வியாழன், 25 பிப்ரவரி, 2010

வயதுக்கு வந்த பெண்களுக்கு...


அந்த காலத்தில் பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்துவிட்டால், அவர்களது கர்ப்பப்பை பலம் பெறுவதற்காக உளுந்தங்களி கொடுக்கும் வழக்கம் இருந்தது. இந்த களியில் வெல்லம், உளுந்து, நல்லெண்ணெய் சேருவதால் இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து ஆகியவை நிறையவே காணப்படுகிறது. இவை கர்ப்பப் பையை பலப்படுத்துகின்றன.

இந்த உளுந்தங்களியை செய்வது எப்படி தெரியுமா?

அரை கப் உளுந்தை வாணலியில் வறுத்து, அதோடு 1/2 கப் அரிசி சேர்த்து மாவாக்கி சலித்துக்கொள்ளவும்.

2 கப் உடைத்த கருப்பட்டி வெல்லத்தோடு தண்ணீர் 2 கப் விட்டு சூடாக்கி, வெல்லம் கரைந்ததும் அரை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும்.

வடிகட்டி எடுத்த வெல்லக்கரைசலுடன் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அது நன்கு கொதிக்கும்போது மாவை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி, குறைந்த தணலில் சுமார் 10 நிமிடங்கள் வரை வேக விடவும்.

பின்னர், அடுப்பில் இருந்து இறக்கி, 2 டேபிள் ஸ்பூன் நெய்விட்டு கலந்து சாப்பிடலாம்.
Share:

அவல் பாயசம்


தேவையானவை :

பால்                                             - 1 லிட்டர்
வெள்ளை கெட்டி அவல்     - 1 கரண்டி
சர்க்கரை                                   - 200 கிராம்
ஏலக்காய்                                  - 4
பச்சை கற்பூரம்                      - ஒரு சிட்டிகை
முந்திரி, திராட்சை                - தேவையான அளவு

செய்முறை :

1. வாணலியில் சிறிது நெய்விட்டு அவல் பொரியும் வரை லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஏலக்காயை சேர்த்து மிக்ஸியில் பவுடர் போன்று நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

2. பாலை நன்கு காய்ச்சி அதனுடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடுங்கள்.

3. அந்த பாலில் அரைத்த அவலை சிறிது சிறி-தாக கொட்டிக்கொண்டே கிளறி விடுங்கள்.

4. கலவை நன்கு கொதித்தவுடன் பச்சை கற்பூரம் சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து இறக்கிவிடுங்கள்.

5. தேவை என்றால் குங்குமப்பூவும் சிறிது சேர்க்கலாம். கமகமக்கும் அவல் பாயசம் ரெடி!

விளக்கு பூஜையின்போதோ, அஷ்டலட்சுமி வழிபாட்டின்போதோ இதை நிவேதனம் செய்தால் செல்வம் கொட்டும் என்கிறார்கள்.
Share:

கேழ்வரகு இனிப்பு அடை


தேவையானவை :

கேழ்வரகு (ராகி) மாவு   - ஒரு கப்
வெல்லம்                            -  1/2 கப்
துருவிய தேங்காய்         - 1/4 கப்
ஏலக்காய்ப் பொடி,
நல்லெண்ணெய்              - தேவையான அளவு

செய்முறை :


1. வெல்லத்தை உதிர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு கரண்டி அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கவும். வெல்லம் முழுவதுமாக கரைந்ததும் அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

2. வடிகட்டிய வெல்லக் கரைசலோடு துருவிய தேங்காய், ஏலக்காய்ப் பொடி, கேழ்வரகு மாவு ஆகியவற்றை போட்டு கட்டிப்படாமல் கிளறிவிடவும்.

3. மாவு உதிரியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு போல் பிசையவும்.

4. சிறிய எலுமிச்சையளவு உருண்டைகளாக மாவை உருட்டுங்கள். வாழையிலையில் எண்ணெய் தடவி, அதில் உருண்டைகளை மெல்லிய வடைகள் போன்று தட்டி, சூடான தோசைக் கல்லில் நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

கேழ்வரகு இனிப்பு அடை தயார்.

பின் குறிப்பு : இந்த வகை அடை செய்யும்போது, கேழ்வரகு மாவு நன்கு வேக வேண்டும். அதனால், சிறு தீயில் அதை நன்றாக வேகவிடுங்கள்.

காரடையான்நோன்பு மேற்கொள்ளும் சுமங்கலிப் பெண்கள், அடை செய்து நைவேத்தியம் செய்வார்கள்.
Share:

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

அரிசி - பயத்தம் பருப்பு பாயசம்


தேவையானவை
:

அரிசி                          - 100 கிராம்
பயத்தம் பருப்பு     - 50 கிராம்
சர்க்கரை                  - 200 கிராம்
பால்                           - 250 கிராம்
நெய்                          - 15 கிராம்
முந்திரி                    - 50 கிராம்

செய்முறை :

1. அரிசி மற்றும் பயத்தம் பருப்பை தனித்தனியாக தண்ணீரில் கழுவி உலர்த்தி தனித்தனியாகவே பொன்னிறமாக வறுக்கவும்.
2. வறுத்த அரிசி மற்றும் பயத்தம் பருப்பை மிக்சியில் போட்டு அரைக்கவும். அரைக்கும்போது பவுடராக அரைத்துவிடக் கூடாது. ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.
3. ஒரு பாத்திரத்தில் இரண்டு மாவையும் போட்டு தேவையான அளவு நீர்விட்டு கொதிக்க விடுங்கள். அரைத்த அரிசி, பருப்பு மாவு நன்றாக வேக வேண்டும். அவை வெந்து கூழானதும் பால் மற்றும் சர்க்கரையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி விடுங்கள்.
4. பாத்திரத்தை இறக்கும்போது, நெய்யில் பொன்னிறமாக வறுத்தெடுத்த முந்திரிப் பருப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். விரும்பினால் ஏலக்காயும் சேர்க்கலாம்.

சுவையான, வித்தியாசமான அரிசி-பயத்தம் பருப்பு பாயசம் ரெடி!
Share:

திங்கள், 22 பிப்ரவரி, 2010

ஹோலி கலாட்டாக்கள்

ஹோலிப் பண்டிகை என்றாலே வட மாநிலங்கள் களைக் கட்டிவிடும். இளசுகள் முதல் பெருசுகள்வரை எல்லோரும் வண்ணப் பொடிகள் ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்தும், வர்ணம் கலந்த தண்ணீரை பீய்ச்சியடித்தும் மகிழ்வார்கள்.

இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் எல்லாம் வேறுபடுவதுபோல், இந்த பண்டிகை கொண்டாட்டமும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.

ஹோலி ராஜா

குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில், கிருஷ்ணர் வெண்ணெய் திருடியதையும், கோபியர் அதை தடுக்க முயன்றதையும் நினைவுகூறும் வகையில் ஹோலியை கொண்டாடுகிறார்கள்.

தெருவில் வெண்ணெய் நிரம்பிய பானையை தொங்க விடுகிறார்கள். இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி அந்த வெண்ணெய் பானையை உடைக்க முயற்சிப்பதும், இளம்பெண்கள் அவர்கள் மீது வண்ணம் கலந்த தண்ணீரை ஊற்றி தடுக்க முயற்சிப்பதும் சுவாராசியமாக இருக்கும்.
போட்டியின் இறுதியில் வெண்ணெய் பானையை உடைப்பவர் அந்த ஆண்டின் ஹோலி ராஜாவாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அடி வாங்கும் ஆண்கள்


உத்தரப்பிரதேசத்தில் உள்ள பார்சானா என்ற இடத்தில் ஹோலிப் பண்டிகை கொஞ்சம் வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது.

அங்குள்ள ராதா ராணி கோவிலில் நடைபெறும் இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடுகிறார்கள். அவர்கள் முன்னிலையில் ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்களை துண்டும் விதத்தில் ஒருவித பாடல் பாடுகிறார்கள். அவர்கள் மீது உரிமையோடு பொய்க் கோபம் கொள்ளும் பெண்கள், அவர்களை நீண்ட தடியால் விரட்டி விரட்டி அடிக்கிறார்கள் (நம் இடைக்கால சினிமாக்களில் காட்டப்படும் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் காட்சியை கற்பனை செய்து கொள்ளுங்கள்). அடி என்றால் பலமான அடியெல்லாம் கிடையாது. இது செல்ல அடி!

சிலநேரங்களில், தப்பித்தவறி சிலருக்கு பலத்த அடி விழுந்து விடுவது உண்டு. அதில் இருந்து தப்பிக்க நினைக்கும் ஆண்கள் கவச உடையை அணிந்து கொள்கிறார்கள்.விநோதமான ஹோலிப் பண்டிகையாக அமைகிறது இந்த விழா.

சேலை அடி

குஜராத்தில் கூட்டுக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கொண்டாடும் ஹோலிப் பண்டிகை சற்று வித்தியாசமாக அமைகிறது.

திருமணம் ஆன அல்லது ஆகாத குஜராத்திய பெண்கள், தங்கள் சகோதரியின் கணவன் மீது கேலியான கோபம் கொண்டு, தங்கள் சேலையில் கயிற்றைச் சுற்றி அதைக்கொண்டு அவர்களை செல்லமாக அடிப்பது ஹோலி கொண்டாட்டத்தின் இன்னொரு பகுதியாக அமைகிறது.

தங்களை செல்லமாக அடிக்கும், மச்சினிச்சிகளுக்கு அந்த மச்சான்கள் அடிக்கு பதிலாக இனிப்பு பண்டங்களை வாங்கிக்கொடுத்து அசத்துகிறார்கள்.

கிருஷ்ண லீலை

வங்காளத்தில் நடைபெறும் ஹோலி விழாவின்போது, கிருஷ்ணர், ராதாவின் சிலைகள் அழகாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றன. அப்போது, இளம்பெண்கள் பாடிக்கொண்டும், நடனமாடியபடியும் ஊர்வலத்தில் வருகிறார்கள்.

அவர்களை வேடிக்கைப் பார்க்க வரும் ஆண்கள், அவர்கள் மீது வண்ணப்பொடிகளை வீசுவதோடு, வண்ணம் கலந்த நீரைப் பீய்ச்சியடித்தும் மகிழ்கிறார்கள். கிருஷ்ண லீலைகளை விளக்குவதாக இந்த நிகழ்ச்சி அமைகிறது.


‘குஜால்‘ படுத்தும் ‘குலால்‘!

மணிப்பூரில் ஹோலி அன்று ‘குலால்‘ என்கிற ஒரு வகை விளையாட்டை ஆண்களும், பெண்களும் கலந்து விளையாடுகிறார்கள். இந்த விளையாட்டில் ஒரு பெண் கலந்துகொள்ள வேண்டும் என்றால், அவளுக்கு ஆண்கள் பணம் கொடுக்க வேண்டும்.

பவுர்ணமி நிலவொளியில் இவர்கள் ஆடும் ‘குலால்‘ ஆட்டம், அதை காண்போரை ‘குஜால்‘ படுத்திவிடுவது இந்த ஆட்டத்தின் தனிச்சிறப்பு.
Share:

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

அய்யா வைகுண்டர் நிகழ்த்திய அற்புதம்


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு என்ற இடத்தில் அவதரித்த அய்யா வைகுண்டர் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். அதில் ஒன்று...

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது -

இயற்கையின் செல்வச் செழிப்புக்கு பெயர்போன கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அந்த ஊரின் பெயர் சாரையோடு. இந்த ஊரைச் சேர்ந்தவள் பிச்சையம்மாள் என்ற இளம்பெண். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவள் சின்ன வயதிலேயே தாய்-தந்தையை இழந்துவிட்டாள். அதனால், சித்தாப்பாவின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தாள்.

பிச்சையம்மாளுக்கு 18 வயது ஆனபோது அவளது சித்தப்பாவும் இறந்துவிட்டார். அதனால், தனது குல தொழிலான துணி வெளுக்கும் வேலையை செய்து வாழ்க்கை நடத்தி வந்தாள்.

பெயருக்கு ஏற்றதுபோல் வறுமை அவளது குடும்பத்தில் காணப்பட்டாலும் அழகில் பணக்காரியாகவே இருந்தாள் இந்த பிச்சையம்மாள். அவளது பருவ வயது அவளை இன்னும் அழகாக மெருகூட்டி இருந்தது.

அவளது அழகில் சொக்கிப்போனவர்கள், அவளை அடையவும் ஆசைப்பட்டார்கள். அவளிடம் தங்களது ஆசையை தீர்த்துக்கொள்ள ஆசைப்பட்டவர்கள், அவளை வாழ்க்கைத்துணைவியாக ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.

காலம் வேகமாக சுழன்றது.

பிச்சையம்மாளின் வயது 26ஐ தொட்டுவிட்டது. தோள் கொடுத்து உதவ உற்றார்-உறவினர்கள் இல்லாததால் அவளது வாழ்க்கை பாலைவனமாய் வெறுமனே கிடந்தது.

"எனது வாழ்க்கை கடைசி வரைக்கும் இப்படியே போய்விடுமா?" என்று அவள் தனக்குள் புலம்பி அழுத நாட்கள் ஏராளம்! ஏராளம்!

ஒருநாள் சாமிதோப்புக்கு சென்ற பிச்சையம்மாள் அய்யா வைகுண்டரின் பாதத்தில் விழுந்து வணங்கினாள்.

அவளை "பிச்சையம்மா!" என்று அழைத்தார் அய்யா.

அப்போது பிச்சையம்மாளுக்கு ஒன்றும் ஓடவில்லை. நமது பெயர் எப்படி அய்யாவுக்குத் தெரியும்? என்று மனதுக்குள் பேராந்த பரவசத்திற்கு ஆனாள்.
அய்யாவிடம் தனது மனக்குறைகளை கொட்டி, அதற்கான தீர்வை வேண்டினாள். 26 வயது ஆகியும் இதுவரை திருமணம் ஆகவில்லை என்பதையும் சொன்னாள்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட அய்யா, "இன்று முதல் உன் துயரம் எல்லாம் நீங்கும். இன்னும் சில நாட்களில் நீ துணையோடு வருவாய்!" என்று வாழ்த்தினார்.

அய்யாவின் வாழ்த்தில் உள்ளம் பூரித்துப் போனாள் பிச்சையம்மாள். அய்யாவிடம் விடைபெற்று தனது ஊருக்கு திரும்பினாள்.

ஒருநாள் இரவு பிச்சையம்மாளின் கனவில் அய்யாவே தோன்றினார்.
"மகளே! உன் வீட்டுக்கு நாளை காலை எனது சீடர்கள் சிலர் வரவார்கள். அவர்களுக்கு உன் வீட்டிலேயே உண்ண உணவு கொடு" என்றார்.

ஏற்கனவே அய்யாவை நேரில் கண்டு பரவசம் ஆன பிச்சையம்மாள், தற்போது மீண்டும் அய்யாவே கனவில் தோன்றி அருளியதால் இன்னும் அதிகமான பரவசத்திற்கு ஆளானாள்.

மறுநாள் காலை அய்யாவின் சீடர்களை எதிர்பார்த்து வீட்டு வாசலில் வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு பரிமாற அறுசுவை உணவும் தயாரித்து வைத்திருந்தாள்.

சிறிதுநேரத்தில் அய்யாவின் சீடர்களான தர்ம சீசர், வீம சீசர், அர்ச்சுன சீசர், நகுல சீசர், சகாதேவ சீசர் ஆகிய 5 பேர் வந்தனர்.

தன் பெயரை தெரிவித்து, அவர்களை உள்ளம் மகிழ வரவேற்ற பிச்சையம்மாள், தனது குடிசை வீட்டிற்குள் அவர்களை அழைத்துச் சென்றாள். அய்யா கனவில் வந்து சொன்னது அப்படி நடந்துவிட்டதால் அப்போது அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.

அய்யாவின் வேண்டுகோளின்பேரில் தயாரித்து வைத்திருந்த உணவை அவர்களுக்கு பரிமாற தயாரானாள்.

ஆனால், அந்த சீடர்கள் என்ன நினைத்தார்களோ, உணவு உட்கொள்ளாமல், திருநாமத்தை மட்டும் அவளுக்கு பூசிவிட்டு திரும்பிவிட்டார்கள்.
பிச்சையம்மாளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தயார் செய்த உணவு வகைகளை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள்.
சிறிதுநேர யோசனைக்கு பிறகு அந்த முடிவை எடுத்தாள்.

தயார் செய்த அன்னம், சாம்பார் மற்றும் பதார்த்தங்களை, வீட்டின் பின்புறம் உள்ள காலியிடத்தில் ஆழமாக குழி தோண்டி, அதற்குள் பானையோடு புதைத்துவிட்டாள்.

அய்யா வைகுண்டர்

ஆசை ஆசையாய் தயார் செய்த உணவு வீணாகிவிட்டதே என்று வெகுநேரம் அழுதாள். பிறகு, தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.
இதற்கிடையில், பிச்சையம்மாள் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய அய்யாவின் சீடர்கள் 5 பேரும் மறுநாள் சாமிதோப்பை அடைந்தார்கள்.

அய்யாவை வணங்கி, கடந்த 7 நாட்களாக நாட்டு மக்களின் நிலையை அறிய சென்றபோது தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை சொல்ல முயன்றனர்.
அப்போது அய்யா வைகுண்டரே குறுக்கிட்டு பேசினார்.

"பிச்சையம்மாள் உங்களுக்கு உண்ண உணவு கொடுத்தாளா?" என்று கேட்டார்.
சீடர்கள் அப்படியே திகைத்துப் போய்விட்டார்கள்.

"எதற்காக வெளியே சென்று வந்தோம் என்பது பற்றி கேட்காமல், பிச்சையம்மாள் என்ற பெண்ணைப் பற்றி கேட்கிறாரே..." என்று எண்ணி அமைதியாக இருந்தனர்.

மீண்டும் அதுபற்றி அய்யாவே கேட்க, அங்கு சாப்பிடவில்லை என்ற உண்மையை பயந்தபடியே ஒத்துக்கொண்டனர் அவர்கள்.
அப்போது அய்யாவே பேசினார்.

"சீடர்களே! பாவிகளால் வகுக்கப்பட்ட சாதி என்ற பேதத்தை உங்கள் மனதைவிட்டு அகற்றிவிடுங்கள். எல்லோரும் என் மக்களே! அந்த பிச்சையம்மாள் என் மகள். அவள் உங்களுக்காக தயார் செய்த சாப்பாட்டை நீங்களே சாப்பிட்டாக வேண்டும். எங்கு யார் சாப்பாடு கொடுத்தாலும், அங்கே வேண்டாம் என்று நீங்கள் சொல்லக்கூடாது. இப்போது, உடனே பிச்சையம்மாள் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்று சாப்பிட்டு வாருங்கள்" என்று உத்தரவிட்டார் அய்யா.

அடுத்த நிமிடமே அந்த 5 சீடர்களும் பிச்சையம்மாளின் ஊரான சாரையோடுக்கு புறப்பட்டனர். மறுநாள், அவளது வீட்டை அடைந்தனர்.

அங்கே பிச்சையம்மாள் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். அவளது வாடிய முகமும், தேகமும், அவள் சாப்பிட்டு சில நாட்கள் ஆகிவிட்டது என்பதை தெளிவுப்படுத்தின.

சீடர்கள் அவளை இந்த கோலத்தில் பார்த்த மாத்திரத்தில் அதிர்ச்சி அடைந்தனர். நடந்த விவரங்களை தெளிவாகக்கூறி அவளுக்கு ஆறுதல் கூறினர். அய்யாவே சாப்பிட்டு வருமாறு பணித்ததையும் தெரிவித்தனர்.
இதை கேட்ட மாத்திரத்தில் சோகத்தில் இருந்து மீண்டு மகிழ்ச்சி அடைந்தாள் பிச்சையம்மாள். உணவு படைக்க தயார் ஆனாள்.

அப்போதுதான் அவளுக்கு சமைக்கவே இல்லையே என்பது நினைவுக்கு வந்தது.

இருந்தாலும், சோர்ந்து போய்விடவில்லை அவள்.
4 நாட்களுக்கு முன்பு பூமிக்கு அடியில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்த சாப்பாட்டை எடுக்க தோண்டினாள்.

அய்யாவே சீடர்களை சாப்பிட்டு வருமாறு தனது சீடர்களை அனுப்பி இருப்பதால், ஏற்கனவே புதைத்து வைத்து சாப்பாடு கெட்டுப்போய் இருக்காது என்ற நம்பிக்கையுடன் தோண்டினாள்.

புதைத்து வைத்திருந்த உணவு பானையை வெளியே எடுத்தாள்.
மூடியை திறந்தாள்.

அவள் எதிர்பார்த்ததுபோலவே உணவு கெட்டுப்போகாமல், அன்று சமைத்த உணவுபோல் அப்படியே இருந்தது.

அவளது கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது.
அய்யாவின் சீடர்களும் அதைப் பார்த்து பரவசம் ஆனார்கள்.
சிறிதுநேரத்தில் விருந்து நடைபெற்றது. சீடர்கள் 5 பேரும் பிச்சையம்மாள் பரிமாறிய சாப்பாட்டை மனமார ஏற்று சாப்பிட்டனர்.

விருந்து முடிந்ததும் அவளை ஆசீர்வதித்துவிட்டு சாமிதோப்புக்கு திரும்பினர்.
இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் பிச்சையம்மாளுக்கு ஏற்ற வரன் அவளைத் தேடி வந்தது. அவரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை தொடங்கினாள் அவள்.

Share:

சனி, 20 பிப்ரவரி, 2010

கலர்புல் கொண்டாட்டம்!



ந்துக்கள் கொண்டாடும் கலர்புல் திருவிழா ஹோலி. இந்தியாவின் வட மாநிலத்தை சேர்ந்தவர்களே இந்த திருவிழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கிறார்கள். பனி காலத்திற்கு விடையளித்து, வசந்த காலத்திற்கு வழிவிடும் விதத்தில் இந்த விழா அமைகிறது.

கிருஷ்ண பகவான், தனது இளம் வயதில் கோபியர்களுடன் ஆடிய விளையாட்டை நினைவுபடுத்தும் வகையிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

தீராத விளையாட்டு பிள்ளையான கிருஷ்ணர், தனது அன்னை யசோதாவிடம், "ராதை அழகாக இருக்கிறாள். நான் மட்டும் ஏன் கருமையாக இருக்கிறேன்?" என்று கேட்டார். அதற்கு யசோதா, "ராதையின் நிறம் மீது உனக்கு பொறாமை இருந்தால் அவள் மீது வர்ணங்களைப் பூசு. அவ்வாறு பூசினால் அவளும் உன்னைப் போன்ற கருமையான நிறத்தில் காட்சியளிப்பாள்" என்று பதிலளித்தார். அதன்படி, கிருஷ்ணரும் ராதை மீது வர்ணங்களை அள்ளிப்பூசினார்.

இப்போதைய ஹோலிப்பண்டிகை கொண்டாட்டத்தின்போதும், வண்ணப் பொடிகளை இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வீசியும், பூசியும், வண்ண நீரை பீய்ச்சியடித்தும் மகிழ்கிறார்கள்.

இந்த பண்டிகை கொண்டாட்டத்துக்கு காரணமாக இரணியன் கதையையும் சொல்கிறார்கள்.

இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுளாக வணங்க வேண்டும் என்று எண்ணினான். ஆனால், அவனது மகனான பிரகலாதனோ, மகாவிஷ்ணுவே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். கோபம் கொண்ட இரணியன், மகன் என்றும் பார்க்காமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே பூஜிக்கும்படி வற்புறுத்தினான்.

இதற்கு தீர்வு காண நினைத்த இரணியன், தனது சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான். ஹோலிகா, நெருப்பினால் எரியாத சக்தி கொண்டவள். அவளிடம் தனது மகனை அழிக்கும் பணியை ஒப்படைத்தான்.

அதன்படி, பிரகலாதனை தூக்கிக்கொண்டு நெருப்புக்குள் புகுந்தாள் ஹோலிகா. அந்த நெருப்பில் தனது மகன் இறந்து விடுவான் என்று கணக்கு போட்டான் இரணியன். ஆனால் நடந்ததோ வேறு.


மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் இருந்த பிரகலாதனை நெருப்பு ஒன்றும் செய்யவில்லை. ஆனால், தீய எண்ணத்துடன் தீக்குள் நுழைந்த ஹோலிகா எரிந்து சாம்பலானாள்.

இதை நினைவுபடுத்தும் வகையில் ஹோலி பண்டிகை அன்று திறந்தவெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வதும் உண்டு. இவ்வாறு ஹோலிகா அழிந்த தினமே ஹோலி பண்டிகையாக மாறிவிட்டது என்கிறது அந்த புராணக்கதை.

காமன் விழா :
மன்மதன்

தமிழ்நாட்டில் காமதேவனது உன்னதத் தியாகத்தை வியந்து போற்றும் வழிபாட்டு நிகழ்வாக ஹோலிப் பண்டிகை கருதப்படுகிறது.

ஒருசமயம் பார்வதி தேவி தட்சனுக்கு மகளாகப் பிறந்து தாட்சாயிணி எனப் பெயர் பெற்றாள். பின்னர் தவம் செய்து ஈசனை அடைந்தாள்.

இந்நிலையில், தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். அதற்கு தேவர்கள் அனைவரையும் அழைத்தான். ஆனால் தன் மாப்பிள்ளையான சிவபெருமானை அழைக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட  தாட்சாயிணி, தன் தந்தை யாகம் நடத்தும் இடத்திற்குச் சென்று நியாயம் கேட்டாள். தட்சன் சிவபெருமானை அவமரியாதையாகப் பேசியதால், அந்த யாகத் தீயில் விழுந்து உயிர்விட்டாள்.

அதற்குப்பின் பல நிகழ்வுகள் நடந்தன. சிவபெருமானின் அருளால் மலை அரசனான பர்வதராஜனின் மகளாகப் பார்வதி என்ற  பெயரில் மீண்டும் பிறந்து, ஐந்தாவது வயதில் சிவபெருமானை நோக்கித் தவம் செய்தாள் பார்வதி.

காலம் கடந்தது. தன் மனைவியைப் பிரிந்த ஏக்கத்தில் சிவபெருமான் தியானத்தில் அமர்ந்திருந்தார்.  அதனால் உலகில் உயிர்களின் பிறப்பு இல்லாமல் போனது. இதனால் தேவர்கள்  பிரம்மாவின் தலைமையில் திருமாலிடம் சென்று, உலகின் உயிர்களின் நிலை பற்றிச் சொன்னார்கள். அதைக் கேட்ட திருமால், சிவபெருமானின் தியானத்தை கலைக்கத் தகுந்தவன் காமன் எனப்படும் மன்மதனே என்று உணர்ந்து,  அவனை அழைத்தார். சிவபெருமானின் தியானத்தைக் கலைக்கும்படி கூறினார்.

திருமாலின் கட்டளைப்படி மன்மதன் தன் மனைவி ரதியுடன் சிவபெருமான் தியானம்  செய்யும் இடம் நோக்கிச் சென்றான். காதல் நினைவாக இருத்தல், அதனை எண்ணிப்  புலம்பல், சோகம், மோகம், மரணம் ஆகியவற்றைக் குறிக்கும் முறையே தாமரை, அசோகு, முல்லை,  மா, நீலம் எனும் ஐந்து மலர்களையும் அம்பாகக் கொண்டு, கரும்பை வில்லாக வளைத்து  சிவபெருமான்மீது தொடுத்தான் மன்மதன்.

மலர் அம்பால் தாக்கப்பட்ட சிவபெருமானின் தியானம் கலைந்தது. தன் தியானத்தைக் கலைத்தது யார்? என்று கோபத்துடன் சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறக்க... அடுத்த நிமிடமே மன்மதன் எரிந்து சாம்பலானான்.

அருகில் இருந்த  ரதி, அதனைக் கண்டு துடிதுடித்தாள். சிவபெருமானிடம் சென்று தன் கணவனை மீண்டும் உயிர் பெறச் செய்மாறு மன்றாடினாள். ரதியின் நிலை அறிந்து, மனமிரங்கிய சிவபெருமான், "நான் பார்வதியைத் திருமணம் செய்து கொண்டபின் உன் கணவன் உயிர்பெற்று எழுவான். ஆனால், உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான்; மற்றவர்களுக்குத் தெரிய மாட்டான்' என்று வரம் அருளினார்.

இந்த சம்பவத்தின்படி சிவபெருமான், காமனை எரித்த இடம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருக்குறுங்கை ஆகும். இங்கு காமதகன விழா ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவில் நடைபெறுகிறது. இங்குள்ள குளத்தின் அடிப்பகுதியில் சாம்பல் மயமாக இருப்பதை இன்றும் நாம் பார்க்கலாம்.

திருக்குறுங்கை கிராமத்தைச் சுற்றி சில கிராமங்கள் இந்த வரலாற்றின் அடிப்படையில்  பெயர்களைக் கொண்டுள்ளன. சிவபெருமான் மீது மலர் அம்பினை ஏவ மன்மதன் கங்கணம்  செய்துகொண்ட இடம் "கங்கணநல்லூர்" என்றும், அவர் தன் கால்களை வளைத்து குறி பார்த்த இடம் "கால்விளை" என்றும், வில் ஏந்திய இடம் "வில்லியநல்லூர்" என்றும் அழைக்கப்படுகின்றன.

ஹோலி கொண்டாட்டம் ...

Share:

கரு வளையம் உங்களை உறுத்துதா?



உங்களை பளிச்சென்று காட்டுவது முகஅழகு தான். அந்த முகத்தில் வசீகரமான அழகை தருவது கண்கள் தான். இதனால் தான் மீன் போன்ற கண்கள் கொண்ட பெண்களை ‘மீன் விழியாள்‘ என்றும், கூரான அம்பு போன்ற கண்களை கொண்டவர்களை ‘வேல் விழியாள்‘ என்றும் சொல்வார்கள்.

சில பெண்களுக்கு அந்த கண்களே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்துவிடுவது உண்டு. கண் குறைபாட்டை நாம் இங்கே சொல்லவரவில்லை. அழகான கண்ணை சுற்றிலும் திடீரென்று தோன்று கருவளையத்தை தான் சொல்ல வருகிறோம்.


கண்களுக்கு கீழ் நோக்கினால் இந்த கருவளையத்தை கண்டுபிடித்து விடலாம். அந்த இடத்தில், சுமார் அரை அங்குலம் அகலத்திற்கு லேசான கருப்பு நிறத்தில் வில் போன்ற வளைவாக சருமம் காணப்படும். இது ஒரு பெண்ணின் அழகையே கெடுத்துவிடும்.

இந்த கருவளையம் ஏற்பட பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முதல் காரணம், அந்த இடத்தில் தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து காணப்படுவது தான். அந்த சுருக்கமே கருப்பு நிறமாக மாறி, கருவளையத்தை ஏற்படுத்தி விடுகிறது.

போஷாக்கு இல்லாத உணவு வகைகளை உண்பதுகூட இதற்கு காரணமாக அமையலாம். தோலை வெளுப்படையச் செய்யும் தாது உப்புகளும், புரதமும், கொழுப்புச்சத்தும் உள்ள உணவு பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் இந்த கருவளையம் நாளடைவில் மறைந்துவிடும்.

கண்களுக்கு அதிக வேலை கொடுத்தாலும் கருவளையம் வரலாம். அதாவது, அதிக நேரம் கண் விழித்து படிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது டி.வி. பார்த்து வந்தாலோ கருவளையம் தோன்றலாம். நீண்டகாலம் உடல்நலக்குறைவாக இருப்பதும், உணவு கட்டுப்பாட்டில் இருப்பதும்கூட இதற்கு காரணமாக அமையலாம்.


சில பெண்கள் என்ன வேலையாக இருந்தாலும் இழுத்துப்போட்டுக்கொண்டு தாங்களே செய்வார்கள். வேலையை கொஞ்சமாவது பகிர்ந்து கொள்வோம் என்று எண்ண மாட்டார்கள். இப்படி எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு பார்த்தாலும்கூட கருவளையம் வந்துவிடும். அதாவது, அதிகப்படியான வேலையை தொடர்ந்து செய்யும்போது அதிகப்படியான சோர்வு ஏற்பட்டு, ஏற்பட்டு இக்குறைபாடு வந்துவிடும்.

ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்களுக்கும்கூட கண்ணில் கருவளையம் வரலாம்.
சரி... வந்த கருவளையத்தை எப்படி போக்கலாம் என்று கேட்கிறீர்களா? இதற்காக ரொம்பவும் ரிஸ்க் எடுக்க வேண்டாம். அன்றாட சமையலில் கொஞ்சம் அக்கறை காட்டினாலே போதும்.

கண்ணில் உள்ள கருவளையத்தை நீக்க இரும்புச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகளை அதிகம் உண்ண வேண்டும். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, முள்ளங்கி, சின்ன வெங்காயம், பூண்டு, அவரைக்கீரை, ஆப்பிள், நெல்லிக்காய், விளாம்பழம், நாவல்பழம், கமலா ஆரஞ்சு, வாழைப்பழம், வெள்ளரிப்பழம், பாகற்காய், வாழைத்தண்டு போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. பொன்னாங்கன்னி கீரை கூட இதற்கு நல்லது தான்.

இந்த காய்கறிகளை சமையலில் அதிகம் பயன்படுத்தினாலே நாளடைவில் கருவளையத்தின் பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம். அழகான கண்களுக்கு சொந்தக்காரி ஆகிவிடலாம்.

கருவளையம் உள்ளவர்கள், இதுபோக இன்னொரு முறையையும் பின்பற்றலாம்.

வெற்றிலை போட பயன்படுத்தும் சுண்ணாம்பை ஒரு பட்டாணி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை 1/2 கப் குளிர்ந்த நீரில் கரைத்து சுமார் 1/2 மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அந்த சுண்ணாம்பு நீரானது தெளிந்தவுடன், அதில் இருந்து 2 ஸ்பூன் தெளிந்த தண்ணீரை வேறொரு கிண்ணத்தில் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.

பிரித்தெடுத்த தண்ணீரின் அளவுக்கு எலுமிச்சைச்சாறும் பிழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். தொடர்ந்து, இரண்டையும் ஒன்றாக கலந்து, அதை1/2 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்ணை சுற்றி பூசுங்கள். கண்விழியில் பட்டுவிடக்கூடாது.

இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் கண் கருவளையம் மறைந்துவிடும். அதன்பின்னர் கருவளையமே வரக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், உணவு முறையில் தான் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதாவது, இரும்புச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இனி... கரெக்ட்டா பாளோ பண்ணுவீங்க தானே...?
Share:

இனி நீங்களும் அழகி தான்...!


ழகாக இருக்க வேண்டும் என்று எல்லா பெண்களுக்குமே ஆசை இருக்கும். இயற்கை தந்துள்ள அழகை இன்னும் மெருகூட்டுவது ஆடைகள் தான். அந்த ஆடையை அணிந்து கொள்ளும் விதமே அழகை நிர்ணயிக்கிறது.
தங்கள் உடல் அளவுக்கு ஏற்ப, வயதுக்கு ஏற்ப ஆடையை அணிந்து கொண்டால் எந்த பெண்ணும் அழகியாக ஜொலிக்கலாம்.

ஒல்லியாகவும், உயரமாகவும் கலராக உள்ள பெண்கள் கோடு அல்லது கட்டம் போட்ட ஆடைகள் பக்கம் போய்விட வேண்டாம். முடியை கழுத்துக்கு மேல் தூக்கி சிகை அலங்காரமும் செய்யக்கூடாது. சிறிய பார்டர் சேலை அல்லது நீள வாக்கில், அதாவது மார்பில் இருந்து நுனி வரை பூ வேலை செய்த சுடிதார் அணியவும் கூடாது.

கொஞ்சம் பெரிய பூக்கள் போட்ட பளிச்சென்று மின்னும் சேலைகள் அல்லது சுடிதாரும், பாட்டமும் பூ போட்ட சுடிதார்கள் அணிந்தால் நீங்கள் அதற்கு மிகவும் பொருத்தமாக இருப்பீர்கள். நீளமான, அகலமான பிளெயின் துப்பட்டாவை பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை, கருப்பு நிறங்களில் அணிந்து நீங்கள் நடந்து வந்தால் உங்களை ‘ஜொள்’ளுபவர்களின் எண்ணிக்கையை தவிர்க்க முடியாததாகிவிடும். அந்த அளவுக்கு நீங்கள் எடுப்பாக தெரிவீர்கள்.

ஒல்லியாகவும், உயரமாகவும் உள்ள கருப்பு அல்லது மாநிறமாக உள்ள பெண்கள் மிகவும் டார்க்கான கலர் ஆடைகளை தேர்வு செய்யக்கூடாது. அப்படியே தேர்ந்தெடுத்தாலும், டார்க் மற்றும் லைட் கலர்கள் மாறி, மாறி வருவதுபோல் ஆடையை தேர்வு செய்யலாம்.

இப்படி ஆடையை தேர்வு செய்யும்போது, அந்த ஆடையில் உள்ள ஏதாவது ஒரு கலரில், முடிந்தால் ஆடையில் உள்ள லைட் கலரில் ப்ளவுஸோ, துப்பட்டாவோ அணியலாம்.

குட்டையாகவும், சிகப்பு கலருமாக இருக்கும் பெண்கள் ப்ளெயின் கலரில் ஆடை அணியக்கூடாது. அதையும் மீறி அணியும்போது, அணிந்திருக்கும் ஆடை புடவையாக இருந்தால் ப்ளவுஸ் காண்ட்ராஸ்டாகவோ அல்லது வேலைபாடுகள் கொண்டதாகவோ இருக்கலாம்.

கருப்பாகவும், குள்ளமாகவும் இருப்பவர்கள் மெல்லிய சரிகை பார்டர் வைத்தோ அல்லது மெல்லிய பார்டருடனோ புடவை அணியலாம். முடிந்தவரை பார்டரும், தலைப்பும் உள்ள புடவைகளை தவிர்ப்பது நல்லது.
மிகவும் டார்க் நிற ஆடைகளை கருப்பு நிறம் கொண்டவர்கள் அணியக்கூடாது.

அப்படியே அணிந்தாலும், அதில் சிறிய வெளிர் நிறப்பூக்களோ அல்லது புள்ளிகளோ இருக்கும்படியான ஆடைகளை தேர்வு செய்து அணியலாம். இவர்கள், ஒற்றை ஒற்றையாக தனித்தனி டிசைன்களும், அந்த டிசைன்களுக்கு நடுவே நிறைய இடைவெளியும் இல்லாமல் இருப்பதுபோன்ற புடவைகளை தேர்வு செய்து அணிந்தால் அம்சமாக இருக்கும்.

குண்டாக இருப்பவர்கள், உடலுடன் ஒட்டியவாறு எந்தவொரு ஆடையையும் அணியக்கூடாது. அப்படி அணிந்தால் பப்ளிமாஸ் என்று தான் கிண்டல் செய்வார்கள்.

ஒல்லியாக இருப்பவர்கள் ஸ்டார்ச் செய்த காட்டன் ஆடைகளை அணியலாம். டாப்பும், பாட்டமும் வெவ்வேறு கலரில் இருப்பதுபோல் சுடிதார் அணிந்தால் இன்னும் சூப்பராக இருக்கும். மிடியில் கூட முன்பக்கம் பட்டையாக தைத்து, அதில் அடி நுனி வரை பூ வேலைபாடுகள் அல்லது மணி சம்கி அமைந்திருந்தால் தோற்றத்தை சற்று உயர்த்திக்காட்டும். ஆடையும் அழகாக இருக்கும்.

ஒல்லியாக இருப்பவர்கள் பிரில் வைத்த ஆடைகளை அணிந்தால் சிறிது குண்டாக தூக்கிக் காட்டும். இவர்கள் இறுக்கமான ஆடைகளை தவிர்த்துவிட வேண்டும்.
பேன்ட், டீ ஷர்ட் அணியும் பெண்கள் டீ சர்ட்டை இன் செய்யாமல் அணியலாம். பேன்ட், ஷர்ட் அணிபவர்கள், ஷர்ட்டில் ஒரு எம்பிராய்டரியோ, மோடிபோ, பேன்ஸி பட்டனோ இருக்கும்படி அணியலாம்.

மொத்தத்தில், என்ன விலை கொண்ட ஆடை அணிகிறோம் என்பது முக்கியமல்ல, மேட்சிக்கான ஆடையை தேர்வு செய்கிறோமா என்பது தான் முக்கியம். உங்கள் செலக்ஷன் சரியாக இருந்தால், இனி நீங்களும் அழகி தான்...!
Share:

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

கிளியோபாட்ராவை கவர்ந்த குங்குமப்பூ



குங்குமப்பூ என்று சொன்னதும் அழகான குழந்தைதான் நம் நினைவுக்கு வரும். இதனால்தான், கருவுற்ற பெண்கள் தங்களது குழந்தை தமன்னா கலரில் பிறக்க வேண்டும் என்று தவம் இருக்காத குறையாக இந்த குங்குமப்பூவை வாங்கி பாலில் கலந்து குடிக்கிறார்கள்.

 இந்த உண்மைதான் என்று இன்றைய மருத்துவம் உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம், குங்குமப்பூ சாப்பிட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்று சர்டிபிகேட் கொடுக்கிறார்கள் டாக்டர்கள்.

குங்குமப்பூவின் விலை எக்கச்சக்கம் என்பதால் எல்லோரும் அதை பார்த்ததில்லை. இந்தியாவை பொறுத்தவரை காஷ்மீர் குங்குமப்பூ புகழ்பெற்றது.

சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் இதை பயிரிட்டு பயன்படுத்தி உள்ளனர். கி.மு.7ம் நூற்றாண்டிலும்கூட இதை மக்கள் பயன்படுத்தியதற்கான சரித்திர குறிப்புகள் கிடைத்துள்ளன. அக்கால உலக மக்களில் எகிப்தியர்களே இந்த குங்குமப்பூவை அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள். பேரழகி கிளியோபாட்ரா கூட இதை பயன்படுத்தினாளாம்.

மாவீரன் அலெக்சாண்டர் தனது ஆசிய படையெடுப்பின்போது குங்குமப்பூக்களை அதிக அளவில் பயன்படுத்தி உள்ளார். அவரது போர் வீரர்கள், போரின்போது ஏற்பட்ட காயம் ஆற இந்த பூவை அரைத்து பூசியுள்ளனர். இதுதவிர, உணவிலும் சேர்த்துள்ளனர்.

இப்படி உலக அளவில் பிரபலமான குங்குமப்பூ, கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்னர்தான் காஷ்மீருக்கு வந்துள்ளது.

குங்குமப்பூ தாவரத்தை பார்க்கவே அழகாக இருக்கும். அதன் பூக்கள் இன்னும் அழகாக ஜொலிக்கும். இந்த பூவின் மகரந்த சேகரத்தை தான் நாம் குங்குமப்பூ என்று பயன்படுத்துகிறோம்.

குங்குமப்பூவை ஸ்பெயின் தான் அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. இரண்டாவது இடத்தில் இத்தாலியும், மூன்றாவது இடத்தில் கிரீசும், நான்காவது இடத்தில் நம் இந்தியாவும் உள்ளன.

சிகப்பழகை பெற விரும்பும் பெண்களுக்கு இந்த குங்குமப்பூ ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

குங்குமப்பூவை நன்கு பொடியாக்கி, அதில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து, அதில் சிறிது பால் விட்டு குழைத்து, அந்த கலவை முகத்தில் பூசி வந்தால் முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் காணாமல் போய்விடும்.

குங்குமப்பூவை உரசி, அதை ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரில் சேர்த்து சிறிது நேரம் ஊறவிட்டால், குங்குமப்பூவின் நிறம் முழுவதும் தண்ணீரில் ஊறிவிடும். அதில் சிறிது வெண்ணெயை கலந்து நன்றாக குழைத்து, உதடுகளில் பூசி வந்தால் செக்கச்செவேல் என்று உதடுகள் அழகாகும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் செவ்வாழைப்பழத்தின் தோல் போல் கவர்ச்சியாக மாறும்.
முகத்திலும் இந்த கலவையை அப்ளை செய்யலாம். அப்படி செய்தால், உங்கள் முகமும் செவ்வாழைப் பழ உதடு போல் ஜொலி ஜொலிக்கும்.

புதிதாக திருமணம் ஆன தம்பதியருக்கு குங்குமப்பூ, பாதாம் பருப்பு கலந்த பாலை உட்கொள்ள கொடுத்து வந்தால் சரியாக 10வது மாதத்தில் வீட்டில் குவா... குவா... சத்தம் கேட்கும் என்று சர்டிபிகேட் கொடுக்கலாம். அந்த அளவுக்கு அது தாம்பத்திய ஆசையை தூண்டும்.

ஒரு பொருளுக்கு மார்க்கெட்டில் மவுசு இருக்கிறது என்றால் அதில் போலியும் வந்துவிடும் தானே? இந்த குங்குமப்பூ விஷயத்திலும் அப்படித்தான் உள்ளது.

ஒரிஜினல் குங்குமப்பூ என்று கூறி, அதற்கு சம்பந்தமே இல்லாத பொருளை சிவப்பு சாயத்தில் கலந்து கொண்டு விற்று காசு பார்க்கும் கூட்டமும் உள்ளது.

நாம்தான் எது ஒரிஜினல்? எது டூப்ளிகேட்? என்று தெரியாமல் ஏமாந்து போகிறோம்.

ஒரிஜினல் குங்குமப்பூவை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டால் பூ மெதுவாக கரைந்து மின்னக்கூடிய தங்க நிறம் கொண்டதாக அந்த தண்ணீர் மாறும். நல்ல மணமும் வீசும். டூப்ளிகேட் குங்குமப்பூ உடனேயே தண்ணீரில் கரைந்து, அந்த தண்ணீரை சிவப்பு நிறமாக்கிவிடும். மணமும் இருக்காது.

பின்குறிப்பு : கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூவை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. இது அளவுக்கு மீறினால் கரு கலைந்து போகவும் வாய்ப்பு இருக்கிறது. காரணம் குங்குமப்பூ அதிக வெப்பத்தை ஏற்படுத்துவதுதான்.
Share:

வியாழன், 18 பிப்ரவரி, 2010

இவர்தான் "மச்சக்காரன்"

மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன்

* எனக்கு பல இடங்களிலும் மாப்பிள்ளை பார்த்தார்கள். எந்த வரனும் சரியாக அமையவில்லை. அப்போதுதான், இந்த கோவில் பற்றி கேள்விப்பட்டோம். இங்கு வந்து வழிபட்டு பரிகாரம் செய்தோம். என்ன ஆச்சரியம்... அடுத்த மாதமே திருமணம் நிச்சயமாகிவிட்டது. அந்த நல்ல செய்தியை எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்பதற்காக இங்கே எழுதுகிறேன்.
- அமலா, லால்குடி.

* எங்கள் வீட்டில் ‘போர்வெல்‘ அமைக்க முடிவு செய்தோம். 350 அடி வரை போர் போட்டால்தான் எங்கள் பகுதியில் தண்ணீர் கிடைக்கும் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனாலும், குறைந்த அடியில் தண்ணீர் கிடைக்க வேண்டி, இந்த கோவிலில் ஆசீர்வதித்து தரப்பட்ட திருநீற்றை தண்ணீரில் கரைத்து ஓரிடத்தில் ஊற்றிவிட்டு, அந்த இடத்தில் போர் போட ஆரம்பித்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே ஆச்சரியம் காத்திருந்தது. 350 அடியில் கிடைக்க வேண்டிய தண்ணீர் மிகக்குறைந்த அடியிலேயே கிடைத்தது. எங்களுக்கு அருள் வழங்கிய முருகப்பெருமானுக்கு நன்றி சொல்லவே இதை எழுதுகிறேன்.
- விஜயா, மேடவாக்கம், சென்னை.

* எங்களுக்கு திருமணமாகி 3 வருடங்களுக்கு மேல் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. அப்போதுதான், இந்த கோவில் பற்றி உறவினர் ஒருவர் மூலமாக கேள்விப்பட்டோம். உடனே, இங்கு வந்து வழிபட்டு பரிகாரத்தையும் செய்து முடித்தோம். அதன் பலனாக நான் குழந்தை பாக்கியம் பெற்றேன். இப்போது நல்லபடியாக குழந்தையையும் பெற்றெடுத்துவிட்டேன். அதற்காக, இந்த மச்சக்கார முருகனுக்கு எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
- சசிரேகா, கோவை.


- சென்னையின் புறநகர் பகுதியான போரூரை அடுத்த வானகரம் - மேட்டுக்குப்பத்தில் உள்ள மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் கோவிலில் உள்ள பக்தர்களுக்கான பதிவேட்டை புரட்டினால், இப்படி எழுதியிருப்போரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதை காணலாம்.

இதனால்தான் என்னவோ, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த கோவிலைத் தேடி வருகிறார்கள்.

2003-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகப்பெருமான் சிலையில் திடீரென்று ஒரு மச்சம் தோன்றியது. அவரது வலது கன்னத்தில் மேல்புறம் சிவப்பு நிறத்தில் அது காணப்பட்டது. இதைக்கண்ட பக்தர்கள் பரவசம் ஆனார்கள். இங்குள்ள முருகப்பெருமானும் ‘மச்சக்காரன்‘ ஆனார்.

இந்த தகவல் முருகப்பெருமான் - வள்ளி வரலாற்றிலும் உள்ளது.


முருகப்பெருமானை திருமணம் செய்து கொள்வதற்காக வேடர்குல தலைவன் நம்பிராஜனின் மகளாக அவதரித்தாள் வள்ளி. முதன் முதலில் அவளை காண வந்த முருகப்பெருமான், வேடன் உருவத்தில் அங்கே வந்தார். வள்ளியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறினார். ஆனால், வள்ளியோ கோபம் கொண்டு சீறினாள்.

மறுநாள் மறுபடியும் வந்தார் முருகப்பெருமான். இப்போது அவர் வந்தது ஒரு வயோதிகர் வேடத்தில். ஆனாலும், அவரை அடையாளம் கண்டுகொண்டு விட்டாள் வள்ளி. அவரை அடையாளம் காண வைத்தது, அவரது முகத்தில் இருந்த மச்சம்தான். ‘வேடம் போடும்போது மச்சத்தையும் மறைக்க வேண்டும் என்பது தெரியாதா?‘ என்று கேட்ட வள்ளியை, தனது அண்ணன் விநாயகரின் துணையுடன் மணந்து கொண்டார் முருகப்பெருமான்.

அதனால், மேட்டுக்குப்பம் மச்சக்கார முருகப்பெருமான் கோவிலுக்கு வந்து 2 நெய் தீபம் ஏற்றி, 9 எலுமிச்சம் பழங்களை பெற்று வழிபட்டால் 3 மாதத்திற்குள் நல்ல முறையில் திருமணம் நடந்தேறும் என்கிறார்கள். ஆயில்யம், மூலம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், செவ்வாய் மற்றும் ராகு -கேது தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்களும் இங்கு வந்து வழிபடுவதன் மூலம் உடனடியாக திருமண வாய்ப்பை பெற்று மகிழ்கிறார்கள்.

மேலும், இந்த கோவில் குருஜி, சரியாக பேச்சு வராத குழந்தைகளின் நாவில் ‘ஓம்‘ என்ற மந்திரத்தை வேலால் எழுதி, விபூதி கொண்டு நாவில் தடவி, எலுமிச்சம்பழத்தை மந்திரித்துக் கொடுக்கிறார். அதன்பின்னர், அந்த குழந்தைகள் படிப்படியாக நன்றாக பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.
கழுத்து சரியாக நிற்காமலும், கால் சரிவர நடக்க முடியாமலும் அவதிப்படும் குழந்தைகளுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது.
மற்றும், வேலைவாய்ப்பு, குடும்ப நம்மதி உள்ளிட்ட பக்தர்களின் பல்வேறு வேண்டுதல்களும் இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவதன் மூலம் நிறைவேறுகின்றன.

திருமணம் தடைபடுபவர்களுக்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் மாலை வேளையில் பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. பேச்சு வராத, சரிவர நடக்க முடியாத குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் கிருத்திகை அன்று மதியம் 12 மணிக்கு நடைபெறும் அபிஷேகத்திற்கு பிறகு பரிகாரம் செய்யப்படுகிறது.

சொர்ண ஆகர்ஷண பைரவர்

பைரவர் வழிபாட்டில் சிறந்ததாக கருதப்படுவது ‘சொர்ண ஆகர்ஷண பைரவர்‘ வழிபாடு. இந்த பைரவர் இந்த கோவிலில் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு மாதமும் வரும் அஷ்டமி திதியில் இந்த சன்னதியில் பைரவர் ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், பிரத்யங்கிராதேவி ஹோமம் ஆகியவை நடத்தப்படுகிறது.

அன்றைய தினம் சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால், அஷ்ட லட்சுமிகளின் அருளும் கிடைக்கும் என்கிறார்கள். மேலும், கடன் தொல்லைகள் நீங்குதல், வியாபார அபிவிருத்தி, வீடு&மனை வாங்கும் யோகம் போன்றவை ஏற்படும் என்றும் சொல்கிறார்கள்.

மேலும், இந்த கோவிலில் கிழக்கு பார்த்த சக்கர விநாயகர், வானத்தீஸ்வரர், தெற்கு பார்த்த கோபால கிருஷ்ணர், தட்சிணாமூர்த்தி, கிழக்கு பார்த்த ஷீரடி சாய்பாபா, மேற்கு பார்த்த சனிபகவான், யோக ஆஞ்சநேயர், லட்சுமணர், சீதை சமேத ஸ்ரீராமர், விஷ்ணு துர்காதேவி ஆகிய தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.

தற்போது, இக்கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பக்தர்களும் தங்கள் பங்களிப்பை இதில் செலுத்தி வருகிறார்கள்.
நீங்களும் மச்சக்கார முருகப்பெருமானை தரிசிப்பதோடு, அவருக்கான திருப்பணியிலும் கலந்துகொள்ளலாமே..!

மேலும் விபரங்களுக்கு...

Share:

திங்கள், 15 பிப்ரவரி, 2010

பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா?

பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்லக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. இருந்தாலும், பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கக்கூடாதா என்று ஏங்கும் குடும்பங்கள் பல.
ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்துப் பார்த்தால்தான் குழந்தை எது? என்பதை உறுதி செய்ய முடியும்.

ஆனால், காமசூத்ராவின் தந்தை வாத்சாயனாரோ, சில அறிகுறிகளை வைத்தே பிறக்கப்போகும் குழந்தையை அடையாளம் கண்டுவிடலாம் என்கிறார்.

அவர் கூறுவது இதுதான்...

பெண்ணின் மாதவிலக்கிற்குப் பிறகு ஒற்றைப்படை நாளில் "உறவு" கொள்ள பெண் குழந்தை பிறக்கும். இரண்டைப்படை நாளில் உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும்.

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆண் என்றால், கர்ப்பிணியின் வலது பக்கம் மார்பகம் பருத்துப்போய் காணப்படும். அந்த மார்பகத்தில் உள்ள பால் கலங்கலாகவும், வெண்மையாகவும் இருக்கும்.

இதேபோல், அந்த கர்ப்பிணியின் சிறுநீர் முந்தைய நிறத்தை இழந்து பல நிறமாக மாறும். அத்துடன், குழந்தை தனது வயிற்றில் வலது பக்கம் இருப்பதுபோன்று அவளுக்குத் தோன்றும். அவள் படுக்கையில் இருந்து எழும்பும்போதும், அமரும்போதும் வலது கையையே ஊன்றுவாள். அவளது மார்பகப் பாலில் ஒரு துளியை எடுத்து தண்ணீரில் விட்டால் அது மிதக்கம்.

கர்ப்பிணியின் இடது மார்பகம் பருத்துக் காணப்படுவதும், அவளது தேகத்தில் அதிக சோம்பல் ஏற்படுவதும், தின்பண்டங்கள் மீது ஆசை ஏற்படுவதும், அடிக்கடி பொய்ப்பசி தோன்றுவதும் பெண் குழந்தைக்கான அறிகுறிகளாகும். இதேபோல், அவள் படுக்கையில் இருந்து எழும்பும்போதும், உட்காரும்போதும் இடது கையையே ஊன்றுவாள்.

- இப்படிச் சொல்கிறார் வாத்சாயனார்.
Share:

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

அதிசய தூங்கா புளியமரம்


தூங்கா புளியமரம்
ன்மிகத்திற்கும், புளியமரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பல கோவில்களில் புளியமரம் தலவிருட்சமாக உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுயம்புலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ள உவரிக்கு அருகே உள்ள குட்டம் என்ற கடற்கரையோர கிராமத்தில் ஸ்ரீஆனந்தவல்லி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் முன்பு பிரம்மாண்டமான புளியமரம் ஒன்று காணப்படுகிறது.

இந்த மரத்தின் வயது 300-க்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். இதை "தூங்காபுளியமரம்" என்று அழைக்கிறார்கள்.

அதாவது, சாதாரண புளியமரங்களைப்போல் இந்த அதிசய புளியமரத்தின் இலைகள் இரவுநேரத்தில் தூங்காது. அதாவது, மடிந்துபோய் இருக்காது. எப்போதும் ஃப்ரெஸ் ஆகவே இருக்கும்.

மேலும், இந்த புளியமரத்திற்கு பல்வேறு நோய்களை தீர்க்கும் அபார சக்தியும் உள்ளது. இந்த புளியமரத்தின் இலையை அரைத்து குடித்தால் எப்பேற்பட்ட நோயும் குணமாகிவிடும் என்கிறார்கள்.


குட்டம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கிறார்கள். அவர்கள், தங்கள் ஊருக்கு வரும்போது, இந்த தூங்காபுளியமரத்தின் இலைகளை தவறாமல் பறித்து கொண்டுச் செல்கிறார்கள்.

இந்த இலைகள் தங்களுடன் இருக்கும்பட்சத்தில், தங்களுக்கு எல்லாமே வெற்றியாக அமையும் என்ற அவர்களது நம்பிக்கைதான் இதற்கு காரணம்.

இன்னொரு தகவல் : பொதுவாக, நீர் தேங்கி நிற்கும் குளத்தை "குட்டை" என்று சொல்வார்கள். இந்த குட்டம் கிராமம் அமைந்துள்ள பகுதி ஆரம்பத்தில் குளமாக இருந்ததாம். அதனால் ஏற்பட்ட பெயர்தான் "குட்டம்".

ஸ்ரீஆனந்தவல்லி அம்மன் கோவில்
 
திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர்-கன்னியாகுமரி சாலையில் இந்த ஊர் அமைந்துள்ளது.

Share:

சனி, 13 பிப்ரவரி, 2010

குழந்தை கவிதை


திருமணம் ஆன தம்பதியரிடம், குழந்தைக்கான வருகை பதிவாகிவிட்டதா என்பதை அறிய, எதுவும் விசேஷம் உண்டா? என்று கேட்பது இன்றைய சமுதாயத்தில் தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இந்த சூழ்நிலையில், திருமணம் ஆன ஒரு வருடத்தில் தாய்மை அடைந்த தனது மனைவியின் வயிற்றில் உள்ள தனது குழந்தைக்கு ஒரு தந்தை எழுதிய கடிதம் இது...


என்
பத்தரைமாத்து தங்கமே...

என் உலகமான பூமியில்
நான் நலம்...
உன் உலகமான
என்னவள் கருவறையில் நீ நலமா?

இதுவரை
நான் ஆக இருந்தவன்
நானும், அவளும் ஆகி
இப்போது
நாம் ஆகப் போகிறோம்...

உன்
முகம் காணும் ஏக்கம்
எனக்கு மட்டுமல்ல;
என்னவளும் தினம் தினம் ஏங்குகிறாள்...

நாமெல்லாம்
நாம் ஆனப் பிறகு...
நாம் அனுபவிக்கும்
சில சந்தோஷங்கள்
நம்மை சந்தோஷப்படுத்துவதுடன்
உன்னையும் பக்குவப்படுத்தும்
என்ற நம்பிக்கையில்
கடிதத்தை தொடர்கிறேன்...

எனக்கும், உன் அம்மாவுக்கும்
திருமணமாகி மூன்று மாதமாகியிருக்கும்...
எதுவும் விசேஷம் உண்டா? என்று
வாயெடுக்காத சொந்தங்கள் இல்லை
எங்களுக்கும்
சந்தோஷமாக பதில் சொல்ல ஆசைதான்
ஆனால்...
உன் வருகைதான் சற்று தாமதமானது...

உன்னால்
நாங்கள் பெற்றோர் ஆகப்போகிறோம் என்ற
ஒற்றை சந்தோஷத்திற்காக
நானும், உன் அம்மாவும்
ஏங்கிய நாட்கள்
பல இரவுகளுக்கு மட்டுமே வெளிச்சம்!

நானாவது
உன் வருகைக்காக
காத்திருக்க தயாரானாலும்
உன்னை சுமப்பவள் - சுமந்தவள் தயாரில்லை...

உன்னை நினைத்து... நினைத்து...
அவள் சிந்திய
கண்ணீர் துளிகளின் கதை
என்னைவிட
நம் வீட்டு
தலையணைகளுக்கே நிறைய தெரியும்!

நாளும் கடந்தது
நல்ல நாளும் வந்தது...

உன் வருகைப்பதிவை உறுதிசெய்ய
ஆஸ்பத்திரிகளில்
கியூவில் நின்றதற்கு பலனும் கிடைத்தது!

எனக்கும், உன் அம்மாவுக்கும்
திருமணமாகி 10 மாதங்கள் இருக்கும்...
அந்த ஓர்நாள் விடியல்
மிகுந்த சந்தோஷத்தோடு மலர்ந்தது!

உன் வருகை பதிவாகிவிட்டது
என்று அறிந்தபோது...
எங்களை அறியாமல் சிந்திய
கண்ணீர்த் துளிகளும் இனித்தன!
ஓ...
இதுதான் ஆனந்தக் கண்ணீரோ..?


நீ
என்னைப்போன்று
பிறக்க வேண்டும் என்பது
உன் அம்மாவின் ஆசை மட்டுமல்ல;
என் பேராசையும்கூட!

அதற்காக...
மினி பழக்கடையாக மாறிய
நம் வீட்டு கபோர்ட்டையும்
வெளிநாட்டில் இருந்து வரவழைத்த
குங்குமப்பூவையும் நீயும் மறந்துவிடாதே...

பத்து மாதங்கள்
கருவறையில் குழந்தையை சுமப்பது
எவ்வளவு கஷ்டம் என்று
உன் அம்மாவைப் பார்த்துதான்
நானும் தெரிந்துகொண்டேன்...

அந்த பழங்கள் ஆகாது...
இந்த உணவுகள் ஆகாது...
என்ற கட்டுப்பாடுகளுக்கு இடையே
உன் அம்மா உட்கொண்ட
சிறு உணவில்
நீயும் வளரத் தொடங்கினாய்...

முதல் மூன்று மாதங்கள்
அவள் பட்ட கஷ்டத்திற்கு
அளவே இல்லை!
விழித்திருந்த பாதிநேரம்
மயக்கமாகியே திரிந்தாள்...
உண்ட உணவில் பாதிக்கும்மேல்
வாந்தியாய் வெளியே வந்ததுதான் மிச்சம்...
அந்த களைப்பில்
சற்றே மெலிந்தும் போனாள்
என்னவள் - உன் அருமைத்தாய்!

நான்கு மாதத்திற்கு பிறகுதான்
ஒரு உற்சாகம் பிறந்தது...
நன்றாக சாப்பிட்டதால்
நீயும்
மளமளவென்று வளர ஆரம்பித்தாய்...

ஆனால்
இரவில்தான் உனக்காய்
அவள் அனுபவித்தாள்
சில சோதனைகள்!

இடதுபுறம்தான்
ஒருக்களித்து படுக்க வேண்டும்
என்று டாக்டர் சொன்னதால்
அவள் தூக்கத்தை
தொலைத்த இரவுகள்
ஏராளம்... ஏராளம்...

அந்த தூக்கத்தில்
சற்றே புரள வேண்டும் என்றாலும்கூட
எழுந்து உட்கார்ந்து
அதன்பின்தான்
தூக்கத்தைத் தொடர்ந்தாள்...

அதேநேரம் -
அந்த சோதனைகளிலும்
சுகம் இருக்கத்தான் செய்தது...

எப்போதாவது
கிச்சுகிச்சு மூட்டும்
உன் செய்கைகளில்
என்னவள்
அந்த சோதனைகளை மறந்தாள்...
தாயென்ற பக்குவம் பெற்றாள்!

உனக்காய் - நமக்காய்
அவள் சுமந்த வேதனைகளை
நீயும் அறிய வேண்டும்
என்பதற்காகத்தான் இந்த நீண்ட கடிதம்...

உன் வருகைக்காக
ஆவலோடு காத்திருக்கிறோம்...

நீயும் வரவேண்டும்
ஒரு சாதனையாளனாய் நீ மாறும்
வரம் எங்களுக்குத் தர வேண்டும்!
- இப்படிக்கு உன் அன்புத் தந்தை
Share:

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

காதல் செய்...

                              
காதல் செய் மனமே காதல் செய்...

வயது - 18
பருவம் மேனியெங்கும்
படர்ந்துவிட்டதால்
பாசாங்கு செய்யும் வயது
தொட்டதெல்லாம் சொந்தமாக...
காண்பதெல்லாம் நமதாக
துடிக்கும் வயசு

அதுதான்
காதல் கற்கும் வயதும்கூட...

அவள் -
வானில் இருந்து வந்த தேவதையோ?
மறைந்து மறைந்து
பார்க்கும் கண்களும்...
சின்ன கால் கெண்டையின் அழகோவியமும்...
மனசுக்குள் நீர்வீழ்ச்சியாய் பாயும்;
இதயமும் எக்குதப்பாய் எகிறும்!


இரவு தொலைந்து போகும்
இருக்கும் இடமும் மறந்துபோகும்
பார்க்கும் இடமெல்லாம்
அவளாய் தெரிவாள்!

வயிறும் பசியை மறந்துவிடும்
வார்த்தைகள்
ஞானியாக்கும்  உன்னை;
ஆனால் -
உனை தேடுவோர்
பைத்தியம் என வசை மொழிவர்!

கனவுகள் கோட்டைகளாகும்
கற்பனை ஊற்றெடுக்கும்
தேடுவாரற்ற கல்லும்
அழகாய் ஜொலிக்கும்
உந்தன் கண்களுக்கு....!

கல்வி சாலையிலோ
உன் கண்கள்
கரும்பலகையை நோக்கும்...
மனமோ
சொர்க்கத்தையே
உருவாக்கி கொண்டிருக்கும்!


அவளை தாங்கும்
ஒன்பது மணி பஸ்சுக்காக
காலை ஆறு மணிக்கே
காத்திருந்து.....  காத்திருந்து.....
தவம் கிடக்கும் உனக்கு
அவளின்
சின்ன புன்னகையாலே
மோட்சம் கிடைக்கும்!

அவள் வீசியெறியும்
குப்பைத் தாளும்
உந்தன் அறையை அலங்கரிக்கும்!
அவள்
சின்ன பாதத்தை
ஆதவன் சுட்டால் - உன்
பாதங்கள் வெடிக்கும்!
கண்களில் கண்ணீர்
நீரூற்றாய் பெருக்கெடுக்கும்!

சிலநேரம் -
உன் மூச்சு காற்று
விழுந்து, விழுந்தே
முகம் காட்டும் கண்ணாடியும்
நிறம் மாறும்!

எல்லாம் காதல் செய்யும் மாயம்!
அது தான் காலத்தின் கோலம்!
காதல் செய் மனமே காதல் செய்
காமம் அதீதமாக கலக்காத வரையில்.....!

உங்கள் காதல்
ஜாதி, மத மோதலுக்கு
முற்றுப்புள்ளி வைக்கட்டும்!
எங்கும் சமத்துவ ஒளி வீசட்டும்!!

உங்கள் காதல்
இந்த நாட்டை புனிதப்படுத்தட்டும்
ஒற்றுமையை ஓங்கச்செய்யட்டும்

ஆகவே
காதல் செய் மனமே காதல் செய் !!

Share:

வியாழன், 4 பிப்ரவரி, 2010

தாய்ப்பாலை சேமிக்கலாமா?

ன்றைய பெண்களில் பலர் வேலைக்கு செல்கிறார்கள். திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும்கூட அவர்கள் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது.

அவ்வாறு வேலைக்கு செல்லும்போது குழந்தையை இன்னொருவர் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறார்கள்.
வேலைக்கு சென்று 8-10 மணி நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு திரும்பி வந்தவுடன், குழந்தைக்கு அவசரம் அவசரமாக தாய்ப்பால் கொடுக்கிறார்கள்.

இதற்கிடையில், தொடர்ந்து 8-10 மணி நேரம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதால், அவர்களது மார்பில் பால் கட்டிவிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனால் மார்பில் வலி எடுத்து அவதிக்குள்ளாகும் நிலையும் உள்ளது. மேலும், தாய்ப்பால் சுரப்பு குறைந்து போகவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

இதுபோன்ற சிக்கலில் உள்ள வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், தாய்ப்பாலை மிகவும் சுத்தமான பாத்திரத்தில் பிழிந்தெடுத்து சேகரித்து, அதை இறுக்கமாக மூடி விடுங்கள். பின்னர் அதை, பிரிட்ஜில் வைத்து விடுங்கள். பிரிட்ஜில் தாய்ப்பாலை  6-8 மணி நேரம் வரையே வைத்து பாதுகாப்பதுதான் உகந்தது. பிரிட்ஜ் வசதி இல்லாதவர்கள் தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தினுள் தாய்ப்பால் கொண்ட பாத்திரத்தை வைக்கலாம்.

வீட்டில் குழந்தையை வைத்திருப்பவர்கள், பாதுகாப்பாக எடுத்து வைத்த தாய்ப்பாலை சுத்தமான கரண்டி மூலம் குழந்தைக்கு பசி எடுக்கும்போது ஊட்டிவிடலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.

Share:

தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு?

பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படலாம். அவற்றில் முக்கியமானது தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு இருக்கும் என்பது.

பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு நலமான பெண்ணுக்கு சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் தினமும் சுரக்கும். இந்த தாய்ப்பால் சுரப்பு காரணமாக அந்த தாயானவள் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது.

சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த உணவு பொருட்கள், தேவையான நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாயானவள் எடுத்து வந்தால், அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும்.
அதை தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது உடல் திறனும் பாதிக்கப்படும்; தாய்ப்பால் சுரப்பும் குறைந்துவிடும்.

மேலும், தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு மார்பகத்தின் அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தம் உண்டா? என்ற சந்தேகமும் ஏற்படலாம்.

உண்மையில் மார்பகத்தின் அளவிற்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை. சிறிய மார்பகம் கொண்ட பெண்ணுக்கு அதிக அளவில் தாய்ப்பால் சுரப்பதும், பெரிய மார்பகம் கொண்ட பெண்ணுக்கு குறைவான அளவில் தாய்ப்பால் சுரப்பதும் நடைமுறையில் நாம் காணும் ஒன்றுதான்.
மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்தே ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை கண்டுபிடிக்க முடியும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் கூட அந்த பெண்ணுக்கு தாய்ப்பால் சுரப்பு திசுக்களை தூண்டிவிடலாம்.
Share: