சனி, 16 அக்டோபர், 2010

அய்யா வைகுண்டர் வரலாறு


2. முத்துக்குட்டி பிறப்பு
 -நெல்லை விவேகநந்தா-
கி.பி.18 ஆம் நூற்றாண்டு. 

ஐரோப்பிய நாடுகள் தொழிற்புரட்சியால் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்தனர். ஆனால், இந்தியாவோ ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் என்று வியாபாரம் செய்ய வந்தவர்கள் கையில் சிக்கி அவர்களால் கூறு போடப்பட்டு ஆளப்பட்டு வந்தது. இந்தியாவின் இயற்கை செல்வங்களை அவர்கள் தங்களது நாடுகளுக்கு அள்ளிக் கொண்டு போனார்கள். அவர்களை, ஏன் என்று தட்டிக்கேட்க யாருக்கும் துணிவில்லை. அப்படியே தட்டிக் கேட்ட மிகச் சிலரும் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாகினர்.

நாட்டைக் கொள்ளையடிக்க வந்த அவர்களை எதிர்க்கத் துணிவில்லாத  இந்தியக் குறுநில மன்னர்கள் அவர்களுக்குக் கப்பம் செலுத்தித் தங்கள் அரசைக் காப்பாற்றிக் கொள்ளத் தொடங்கினர். இந்த சுயநல அரசர்களால் ஆங்கிலேயர்களை எதிர்க்க இயலாவிட்டாலும், அவர்கள் ஆட்சிப் பகுதியில் மக்களை சாதி எனும் பெயரில் பிரித்து, உயர்வு தாழ்வுகளை உருவாக்கி வேறுபாடுகளை வளர்த்து வந்தனர். இந்த வேறுபாடுகளால், குறிப்பிட்ட சில சமூக மக்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட்டு, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்தனர். பல சமூகத்தினர் ஒடுக்கப்பட்டு, பல கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இக்கொடுமைகளில் தென் தமிழகமும், அன்றைய தென்கேரளாவும் இணைந்த திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சிப் பகுதியில் இருந்த நாஞ்சில் நாட்டு மக்களின் நிலை மிகவும் மோசமானது. இங்கு, உயர் சாதியினராகக் கருதப்பட்டவர்கள் பிற சாதியினர்களை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அவர்களைச் சிறுமைப்படுத்தி பல இன்னல்களுக்கு உள்ளாக்கினர். இந்த இன்னல்களை நினைத்து தங்கள் வாழ்க்கையை நொந்து வாழ்ந்து கொண்டிருந்த அந்த மக்களுக்கு விடிவு காலம் வருமா? என எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.  

திருவாங்கூர் சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஆட்சியில் 1050 சாதிகள் அப்போது இருந்ததாக சொல்லப்படுகிறது. அங்கு பிராமணர்களிலேயே உயர்ந்தவர்களாகக் கருதப்பட்ட நம்பூதிரிகளின் சாதிய ஆட்சியே நடந்தது. அவர்களுக்குத் துணையாக, நாயர்கள், வெள்ளாளர்கள் போன்ற சில சாதியினரும் சேர்ந்து கொண்டனர். அவர்களால் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட பட்டியலில் 18 ஜாதிகள் இடம் பெற்றன. குறிப்பாக சாணார் (நாடார்), பரவர், மூக்குவர், புலையர் உள்ளிட்ட ஜாதியினர் அதில் அடங்குவர். 

இதுபற்றி; 
“சாணார் இடையர் சாதி வணிகருடன்
நாணாத காவேரி நல்ல துலுக்கப்பட்டர் முதல்
சூத்திரர் பிரமார் தொல் வாணியர் பறையர்
கம்மாளர் ஈழர் கருமறவர் பரவர்
வெம்மா நசுராணி, வேகாவண்டர் இடலையர்
சக்கிலியரோடு சாதி பதினெட்டும்...” 
- என்கிறது அகிலத்திரட்டு.

இந்த 18 ஜாதியினரும் உயர் ஜாதியினரான நம்பூதிரிகள், நாயர் (மேனன்), பட்டன், தம்புரான், தம்பி, பிள்ளைமார் மற்றும் பிராமணர்களுடன் பேசும் போதும், அவர்கள் வசிக்கும் பகுதி அருகில் செல்ல நேரும் போதும் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு தனி வரைமுறையே உருவாக்கப்பட்டது. அத்தனையும், கொடூரமானவை! இதனால்தான், அன்றைய கேரளாவை "பைத்தியக்காரர்களின் கூடாரம்" என்று 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த சுவாமி விவேகானந்தர் சொன்னார் போலிருக்கிறது.

திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சில இடங்களுக்குச் செல்லும் போது, உயர் சாதிப் பெண்கள் வசித்த அம்ம வீடு மற்றும் உள்ளிருப்பு வீடுகளில் தங்கி ஓய்வெடுப்பது வழக்கம். ஓய்வு என்றால் ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ அல்ல; இரண்டு அல்லது மூன்று நாளில் தொடங்கி நாட்கணக்கில், வாரக்கணக்கில் நீடிக்கும். அப்போது, அந்த வீட்டுப் பெண்கள் மன்னரை உற்சாகப்படுத்தி அனுப்பி வைப்பார்கள். இந்தத் தொடர்பில் ஆதிக்க சாதியினரான நம்பூதிரிகள், நாயர் உள்ளிட்டவர்கள் மன்னருடன் நெருக்கமாய் இருந்தனர்.

மன்னருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியான ஓய்விற்கு பிரதிபலனாக பல சலுகைகளை உயர் சாதியினருக்கு வழங்கினார். அந்த ஆதிக்க ஜாதியினர் வசித்த பகுதியில் இருந்த விளைநிலங்கள், வருவாய்த்துறை மற்றும் நிர்வாகத்தைக் கவனிக்கும் பொறுப்பை அவர்களிடமே விட்டுவிட்டார். இந்த அளவுக்கு மீறிய அதிகாரத்தால், உயர் சாதிப் பட்டியலில் இடம் பிடித்தவர்கள், ஒடுக்கப்பட்ட சாதியினராக அறிவிக்கப்பட்டவர்ளைக் குற்றவாளியாக்கி குறுநில மன்னர்கள் போல் தீர்ப்பு வழங்கவும், தண்டனை கொடுக்கவும் தொடங்கி விட்டனர்.
  • உயர் சாதியினர் வசிக்கும் தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) நடமாடக் கூடாது. 

  • தாழ்த்தப்பட்ட வகுப்பு ஆண்கள் செருப்பு அணிந்து நடந்து செல்லக் கூடாது.

  •  வெயில், மழைக்கு குடை பிடிக்கக் கூடாது.

  • முழங்காலுக்கு மேலேதான் வேஷ்டி கட்டித் துண்டைக் கை இடுக்குகளில் வைத்தபடிதான் நடக்க வேண்டும்.

  • உயர் சாதியினரின் குழந்தைகளையும் சாமி, அய்யா என்றுதான் அழைக்க வேண்டும்.

  • அடிமைகளாக விலைக்கு வாங்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள், ஆயுள் முழுக்க உயர் சாதியினருக்காக உழைக்க வேண்டும். அதற்கு கூலி கிடையாது. அவர்களுக்கு வழங்கப்படும் சாப்பாடும் நாய்க்கு வழங்குவதைப் போல்தான் வழங்கப்படும்.

  • ஒரு பிராமணனிடம் பேசும் போது 36 அடி தூரத்திலும், நாயரிடம் பேசும் போது 60 அடி தூரத்திலும் நின்று கொண்டு, தலையைக் கீழே குனிந்து கொண்டும், வாயைப் பொத்திக் கொண்டும் பேச வேண்டும். புலையர் இனத்தினருக்கு இந்த வரைமுறை இரட்டிப்பாக இருந்தது.

  • தாழ்த்தப்பட்டவர்கள் வெளியே புறப்பட்டுச் சென்றால், தங்களை உயர் சாதியினர் பார்க்க நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு குச்சியைக் கொண்டு தட்டிக் கொண்டே செல்ல வேண்டும்.

  • வயல்களில் வேலை செய்யும் போது உயர் சாதியினர் அந்த வழியாக சென்றால், அவர்கள் தங்களைப் பார்க்கக்கூடாது என்பதற்கான அறிவிப்பை குறிக்கும் வகையில் இலைகளையும், மரத்துண்டுகளையும் வைத்துச் செல்ல வேண்டும்.

  • ஆதிக்க சாதியினரின் கோவில்கள் உள்ள இடங்களுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் செல்லக்கூடாது. இக்கோவில் திருவிழாக்களின் போது, சில கிலோமீட்டர் தொலைவுக்கு முன்னதாகவே தடுப்புகளை ஏற்படுத்தி, ஊருக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் வருவது தடுக்கப்பட்டது.

  • ஊரிலுள்ள பொதுக்குளம், கிணறு, சாலைகள், வணிகம் நடைபெறும் இடங்களை தாழ்த்தப்பட்டவர்கள் பயன்படுத்தக் கூடாது.

  • தாழ்த்தப்பட்ட வகுப்பு ஆண்கள் குடுமி வைத்துக் கொள்ளக் கூடாது. 

  • தாழ்த்தப்பட்டவர்கள் தங்களது குழந்தைகள் பற்றி உயர் சாதியினரிடம் குறிப்பிடும் போது, அவர்களைக் குரங்கு, கன்றுக்குட்டி என்று வேறு மிருகங்களின் பெயரில்தான் சொல்ல வேண்டும்.

  • தாழ்த்தப்பட்டவர்களது குழந்தைகளுக்கு உயர் சாதியினர் பயன்படுத்தும் பெயர்களை வைத்துக் கொள்ளக் கூடாது
    .
  • மாடி வீடு கட்டக் கூடாது. பசுமாடு வளர்க்கக் கூடாது.
- இப்படி பல அடக்குமுறைகள் தாழ்த்தப்பட்ட வகுப்பாக ஒடுக்கப்பட்ட 18 சாதியினர் மேல் திணிக்கப்பட்டன. அதை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். சில சமயம் கொலையும் செய்யப்பட்டனர்.

இந்த அடக்குமுறைகளுடன் வரிகளும் அதிகமாக விதிக்கப்பட்டன. பனை ஏறுபவர்கள், அவர்கள் பயன்படுத்தும் 5 அடி உயர ஒற்றைக் கம்பு ஏணி, பாதுகாப்புக்காக காலில் அணிந்து கொள்ளும் தளைநார்களுக்கு கூட வரி வசூல் செய்யப்பட்டது. இந்த ஒடுக்கப்பட்ட சாதியினர் தாடி, மீசை வளர்த்தால் அதற்கும் தனி வரி செலுத்த வேண்டும். இதுபோல், வீட்டுக் கூரையை மாற்றினாலும் கூட, கூரை வரி என்ற ஒன்றை கட்ட வேண்டும். "பிராயசித்த வரி" என்ற அதிகாரிகளே நிர்ணயித்த வரி விருப்பம்போல் வசூலிக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட ஆண்களைவிட பெண்கள் இன்னும் அதிகமாக வரிக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். தாலி உள்ளிட்ட நகைகள், ஆடைகள் அணியக் கூட அவர்களிடம் இருந்து வரி வசூலிக்கப்பட்டது. அடிமைகளாக விற்கப்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். 

 அடக்குமுறைக்கு பயந்து மார்பகத்தை திறந்துபோட்டு செல்லும் பெண்கள்...

மேலும்,
  • திருமணம் ஆன தாழ்த்தப்பட்ட பட்டியலில் உள்ள பெண்கள் தாலியை தங்கத்தில் செய்து அணியக் கூடாது. தங்கத்திற்கு பதிலாக பனை ஓலையையே பயன்படுத்த வேண்டும்.

  • இச்சாதியைச் சேர்ந்த பெண்கள் எக்காரணம் கொண்டும் கல்வியறிவு பெறுவதற்காக படிக்கக் கூடாது.

  • இந்த சாதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துச் சுமந்து செல்லக் கூடாது. தலையில்தான் சுமக்க வேண்டும்.

  • இந்த சாதிப் பெண்கள் மார்பகங்களை ஆடை அணிந்து மறைக்கக் கூடாது. இடுப்புக்கு கீழே, கால் முட்டிக்கு மேலே முண்டு போன்ற ஒருவித ஆடை மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். மார்பகங்களை அவர்கள் திறந்து காட்டியபடி செல்வது மரியாதை செலுத்துவதாக ஆதிக்க ஜாதியினரால் கருதப்பட்டது.

  • இந்த சாதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களைத் தலையில் சுமந்து செல்லும் போது, எதிரே மேல் சாதியினர் வந்தால் ஒதுங்கி, நின்று நிதானித்துதான் செல்ல வேண்டும்.

  • 16 முதல் 35 வயது வரையிலான பெண்கள் கட்டாயமாக முலை வரி (மார்பக வரி) செலுத்த வேண்டும். மீறினால், கூந்தலைக் கொண்டே மரங்களில் கட்டி வைத்து அடித்து உதைப்பார்கள். சில நேரங்களில், முலை வரி செலுத்தாத பெண்களை, அவர்களது கூந்தலில் உலக்கையை சுற்றிக் கட்டித் தொங்கவிட்டு, முதுகில் பெரிய கல்லை ஏற்றிக் குனிந்த நிலையில் பல நாட்களாக நிற்க வைத்தனர். இந்த தண்டனைக்கு ஆளான பெண்கள் பலர் இறந்து போவது நிச்சயம். இதுபோக, முலை வரி கட்டாத பெண்களின் மார்பகங்கள் அறுத்தெறியப்பட்டது. 
-இப்படிப்பட்ட கொடூரங்கள் நிறைந்த சூழ்நிலையில்தான், நாஞ்சில் நாட்டுக்கு உட்பட்ட சாஸ்தான் கோவில்விளை (இன்றைய சாமித்தோப்பு) என்ற ஊரில் வாழ்ந்து வந்த, தாழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 18 ஜாதியில் ஒன்றான சாணார் (நாடார்) இனத்தைச் சேர்ந்த பொன்னுமாடன் நாடாருக்கும், வெயிலாள் அம்மையாருக்கும் கி.பி.1809 ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பெருமாளின் அருளால் அக்குழந்தை பிறந்ததாக கருதிய பொன்னுமாடன் தம்பதியர், "முடிசூடும் பெருமாள்" என்று குழந்தைக்கு நாகரீகமான பெயரைச் சூட்டினர். 

"முடிசூடும் பெருமாள்" என்றால் "திருமுடியுடன் விஷ்ணு" என்று பொருள். அக்காலத்தில், தாழ்த்தப்பட்ட சாதியினரில் உள்ள ஒருவர் குழந்தை பெற்றால், அது பற்றிய தகவலை அரசு நிர்வாகப் பதிவேட்டில் பதிவு செய்து, குழந்தைக்குரிய தலை வரியைக் கட்டாயம் செலுத்த வேண்டும். அதனால், பொன்னுமாடனும் தனது மகனின் பெயரை பதிவு செய்யச் சென்றார். குழந்தையின் பெயர் நாகரீகமாக இருப்பதாக கருதிய அரசாங்கத்தினர், அந்த பெயரை பதிவேட்டில் பதிய மறுத்தனர். மாறாக, அவ்வாறு பெயர் வைத்ததற்காக தண்டனைதான் கிடைக்கும் என்றனர். பயந்து போன பொன்னுமாடன் நாடார், தனது குழந்தையின் பெயரை "முத்துக்குட்டி" என்று மாற்றினார். அதன் பின்னரே அவர் குழந்தைக்குரிய தலை வரி செலுத்த அனுமதிக்கப்பட்டார்.

இந்த முத்துக்குட்டிதான், பின்னாளில் மிகப்பெரிய சமூக புரட்சி செய்து, தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட 18 ஜாதியினரையும் தலைநிமிர்ந்து நடக்கச் செய்தார். அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளையும் மீட்டுக் கொடுத்தார். சமூக புரட்சியாளராக திகழ்ந்த அவரே, ஒரு மகானாக மட்டுமின்றி, இறைவனாகவும் கருதப்படுகிறார். அவர் வேறு யாருமில்லை. நிகழ்காலத்தை மட்டுமின்றி எதிர்காலத்தையும் அப்படியே ஆழமாய்ச் சொன்ன அய்யா வைகுண்டர்தான் அவர்.
(தொடரும்...)

(முத்துக்கமலத்தில் வெளியான எனது இந்த படைப்பை காண கீழே கிளிக் செய்யவும்)

Share:

0 கருத்துகள்: