சனி, 16 அக்டோபர், 2010

வாழைப்பழம் பயன்கள்


வாழைப்பழம் சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதன் முதலாக கடித்து சாப்பிடும் பழம் இந்த வாழைப்பழமாகத்தான் இருக்கும். தமிழர்கள் வகுத்த முக்கனிகளுள் மூன்றாவது கனி இது.

பெண் பூப்படைந்த வைபவம் என்றாலும் சரி, திருமண நிச்சயதார்த்தம் என்றாலும் சரி, திருமணம் என்றாலும் சரி மற்றும் எந்த சுபவிழாக்களாக இருந்தாலும் சரி, அங்கே முதலிடம் பிடிப்பது வாழைப்பழம்தான்.

வாழையில் பல வகைகள் இருந்தாலும், அதன் அனைத்து பாகங்களுமே நமக்கு நிறைய பயன்களை அள்ளித் தருகின்றன.

வாழை இலை பயன்கள் :

* வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

* தளிரான வாழை இலையை நெருப்பினால் ஏற்பட்ட புண், வெந்நீர் பட்டதால் உண்டான புண் ஆகியவற்றில் வைத்துக் கட்ட அந்த புண்கள் உலர்ந்து விடும். அப்போது, முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

* புண்களுக்கு துணியில் எண்ணெய் நனைத்து வைத்து கட்டும்போது, அதன் மேல் வாழை இலையையும் வைத்து கட்டி வர, அந்த துணி எண்ணெய் தன்மையுடனேயே இருக்கும். அதனால் புண் விரைவில் ஆறிவிடும்.


வாழைப்பூ பயன்கள் :

* வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும்.

* கை, கால் எரிச்சலுக்கு வாழைப்பூவை இடித்து, அதில் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் ஒற்றடமிட்டு கட்டலாம்.

* இதன் பூவை இடித்து சாறு பிழிந்து, அதில் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல், பெரும்பாடு, வயிற்றுக்கடுப்பு போன்றவை நீங்கும்.

* வாழைப்பூ சாற்றுடன் கடுக்காய் பொடி சேர்த்து குடிக்க மூல நோய் குணமாகும்.

* வாழைப்பூவின் நரம்பை நீக்கிவிட்டு, அதை ஒரு பாத்திரத்தில் இட்டு அவித்து, பின்னர் சாறு பிழிந்து, அந்த சாற்றை குடிக்க சீதபேதி, கழிச்சல் போன்றவை குணமாகும்.

* வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் இருந்தாலும் தீரும்.


 வாழைத்தண்டு பயன்கள் :

* வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும்.

* வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறி விடும்.

* வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசிவர தீப்புண், காயங்கள் ஆறும்.

* இதன் தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். மேலும், கல்லீரல் வலுவடையும்.

* வாழைப்பட்டையை தீயில் வாட்டி சாறு பிழிந்து, அதில் ஓரிரு துளி காதில் விட காது வலி நீங்கும்.


வாழை பிஞ்சு-காயின் பயன்கள் :

* வாழை பிஞ்சினால் ரத்த மூலம், ரத்த கடுப்பு, வயிற்றுப்புண், நீரிழிவு நோய் ஆகியவை குணமாகும்.

* வாழைக்காயினால் கழிச்சல், உமிழ்நீர் அதிகம் சுரத்தல், வயிறுளைச்சல், உடல் வெப்பம், இருமல் ஆகியவை தணியும். உடலில் ரத்தப் பெருக்கையும், வன்மையையும் இது உண்டாக்கும்.

வாழைப்பழம் பயன்கள் :

* வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன. உணவை எளிதில் சீரணிக்க செய்யும் வாழைப்பழம் பித்தத்தை நீக்கக்கூடியதும் கூட. மேலும், உடலில் ரத்தத்தை அதிகரிக்கவும் செய்யும்.

* தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

* பெண்கள் அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மாதவிலக்கு சீராக வரும்.

* அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண்கள் வராது. இருந்தால் ஆறிவிடும். மேலும், தோல் பளபளக்கும்.
* வாழைப்பழத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட பெரும்பாடு குணமாகும்.

* வாழைப்பழத்துடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும்.

* வாழைப்பழம் அடிக்கடி சாப்பிடுவது அறிவை விருத்தியடையச் செய்யும்.

* செவ்வாழை குருதியை அதிகரிக்கும். மலை வாழைப்பழம் மலச்சிக்கலை போக்கும். பேயன் வாழைப்பழம் அம்மை நோயை குணமாக்கும். பச்சை வாழை உடம்புக்கு குளிர்ச்சி தரும். நேந்திரம் பழம் சருமத்தை பளபளப்பாக்கும். மொந்தன் வாழை உடல் வறட்சியை போக்கும். நாட்டு வாழைப்பழம் குடல் புண்ணை ஆற்றும்.
Share:

சன்னியாசிக்குத் திருமணமா?



வேடர் தலைவனான நம்பிராஜனுக்குக் குழந்தை இல்லாமல் இருந்தது. ஒருநாள் வேட்டைக்கு சென்ற இடத்தில் பெண் குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தான். அந்தக் குழந்தையை தன் குழந்தையாக ஏற்று வளர்த்து வந்தான்.

அந்தப் பெண் குழந்தைதான் வள்ளி!

மகாவிஷ்ணுவுக்குப் பெண்களாக வள்ளி, தெய்வானை இருவரும் பிறந்தார்கள். இருவரும் தங்கள் திருமண வயதில் கோபமே அடையாத ஒருவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர். அதற்காக இருவரும் தவம் இருந்தனர். அந்த தவத்தின் பலனாக முருகப் பெருமான் அவர்கள் முன்பு தோன்றினார். அவரை, அவர்கள் இருவருமே திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.

அதன்படி அவர்கள் இருவரும் மறுபிறவி எடுத்தனர். தெய்வானை இந்திரனுக்கு மகளாகப் பிறந்தாள். ஒரு முறை அசுரர்களின் பிடியில் சிக்கிக் கொண்ட இந்திரலோகத்தை மீட்கிறார் முருகப் பெருமான். அதனால் மனம் மகிழ்ந்த இந்திரன், தனது மகள் தெய்வானையை அவருக்கு திருமணம் செய்து கொடுக்கிறான்.

இதே போல், வேடர் தலைவன் நம்பி ராஜனின் மகளாக வளர்கிறாள் வள்ளி. உண்மையில், அவள் பிறந்தது ஒரு மானின் வயிற்றில்! அந்த மான், வல்லிக்கொடியின் கீழ் இருந்த ஒரு குழியில் தன் குட்டியை ஈன்றது. தன் குட்டி மிகவும் வித்தியாசமாக, தன் இனத்தைப் போல் இல்லாமல் இருந்ததால் அங்கேயே போட்டுவிட்டு சென்று விட்டது. 

அந்தச் சூழ்நிலையில் நம்பிராஜன் அங்கு வர, அந்தக் குழந்தையை கண்டெடுத்தான். கடவுள் அருளால் தனக்கு அந்த குழந்தை கிடைத்ததாக எண்ணி மகிழ்ந்தான். அந்த குழந்தைக்கு ‘வள்ளி‘ என பெயர் சூட்டி வளர்க்க ஆரம்பித்தான்.

வள்ளி, தினை நிலத்தில் பயிர் செய்யப்பட்ட பயிர்களை பறவைகளிடம் இருந்து காக்கும் பொருட்டு அவற்றை விரட்டும் பணியில் ஈடுபடுகிறாள். அவளைக் கண்ட நாரத முனிவர், நேராக தணிகைமலை சென்று முருகப் பெருமானிடம் செல்கிறார். வள்ளியின் அழகைப் பற்றி அவரிடம் கூறி, அவளை மணக்கச் சொல்கிறார். 

முருகப்பெருமானும் வேடன் போல் முதலில் வருகிறார். வள்ளியிடம் தன் காதலை அவர் தெரிவிக்கும் போது அங்கே நம்பிராஜன் வந்து விடுகிறான். உடனே வேங்கை மரமாக மாறி விடுகிறார். நம்பிராஜன் சென்ற பிறகு திரும்பவும் வேடனாக மாறி வருகிறார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வள்ளியை வற்புறுத்துகிறார். வள்ளி மறுக்கிறாள்.
அப்போது நம்பிராஜன் தன் படைகள் சூழ அங்கு வர, முருகப் பெருமான் அங்கிருந்து மாயமாகி, ஒரு சன்னியாசி கோலத்தில் அங்கு வருகிறார். வள்ளி, நம்பிராஜன் உள்ளிட்டவர்களுக்கு ஆசி வழங்குகிறார். தொடர்ந்து, நம்பிராஜன் திரும்பிச் சென்று விடுகிறான். வள்ளி மட்டும் தனியாக இருக்கிறாள்.

அப்போது, தனக்கு பசிப்பதாக கூறி தினைமாவு கேட்கிறார். வள்ளியும் ஆசையுடன் அதைத் தர அவருக்கு விக்கல் எடுக்கிறது. அவள் தண்ணீர் தர, அந்த சன்னியாசி, “இது வேண்டாம். சூரியனைக் காணாத சுனையில் இருந்து நீர் எடுத்து வந்து தரவேண்டும்“ என்கிறார். அதையும் தேடி எடுத்து வந்து கொடுக்கிறாள் வள்ளி. 

அப்போது, “ஒரு கணவனுக்கு மனைவி செய்ய வேண்டிய பணிவிடைகளை எல்லாம் எனக்கு நீ செய்து விட்டாய். அதனால், நீயே எனக்கு மனைவியாக வந்து விடு“ என்கிறார் சன்னியாசி கோலத்தில் இருந்த முருகப் பெருமான்.

வள்ளிக்கு கோபம் வருகிறது. “வயதான, சன்னியாசியான உமக்குத் திருமணமா? என்று ஆவேசமாக கேட்கிறாள்.


அப்போது, முருகப்பெருமான் தன் அண்ணன் கணபதியை நினைத்து வேண்ட, அவர் யானையாக அங்கு வருகிறார். யானையைக் கண்டு பயந்து வள்ளி அந்த சன்யாசி கிழவரை அப்படியே அணைத்துக் கொள்கிறாள். யானையை விரட்டுமாறு கேட்கிறாள். 

அவரோ “நீ திருமணத்திற்கு ஒத்துக் கொண்டால்தான் யானையை விரட்டுவேன்“ என்கிறார். வேறு வழியில்லாத வள்ளி அதற்கு சம்மதிக்கிறாள்.

அதன் பிறகு, சுய உருவத்திற்கு வரும் முருகப் பெருமான், முன்ஜென்ம நினைவைக் கூறி வள்ளியை மணந்து கொள்கிறார்.

இப்படி, வள்ளி பிறந்து வளர்ந்த இடம் இன்றும் ‘வள்ளிமலை‘ என்று அழைக்கப்படுகிறது. இன்றைய வட ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜாப்பேட்டை அருகில் மேற்பட்டு என்ற கிராமத்தில் இம்மலை அமைந்துள்ளது. 

 -நெல்லை விவேகநந்தா.

(முத்துக்கமலத்தில் வெளியான எனது இந்த படைப்பை காண கீழே கிளிக் செய்யவும்)


Share:

அய்யா வைகுண்டர் வரலாறு


2. முத்துக்குட்டி பிறப்பு
 -நெல்லை விவேகநந்தா-
கி.பி.18 ஆம் நூற்றாண்டு. 

ஐரோப்பிய நாடுகள் தொழிற்புரட்சியால் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்தனர். ஆனால், இந்தியாவோ ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் என்று வியாபாரம் செய்ய வந்தவர்கள் கையில் சிக்கி அவர்களால் கூறு போடப்பட்டு ஆளப்பட்டு வந்தது. இந்தியாவின் இயற்கை செல்வங்களை அவர்கள் தங்களது நாடுகளுக்கு அள்ளிக் கொண்டு போனார்கள். அவர்களை, ஏன் என்று தட்டிக்கேட்க யாருக்கும் துணிவில்லை. அப்படியே தட்டிக் கேட்ட மிகச் சிலரும் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாகினர்.

நாட்டைக் கொள்ளையடிக்க வந்த அவர்களை எதிர்க்கத் துணிவில்லாத  இந்தியக் குறுநில மன்னர்கள் அவர்களுக்குக் கப்பம் செலுத்தித் தங்கள் அரசைக் காப்பாற்றிக் கொள்ளத் தொடங்கினர். இந்த சுயநல அரசர்களால் ஆங்கிலேயர்களை எதிர்க்க இயலாவிட்டாலும், அவர்கள் ஆட்சிப் பகுதியில் மக்களை சாதி எனும் பெயரில் பிரித்து, உயர்வு தாழ்வுகளை உருவாக்கி வேறுபாடுகளை வளர்த்து வந்தனர். இந்த வேறுபாடுகளால், குறிப்பிட்ட சில சமூக மக்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட்டு, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்தனர். பல சமூகத்தினர் ஒடுக்கப்பட்டு, பல கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இக்கொடுமைகளில் தென் தமிழகமும், அன்றைய தென்கேரளாவும் இணைந்த திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சிப் பகுதியில் இருந்த நாஞ்சில் நாட்டு மக்களின் நிலை மிகவும் மோசமானது. இங்கு, உயர் சாதியினராகக் கருதப்பட்டவர்கள் பிற சாதியினர்களை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அவர்களைச் சிறுமைப்படுத்தி பல இன்னல்களுக்கு உள்ளாக்கினர். இந்த இன்னல்களை நினைத்து தங்கள் வாழ்க்கையை நொந்து வாழ்ந்து கொண்டிருந்த அந்த மக்களுக்கு விடிவு காலம் வருமா? என எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.  

திருவாங்கூர் சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஆட்சியில் 1050 சாதிகள் அப்போது இருந்ததாக சொல்லப்படுகிறது. அங்கு பிராமணர்களிலேயே உயர்ந்தவர்களாகக் கருதப்பட்ட நம்பூதிரிகளின் சாதிய ஆட்சியே நடந்தது. அவர்களுக்குத் துணையாக, நாயர்கள், வெள்ளாளர்கள் போன்ற சில சாதியினரும் சேர்ந்து கொண்டனர். அவர்களால் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட பட்டியலில் 18 ஜாதிகள் இடம் பெற்றன. குறிப்பாக சாணார் (நாடார்), பரவர், மூக்குவர், புலையர் உள்ளிட்ட ஜாதியினர் அதில் அடங்குவர். 

இதுபற்றி; 
“சாணார் இடையர் சாதி வணிகருடன்
நாணாத காவேரி நல்ல துலுக்கப்பட்டர் முதல்
சூத்திரர் பிரமார் தொல் வாணியர் பறையர்
கம்மாளர் ஈழர் கருமறவர் பரவர்
வெம்மா நசுராணி, வேகாவண்டர் இடலையர்
சக்கிலியரோடு சாதி பதினெட்டும்...” 
- என்கிறது அகிலத்திரட்டு.

இந்த 18 ஜாதியினரும் உயர் ஜாதியினரான நம்பூதிரிகள், நாயர் (மேனன்), பட்டன், தம்புரான், தம்பி, பிள்ளைமார் மற்றும் பிராமணர்களுடன் பேசும் போதும், அவர்கள் வசிக்கும் பகுதி அருகில் செல்ல நேரும் போதும் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு தனி வரைமுறையே உருவாக்கப்பட்டது. அத்தனையும், கொடூரமானவை! இதனால்தான், அன்றைய கேரளாவை "பைத்தியக்காரர்களின் கூடாரம்" என்று 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த சுவாமி விவேகானந்தர் சொன்னார் போலிருக்கிறது.

திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சில இடங்களுக்குச் செல்லும் போது, உயர் சாதிப் பெண்கள் வசித்த அம்ம வீடு மற்றும் உள்ளிருப்பு வீடுகளில் தங்கி ஓய்வெடுப்பது வழக்கம். ஓய்வு என்றால் ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ அல்ல; இரண்டு அல்லது மூன்று நாளில் தொடங்கி நாட்கணக்கில், வாரக்கணக்கில் நீடிக்கும். அப்போது, அந்த வீட்டுப் பெண்கள் மன்னரை உற்சாகப்படுத்தி அனுப்பி வைப்பார்கள். இந்தத் தொடர்பில் ஆதிக்க சாதியினரான நம்பூதிரிகள், நாயர் உள்ளிட்டவர்கள் மன்னருடன் நெருக்கமாய் இருந்தனர்.

மன்னருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியான ஓய்விற்கு பிரதிபலனாக பல சலுகைகளை உயர் சாதியினருக்கு வழங்கினார். அந்த ஆதிக்க ஜாதியினர் வசித்த பகுதியில் இருந்த விளைநிலங்கள், வருவாய்த்துறை மற்றும் நிர்வாகத்தைக் கவனிக்கும் பொறுப்பை அவர்களிடமே விட்டுவிட்டார். இந்த அளவுக்கு மீறிய அதிகாரத்தால், உயர் சாதிப் பட்டியலில் இடம் பிடித்தவர்கள், ஒடுக்கப்பட்ட சாதியினராக அறிவிக்கப்பட்டவர்ளைக் குற்றவாளியாக்கி குறுநில மன்னர்கள் போல் தீர்ப்பு வழங்கவும், தண்டனை கொடுக்கவும் தொடங்கி விட்டனர்.
  • உயர் சாதியினர் வசிக்கும் தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) நடமாடக் கூடாது. 

  • தாழ்த்தப்பட்ட வகுப்பு ஆண்கள் செருப்பு அணிந்து நடந்து செல்லக் கூடாது.

  •  வெயில், மழைக்கு குடை பிடிக்கக் கூடாது.

  • முழங்காலுக்கு மேலேதான் வேஷ்டி கட்டித் துண்டைக் கை இடுக்குகளில் வைத்தபடிதான் நடக்க வேண்டும்.

  • உயர் சாதியினரின் குழந்தைகளையும் சாமி, அய்யா என்றுதான் அழைக்க வேண்டும்.

  • அடிமைகளாக விலைக்கு வாங்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள், ஆயுள் முழுக்க உயர் சாதியினருக்காக உழைக்க வேண்டும். அதற்கு கூலி கிடையாது. அவர்களுக்கு வழங்கப்படும் சாப்பாடும் நாய்க்கு வழங்குவதைப் போல்தான் வழங்கப்படும்.

  • ஒரு பிராமணனிடம் பேசும் போது 36 அடி தூரத்திலும், நாயரிடம் பேசும் போது 60 அடி தூரத்திலும் நின்று கொண்டு, தலையைக் கீழே குனிந்து கொண்டும், வாயைப் பொத்திக் கொண்டும் பேச வேண்டும். புலையர் இனத்தினருக்கு இந்த வரைமுறை இரட்டிப்பாக இருந்தது.

  • தாழ்த்தப்பட்டவர்கள் வெளியே புறப்பட்டுச் சென்றால், தங்களை உயர் சாதியினர் பார்க்க நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு குச்சியைக் கொண்டு தட்டிக் கொண்டே செல்ல வேண்டும்.

  • வயல்களில் வேலை செய்யும் போது உயர் சாதியினர் அந்த வழியாக சென்றால், அவர்கள் தங்களைப் பார்க்கக்கூடாது என்பதற்கான அறிவிப்பை குறிக்கும் வகையில் இலைகளையும், மரத்துண்டுகளையும் வைத்துச் செல்ல வேண்டும்.

  • ஆதிக்க சாதியினரின் கோவில்கள் உள்ள இடங்களுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் செல்லக்கூடாது. இக்கோவில் திருவிழாக்களின் போது, சில கிலோமீட்டர் தொலைவுக்கு முன்னதாகவே தடுப்புகளை ஏற்படுத்தி, ஊருக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் வருவது தடுக்கப்பட்டது.

  • ஊரிலுள்ள பொதுக்குளம், கிணறு, சாலைகள், வணிகம் நடைபெறும் இடங்களை தாழ்த்தப்பட்டவர்கள் பயன்படுத்தக் கூடாது.

  • தாழ்த்தப்பட்ட வகுப்பு ஆண்கள் குடுமி வைத்துக் கொள்ளக் கூடாது. 

  • தாழ்த்தப்பட்டவர்கள் தங்களது குழந்தைகள் பற்றி உயர் சாதியினரிடம் குறிப்பிடும் போது, அவர்களைக் குரங்கு, கன்றுக்குட்டி என்று வேறு மிருகங்களின் பெயரில்தான் சொல்ல வேண்டும்.

  • தாழ்த்தப்பட்டவர்களது குழந்தைகளுக்கு உயர் சாதியினர் பயன்படுத்தும் பெயர்களை வைத்துக் கொள்ளக் கூடாது
    .
  • மாடி வீடு கட்டக் கூடாது. பசுமாடு வளர்க்கக் கூடாது.
- இப்படி பல அடக்குமுறைகள் தாழ்த்தப்பட்ட வகுப்பாக ஒடுக்கப்பட்ட 18 சாதியினர் மேல் திணிக்கப்பட்டன. அதை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். சில சமயம் கொலையும் செய்யப்பட்டனர்.

இந்த அடக்குமுறைகளுடன் வரிகளும் அதிகமாக விதிக்கப்பட்டன. பனை ஏறுபவர்கள், அவர்கள் பயன்படுத்தும் 5 அடி உயர ஒற்றைக் கம்பு ஏணி, பாதுகாப்புக்காக காலில் அணிந்து கொள்ளும் தளைநார்களுக்கு கூட வரி வசூல் செய்யப்பட்டது. இந்த ஒடுக்கப்பட்ட சாதியினர் தாடி, மீசை வளர்த்தால் அதற்கும் தனி வரி செலுத்த வேண்டும். இதுபோல், வீட்டுக் கூரையை மாற்றினாலும் கூட, கூரை வரி என்ற ஒன்றை கட்ட வேண்டும். "பிராயசித்த வரி" என்ற அதிகாரிகளே நிர்ணயித்த வரி விருப்பம்போல் வசூலிக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட ஆண்களைவிட பெண்கள் இன்னும் அதிகமாக வரிக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். தாலி உள்ளிட்ட நகைகள், ஆடைகள் அணியக் கூட அவர்களிடம் இருந்து வரி வசூலிக்கப்பட்டது. அடிமைகளாக விற்கப்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். 

 அடக்குமுறைக்கு பயந்து மார்பகத்தை திறந்துபோட்டு செல்லும் பெண்கள்...

மேலும்,
  • திருமணம் ஆன தாழ்த்தப்பட்ட பட்டியலில் உள்ள பெண்கள் தாலியை தங்கத்தில் செய்து அணியக் கூடாது. தங்கத்திற்கு பதிலாக பனை ஓலையையே பயன்படுத்த வேண்டும்.

  • இச்சாதியைச் சேர்ந்த பெண்கள் எக்காரணம் கொண்டும் கல்வியறிவு பெறுவதற்காக படிக்கக் கூடாது.

  • இந்த சாதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துச் சுமந்து செல்லக் கூடாது. தலையில்தான் சுமக்க வேண்டும்.

  • இந்த சாதிப் பெண்கள் மார்பகங்களை ஆடை அணிந்து மறைக்கக் கூடாது. இடுப்புக்கு கீழே, கால் முட்டிக்கு மேலே முண்டு போன்ற ஒருவித ஆடை மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். மார்பகங்களை அவர்கள் திறந்து காட்டியபடி செல்வது மரியாதை செலுத்துவதாக ஆதிக்க ஜாதியினரால் கருதப்பட்டது.

  • இந்த சாதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களைத் தலையில் சுமந்து செல்லும் போது, எதிரே மேல் சாதியினர் வந்தால் ஒதுங்கி, நின்று நிதானித்துதான் செல்ல வேண்டும்.

  • 16 முதல் 35 வயது வரையிலான பெண்கள் கட்டாயமாக முலை வரி (மார்பக வரி) செலுத்த வேண்டும். மீறினால், கூந்தலைக் கொண்டே மரங்களில் கட்டி வைத்து அடித்து உதைப்பார்கள். சில நேரங்களில், முலை வரி செலுத்தாத பெண்களை, அவர்களது கூந்தலில் உலக்கையை சுற்றிக் கட்டித் தொங்கவிட்டு, முதுகில் பெரிய கல்லை ஏற்றிக் குனிந்த நிலையில் பல நாட்களாக நிற்க வைத்தனர். இந்த தண்டனைக்கு ஆளான பெண்கள் பலர் இறந்து போவது நிச்சயம். இதுபோக, முலை வரி கட்டாத பெண்களின் மார்பகங்கள் அறுத்தெறியப்பட்டது. 
-இப்படிப்பட்ட கொடூரங்கள் நிறைந்த சூழ்நிலையில்தான், நாஞ்சில் நாட்டுக்கு உட்பட்ட சாஸ்தான் கோவில்விளை (இன்றைய சாமித்தோப்பு) என்ற ஊரில் வாழ்ந்து வந்த, தாழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 18 ஜாதியில் ஒன்றான சாணார் (நாடார்) இனத்தைச் சேர்ந்த பொன்னுமாடன் நாடாருக்கும், வெயிலாள் அம்மையாருக்கும் கி.பி.1809 ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பெருமாளின் அருளால் அக்குழந்தை பிறந்ததாக கருதிய பொன்னுமாடன் தம்பதியர், "முடிசூடும் பெருமாள்" என்று குழந்தைக்கு நாகரீகமான பெயரைச் சூட்டினர். 

"முடிசூடும் பெருமாள்" என்றால் "திருமுடியுடன் விஷ்ணு" என்று பொருள். அக்காலத்தில், தாழ்த்தப்பட்ட சாதியினரில் உள்ள ஒருவர் குழந்தை பெற்றால், அது பற்றிய தகவலை அரசு நிர்வாகப் பதிவேட்டில் பதிவு செய்து, குழந்தைக்குரிய தலை வரியைக் கட்டாயம் செலுத்த வேண்டும். அதனால், பொன்னுமாடனும் தனது மகனின் பெயரை பதிவு செய்யச் சென்றார். குழந்தையின் பெயர் நாகரீகமாக இருப்பதாக கருதிய அரசாங்கத்தினர், அந்த பெயரை பதிவேட்டில் பதிய மறுத்தனர். மாறாக, அவ்வாறு பெயர் வைத்ததற்காக தண்டனைதான் கிடைக்கும் என்றனர். பயந்து போன பொன்னுமாடன் நாடார், தனது குழந்தையின் பெயரை "முத்துக்குட்டி" என்று மாற்றினார். அதன் பின்னரே அவர் குழந்தைக்குரிய தலை வரி செலுத்த அனுமதிக்கப்பட்டார்.

இந்த முத்துக்குட்டிதான், பின்னாளில் மிகப்பெரிய சமூக புரட்சி செய்து, தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட 18 ஜாதியினரையும் தலைநிமிர்ந்து நடக்கச் செய்தார். அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளையும் மீட்டுக் கொடுத்தார். சமூக புரட்சியாளராக திகழ்ந்த அவரே, ஒரு மகானாக மட்டுமின்றி, இறைவனாகவும் கருதப்படுகிறார். அவர் வேறு யாருமில்லை. நிகழ்காலத்தை மட்டுமின்றி எதிர்காலத்தையும் அப்படியே ஆழமாய்ச் சொன்ன அய்யா வைகுண்டர்தான் அவர்.
(தொடரும்...)

(முத்துக்கமலத்தில் வெளியான எனது இந்த படைப்பை காண கீழே கிளிக் செய்யவும்)

Share:

ரோஜா மருத்துவ பயன்கள்


ரோஜாப் பூவை விரும்பாத பெண்கள் யாரும் இருக்க முடியாது. காதலர்கள், தங்களது காதலை வெளிப்படுத்தும்போது பரிமாறிக் கொள்ளும் பொருட்களில் இந்த ரோஜாவும் ஒன்று. இதில் இருந்துதான் வாசனைத் திரவியமான பன்னீர் தயார் செய்யப்படுகிறது.

ரோஜாவிற்கு பன்னீர்ப்பூ, சிற்றாமரை என்ற பெயர்களும் உண்டு.

மருத்துவ பயன்கள் :

1. இன்று, சர்க்கரைநோய் என்கிற நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் ஏராளம். அவர்கள், ஆவாரம்பூ, ரோஜா மொக்கு, யானை நெருஞ்சில் - இவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். அந்த பொடியை பாலுடன் கலந்து காய்ச்சி, தினமும் இருவேளை குடித்து வந்தால் போதும். சர்க்கரைநோய் குணமாகிவிடும்.

2. வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்களின் வாயில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும். அவர்களிடம் முகம் கொடுத்து பேச முடியாது. இந்த பிரச்சினையில் இருந்து விடுபட, வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்ளும்போதே, அதனுடன் சிறிது ரோஜா இதழ்களையும் சேர்த்து மென்றுவர அந்த வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.

3. ரோஜா இதழ்களை சேகரித்து நிழலில் உலர்த்தி, நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி உட்கொள்ள கொடுத்துவர கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு சரியாகும். வாய்ப்புண்ணும் குணமாகும்.

4. ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலை, மாலை ஆகிய இருவேளை அப்படியே உட்கொண்டுவர சீதபேதி இரண்டொரு நாளில் குணமாகிவிடும்.

5. உலர்ந்த ரோஜா மொக்கு, சதக்குப்பை ஆகியவற்றை சமஅளவு எடுத்து இடித்து வைத்துக் கொள்ளவும். 200 மில்லி லிட்டர் தண்ணீரை நன்றாக காய்ச்சி, அதில் மேற்படி தூளைப் போட்டு மூடி வைக்கவும். 3 மணி நேரம் கழித்து வடிகட்டி அதை குடித்துவர, சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலி, அல்சர் ஆகியவை குணமாகும்.

6. ரோஜா மொக்கு 3 பங்கு, நிலவாகை இலை ஒன்றரை பங்கு, சுக்கு ஒரு பங்கு, கிராம்பு 1/4 பங்கு எடுத்து உலர்த்தி, ஒன்றிரண்டாக சிதைத்து, 4 பங்கு நீர்விட்டு காய்ச்சி ஒரு பங்காக வற்ற வைக்கவும். இதனை இரவில் செய்து வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் வடிகட்டி குடித்துவர மலச்சிக்கல் நீங்கும். மேலும், மூலநோய், உடல் களைப்பு ஆகியவையும் நிவர்த்தியாகும்.

7. ரோஜா இதழ்கள் தேவையான அளவு எடுத்து, அதனுடன் சமஅளவு பாசிப்பயிறும், பூலாங்கிழங்கு நான்கைந்தும் சேர்த்து மை போல் அரைத்துக் கொள்ளவும். இதனை, குளிப்பதற்கு முன் உடலில் பூசி, சுமார் 1/2 மணி நேரம் ஊற வைத்த பின்னர் இளவெந்நீரில் குளித்துவர சரும நோய்கள் அனைத்து அகன்றுவிடும். இதனை சோப்பிற்கு பதில் தினமும் பயன்படுத்திவர சருமம் பட்டுபோல் மிருதுவாவதுடன் கவர்ச்சிக்கரமான நிறமும் பெறலாம்.

8. ரோஜா இதழ்களை சேகரித்து தேனிலோ அல்லது சர்க்கரை பாகிலோ ஊற வைத்து தினமும் சாப்பிட்டுவர இதயம் வலிமை பெறும். மலச்சிக்கல் தீரும்.

9. ரோஜா மலரின் சாற்றை ஒற்றைத் தலைவலிக்கு பயன்படுத்தலாம். தலைவலி எந்த பக்கம் இருக்கிறதோ, அதற்கு நேரெதிர் நாசி துவாரத்தில் இதன் சாற்றை 2 துளிவிட உடனே தலைவலி மறைந்துபோகும்.


ரோஜாப்பூ சர்பத் செய்முறை :

ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீர் விட்டு கொதிக்க வையுங்கள். அதில், 1/2 கிலோ அளவு ரோஜா இதழ்களை போட்டு கிளறி மூடி வைத்து விடுங்கள். 12 மணி நேரம் கழித்து இதனை நன்றாக பிசைந்தால் குழம்புபோல் வரும். அதை வடிகட்டிக் கொள்ளவும்.

இதேபோல், வேறொரு பாத்திரத்தில் 700 கிராம் சர்க்கரையை போட்டு, அதில் 300 மில்லி சுத்தமான தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சுங்கள். பாகு பதத்திற்கு வந்ததும் அதில், ஏற்கனவே குழம்பு போல் வடிகட்டி வைத்த நீரை சேர்த்து மீண்டும் காய்ச்சுங்கள். அதனுடன், 90 மில்லி லிட்டர் பன்னீரை கலந்து இறக்கி ஆற வைத்து பத்திரப்படுத்துங்கள்.

இதில் 2-3 தேக்கரண்டி அளவு எடுத்து, அதனுடன் தண்ணீர் அல்லது பசும்பால் கலந்து குடித்துவர உடல் உஷ்ணம் தணியும்; ரத்தம் விருத்தியடையும்; களைப்பு நீங்கி உற்சாகம் பிறக்கும்; வயிற்றுவலி, வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.

- இதுதான் ரோஜாப்பூ சர்பத். இதற்கு ரோஜாப்பூ மணப்பாகு என்ற பெயரும் உண்டு.


ரோஜாப்பூ குல்கந்து செய்முறை :

ரோஜாப்பூவில் இருந்து குல்கந்தும் செய்யலாம். இது உடலுக்கு போஷாக்கு தரும் சிறந்த ‘டானிக்’ போன்றதும்கூட. அதன் செய்முறை :

நல்ல தரமான நிறமுள்ள பெரிய ரோஜாப்பூக்களை வாங்கி வந்து, அவற்றின் இதழ்களை மட்டும் தனியாக சேகரியுங்கள். பூவில் ஏதேனும் புழு, பூச்சிகள் இருந்தால் அந்த மலரை பயன்படுத்த வேண்டாம்.

இவ்வாறு சேகரித்த ரோஜா இதழ்களின் எடைக்கு 3 மடங்கு கற்கண்டு சேர்த்து, இரண்டையும் உரலில் இட்டு மெழுகு பதம் வரும் வரை இடித்துக் கொள்ளுங்கள்.

இதனை ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடியில் இட்டு, இதன் அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு தேனை விட்டு நன்கு கிளறி, காற்று புகாமல் மூடி வைக்கவும். இதுவே நல்ல தரமான குல்கந்து.

இதனை சிறுவர்கள் 1/2 தேக்கரண்டி, பெரியவர்கள் ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை ஆகிய இருவேளை சாப்பிட்டுவர ரத்தம் விருத்தியடையும்; ரத்தம் சுத்தமாகும்; மலச்சிக்கல் அடியோடு ஒழியும்; உடல் உள் உறுப்புகள் பலமாகும்; ரத்தபேதி, உடல் வெப்பம், வெட்டை மற்றும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்ற நோய்கள் குணமாகும்.

Share:

மஞ்சளில் இனிய இல்லறம்


ஞ்சள் ஒரு மங்கலகரமான பொருள். எந்தவொரு சுப காரியத்தை ஆரம்பித்தாலும் மஞ்சள் தடவிய பின்னரே ஆரம்பிப்போம்.

திருமணத்தின்போது மஞ்சளுக்கு தனி சிறப்பிடம் கொடுக்கிறோம். திருமண அழைப்பிதழின் ஓரங்களில் மஞ்சள் தேய்ப்பதோடு, மணமக்கள் மீது அட்சதை தூவும்போதும் அரிசியுடன் மஞ்சளையும் கலந்துகொள்கிறோம்.

வசதி படைத்தவர்கள் தங்கத்தால் தாலி செய்து கொள்கிறார்கள். ஆனால், பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு அப்போதைய தங்கம் இந்த மஞ்சள்தான். அதை ஒரு மஞ்சள் கயிற்றில் கட்டி தாலியாக பயன்படுத்துகிறார்கள்.

திருமணம், கோவில் விழாவின்போது மஞ்சள் பொடியை காற்றில் தூவும் வழக்கம் உண்டு. இவ்வாறு செய்வதால், அந்த கூட்டத்தில் மாசு கலந்த காற்று சுத்தமான காற்றாக மாறுகிறது. இதனால் தான், சில இடங்களில் மணமக்களுக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடத்துகிறார்கள்.

கோவில்களில் மஞ்சள், திருமஞ்சனத்தால் சாமி சிலைகளுக்கு அபிஷேகம் நடைபெறுவதை காண்கிறோம். சாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மஞ்சள் நீரை தீர்த்தமாக பருகும்போது, நம் உடலில் நோய்களை உருவாக்கும் கிருமிகள் அழிகின்றன. இதனால் ஆரோக்கியம் கிடைத்து ஆயுளும் நீள்கிறது.

இன்னும் ஒரு உதாரணம் :

அம்மன் கோவில் திருவிழாவின்போது விரதம் மேற்கொள்ளும் ஆண்கள், பெண்கள் மஞ்சள் துணி அணிந்திருப்பதை காண்கிறோம். இவ்வாறு மஞ்சள் ஆடை அணியவும் காரணம் இருக்கிறது.

மஞ்சள் ஆடை அணிவதால் உடலில் உள்ள வெப்பம் அகற்றப்பட்டு, மனதில் அலை பாய்ந்து கொண்டிருக்கின்ற கொடிய எண்ணங்களில் இருந்தும் விடுபடுகிறோம்.

மருத்துவ பயன்கள் :

1. குழந்தை இல்லாத பெண்கள், மாதவிலக்கு சமயம் அந்த 3 நாட்களும் ஒரு அவுன்ஸ் தண்ணீரில் 4 சிட்டிகை சுத்தமான மஞ்சள் பொடியை கலக்கி வெறும் வயிற்றில், மதியம், மாலை என்று மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும்.

2. பெண்களின் தோல் பகுதி மிகவும் மென்மையானது. அதனால் கிருமி தொற்றுதலுக்கு எளிதில் ஆளாகும் வாய்ப்புகள் அவர்களுக்கு அதிகம் உண்டு. அதனால் தான், பெண்களை மஞ்சள் தேய்த்து குளிக்கச் சொல்கிறோம்.

3. சைவம் ஆனாலும் சரி, அசைவம் ஆனாலும் சரி, மஞ்சள் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் விஷத்தன்மை ஏற்படாது.

4. பாதாம் பாலுடன் கஸ்தூரி மஞ்சள் சிறிது சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு ஆண்மை சக்தி பெருகும்.
மூலம், பவுத்திரத்தால் அவதிப்படுபவர்கள் ஒரு டீஸ் பூன் வெண்ணெயில் சிறிது மஞ்சள் பொடியையும் கலந்து, அந்த கலவையை உள் மூலத்திற்கும், வெளிமூலத்திற்கும் தடவி வந்தால் நாளடைவில் நல்ல குணம் கிடைக்கும்.

5. குளிக்கும் தண்ணீருடன் சிறிதளவு மஞ்சள் பொடியையும் சேர்த்து கலக்கி, அதை சூரிய ஒளியில் வைத்து, சிறிதுநேரம் கழித்து குளிப்பது நல்லது. சூரியஒளி சக்தியினால் மஞ்சள் மேலும் வீரிய சக்தி பெற்று நோயை தடுக்கும் மருந்துபோல் செயல்படுகிறது. அம்மை நோய்க்கு மட்டுமல்ல; சாதாரண நாட்களிலும் ஆண்-பெண் இருபாலரும் இப்படி மஞ்சள் தண்ணீரில் குளிக்கலாம்.

6. மஞ்சளையும், சந்தனத்தையும் கலந்து நெற்றியில் திலகமிட்டால் அடிக்கடி டென்ஷன் ஆகுபவர்கள் அதில் இருந்து விடுபடுவார்கள். மனதில் கெட்ட எண்ணங்கள் இருந்தால் விலகிவிடும். மூளை, நரம்பு மண்டலம் அப்போது குளிர்ச்சி அடைவதே இதற்கு காரணம்.

7. மஞ்சள் பொடியை உடலில் பூசி குளிப்பதால் கவர்ச்சியான நிறத்தை பெறலாம். அதாவது தோல் பளபளப்பாகும். இதனால்தான் ஹோலி பண்டிகையின்போது மஞ்சள் தூவி விளையாடுகிறார்கள்.

8. தொற்றுநோய் உள்ள பகுதியில் மஞ்சள் நீரையோ, மஞ்சள் பொடியையோ தெளித்து வந்தால், அந்த நோய் மற்ற பகுதிகளுக்கு பரவாது. வந்த பகுதியிலும் அதை கட்டுப்படுத்தலாம். வீட்டு வாசலில் மஞ்சள் கொத்தை கட்ட காரணமும் இதுதான்.

9. ஈக்களின் தொல்லையை கட்டுப்படுத்த, மஞ்சள் நீரில் துளசி இலைகளை தேவையான அளவு சேர்த்து கலந்து, ஈ உள்ள பகுதிகளில் தெளித்து வந்தாலே போதும். ஈக்கள் தொல்லை குறைந்து விடும்.

10. தொடர்ச்சியான இருமல் உள்ளவர்கள் சூடான பாலில் சிறிது மஞ்சள் பொடியை கலந்து தினமும் 3 வேளை வீதம் பருகி வந்தால் இருமல் காணாமலேயே போய்விடும்.

11. சுட்ட அல்லது வறுத்த மஞ்சள் பொடியை பாலில் சிறிதளவு கலந்து சில நாட்கள் தொடர்ச்சியாக பருகி வந்தால் மேக நோய் குணமாகும்.

மஞ்சளில் இனிய இல்லறம்

முன்பெல்லாம் பெண்கள் குளிக்கும்போது மஞ்சளை உபயோகிக்க மறக்க மாட்டார்கள். அந்த மஞ்சள் தரும் இயற்கை அழகில் மினுமினுத்தார்கள். ஆனால், இன்றோ அதன் நிலை தலைகீழாக மாறிவிட்டது.

இன்றைய நவநாகரீக பெண்களுக்கு மஞ்சள் என்றால் என்ன என்று பாடம் எடுத்தால் தான் புரிகிறது. அவர்களை மஞ்சள் பூசி குளிக்க என்று சொன்னால், "எவ்வளவோ பியூட்டி சோப்புகள், ஸாம்புகள் இருக்கும்போது மஞ்சள் எதுக்கு?" என்று திருப்பிக் கேட்கிறார்கள். உண்மையிலேயே மஞ்சளைப் போன்ற இயற்கையான அழகு சாதனம் வேறு எதுவுமே கிடையாது.

பெண்களை இயற்கை அழகை மிளிரச் செய்யும் இதே மஞ்சள் தான், இனிய இல்லறத்திற்கும் காரணமாகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் ஆண்மைக் குறைவு, நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகளால் ஏராளமான கணவன்மார்கள் சிக்கி தவிக்கிறார்கள். இவர்களால் இனிமையான இல்லறத்தை அனுபவிக்க முடியவில்லை. இப்படிப்பட்டவர்களின் மனைவிமார்கள் தினமும் மஞ்சள் பூசி குளித்தாலே, அவர்களின் இந்த குறைபாடு நீங்கி விடும்.

அது எப்படி தெரியுமா?

மஞ்சள் பூசி குளிக்காத பெண்களின் கணவன்மார்களுக்கு நரம்பு தளர்ச்சியும், ஆண்மைக் குறைவும் உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. காரணம், பெண்களுக்கு மூன்று மடங்கு உஷ்ணம் அவர்கள் உடலில் உள்ளது தான்.
இது இயற்கை.

ஒன்று... உணவு சீரணமாவதற்கும், இரண்டு ... மாதவிலக்கு ஆவதற்கும், மூன்று ... கருத்தரிப்பதற்கும் என்று இந்த உஷ்ணத்தை இயற்கையே பெண்களின் உடலில் உருவாக்கி வைத்துள்ளது.

கணவனும், மனைவியும் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது, மனைவி உடலில் உள்ள அதிகப்படியான உஷ்ணம் கணவனின் உடலுக்கு கடத்தப்படுகிறது. இதனால், அந்த கணவனுக்கு நரம்பு தளர்ச்சியும், ஆண்மைக் குறைவும் உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

பெண்கள் மஞ்சள் பூசி குளிக்கும்போது அவர்களது உடலில் உள்ள அதிகப்படியான உஷ்ணம் கட்டுப்படுத்தப்படுகிறது.

அவர்கள், கணவனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும்போது, அவர்களது உடல் வெப்பம் கணவனது உடலுக்கு அதிகம் கடத்தப்படாது. அதனால், கணவனுக்கு ஆண்மைக் குறைவு, நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

Share:

ஞாபக சக்தி அதிகரிக்கும் மாதுளை


மாதுளையில் இனிப்பு மாதுளை, புளிப்பு மாதுளை, பூ மாதுளை என்று 3 வகைகள் உள்ளன.

மருத்துவ பயன்கள் :

* மாதுளம் பூவை உட்கொண்டால் ரத்த வாந்தி, வயிற்றுக்கடுப்பு, ரத்த மூலம் ஆகியவை குணமாகும். உடல் வெப்பம் தணியும். மேலும், உடலுக்கு வலிமையை தரும் மாதுளம்பூ ரத்தத்தை பெருக்கவும் செய்கிறது.

* மாதுளம் பூச்சாறும், அருகம்புல் சாறும் சம அளவு கலந்து குடித்து வர மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.

* மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து, அதை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வர தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.

* மாதுளம் பூவை இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன் ரத்தம் வருவது நிற்கும்.

* மாதுளம் பூ, மாங்கொட்டை, ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து சலித்து, மோரில் கலந்து சாப்பிட கழிச்சல் குணமாகும்.

* கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும் தன்மையும் மாதுளம் பூவிற்கு உண்டு. இதன் பூவுடன் சம அளவு வால் மிளகு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இடித்து பொடியாக்கி காலை, மாலை இருவேளையும் 4-5 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிலக்கு சீராகும்.

* மாதுளம் பூ மொக்கை நன்கு காய வைத்து பொடியாக செய்து இருமல் ஏற்படும்போது சிறிதளவு சாப்பிட இருமல் தணியும்.

* மாதுளம் பிஞ்சை குடிநீரில் கலந்து குடிக்க சீதபேதி, கழிச்சல் குணமாகும்.

* மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து மணப்பாகு செய்து சாப்பிட்டு வர பித்தம் தணியும். உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். மேலும், சுரத்தையும் குணமாக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்தக்கூடிய கைகண்ட மருந்தும் இது என்பது கூடுதல் தகவல்.

* மாதுளம் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது ரத்த உற்பத்திக்கும், ரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உகந்தது. அடிக்கடி மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் பித்த நோய்கள், வறட்டு இருமல், வயிறு, குடல் புண்கள் (அல்சர்) குணமாகும். மேலும், ஈரல், இதயம் வலுவாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.

* மாதுளம் பழத்தோலுடன் சிறிதளவு இலவங்கம், இலவங்கப்பட்டை சேர்த்து இடித்து, 4 பங்கு நீர்விட்டு காய்ச்சி, 2 பங்காக அது வற்றியதும் வடிகட்டி குடித்துவர சீதபேதி குணமாகும்.

* மாதுளம் பழத்தோலை நெருப்பில் சுட்டு கரியாக்கி, அதனை கோதுமை கஞ்சியுடன் கலந்து சாப்பிட வயிற்றுவலி குணமாகும்.

* மாதுளம் பழச்சாற்றுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடித்துவர சளித் தொல்லை தீரும்.

* 300 கிராம் அளவு மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து 200 கிராம் நெய்யுடன் சேர்த்து, நீர்வற்றும் வரை காய்ச்சி வைத்துக்கொண்டு, தினமும் இருவேளை 5-10 மில்லி அளவு சாப்பிட்டுவர அனைத்து வகை மூலமும், உடல் உஷ்ணமும் தணியும்.

* மாதுளை பிஞ்சை நன்கு அரைத்து தயிரில் கலந்து குடிக்க சீதபேதி குணமாகும்.

* மாதுளம் பழச்சாற்றை சிறிது சூடாக்கி, காதில் ஓரிரு துளி விட காதில் சீழ் வடிதல் நிற்கும்.

* மாதுளம் பழச்சாற்றுடன் கற்கண்டு சேர்த்து 30 மில்லி அளவு காலையில் குடித்து வர நரம்புகள் வலிமையாகும்.

* மாதுளை வேர்ப்பட்டை ஒரு பங்கு, நீர் 20 பங்கு எடுத்து, அதனுடன் சிறிது இலவங்கம் சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடிக்க தட்டைப்புழு வெளியாகும்.

* மாதுளையின் விதை நீர்த்துப்போன வெண்ணீரை இறுக்கும். வெள்ளை நோயை குணமாக்கும். இது உடம்பிற்கு ஊட்டத்தை தருவதோடு, ஆண்மையையும் உண்டாக்கும்.

* மாதுளை தோலின் பொடி, ஜாதிக்காய் பொடி, மாதுளைப்பட்டைச் சாறு ஆகியவற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர நாட்பட்ட சீதபேதி குணமாகும்.


* மாதுளம் பழத்தின் சதையுடன் கூடிய விதையை நீக்கி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு வெள்ளைத்துணியில் தடவி, துணியை நன்கு உலர வைக்க வேண்டும். உலர்ந்த பின்னர், அந்த துணியை திரியாக்கி விளக்கெண்ணெய்விட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதில் வரும் கரியை ஒரு தட்டில் பிடித்து, விளக்கெண்ணெய் விட்டு குழைத்து ஒரு சிமிழில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இது தான் இயற்கையான கண்மையாகும். இதை கண்களுக்கு மையிட்டால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும். கண் சம்பந்தமான நோய்கள் நெருங்காது.

Share:

குளிர்ச்சி தரும் சந்தனமரம்


ந்தியாவில் காணப்படும் மரங்களில் மிகவும் விலை உயர்ந்தது சந்தனமரம். இதன் தாயகம் இந்தியாதான். இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன. நன்கு வளர்ச்சியடைந்த சந்தன மரமே வாசனை நிரம்பியது.

சந்தன மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து கொண்டது. இதில் இருந்து எடுக்கப்படும் அகர் என்னும் எண்ணெய் மருத்துவ குணம் கொண்டது. சருமத்திற்கு குளிர்ச்சி தரக்கூடியது. சிவப்பு, மஞ்சள், வெண்மை என்று மூன்று வகை நிறத்தின் அடிப்படையில் சந்தன மரக்கட்டைகள் தரம் பிரிக்கப்படுகின்றன. நிறம் இவ்வாறு வேறுபட்டு இருந்தாலும் மருத்துவக் குணம் ஒன்று தான். எனினும், செஞ்சந்தனம் சில சிறப்பு குணங்களை கொண்டு காணப்படுகிறது.


லேசான துவர்ப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை சந்தனக்கட்டைகள். உடலை தேற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வியர்வையை உண்டாக்குதல் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. இக்கட்டையை தொடர்ந்து உபயோகித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். உடல் பலம் பெறும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும். அறிவும், மன மகிழ்ச்சியும், உடல் அழகும் அதிகமாகும்.


மருத்துவ பயன்கள் :

* சந்தனக்கட்டையை எலுமிச்சம்பழச்சாற்றில் உரைத்து, பசையாக செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் படர்தாமரை, வெண்குஷ்டம், முகப்பரு ஆகியவை குணமாகும். முகத்தில் இதை பயன்படுத்துவதால் அதில் வசீகரமும், அழகும் உண்டாகும்.

* ஒரு தேக்கரண்டி சந்தனத்தூளை அரை லிட்டர் தண்ணீரில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

* சந்தனத்தை பசும்பாலில் உரைத்து, சுண்டைக்காய் அளவு காலை, மாலை வேளைகளில் தொடர்ந்து 10 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் வெட்டைச்சூடு தணியும்.

* 2 தேக்கரண்டி சந்தனத்தூளை அரை லிட்டர் குடிநீரில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

* சந்தனக்கட்டையை எலுமிச்சம்பழச்சாற்றில் நன்கு அரைத்து பசை போல் செய்து, கண் கட்டிகள் மீது பற்று போட வேண்டும். இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் இவ்வாறு செய்து காலையில் கழுவிவிட வேண்டும். 5 நாட்கள் தொடர்ச்சியாக இப்படி செய்து வந்தால் கண் கட்டி குணமாகும்.

* நெல்லிக்காய்ச்சாறு 15 மில்லி எடுத்துக்கொண்டு, அதில் சுண்டைக்காய் அளவு சந்தன விழுதை கலந்து 40 நாட்கள் குடித்து வந்தால் மது மோகம் தீரும்.

* சந்தனத்தூள் 20 கிராம் எடுத்துக்கொண்டு, அதை 300 மில்லிலிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி 150 மில்லி லிட்டராக வடிகட்டி, 3 வேளையாக 50 மில்லி வீதம் குடித்து வர நீர்க்கோவை, காய்ச்சல், மார்புத் துடிப்பு, மந்தம், இதய வலி ஆகியவை தீரும்.

* பசும்பாலில் சந்தனக்கட்டையை உரைத்து புளியங்கொட்டை அளவு காலை, மாலை சாப்பிட்டு வர வெட்டை சூடு, மேக அனல், சிறுநீர் பாதையில் உள்ள ரணம், அழற்சி குணமாகும்.

* உடல், மன ஆரோக்கியத்திற்கான பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள் சந்தனத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. கூந்தல் தைலங்கள், சோப்புகள், நறுமணப் பொருட்கள் தயாரிப்பில் சந்தனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

* சந்தனக்கட்டையை பழச்சாற்றில் உரைத்து சொறி, சிரங்கு, தேமல் போன்ற தோல் வியாதிகளுக்கு பூசலாம்.

* சந்தனாதித் தைலத்தை தேய்த்து தலை முழுகி வந்தால் உடல் சூடு தணியும்.

* சந்தனத்தை உடலில் பூசி வந்தால் சூரிய ஒளிக்கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகளை தவிர்க்கலாம்.

* சந்தன விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

* சந்தனத்தை தலையில் அரைத்து பூசி வந்தால் சுரத் தலைவலி, கோடைக்கட்டிகள், அதன் தழும்புகள் குணமாகும். மூளைக்கும், இதயத்துக்கும் உள்ள பலவீனம் சரியாகும்.

பொதுவாக, நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் சந்தனத்தை உடலில் பூசி, அது நன்கு உலர்ந்த பின் குளித்து வரலாம். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் உடலில் வசீகரமும், மினுமினுப்பும் வரும். மேலும், உடல் குளிர்ச்சி தன்மையை பெறும்.

Share: