணவு தயாரித்து வை!”

“ஆமாங்க... இப்போது நீங்கள் அவரை அழைத்து வரவேண்டியதுதான் பாக்கி...” என்றாள் அவள்.

ஆத்தி மரத்தடி நோக்கிச் சென்ற பரஞ்ஜோதியார், அங்கு காத்திருந்த சிவனடியாரை சரியாக அடையாளம் கண்டு கொண்டார்.

சிவனடியாரை பார்த்த மாத்திரத்தில் பரஞ்ஜோதியாருக்கும் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நெற்றியில் திருநீறும், கழுத்தில் உருத்திராட்சக் கொட்டை மாலையும், காவி உடையிலுமே சிவனடியார்களை பார்த்துப் பழக்கப்பட்ட அவருக்கு, அவர் மட்டும் சற்று வித்தியாசமாகத் தெரிந்தார்.

அவரது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த எலும்பு மாலையும், ஒரு கையில் திரிசூலமும், மறுகையில் மண்டையோடும் பரஞ்ஜோதியாரை சற்று மிரள வைத்தன. நடுங்கியபடியே அவர் முன் போய் நின்றார்.

“சுவாமி! நான் சிவனடியாருக்கு உணவு படைக்கும் பொருட்டு, சிவனடியாரைத் தேடிச் சென்ற நேரத்தில் தாங்கள் என் வீட்டிற்கு வந்ததாக என் மனைவி கூறினாள். தங்களை அழைத்துச் சென்று உணவு படைக்கவே இங்கே வந்திருக்கிறேன்...” என்றார்.

“உணவு படைப்பது சரி. ஆனால் நீ கொடுக்கும் உணவு எனக்கு பிடித்த உணவாக இருக்க வேண்டும்.”

“சரி சுவாமி...”

“அப்படியென்றால், நான் கேட்கும் உணவை கண்டிப்பாக நீ தருவாயா?”

“இதில் என்ன சந்தேகம் சுவாமி? உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் என் பணி. என்னிடம் இருப்பதில் நீங்கள் கேட்பது எதுவாக இருந்தாலும் நிச்சயமாக நான் தருகிறேன்...”

“சரி... நான் கேட்பது கிடைக்கும் என்பதால் வருகிறேன். எனக்கு என்ன உணவு வேண்டும் என்பதையும் இங்கேயே உன்னிடம் சொல்லி விடுகிறேன்”

“தாராளமாகச் சொல்லுங்கள் சுவாமி.”

“நான் வடபுலத்தைச் சேர்ந்தவன். ஆறு மாதத்திற்கு ஒருமுறை உணவு உட்கொள்வதுதான் எனது வழக்கம். எனது உணவே மனித மாமிசம்தான். அதுவும், ஐந்து வயதுக்கு உட்பட்ட தலைமகனான பாலகனின் மாமிசத்தை மட்டுமே சாப்பிடுவேன். அந்த உணவைத்தான் நான் உன் இல்லத்தில் எதிர்பார்க்கிறேன்...”

அந்த சிவனடியார் சொன்ன உடன் அதிர்ந்து போய்விட்டார் பரஞ்ஜோதியார். 

அவரால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. உடல் முழுக்க வியர்த்தது. வார்த்தைகள் வர மறுத்து வாய் நடுங்கியது.

அந்த சிவனடியார் தொடர்ந்து பேசினார். “நான் விரும்பும் உணவை உன்னால் தர முடியாது என்று எனக்கு நன்றாகவேத் தெரியும். அதனால்தான் உன்னிடம் திரும்பத் திரும்ப கேட்டேன். பரவாயில்லை. நான் வேறு இல்லத்தில் எனக்கு பிடித்தமான உணவைச் சாப்பிட்டுக் கொள்கிறேன்...” என்றார் அவர்.

ஒரு வழியாக மனதைத் தேற்றிக் கொண்டு பேசினார் பரஞ்ஜோதியார்.
“அவசரப்பட வேண்டாம் சுவாமி. உங்களுக்குப் பிடித்தமான உணவுக்கு நானே ஏற்பாடு செய்கிறேன்...” என்று கூறி, அவரை தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.

கணவன், சிவனடியாரோடு வருவதைக் கண்ட பரஞ்ஜோதியாரின் மனைவி முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால், பரஞ்ஜோதியாரின் முகமோ சற்று வாடிப்போய்தான் இருந்தது. சிவனடியாரை வீட்டிற்குள் அமர வைத்துவிட்டு, சமையலறைக்குள் கணவனை அழைத்துச் சென்று அதற்கான காரணத்தைக் கேட்டாள்.

சிவனடியார் கேட்ட உணவு பற்றி சொல்ல வாய் வர மறுத்தாலும், ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு சொன்னார். கணவன் கூறியதைக் கேட்டு அவளும் அதிர்ந்து போனாள். இருப்பினும் தருவதாக வாக்களித்தாகிவிட்டதே... என்று கருதிய அவர்கள், தங்கள் இளகிய மனதை கல்லாக்கிக் கொண்டு, தங்களது ஒரே மகனான ஐந்து வயது சீராளனை சிவனடியாருக்கு பலி கொடுத்து, உணவளிக்க முடிவெடுத்தனர்.

சீராளன் படித்து வந்த குருகுலத்திற்குச் சென்று அவனை அழைத்து வந்தார் பரஞ்ஜோதியார்.

வேகவேகமாக சிவனடியாருக்கு கறியமுது படைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிவபெருமானை மனதிற்குள் நினைத்துக் கொண்டு, ஒரே மகனை கறியாக்கி, அந்த சிவனடியாருக்கு படைத்தனர்.

இலையில் பரிமாறப்பட்ட பாலகனின் கறி உணவைச் சாப்பிட அமர்ந்த சிவனடியார், அடுத்த நொடியே கோபாமானார். “பாலகனின் கறி உணவு கேட்டால், நீ என்ன பசுவின் மாமிசத்தைக் கொண்டு கறி சமைத்து பரிமாறுகிறாயா?” என்று கோபத்துடன் கத்தினார்.

அவசரமாக மறுத்த பரஞ்ஜோதியார், “சத்தியமாக இது ஒரு பாலகனின் கறியமுதுதான்” என்று சொன்னார்.

அதை நம்ப மறுத்த சிவனடியார், “அப்படியென்றால்... தலைக்கறி எங்கே?” என்று கேட்டார்.

“தலைக்கறி உணவுக்கு ஆகாது என்று கருதி, அதை மட்டும் சமைக்காமல் விட்டுவிட்டோம். நாங்கள் செய்த இந்தக் குறையைப் பொறுத்து, தாங்கள் உணவு உண்ண வேண்டும்...” என்று அமைதியாக பதில் சொன்னாள் பரஞ்ஜோதியாரின் மனைவி.

ஆனாலும், சிவனடியார் விடுவதாக இல்லை. “எனக்குத் தலைக்கறிதான் வேண்டும்” என்று அடம் பிடித்தவர், “அந்தத் தலைக்கறி கிடைக்கா விட்டால் வெளியேறிவிடுவேன்...” என்று எச்சரித்தார்.

பரஞ்ஜோதியாரும், அவரது மனைவியும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவிக்க... சமையலறைக்குள் இருந்து வெளியே வந்தாள் பணிப்பெண்.

“அம்மா... இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்தே நான் தலைகறியை தனியாக சமைத்தேன். அதை இப்போது அடியாருக்கு பரிமாறுங்கள்...” என்றாள்.

முகத்தில் சிறிது மகிழ்ச்சியை வரவழைத்துக் கொண்டு தம்பதியர் இருவரும் சிவனடியாருக்கு அந்தத் தலைக்கறி உணவைப் பரிமாற முயன்றனர்.

அப்போது மீண்டும் கோபமானார் சிவனடியார்.

“நான் தனியொரு ஆளாகத் தலைக்கறி உணவு உண்பதில்லை. வேறு சிவனடியார் யாரேனும் இருந்தால் அழைத்து வரவும்...” என்றார்.

வேறு வழி தெரியாத பரஞ்ஜோதியார், வீட்டின் முற்றத்திற்கு ஓடிச் சென்று, யாரேனும் சிவனடியார்கள் வருகிறார்களா? என்று தேடிப் பார்த்தார். ஆனால், யாருமே அவர் கண்ணில் படவில்லை.

“யாருமே இல்லை” என்று அவர் சொல்ல... சிவனடியாரோ, “யாரும் இல்லை என்றால் என்ன, நீ என் அருகில் அமர்ந்து சாப்பிடு...” என்றார்.

‘என்ன கொடுமை இது? பெற்ற பிள்ளையைக் கொன்று கறி சமைத்து சாப்பிட்ட அவப்பெயரும் எனக்கு வர வேண்டுமா?’ என்று மனதிற்குள் குமுறியபடியே சிவனடியார் அருகில் அமர்ந்தார்.

சிவனடியாருக்கும், தனது கணவருக்கும் தன் பிள்ளைக்கறி உணவைப் பரிமாறினாள், பரஞ்ஜோதியாரின் மனைவி.

இப்போதாவது கறி உணவை சிவனடியார் சாப்பிட்டு விடுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு, மறுபடியும் ஏமாற்றமே மிஞ்சியது.

“உன் மகனை அழைத்து வா. அப்போதுதான் சாப்பிடுவேன்...” என்று மீண்டும் அடம்பிடித்தார்.

“அவனுக்கு இங்கே வேலை இல்லை...” என்று பரஞ்ஜோதியார் சொன்ன போது, “நீ அவனைக் கூப்பிடு; அவன் வருவான்...” என்றார்.

‘தவம் இருந்து பெற்ற மகன்தான் இங்கே கறி உணவாக இருக்கிறானே... எப்படி அவன் வருவான்?’ என்று மனதிற்குள் பரஞ்ஜோதியார் எண்ணினாலும், சிவனடியாரின் கோபத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதற்காக, வீட்டின் முற்றத்திற்குச் சென்று, “சீராளா...“ என்று அழைத்தார்.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

எந்த மகனைக் கறி சமைத்து சிவனடியாருக்கு பரிமாறினார்களோ, அதே சீராளன் ஓடி வந்தான். அவனைப் பார்த்த பரஞ்ஜோதியார் தம்பதியருக்கு இன்ப அதிர்ச்சி. அவனை அள்ளி அணைத்து கொஞ்சினர்.

கறி உணவு வேண்டி தங்கள் இல்லம் வந்த சிவனடியாரைப் பார்க்கத் திரும்பினர். அங்கே அவர் இல்லை. கறி உணவையும் காணவில்லை.

அப்போதுதான், பிள்ளைகறி கேட்டு வந்தவர் சாதாரண அடியார் இல்லை; அந்த சிவபெருமான்தான் என்பதை உணர்ந்தனர் அவர்கள்.

அப்போது, உமாதேவியுடன் காட்சி கொடுத்தார் சிவபெருமான். அடியாருக்காக தனது மகனையே கறியாய்ச் சமைத்த பரஞ்ஜோதியார் 63 நாயன்மார்களுள் ஒருவராக சிறுத்தொண்டு நாயனார் என்று பெருமை பெற்றார். 

- நெல்லை விவேகநந்தா.

Share:

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

சக்தி வாய்ந்த சக்குளத்தம்மா

ம்பீரமான உடல்வாகு கொண்ட வேடன் அவன். மரம் வெட்டுவதுதான் அவன் குலதொழில். மனைவி மற்றும் இரு ஆண் குழந்தைகளுடன் அந்த காட்டுப் பகுதியில் வசித்து வந்தான் அவன்.

ஒருநாள் அவன் ஒரு பெரிய மரத்தை வெட்டியபோது கருநாகம் ஒன்று வெளிப்பட்டது. வேடனை பயமுறுத்த அது படமெடுத்து ஆடியது. கையில் இருந்த கோடாரியால் அதை வெட்டினான் வேடன். லேசாக காயம் ஏற்பட்டு தப்பித்து ஓடியது கருநாகம்.

அடிபட்ட பாம்பு தேடி வந்து பழி தீர்க்கும் என்று சொல்வார்களே... என அஞ்சிய வேடன், அந்த பாம்பை விடாமல் துரத்தினான். வேகமாக பாய்ந்து ஓடிய கருநாகம், ஒரு புற்றுக்குள் ஓடி ஒளிந்து கொண்டது. ஆனாலும் விடவில்லை வேடன். அந்த புற்றை கோடாரியால் வெட்டினான். புற்றை வெட்டி முடித்தாயிற்றேத் தவிர, பாம்பை மட்டும் காணவில்லை.

அப்போது, கோபத்தின் உச்சிக்கு சென்றவனாக தனது கோடாரியை புற்றின் மீது மிக வேகமாக & ஆழமாக வீசினான் வேடன். கோடரி பலமாக வந்து விழுந்த வேகத்தில் புற்றுக்குள் இருந்து குபுகுபுவென்று தண்ணீர் கொப்பளித்து வந்தது.

வேடனுக்கு ஒன்றும் புரியவில்லை. இங்கே எப்படி இவ்வளவு தண்ணீர்? என்று அவன் யோசிக்கும்போதே, அவன் முன்பு தோன்றினார் ஒரு முனிவர்.

“பயப்படாதே மகனே! உன்னால் இங்கே ஒரு நன்மை நிகழ்ந்து இருக்கிறது. இந்த புற்றுக்கு அடியில் அன்னை பராசக்தி குடிகொண்டிருக்கிறாள். சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்களை வதம் செய்த அன்னை, இங்கு ஜல சயனத்தில் இருக்கிறாள். அந்த தண்ணீர்தான் நீ இப்போது பார்த்தது.

இப்போது - இங்கே வெளிவந்து கொண்டிருக்கும் தண்ணீர் வற்றி முடித்ததும், புற்றுக்குள் பார்த்தால் தேவி வனதுர்க்கா இருப்பாள். அவளை எடுத்து வழிபாடு செய். அவளை வழிபடுவோருக்கு நினைத்தது எல்லாம் நடக்கும்...” என்று ஆசி கூறிய அந்த முனிவரே, புற்றுக்குள் இருந்த தேவியின் விக்கிரகத்தை எடுத்து அங்கே ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்தார். அந்த முனிவர் தான், கலகத்தை ஏற்படுத்தினாலும் இறுதியில் அதை நன்மையில் முடிக்கும் நாரதர்.

இதற்கிடையில், புற்றில் இருந்து வெளிவந்த தண்ணீர் அந்த பகுதியில் ஒரு குளமாக தேங்கி நின்றது. அந்த தண்ணீர் சர்க்கரையின் சுவையில் இருந்ததால் பின்னாளில் சர்க்கரைக் குளம் என்றே பெயர் ஏற்பட்டது. அந்த சர்க்கரைக்குளம் நாளடைவில் சக்குளம் என்றும், அங்கே அருள்பாலிக்கும் அம்மன் சக்குளத்தம்மா என்றும் பெயர் பெற்றனர்.

இந்த கோவில் உருவாக காரணமான வேடன், தன் குடும்பத்துடன் சக்குளத்தம்மாவை வழிபட்டு வந்தான். வனத்தில் கிடைக்கும் பூக்கள், பழங்களை தேவிக்கு படைத்து வழிபாடு செய்வது வேடன் குடும்பத்தின் வழக்கமாக இருந்தது.

ஒருநாள் தேவிக்கு படைக்க பழங்கள் பறிக்கச் சென்ற வேடனுக்கு எந்த பழமும் கிடைக்கவில்லை. கால் கடுக்க நடந்ததுதான் மிச்சம்.
பழம் கிடைக்காமல் பெருத்த ஏமாற்றத்துக்கு ஆளான வேடன், வேறு வழியின்றி கோவிலுக்கு வந்து சேர்ந்தான். அங்கே சர்க்கரைப் பொங்கல் அம்மனுக்கு படைக்க ஆவி பறக்க தயாராக இருந்தது.

நடுகாட்டிற்குள் இது எப்படி, எங்கிருந்து வந்தது...? என்று வேடன் தவித்தபடி நின்றிருந்தபோது, அந்த தேவியே அசரீரியாக பேசினாள்.
“சர்க்கரைப் பொங்கலைக் கண்டு குழப்பமடைய வேண்டாம் மகனே... அது நானே செய்ததுதான். இன்றும் நாம் எல்லோரும் அதை சாப்பிடுவோம்...” என்றாள் தேவி.

தேவி தன்னிடம் பேசியதைக் கண்ட வேடன் மெய்சிலிர்த்துப் போனான். இன்ப வெள்ளத்தில் தத்தளித்தான்.

தன் பக்தனுக்காக அன்னை பராசக்தி பொங்கல் செய்து வைத்த நாள், கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர தினம். இந்த அற்புதத்தை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் அதே தினத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபாடு செய்கிறார்கள்.

மேற்படி அற்புதத்தில் வேடனாக வந்தவர் சிவபெருமான் என்றும், அவரது மனைவி பார்வதிதேவி, மகன்கள் விநாயகர், முருகன் என்பதும் நம்பிக்கை.
பெண்களின் சபரிமலை என்று புகழப்படும் இந்த சக்குளத்தம்மன் கோவில் அமைந்துள்ள பகுதி இப்போது சக்குளத்துக்காவு என்று அழைக்கப்படுகிறது.

கேரள மாநிலம் திருவல்லாவில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், செங்கனாச்சேரியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள நீரேற்றுபுரம் என்ற இடத்தில் இந்த பகுதி அமைந்துள்ளது.

எங்கெல்லாம் பெண்கள் பூஜிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் தேவதைகள் திருப்தி அடைகிறார்கள்... எங்கெல்லாம் பெண்கள் ஆராதிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் ஐஸ்வரியம் பெருகும்... என்ற கூற்றுக்கு இனங்க, இங்கு நடைபெறும் நாரி பூஜை உலக புகழ்பெற்றது. பெண்களின் பாதங்களை தண்ணீரால் கழுவி, மலர் தூவி பூஜை செய்வதுதான் நாரி பூஜை.

சக்குளத்துக்காவு கோவிலின் மேலும் சில சிறப்புகள் :

* ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் மருந்து எனப்படும் 48 மூலிகைகளைக் கொண்டு தேவிக்கு அபிஷேகம் செய்கிறார்கள். அபிஷேகத்திற்கு பிறகு அந்த மருந்து பக்தர்களுக்கு இலவசமாகவே தரப்படுகிறது. அதை வாங்கி சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும் என்கிறார்கள்.

* மது போதைக்கு அடிமையானவர்களை திருத்தும் திருத்தலமாகவும் இது திகழ்கிறது. ஒவ்வொரு வெள்ளி அன்றும் இங்குள்ள தேவியின் வாள் மீது, இனி குடிக்க மாட்டேன்... என்று மது குடிப்பவர்களை சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். அவ்வாறு சத்தியம் செய்த ‘குடி’மகன்கள் அதன்பிறகு, தேவிக்கு பயந்து குடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள். இதற்காகவே இக்கோவிலுக்கு இந்திய முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் விருது வழங்கி சிறப்பித்துள்ளார்.

* சபரிமலைக்கு ஆண்கள் இருமுடி கட்டி எடுத்துச் செல்வதுபோல், இக்கோவிலுக்கு பெண்கள் இருமுடி கட்டி வருவதால் பெண்களின் சபரிமலை என்றும் இக்கோவில் அழைக்கப்படுகிறது.

* சக்குளத்தம்மா சக்திவாய்ந்த வனதேவதை என்பதால், இங்குள்ள மண்ணை எடுத்துக்கொண்டு தங்கள் வீடுகளில் வைக்கும் பக்தர்களையும் காண முடிகிறது. இப்படிச் செய்வதால் துர்தேவதைகளின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள்.
Share:

பிரா தரும் பாதுகாப்பு


பெண்களை எடுப்பான தோற்றத்தில் காண்பிப்பது அவர்களது மார்பகங்கள்தான். அதனால், அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பெரும்பாலும் எல்லா பெண்களுமே தங்களது மார்பகம் பெரியதாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

சிலர், தங்களது மார்பகத்தை பெரியதாக காண்பிக்க விசேஷ பிராக்களை அணிகிறார்கள். போதுமான மார்பக வளர்ச்சி உள்ள சில பெண்கள், எப் டி.வி.யில் கேட் வாக் வரும் பல மாடல்களைப்போல் பிராவே அணிவதில்லை.

இப்படி பிரா அணிவதை தவிர்ப்பது ஆபத்தில் கொண்டுபோய்விடும் என்று எச்சரிக்கிறது இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு.

மார்பக வளர்ச்சி அதிகம் காணப்படும் டீன் ஏஜில் (13 முதல் 19 வயது வரை) மார்பகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது இந்த பிரா தானாம். அந்த காலக்கட்டத்தில் பிரா அணிவதை தவிர்த்தால் மார்பகங்களில் வடிவம் மாறிவிடும் என்றும், மேலும் அது தொய்வடைந்து விடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதனால் டீன் ஏஜ் பெண்களே... பிரா அணிவதை எக்காரணம் கொண்டும் தவிர்த்து விடாதீர்கள். அதுவும், சரியான சைஸ் பிராவாக தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Share:

எடுப்பான முன்னழகு வேண்டுமா?

சில பெண்கள் சராசரி உடல் எடையைவிட அதிக எடையில் இருப்பார்கள். திடீரென்று யாரோ சொன்ன ஆலோசனையின்பேரில் டயட்டில் இருந்து உடம்பை குறைத்துக் கொள்வார்கள். அப்படி இருக்கும்போது, அவர் எடுத்துக்கொள்ளும் சத்தான உணவு அல்லது மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காரணமாக அவரது உடல் மீண்டும் ஏறிவிடும்.

இப்படி உடல் எடையை ஏற்றிக்கொண்டும், குறைத்துக்கொண்டும் இருந்தால் அவர்களது முன்னழகு பாதிக்கப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது, மார்பக தசைகளில் சுருக்கம் விழுந்துவிடும் என்கிறார்கள் அவர்கள்.

இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?

* மார்பக அழகுக்கு முக்கிய தேவை புரோட்டீன். இந்த புரோட்டீனில்தான் மார்பகம் சரியான ஷேப்பிலும், எடுப்பான தோற்றத்திலும் காட்சியளிக்கத் தேவையான கொலாஜன் இருக்கிறது. அதனால், புரோட்டின் அதிகம் உள்ள உணவு வகைகளை தினமும் சாப்பாட்டில் எடுத்துக்கொள்ளுங்கள்.
* உங்களுக்கு ஒத்துக்கொள்ளும் என்றால் மார்பகங்களை ஐஸ் வாட்டர் கொண்டு ஒற்றியெடுக்கலாம்.
* முடிந்தவரை வெந்நீரில் குளிப்பதை பெண்கள் தவிர்த்துவிட வேண்டும். தொடர்ந்து வெந்நீரில் குளித்து வந்தால் மார்பகத் தசைகள் தொய்வடைந்து விடும். இதை ஆய்வு செய்தும் நிரூபித்து இருக்கிறார்கள். அதேநேரம், உடல்நிலை சரியில்லாத நேரத்தில் வெந்நீரில் குளிக்கும்போது மார்பகத்தில் வெந்நீர் படாமல் குளிக்கலாம்.

Share:

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

நீங்களும் செய்யலாம் விதவிதமான கொழுக்கட்டைகள்


விநாயகர் சதுர்த்தி அன்று மோதகம் மற்றும் கொழுக்கட்டை விநாயகருக்கு நைவேத்தியம் செய்வார்கள். நீங்களும் செய்து அசத்த சில கொழுக்கட்டை செய்வது தொடர்பான குறிப்புகள் :


எள் பூரண கொழுக்கட்டை

தேவையானவை :

வெல்லம் - 1/4 கிலோ
எள் - 50 கிராம்
பச்சரிசி - 2 ஆழாக்கு
ஏலக்காய் - 4
உப்பு, சர்க்கரை - சிறிதளவு

செய்முறை :

1. பச்சரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் நிழலில் உலர்த்துங்கள். அதை மெஷினிலோ, மிக்சியிலோ அரைத்து மாவாக்கி, அதை இட்லி தட்டில் வைத்து அவித்துக்கொள்ளுங்கள்.

2. அவித்த மாவை வாய் அகன்ற பாத்திரத்தில் கொட்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்த 2 டம்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி அந்த மாவை பிசையுங்கள். மாவு பிசையும்போது ஊற்றக்கூடிய தண்ணீர் எக்காரணம் கொண்டு சூடு குறைந்துவிடக்கூடாது.

3. தொடர்ந்து, ஏலக்காயை சிறிது சர்க்கரை வைத்து பொடித்து, அதை அந்த மாவுடன் சேர்த்து பிசையுங்கள். மாவு தளதளவென்று வந்ததும், அதை தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

4. தேர்ந்தெடுத்த வெல்லத்தை பொடித்து, அதனுடன் எள்ளையும் தூளாக்கிப் போடுங்கள்.

5. இப்போது கைகளில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு பெரிய எலுமிச்சை பழம் அளவுக்கு மாவை எடுத்து, கையிலேயே அதை சிறு தோசை போன்று தட்டிக்கொள்ளுங்கள். அதனுள் சர்க்கரை, ஏலப்பொடி கலந்த பூரணத்தை வைத்து சோமாஸ் போல மூடிவிடுங்கள். இப்படியே மாவு அனைத்தையும் செய்யுங்கள்.

6. அவை அனைத்தையும் இட்லி தட்டில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும். மிகவும் ருசியான எள் பூரண கொழுக்கட்டை ரெடி!


மோதகம்

தேவையானவை :

வெல்லம் - 1/2 கிலோ
தேங்காய் - ஒரு மூடி
கோதுமை மாவு - ஒரு கப்
எள் - 1/4 கப்
அரிசி மாவு - ஒரு கப்
எண்ணெய் - 250 கிராம்
ஏலக்காய் - 4
ஜாதிக்காய் - 2

செய்முறை :

1. எள்ளை சுத்தம் செய்து கொள்ளவும். வெல்லத்தை பொடித்துக் கொள்ளுங்கள். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

2. தொடர்ந்து துருவிய தேங்காயில் சிறிது எடுத்து, அதை நெய்யில் வதக்கி பொடிக்கவும். வெல்லப்பொடியில் எள்ளை பொடித்தோ அல்லது முழுதாகவோ சேர்க்கவும். வறுத்த தேங்காயையும் அதனுடன் சேருங்கள். மேலும் அதனுடன், அரை ஸ்பூன் ஜாதிக்காய்த் தூள், ஏலக்காய்த் தூளை சேர்த்து கெட்டியாக பிசையவும். பிசைந்து முடித்ததும் எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.

3. பின்னர், வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டையை, தோசை மாவு பதத்தில் நீர்விட்டு தயார் செய்த கோதுமை&அரிசி மாவு கலவையில் தோய்த்து எண்ணெயில் போட வேண்டும். அவற்றை பொன்னிற உருண்டைகளாக பொரித்து எடுத்து எண்ணெயை வடிய விடவும்.

4. இந்த உருண்டை ஒரு மாதம் வரை கூட கெடாமல் இருக்கும். மிகவும் சுவையாக இருக்கும் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் எல்லோரும் இதை விரும்புவார்கள்.

பின் குறிப்பு : வேறு முறையிலும் மோதகம் தயார் செய்யலாம். முதலில் பூரணம், கொழுக்கட்டை மாவை தயார் செய்து கொள்ள வேண்டும். கொழுக்கட்டை மாவில் கிண்ணம் போன்று செய்து, அதற்குள் பூரணத்தை வைத்து, முட்டை போல் பிடித்து நீராவியில் வேக வைத்தால் இந்த வகை மோதகம் ரெடி!


 காரக் கொழுக்கட்டை

தேவையானவை :

புழுங்கல் அரிசி - 400 கிராம்
பழுத்த மிளகாய் - 8
தேங்காய் துருவல் - 1/4 மூடி
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தளை - சிறிதளவு
உப்பு, கடுகு, உளுந்தம்பருப்பு - தேவையான அளவு

செய்முறை :

1. புழுங்கல் அரிசியை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும். அந்த அரிசியையும், மிளகாயையும் கிரைண்டரில் போட்டு நன்றாக அரைக்கவும். அரைக்கும்போது தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, கொழுக்கட்டை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

2. மாவை அரைத்த பின்னர், உப்பு, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தளை ஆகியவற்றை சேர்த்து, மீண்டும் லேசாக கிரைண்டரில் அரைத்து எடுக்கவும்.

3. பெரிய வாணலியில் நல்லெண்ணெய் கொண்டு கடுகு, உளுந்தம்பருப்பு ஆகியவற்றை தாளித்து, அதில் அரைத்த மாவையும் சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும்.

4. தொடர்ந்து, அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து இட்லி வேக வைப்பதுபோல் வேக வைக்க வேண்டும். புட்டுக்கு மாவு அவிப்பது போலவும் அவித்தெடுக்கலாம்.

5. நன்றாக வெந்ததும் இறக்கி விடுங்கள். சுவையான காரக் கொழுக்கட்டை ரெடி!

பின்குறிப்பு : இந்த காரக் கொழுக்கட்டைக்கு புதினா அல்லது கொத்தமல்லி சட்னியை தொட்டுக்கொண்டால் இன்னும் சுவையாக இருக்கும்.


உப்பு கொழுக்கட்டை

தேவையானவை :

புழுங்கல் அரிசி - 2 கப்
கடலை பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 5
கடுகு, உப்பு, உளுந்து, எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய்த் துருவல் - சிறிதளவு
இவற்றுடன் கூடுதலாக ஒரு பிடி கடலை பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.

செய்முறை :

1.அரிசி மற்றும் கடலை பருப்பை தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவிடவும்.

2. கடலை பருப்பை கரகரப்பாக அரைக்கவும். அரிசியை மிருதுவாக அரைத்து, முன்பு அரைத்த கடலை பருப்பு மாவுடன் சேர்த்து, உப்பும் கலந்து கிளறிக் கொள்ளவும்.

3. ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அதில் கடுகு, உளுந்து ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

4. பின்னர், அதில் காய்ந்த மிளகாய், ஒரு பிடி கடலை பருப்பு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.

5. கலவை நன்றாக வதங்கியதும், அதில் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த அரிசி, பருப்பு கலவையை கொட்டி கெட்டியாகும்வரை நன்கு கிளறவும்.

6. கெட்டியான பதம் வந்ததும் வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடுங்கள்.

7. ஓரளவுக்கு ஆறிய பிறகு அந்த மாவு கலவையை உருண்டைகளாக உருட்டி இட்லி குக்கரில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

8. சுவையான உப்பு கொழுக்கட்டை ரெடி!

பின்குறிப்பு : மாலைநேர டிபனாக இந்த கொழுக்கட்டையை செய்து பரிமாறி அசத்தலாம்.

தொகுப்பு : தேவிகா ஆனந்த்.

Share:

வியாழன், 9 செப்டம்பர், 2010

விநாயகருக்கு எலி வாகனம் ஆனது எப்படி?

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்! 
ந்தர்வ மன்னனான அவனது பெயர் கிரவுஞ்சன். விநாயகரின் பக்தனும் கூட! கந்தவர்கள், நினைத்த மாத்திரத்தில் ஆகாய மார்க்கமாக எங்கு வேண்டுமானாலும் செல்பவர்கள்தானே?

அதன்படி ஒருநாள் இமயமலைச்சாரல் வழியாக ஆகாய மார்க்கத்தில் சென்று கொண்டிருந்தான் கிரவுஞ்சன். திடீரென்று பூமியில் ஓரிடத்தில் ஏதோ ஒன்று தனது கண்களை வசீகரிக்க... அப்படியே நின்றான். பார்வையை அந்த இடத்தை நோக்கி செலுத்தினான்.

‘ஆஹா... என்னவொரு அழகு?’ என்று தன்னை அறியாமலேயே புகழ்ந்தான். ஆம்... அவன் பார்த்தது ஒரு அழகான இளம்பெண்ணை. அதுவும், ஒரு ரிஷி பத்தினியை!

அவள் பெயர் மனோரமை. சவுபரி என்ற முனிவரின் மனைவியான அவள் மிகவும் பேரழகி. எவ்வளவு பேரழகியாக இருந்தாலும், எளிமையாக இறைபக்தியோடு வாழ்ந்து வந்தாள் அவள்.

தனது குடிலில், செடியில் இருந்து பறித்த பூக்களை அவள் மாலையாக தொடுத்து கொண்டிருந்தபோதுதான் கிரவுஞ்சன் பார்வையில் சிக்கிவிட்டாள். அவளது அழகில் மயங்கிய அவன் அவளது குடிலுக்கு வந்தான்.

அவனைப் பார்த்த மாத்திரத்தில் சட்டென்று எழுந்துவிட்டாள் மனோரமை. எதிரில் வருவது யார்? என்பது தெரியாததால் குழப்பமான பார்வையை அவன் மீது வீசினாள். ஆனால், அவனோ போதை தலைக்கேறியவன்போல் அவளது அழகை ரசித்தபடியே நெருங்கினான்.

இப்போது அவளை மிகவும் அருகில் நெருங்கிவிட்டான். ரிஷி பத்தினிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளே பேசினாள்.

“தாங்கள் யார் என்று தெரியவில்லை. என் கணவரும் இப்போது இங்கே இல்லை. தங்களுக்கு என்ன வேண்டும்?” - மனோரமை கேட்டாள்.

அவளிடம் பதில் சொல்லும் நிலைமையிலா இருந்தான் கிரவுஞ்சன்? அவளது அழகை பருகிய மாத்திரத்தில் போதையில் அல்லவா திளைத்துக் கொண்டிருந்தான்?

மனோரமை கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதற்கு பதிலாக, பார்வையாலேயே தின்று விடுவதுபோல் அப்படியரு பார்வை பார்த்தான்.

கூனிக் குருகி, லேசாக தலை குனிந்து நின்றிருந்தாள் மனோரமை. பருவச் செழிப்பு அவளது மேனியில் நிறையவே கொட்டிக் கிடந்தது. அவளது மீனைப் போன்ற விழிகளும், சிவந்த கன்னங்களும், சிறுத்த இடுப்பும், வாழைத்தண்டு கால்களும் அவனை என்னமோ செய்தன.

அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதற்கு பதிலாக, வேகமாக அவளது கையை பற்றினான். தன் மார்போடு இறுக அணைத்தான்.

இதை எதிர்பார்க்காத மனோரமை அவன் பிடியில் இருந்து விடுபட திமிறினாள். ‘உதவி... உதவி...’ என்று கத்தினாள்.

குடிலை நெருங்கிக் கொண்டிருந்த சவுபரி முனிவர், தனது பத்தினி மனைவியின் அலறல் கேட்டு அங்கே வேகமாக ஓடி வந்தார். தனது மனைவியை ஒரு கந்தர்வன் கவர முயன்று கொண்டிருப்பதைக் கண்ட அவர் கோபத்தில் பொங்கியெழுந்தார்.

“அடே கந்தர்வா...” என்று அவரது கொந்தளிப்பான குரலில் திடுக்கிட்டு நின்றான் கிரவுஞ்சன். அப்போதுதான் அவனுக்கு செய்த தவறு நினைவுக்கு வந்தது. மனோரமையை தனது பிடியில் இருந்து விட்டுவிட்டு முனிவர் பக்கம் திரும்பினான்.

முனிவரின் கண்கள் கோபத்தில் கொப்பளித்துக் கொண்டிருந்தன. அடுத்த நொடியே அவனுக்கு சாபமிட்டார்.

“எந்த ஆடவனையும் ஏறெடுத்துப் பார்க்காத என் தர்ம பத்தினியின் கையை பிடித்து இழுத்து, அவளை அடைய முயன்ற உன்னை மன்னிக்கவே முடியாது. இப்போதே நீ, மண்ணைத் தோண்டி வளையில் ஒளியும் பெருச்சாளியாக மாறுவாயாக...” என்று சபித்தார் முனிவர்.

கிரவுஞ்சனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. செய்த தவறுக்காக மன்னிப்பு வேண்டினான்.

“என்னை மன்னித்து விடுங்கள் முனிவரே... தங்கள் தர்ம பத்தினியின் பேரழகு என் கண்களை மறைத்துவிட்டது. அவளது அழகில் மங்கி, இப்படியரு தவற்றை செய்ய துணிந்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். சபித்து விடாதீர்கள்...” என்ற கிரவுஞ்சன் முனிவரின் காலில் கண்ணீர் விட்டு அழுதான்.

“தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும். ஆனாலும், உன் மேல் எனக்கு இரக்கம் ஏற்படுகிறது. கொடுத்த சாபத்தை திரும்ப பெற முடியாது. நிச்சயம் நீ பெருச்சாளியாக மாறித்தான் ஆக வேண்டும்”.

“அப்படியென்றால், எனக்கு பாவ விமோசனமே கிடையாதா?”

“கண்டிப்பாக உண்டு. அந்த விநாயகப் பெருமான் உன்னை காப்பாற்றுவார்...” என்றார் சவுபரி முனிவர்.

அடுத்தநொடியே மிகப்பெரிய பெருச்சாளியாக மாறிய கிரவுஞ்சன், நேராக காட்டுக்குள் ஓடினான்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன.

புத்திர பாக்கியம் வேண்டி தவம் இருந்த ஒரு மகாராணிக்கு ஐங்கரனாக அவதாரம் பிறந்த விநாயகரும் அதே பகுதியில் அவதரித்தார்.

ஒருநாள் பெருத்த அட்டகாசத்தில் ஈடுபட்ட கிரவுஞ்ச பெருச்சாளி மீது தனது பாசக்கயிற்றை வீசினார் விநாயகர். அதில் சிக்கிக்கொண்ட பெருச்சாளியால் தப்பிக்க முடியவில்லை. அப்போதுதான் அதற்கு, தன் மீது பாசக்கயிற்றை வீசியது விநாயகர் என்பது புரிந்தது. தனது செயலுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டது.

கருணையே வடிவான விநாயகர் கிரவுஞ்ச பெருச்சாளியை மன்னித்தார். அதை, தனது வாகனமாகவும் ஏற்றுக்கொண்டு அருள் வழங்கினார்.

இப்படித்தான் விநாயகப் பெருமானுக்கு எலி வாகனமானது.
    


Share:

ஜூ.வி. ஆசிரியருடன் ஒரு சந்திப்பு - பாகம் 2



ஜூ.வி., பொறுப்பாசிரியர் திரு.குள.சண்முகசுந்தரம் உடனான பேட்டியின்  தொடர்ச்சி...

கேள்வி : ஜூ.வி.,யில் விளம்பரம் அதிகம் வருவது இல்லையே... இடப்பற்றாக்குறையா? அல்லது சமூக அவலங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைபாடா?

பதில் : சமூக அவலங்களை எடுத்துரைக்க வேண்டும் என்பதுதான் இதற்கு காரணம். மற்றபடி, நாங்கள் விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. விளம்பரம் தேடி வந்தால் மாத்திரமே வாங்கிக்கொள்வோம். ஒரு செய்தியை பிரசுரிக்க ஒரு விளம்பரத்தை நிறுத்திதான் ஆகவேண்டும் என்றால், நிச்சயமாக அந்த விளம்பரத்தை நிறுத்திவிடுவோம். ஜூ.வி.யை பொறுத்தவரை செய்திகளுக்கே முதலிடம்!

கேள்வி : சமூக சேவையில் ஜூ.வி., தானே இறங்கியது உண்டா?

பதில் : நிறைய உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்காக விகடன் நிறுவனம் செய்துள்ளது. செய்தும் வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி தண்ணீர் வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டு எலிக்கறியை உணவாக உட்கொள்ளும் நிலைக்கு ஆளான நரிமணம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு உதவி செய்தோம். அந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு மாதம்தோறும் 30 கிலோ அரிசி வழங்கினோம். எங்கள் ஆசிரியர்கள், செய்தியாளர்கள் அனைவருமே இந்த சேவையில் இறங்கி ஈடுபட்டோம். இதுபோன்று பல உதவிகளை செய்துள்ளோம். தற்போதும் இது தொடர்கிறது.

கேள்வி : அரசியல், ஊழல், கற்பழிப்பு, கொலை போன்ற செய்திகளை வெளியிடும்போது கொலை மிரட்டல் அல்லது வேறுவிதமான பாதிப்பு ஏற்படுமா? அப்படி ஏற்பட்டால் எப்படி சமாளிப்பீர்கள்?

பதில் : என்னை பொறுத்தவரை கொலை மிரட்டல் அதிகம் வருவதில்லை. ஆனால், மிரட்டல் நிறையவே வரும். செய்தி சேகரிக்க செல்லும் இடங்களில் அடி-உதை விழுந்ததும் உண்டு. நானும் இந்த வகையில் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். கடந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் பற்றிய ஒரு சிறிய பாக்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தோம். காலை 7 முதல் 10 மணி, மாலை 7 முதல் 10 மணி என அவரது தேர்தல் பிரச்சார நேரம் முரசொலி இதழில் வெளியாகி இருந்தது. அதை வைத்து, கிளப் நேரம் போக மற்ற நேரம் ஓட்டு கேட்கப் போகிறார் போலிருக்கு என்று அந்த செய்தியை வெளியிட்டு இருந்தோம். செய்தி வெளியானபோது அவர் இதுபற்றி ஒன்றும் கேட்கவில்லை. அவர் வெற்றிபெற்ற பின்னர், வெற்றி குறித்து அவரிடம் கேட்க சென்றபோது, அவருடன் இருந்த சிலர் மேற்கண்ட செய்தி வெளியிட்டதற்காக என்னை தாக்கிவிட்டார்கள். உடனே போலீசுக்குச் சென்றோம். வழக்குப்பதிவு செய்யும்போது பி.டி.ஆர். உயிருடன் இல்லை. பெரிய செய்திதான் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது இல்லை. சிறிய செய்தி கூட பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தலாம்.



கேள்வி : பிற புலனாய்வு இதழ்களுக்கும், ஜூ.வி.,க்கும் உள்ள வித்தியாசம்?

பதில் : ஒற்றுமை என்று எடுத்துக்கொண்டால் ஒரே பாணியைதான் பின்பற்றுகிறோம். எல்லோரும் என்பதைவிட முன்னணியில் உள்ள ஜூ.வி., குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். வேற்றுமை என்றால், எங்களது நடைமுறையைச் சொல்லலாம். அதாவது, சில நேரங்களில் வெளியிடப்படும் செய்திகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் இருந்து மறுப்பு கடிதம் வரும். அதை நாங்கள் உதாசீனப்படுத்தாமல், அதற்கு மரியாதை கொடுத்து, இன்ன இன்ன ஆதாரங்கள் செய்தி வெளியிட்டதற்கு இருக்கின்றன என்று பதில் கடிதம் எழுதுவோம். அதன்பின்னர் அவர்கள் அதுபற்றி மீண்டும் எதுவும் கேட்க மாட்டார்கள். சிலநேரங்களில் ஆதாரம் இல்லாவிட்டால் மறுப்பை பிரசுரம் செய்யவும் செய்கிறோம். விளக்கம் கேட்பவரை மதிக்கும் இந்த தன்மையை நாங்கள் பின்பற்றி வருவது, மற்ற புலனாய்வு இதழ்களில் இல்லாதது.

சந்திப்பு : நெல்லை விவேகநந்தா.

(பேட்டி நிறைவுற்றது)

Share:

புதன், 8 செப்டம்பர், 2010

ஜூ.வி. ஆசிரியருடன் ஒரு பேட்டி...



துரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பில்., முடித்த நான், ஜூனியர் விகடன் பற்றி ஆய்வு செய்து சமர்ப்பித்து தேர்வு பெற்றேன். சமூக அவல உண்மைகளை வெளியிடுவதில் ஜூனியர் விகடனின் பங்களிப்பு (ஜனவரி - ஜூன் 2007) என்ற தலைப்பில் ஆய்வு செய்தேன். 

சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நான் ஜூ.வி. பற்றி மேற்கொண்ட இந்த ஆய்வின் தொடர்ச்சியாக, அந்த புலனாய்வு இதழின் பொறுப்பாசிரியர் நட்புக்குரிய குள.சண்முகசுந்தரம் அவர்களிடம் பேட்டி எடுத்தேன்.

இதழியல் படிக்கும் மாணவர்கள் மற்றும் இதழியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு அந்த பேட்டி உபயோகமாக இருக்கும் என்பதால், இங்கே அதைத் தருகிறேன்.


கேள்வி : ஜூனியர் விகடன் தொடங்கப்பட்ட ஆண்டு...

பதில் : 1982.

கேள்வி : ஜூ.வி. தொடங்கப்பட்ட காலத்தில் எடிட்டர் ஆக இருந்தவர்?

பதில் : பாலசுப்பிரமணியன்.

கேள்வி : ஜூ.வி. தொடங்கப்பட்ட காலத்தில் வரவேற்பு எப்படி இருந்தது?

பதில் : வரவேற்பு நன்றாகவே இருந்தது. அப்போது ஜூ.வி.யில் புது ஸ்டைல் கொண்டு வந்தோம். ஒரு செய்தி என்றால், அது நிகழ்ந்ததற்கான காரணத்தை அப்படியே சொன்னோம். ஒரு கொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளி, அந்த கொலையை செய்ய ஏதேனும் ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும். அந்த காரணம் அவனைப் பொறுத்தவரையில் நியாயமானதாக இருக்கும். அத்தகைய நேரங்களில் கொலையாளி சொன்னதையும் பேட்டி கண்டு ஜூ.வி.யில் பிரசுரித்தோம். பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, பாதிப்புக்கு காரணமானவர்கள் எந்த வகையில் அதற்கு காரணமாக அமைந்தார்கள் என்பதையும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வகையில் இவ்வாறு செய்தி வெளியிடுகிறோம். இப்படி செய்யும்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கேள்வி : எந்தெந்த முறைகளில் மக்களிடம் செய்திகளை கொண்டு செல்கிறீர்கள்?

பதில் : முன்பு சாமானிய மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் செய்திகளை கொடுத்தோம். இப்போது ஸ்டாண்டர்டு ஆக செய்தியை கொடுத்தாலும், மக்கள் எளிதில் அதை புரிந்து கொள்கிறார்கள். இதனால் மக்களிடம் ஒரு செய்தியை கொண்டு செல்வது மிகவும் எளிமையாகிவிட்டது.

கேள்வி : எப்படிப்பட்ட செய்திகள் ஜூ.வி.யில் வெளியாகின்றன?

பதில் : ஸ்டூடியோவுக்குள் (போட்டோ ஸ்டூடியோ அல்ல, சினிமா ஸ்டூடியோ) மட்டுமே இருந்த தமிழ் சினிமாவின் கேமரா எப்படி பாரதிராஜா மூலம் கிராமப்புறங்களை நோக்கி போனதோ, அதேபோல முதன் முதலில் கிராமப்புறங்களை நோக்கிச் சென்ற முதல் இதழ் ஜூ.வி.தான். இதுதான் ஜூ.வி.யின் வெற்றிக்கு காரணம். சென்னை, புதுடெல்லி மற்றும் வெளிநாடு என்று தமிழன் எங்கெல்லாம் இருக்கிறானோ, அவன் எந்த மாதிரியான செய்திகளை விரும்புகிறானோ அவற்றை நாங்கள் பிரசுரம் செய்கிறோம். குக்கிராமத்தில் கிடைக்கும் செய்தி வழியாகக்கூட எல்லாத் தமிழர்களையும் ஈர்க்கலாம். ஜூ.வி.யைப் பொறுத்தவரை பெரும்பாலும் சமூக அவலங்களை வெளிப்படுத்தும் செய்திகளை பிரசுரம் செய்கிறோம். உசிலம்பட்டி பெண் சிசு கொலை, வரதட்சணை கொடுமை போன்ற சமூக அவலங்களை உதாரணமாக கூறலாம். இப்போதெல்லாம் விதவிதமான சமூக அவலங்கள் அரங்கேறுகின்றன. மேலும், மக்களை அய்யோ... என்று பதற வைக்கிற விஷயங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கிறோம்.

கேள்வி : எந்த மாதிரியான செய்திகளை அதிக அளவில் பிரசுரம் செய்கிறீர்கள்?

பதில் : அரசியல், அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட செய்திகளை அதிக அளவில் பிரசுரம் செய்கிறோம். இந்த அரசியல் சார்பான விஷயங்களை தெரிந்து கொள்ளத்தான் மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் உள்ளது. சென்னையில் உள்ளவர்கள் மதுரையில் நிலவும் அரசியல் நிலவரங்களையும், மதுரையில் உள்ளவர்கள் சென்னையின் அரசியல் நிலவரங்களையும் அறிய ஆவல் உள்ளவர்களாக உள்ளனர். அதனால்தான் அரசியல் செய்திகளை ஜூ.வி.யில் அதிகம் காண முடிகிறது.

கேள்வி : எந்தெந்த வகைகளில் செய்திகளை பெறுகிறீர்கள்?

பதில் : வாசகர்கள் எழுதி அனுப்பும் செய்திகள்கூட பெரிய, பெரிய செய்திகளாக வெளிவந்துள்ளன. பல வாசகர்கள் இங்கே இப்படியரு செய்தி இருக்கு, இப்படியெல்லாம் சம்பவம் நடக்கிறது என்று போன் வழியாக தகவல் சொல்வார்கள். எங்களது நிருபர்களை வைத்து அந்த விஷயங்களை சேகரித்து செய்தியாக வெளியிடுவோம். அண்மையில், சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு சிறுவனை மாடியில் இருந்து அவனது முதலாளி கீழே தள்ளிவிட்டதாக அங்குள்ள வாசகர் ஒருவரே போனில் தகவல் சொன்னார். தகவல் கிடைத்த சிறிது நேரத்தில் நாங்கள் சிங்கப்பூரில் உள்ள எங்களது முன்னாள் செய்தியாளர், போட்டோகிராபர் ஆகியோரை தொடர்பு கொண்டு, அந்த செய்தியை சேகரித்து படத்துடன் வெளியிட்டோம். நாங்கள் நேரடியாக சென்று சேகரிப்பது மட்டுமல்ல, வாசகர்கள் கொடுக்கும், தெரிவிக்கும் தகவல்கள் கூட பெரிய அளவிலான செய்திகளாக வந்துவிடுவது உண்டு. அரசு அதிகாரிகள் கூட, தவறு நடப்பதாக செய்தியைச் சொல்வது உண்டு.

கேள்வி : கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்களில் படம் எவ்வாறு பெறப்படுகிறது?

பதில் : இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதனால் அதை லைவ் ஆக படம் எடுக்க முடியாது. சம்பவம் நடந்த பின்னர்தான் எடுக்க முடியும். பெரிய நகரங்கள் என்றால் இதுபோன்ற சம்பவங்களில், சம்பவம் நடந்த சிறிதுநேரத்திற்கு பின்னர் அங்கே சென்று விடலாம். ஆனால், தொலைவில் உள்ள பகுதி என்றால் படம் எடுப்பது மட்டுமின்றி, செய்தி சேகரிப்பதும் சற்று கடினம்தான். சிறிய ஊர்களுக்குப் போக 2 மணி நேரம் கூட ஆகும் என்பதால் அந்த மாதிரியான நேரங்களில் போலீஸ் தரப்பிலும் எங்களுக்கு உதவுவார்கள்.

கேள்வி : ஜூ.வி.யில் எவ்வாறு செய்திகளை துல்லியமாக வெளியிட முடிகிறது?

பதில் : செய்தியாளர்களின் பங்களிப்பு, விசாரணை பாணிதான் செய்திகளை துல்லியமாக வெளியிட முக்கிய காரணம். நடந்த ஒரு சம்பவத்தை ஒருவர் மிகைப்படுத்திக்கூட கூறலாம். அதனால், தேவையில்லாததை நீக்கி, தேவையானவற்றை மட்டும் கொடுக்கிறோம். ஒரு செய்தியை ஒரே நோக்கில் மட்டும் நோக்காமல் நான்கு கோணத்திலும் விசாரித்து சேகரிக்கும்போது தான் துல்லியமான செய்தியை கொடுக்க முடியும். அதை நாங்கள் தவறாமல் பின்பற்றுகிறோம்.

கேள்வி : செய்திகளை, அவை உண்மைதானா? என்று சரிபார்த்த பின்னர்தான் வெளியிடுகிறீர்களா?

பதில் : செய்தி உண்மை என்று தெரிந்தால்தானே வெளியிட முடியும்? சிலநேரங்களில் புகார் கொடுத்தவர் கூட குற்றவாளி ஆகலாம். அதனால், செய்தியின் தன்மை பற்றி முழுமையாக விசாரிக்காமல் வெளியிட மாட்டோம். விசாரித்தால்தான் உண்மை வெளிவரும்.

கேள்வி : கொலை, கொள்ளை, பெண் கொடுமை போன்ற செய்திகளை வெளியிடும் நீங்கள், நகைச்சுவையாக சமூகத்தின் பிற பகுதியையும் காண்பிக்க டயலாக் போன்ற பகுதிகள் வெளியிடுவது ஏன்?

பதில் : இதழை படிப்பவர்களுக்கு ஒரு ரிலாக்ஸ் வேண்டும். அதற்காக ஜாலியான தகவல் தெரிவிக்க வேண்டியது உள்ளது. இதனால்தான் பொதுஇடங்களில் மக்கள் பேசிக்கொள்வது போன்ற டயலாக் பகுதியை நகைச்சுவையாக வெளியிடுகிறோம். மேலும், சினிமா, ப்ளோ&அப் படம் போன்றவற்றையும் வெளியிடுகிறோம். இவ்வாறு செய்தால்தான் வாசகர்களை தக்க வைக்க முடியும்.

கேள்வி : மிஸ்டர் கழுகு பகுதியில் எப்படி துல்லியமாக, பின்னால் நடக்கப்போவதை ட முன்கூட்டியே எப்படி சரியாகச் சொல்ல முடிகிறது?

பதில் : எல்லாமே சோர்ஸ் (செய்தி மூலம்) மூலமாகத்தான். இந்த பகுதியை முன்பு ஒருவரே கவனித்து வந்தார். இப்போது எல்லோரும் கொடுக்கிற தகவல்களும் அதில் இடம்பெறுகின்றன. அதனால் ஒரு குக்கிராமத்தை பற்றிய விஷயம் கூட இந்த பகுதியில் வெளியிட முடிகிறது. கொலை நடந்தால் அதுபற்றி எப்படி விசாரணை நடத்துவோமோ, அதுபோல் தான் ஒரு யூகத்தின் அடிப்படையில் நடக்கலாம் என்கிற தகவலை சொல்கிறோம். இது பலநேரம் நடக்கவும் செய்யலாம். நடக்காமலும் போகலாம். இதில் தெரிவிக்கும் எதிர்கால கருத்துகள் யூகம் அடிப்படையானவைதான் என்றாலும், நம்பத் தகுந்தவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களாகத்தான் அவை இருக்கும்.

கேள்வி : அட்டை படத்தை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?

பதில் : அந்த வாரத்திற்குரிய மிக மிக முக்கியமான செய்திக்கான படம்தான் அட்டை படமாக இடம்பெறும். பலநேரம் 2, 3 படங்கள் அட்டைப் படத்தில் இடம்பெறலாம். ஒருசில நேரம் சுனாமி தாக்கம் போன்ற மிகவும் பரபரப்பான செய்திகள் வரும்போது, ஒரே செய்திக்குரிய படம் - படங்களை அட்டை படமாக தேர்வு செய்கிறோம்.
(பேட்டி தொடரும்...)

Share:

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

தோளுக்கு சீலை போராட்டம் - ஒரு பார்வை

தோளுக்குச் சீலை மறுக்கப்பட்ட காலத்தில் நடந்த அவல காட்சி...
ரு நடிகை சினிமாவில் மேலாடை இல்லாமல் நடித்தால், இன்றைய சமுதாயத்தில் சிலர் கொஞ்சம் ஓவராகவே பொங்கியெழுந்து விடுகிறார்கள். அவர்களில் சிலர், இன்னும் ஒருபடி மேலே போய், சம்பந்தப்பட்ட நடிகைக்கே சேலையை இலவசமாக அனுப்பி வைக்கும் போராட்டம் நடத்துகிறார்கள். காரணம் கேட்டால், 'ஒரு நடிகை மேலாடை இல்லாமல் நடித்தால், கலாச்சாரம், பண்பாடு சீர்கெட்டுப் போய்விடும்' என்கிறார்கள்.

ஆனால், கி.பி.1800களில் ஒரு நாட்டில் பெண்கள் மேலாடை அணியாமலேயே வாழ்ந்தார்கள் என்றால், அதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். அந்த நாடு, எங்கோ எத்தியோப்பியாவிலோ, சோமாலியாவிலோ அல்லது தென் ஆப்பிரிக்காவிலோ இல்லை. நம் தமிழ்நாட்டில்தான் இருந்தது. அதுதான் நாஞ்சில் நாடு.

வருடத்தின் எல்லா நாட்களும் சலசலத்துக்கொண்டு ஓடும் நீரோடைகள், இறைச்சலுடன் பாயும் ஆறுகள், வெள்ளியை உருக்கிக் கொட்டுவது போன்ற நீர்வீழ்ச்சிகள்... என்று கேரளத்தின் 'அக்மார்க்' அடையாளங்கள் நிறைய.

இந்த கேரள மாநிலத்தின் தென் பகுதிகளையும், இன்றைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கி இருந்த ஒரு சமஸ்தானம்தான் திருவிதாங்கூர். திருவனந்தபுரம் இவர்களது தலைநகரமாக இருந்தது. வெள்ளி நிறத்தில் வலம்புரிச் சங்கு பொறித்த செம்மை நிறக் கொடி, இந்த சமஸ்தானக் கொடியாக திகழ்ந்தது.

இந்த சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்ததுதான் நாஞ்சில் நாடு. வயலில் உழுவதற்கு பயன்படும் கலப்பைக்கு நாஞ்சில் என்ற பெயரும் உண்டு. இந்த பகுதியில் உழவுத் தொழில் அதிக அளவில் நடந்ததால், இப்பகுதியும் நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்டது. இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம், பூக்களுக்கு பெயர்போன தோவாளை ஆகிய வட்டங்களை உள்ளடக்கி பகுதிதான் நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்டது.

'நாங்கள் தோளில் சீலை அணிய உரிமை வேண்டும்...' என்று அவர்கள் போராடத் துவங்க... பல ஆண்டுகளுக்கு பிறகு அதில் வெற்றியும் கிடைத்தது. இந்த வெற்றிக்காக ரத்தம் சிந்திய, மானத்தை தியாகம் செய்த உயிர்கள் ஏராளம்... ஏராளம்...! தாழ்த்தப்பட்ட பட்டியலில் இடம்பெற்ற ஜாதியைச் சேர்ந்த பெண்கள்தான் இந்த கொடுமைகளை அனுபவித்தனர் - தாங்கிக்கொண்டனர்.

இவர்கள் எங்கு சென்றாலும், ஆதிக்க ஜாதியினருக்கு மரியாதை கொடுப்பதற்காக தங்கள் மேலாடையை அணியக்கூடாது என்பது, நாஞ்சில் நாட்டை உள்ளடக்கி ஆட்சி செய்த திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களின் கண்டிப்பான உத்தரவு.

'சமூகத்தில் பெரும் மரியாதைக்குரிய ஒரு மனிதரிடம் ஒரு பெண் தனது மார்பை திறந்து காட்டுவது என்பது, அந்த நபருக்கு சமூகம் அளிக்கும் மரியாதையாகவே கருதப்பட்டது' என்கிறார், 'திருவிதாங்கூரின் இயல்பு வாழ்க்கை' என்ற நூலை எழுதிய ஆங்கிலேயரான சாமுவேல் மேட்டீர். அதை மீறி மேலாடை அணிந்தால் கொடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். அதற்கு பயந்தே, மேலாடை இன்றி நடமாடினர், ஒடுக்கப்பட்ட ஜாதியினர்.

இன்னொரு அவல காட்சி...

ஆனாலும், எத்தனை நாட்களுக்குத்தான் மேலாடை அணியாமல் இருப்பது? என்று மனம் புழுங்கிய அவர்களில் சிலர் போராடத் துவங்கினர். அவர்களுக்கு ஆதரவாக அய்யா வைகுண்டர் போன்றோர் குரல் கொடுத்தனர். அந்த தெம்பில் ஆங்காங்கே கலகங்களும் எழுந்து அடங்கின.

தோளுக்குச் சீலை உரிமை கேட்டு தாழ்த்தப்பட்டவர்கள் போராடுகிறார்கள் என்பதை அறிந்த சமஸ்தான மன்னன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான். ‘அவர்கள் அப்படித்தான் ஆடை அணியாமல் இருக்க வேண்டும்; மீறி அணிந்தால், அவர்கள் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஏன்... கொலை கூட செய்யலாம்...’ என்று அரக்கத்தனமாக வாய்மொழியாக உத்தரவிட்டான் மன்னன்.

அதன்விளைவு... மார்பை மறைக்க முயன்ற பெண்கள் ஆடை கிழித்து அவமானப்படுத்தப்பட்டனர். சிலர் கொலையும் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாஞ்சில் நாட்டில் உள்ள நெய்யாற்றின்கரை, நெய்யூர், கல்குளம், கோட்டாறு, இரணியல் போன்ற பகுதிகளில் கலவரம் வெடித்தது.

அய்யா வைகுண்டரும் இந்த போராட்டத்தில் பெரும் பங்கெடுத்துக் கொண்டார். தன்னை காண வரும் பெண்கள் கண்டிப்பாக தோளுக்கு சீலை அணிந்துதான் வரவேண்டும் ஆணையிட்டார். அன்றைய காலக்கட்டத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பு பெண்கள், தோளுக்கு சீலை அணியக்கூடாது என்று இருந்த வழக்கம் பற்றி தனது அகிலத்திரட்டிலும் பதிவு செய்திருக்கிறார் அவர்.

"பூமக்கள் நீதமுடன் போட்ட தோள்சீலை தன்னைப்
போடாதே என்றடித்தானே சிவனே அய்யா..." என்று குறிப்பிடும் அய்யா,
"என் மக்கள் சான்றோர்கள் இடுப்பில் எடுத்த குடம்
ஏண்டி இறக்கென்றானே சிவனே அய்யா...." என்று, நாடார் குல பெண்கள் இடுப்பில் குடம் வைத்து செல்லக்கூடாது என்று ஆதிக்க ஜாதியினர் கூறியதையும் பதிவு செய்கிறார்.

இதற்கிடையில், மேலை நாட்டில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவ பரப்பாளர்கள், நாஞ்சில் நாட்டில் நிலவிய சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர். கி.பி.1780களிலேயே அவர்கள் நாஞ்சில் நாட்டிற்குள் நுழைந்துவிட்டாலும், தோளுக்கு சீலை போராட்டம் தீவிரம் அடைந்தபோது, அதற்காக போராடியவர்களுக்காக தங்கள் சுயநல குரலை எழுப்பினர்.

சமஸ்தான உத்தரவை எதிர்த்து தோளுக்கு சீலை அணிந்த  பெண்கள்...

‘தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்ததற்காக ஏன் வருத்தப்படுகிறீர்கள்? கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் உங்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைக்கும். திறந்த மார்போடு திரியாமல் தோளுக்கு சீலை அணிந்து கொள்ளலாம். மேலும், உங்களது பொருளாதார - கல்வி வசதிகளுக்கும் ஏற்பாடு செய்து தருகிறோம். உண்பதற்கு சுகாதாரமான - ஆரோக்கியமான உணவும் எங்கள் நிறுவனங்கள் சார்பில் தருகிறோம்...’ என்று கூறிய அவர்களது ஆசை வார்த்தைகள், தாழ்த்தப்பட்டோர் பலரது மனதை மாற்றியது. ஏராளமானபேர் தங்களை கிறிஸ்தவர்களாக்கிக் கொண்டார்கள். தோளுக்கு சீலை அணிந்து மார்பை மறைத்தும் கொண்டனர். அவர்களை பின்பற்றி தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்த பிற பெண்களும் தோளுக்கு சீலை அணிய ஆரம்பித்தனர்.

இது, ஆதிக்க ஜாதியினருக்கு பிடிக்கவில்லை. ‘நீங்கள் எந்த மதத்திற்கு மாறினாலும் தாழ்த்தப்பட்டவர்கள்தான்...’ என்று கூறி, அவர்களை பொது இடங்களில் அவமானப்படுத்தினர். மதம் மாறிய பெண்கள் அணிந்த மேலாடையை கிழித்து எறிந்தனர்.

இந்த பிரச்சினை சென்னை மாகாண நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஆங்கிலேயர்கள் என்பதால் ஒரு சார்பாகவே தீர்ப்பு கூறப்பட்டது. 1847 மார்ச் 19-ம் தேதி ஒரு தீர்ப்பை அவர்கள் வெளியிட்டனர்.

‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள் மேலாடை அணியவோ, நகைகள் அணியவோ உரிமை அளிக்கப்பட மாட்டாது. ஆனால், கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது’ என்று தீர்ப்பு கூறியது சென்னையில் உள்ள ஆங்கிலேயே நீதிமன்றம்.
இந்த தீர்ப்பு ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் கிளர்த்து எழச் செய்தது. ஆங்காங்கே கலகங்கள் நடந்தன.

சான்றோர் என்கிற நாடார் இனத்தில் உயர் வகுப்பினர் இருந்தனர். இவர்கள் நல்ல வசதியோடு வாழ்ந்ததால், இவர்களது பெண்கள் தோளுக்கு சீலை அணிந்து மார்பை மறைத்துக் கொண்டனர். அதேநேரம், அந்த இனத்தில் மேலும் சில உட்பிரிவுகள் இருந்தன. இந்த பிரிவில் உள்ளவர்களே பனை சார்ந்த தொழிலில் ஈடுபட்டனர் (இன்றும்கூட இந்த பாகுபாடு இந்த சமூகத்தில் உள்ளது. உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள், சம அந்தஸ்தில் உள்ள குடும்பங்களில்தான் பெண் கொடுப்பதும், எடுப்பதுமாக உள்ளனர்). இந்த சமூகத்தில் அவர்களே சமஸ்தான கொடுமைகளுக்கு அதிகம் ஆளாக்கப்பட்டனர். இவர்களைப் போன்று, தாழ்த்தப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்த பிற சமூகத்தினரும் பாதிக்கப்பட்டனர்.

‘கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் மட்டும்தான் எங்கள் மானம் காக்கப்படுமா?’ என்று பொங்கியெழுந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, அதுவரை போராட்டத்தில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்த நாடார் இன உயர் வகுப்பினரும் போராட்டத்தில் பங்கு பெற்றனர். இவர்கள் மெஜாரிட்டியாக இருந்த பகுதிகளில் ஆதிக்க ஜாதியினருக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.

நிலைமை மோசமானதால் சென்னை மாகாண கவர்னர் இந்த பிரச்சினையில் தலையிட்டார். அதைத்தொடர்ந்து, 1859 ஜூலை 26-ந் தேதி திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ‘தோளுக்கு சீலை அணியாத பெண்கள் இனி அதை அணிந்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அதேநேரம், மேல் ஜாதிப் பெண்களைப் போன்று ஆடை அணியக்கூடாது...’ என்பதுதான் அந்த அறிவிப்பு.

இதைத்தொடர்ந்து தோளுக்கு சீலை போராட்டம் நிறைவுக்கு வந்தது. ஆனாலும், இந்த சுதந்திர உரிமையைப் பெற நாஞ்சில் நாட்டு வரலாற்றில் படிந்த ரத்தக்கறையை மட்டும் யாராலும் அகற்ற முடியாது.
- நெல்லை விவேகநந்தா
Share: