ஞாயிறு, 31 ஜனவரி, 2010

பாரதிக்கு உதவிய பராசக்தி

பாரதிக்கு உதவிய பராசக்தி

பராசக்தி மீது பாரதியார் அந்த அளவுக்கு பக்தி கொண்டிருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அதனால்தான் என்னவோ, பாரதியார் வாழ்வில் பல சுவராஸ்யமான சம்பவங்கள் நடந்தன.

அவற்றில் ஒன்று இந்த சம்பவம் :


பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
பாரதியார் வசித்த வீட்டின் முன்பு, தகர குவளையை வைத்துக்கொண்டு, குதித்தவாறே பாட்டுபாடியபடி ஆடிக்கொண்டிருந்தாள் ஒரு சிறுமி.
அவள், மேல் சட்டையின்றி குட்டைப் பாவாடை மட்டுமே அணிந்திருந்தாள். காலில் சிறிய சலங்கை அணிந்திருந்தாள். கழுத்தில் பாசி மாலைகளும் கிடந்தன. அந்த மாலையில் புலிப்பல்லும், பித்தளை, செப்பு காசுகளும் தொங்கிக் கொண்டிருந்தன. சிறுமியின் தோற்றம் அவளை குறத்தியின் மகள் என்பதை நினைவுப்படுத்தியது.

இவளது ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த பாரதியின் மகளான சிறுமி சகுந்தலா தந்தையை நோக்கி ஓடி வந்தாள்.

"அப்பா! இந்த பொண்ணு சட்டை போடாமல் இருக்கிறாளே ஏன்?" என்று பாரதியாரை நோக்கி கேட்டாள்.

"பாவம்! அவள் ஒரு ஏழை. சட்டை வாங்க பணம் இல்லையோ என்னவோ?" என்று அதற்கு பதில் அளித்தார் பாரதி.

உடனே, வீட்டுக்குள் ஓடிச் சென்ற சகுந்தலா தனது சட்டையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். வீட்டுக்கு வெளியில் ஆடிக்கொண்டிருந்த சிறுமியை நோக்கி சென்றவள், மேலாடையின்றி காணப்பட்ட சிறுமிக்கு அந்த சட்டையை கொடுத்தாள்.

"இந்த சட்டை உனக்குத் தான். நீ போட்டுக்கொள்" என்றாள் சகுந்தலா. அந்த சிறுமியும், இன்னொரு சிறுமியான சகுந்தலா கொடுப்பதை ஆசையுடன் வாங்கிக் கொண்டாள்.

மகளின் இந்த செயலை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் பாரதியார்.
அந்தநேரத்தில், ஒரு தட்டில் சாதத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்டார் பாரதியின் மனைவியான செல்லம்மாள்.

"எங்கே அந்த பிச்சைக்காரி?" என்று பாரதியாரை நோக்கி கேட்டார்.
"அவள் போய்விட்டாள். நாங்கள் தான் அவளுக்கு சட்டை கொடுத்து அனுப்பினோம்" என்று பதில் கூறினார் பாரதியார்.

"சட்டையா? யார் கொடுத்தது? நான் தான் அவளை இருக்கச் சொல்லி குரல் கொடுத்தேனே! அதற்குள் அனுப்பி விட்டீர்களே" என்று கேட்ட செல்லம்மாள், மகள் சகுந்தலாவை பார்த்து அப்போது கொஞ்சம் கடுமையாகவே பேசினார்.

"நாம இருக்கிற இருப்பில் தர்மம் வேறயா? உன் சட்டையை கொடுத்து விட்டாயே. இது உனக்கு நல்லா இருக்கா? பள்ளிக்கூடம் போக சட்டைக்கு என்ன செய்வாய்?" என்று மகளை செல்லமாய் கடிந்து கொண்டார் செல்லம்மாள்.

உடனே, பாரதியாரை நோக்கி திரும்பிய சகுந்தலா, "அப்பா... அம்மா கோபப்படுறாங்களே, நான் செய்தது தப்பா? தர்மம் தலை காக்கும்ன்னு நீங்க தானே சொன்னீங்க?" என்று அப்பாவியாய் கேள்வி கேட்டாள்.

"கவலைப்படாதே கண்ணம்மா! நமக்கு அந்த பராசக்தி ஒன்றுக்கு மூன்றாய் தருவாள். நீ செய்தது தப்பே இல்லை. இல்லாதவர்களுக்கு இருக்கிறவர்கள் கொடுப்பது தான் தர்மம்" என்று மகளைப் பார்த்து வாஞ்சையோடு கூறினார் பாரதியார்.


இதை கவனித்துக் கொண்டிருந்த செல்லம்மாள், "எப்படியோ போங்க; அப்பாவுக்கு ஏத்த பொண்ணு. அப்படியே அப்பாவின் குணத்தை உறிச்சுட்டு பொறந்திருக்கா..." என்று அலுத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.
தனது உயிரினும் மேலாக பராசக்தியை கருதினார் பாரதியார். அதனால், தான் ஒன்றுக்கு மூன்றாய் தருவாள் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

உண்மையில் அந்த நம்பிக்கை பொய்த்துவிடவில்லை. பாரதி கூறியபடியே, ஒரு சட்டை தானமாக கொடுக்கப்போய் மூன்று சட்டை சகுந்தலாவை தேடி வந்தது.

ஆம்! மறுநாள் சிறுமி சகுந்தலாவுக்கு பிறந்த நாள்.

பாரதியின் உறவினர் ஒருவர் அவளுக்காக மூன்று சட்டைகள் வாங்கிக் கொண்டு வந்தார்.
Share:

ஐம்பதிலும் காதல் வரும்...


னித வாழ்க்கையில் மிக மிக அழகான விஷயங்களுள் ஒன்று காதல். அழகான மனம் இருந்தால் போதும், அழகான ரசனை இருந்தால் போதும், காதல் தானாக வந்து எட்டிப் பார்த்து விடும்.

பஞ்சையும், தீக்குச்சியையும் அருகருகே வைக்கக்கூடாது என்பார்கள். அவை அருகில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் தீப்பற்றிக் கொள்ளும் விபத்து ஏற்படலாம். அதுபோன்று, இரு மனங்கள் மோதி விபத்துக்குள்ளாவதால் ஏற்படும் பாதிப்பு தான் காதல்.

பதினெட்டு வயதில் தான் ஒருவருக்கு காதல் வரவேண்டும் என்று கிடையாது. ஐம்பதிலும் காதல் வரலாம். ஏன் நூறு வயதை கடந்தாலும் அங்கே ஆத்மார்த்தமான, அனுபவப்பூர்வமான உண்மையான காதலை&பாசத்தை நாம் பார்க்கலாம்.

சில தம்பதியரை பார்த்தால் அவர்களது உண்மையான வயதை எளிதில் மதிப்பிட்டுவிட முடியாது. அந்த அளவுக்கு இளமையாக இருப்பார்கள். இன்னும் சில தம்பதியர் இருக்கிறார்கள். வயது குறைவாகத் தான் இருக்கும். ஆனால் தோற்றத்தில் ஐம்பதை கடந்தவர்கள் போல் தோன்றுவார்கள். ஏன் பிறந்தோம் என்பதுபோல் அவர்களது முகபாவனைகள் இருக்கும்.

இந்த வேறுபாடுகளுக்கு காரணம் என்ன? எல்லாம் மனம் தான்.

நான் இளமையாக இருக்கிறேன், சந்தோஷமாக இருக்கிறேன் என்று உங்கள் மனம் எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தால் நீங்கள் இளமையாக-சந்தோஷமாகத் தான் எப்போதும் இருப்பீர்கள். என்ன வாழ்க்கை இது? எதைச் செய்தாலும் நேர்எதிராகி விடுகிறதே என்று எண்ணினால் அது தான் மிஞ்சும்.

உங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதன்படி தான் நீங்கள் நடந்து கொள்வீர்கள். உங்கள் மனம் ஆரோக்கியமாக இருந்தால் நீங்களும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். மனதிற்கு ஒரு நோய் என்றால் அது உங்களுக்கும் தான்.

அன்பை வெளிப்படுத்த வயது ஒரு தடையே அல்ல. ஐந்து வயது குழந்தையிடம் நாம் வெளிப்படுத்தும் எதிர்பார்ப்பற்ற அன்புக்கும், பதினெட்டு வயதில் வெளிப்படுத்தும் இனம்புரியாத அன்புக்கும், ஐம்பது வயதில் ஆதரவான அரவணைப்பை தேடும் அன்புக்கும் வித்தியாசங்கள் இருந்தாலும் எண்ணங்கள் என்பது ஒன்று தான்.

அன்பை பரிமாறிக்கொள்ள வயது ஒரு தடையே கிடையாது. இளம் தம்பதியர் வாழ்வில் கணவன் ஆனவன் மனைவியிடம் பாசத்தை பொழிவது ஆரம்பத்தில் அதிகமாக இருக்கும். சிலர் மனைவியை தாங்கு தாங்கு என்று தாங்குவார்கள். திருமணம் ஆன புதிதில் இது நிறையவே இருக்கும்.

இதனால் தான் ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள் என்கிறார்கள். இந்த காலக்கட்டத்தில் மனைவி என்ன சொன்னாலும் கணவன் ஆனவன் கேட்பான். காரணம், சூழ்நிலைகள் அப்படி. சில முதல் பல ஆண்டுகளாக இல்லற வாழ்க்கை பற்றி கனவு கண்ட அவன் மனம், அப்போது அதை அடைந்துவிட்ட உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கும். அந்த சூழ்நிலையில் மனைவி எதை சொன்னாலும் அவனுக்கு வேதவாக்காக இருக்கும்.

எல்லோரையும் இப்படிப்பட்டவர்கள் தான் என்று சொல்லிவிட முடியாது. இளம் வயதிலேயே அனுபவ அறிவை வளர்த்துக் கொண்டவர்கள் எப்போதும் நிதானம் தவறி போய்விட மாட்டார்கள்.

இல்லற வாழ்வின் ஆரம்பத்தில் இனிக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் காலங்கள் நகர, நகர கசக்கத் தொடங்கிவிடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. காரணம், அப்போது அன்பு பற்றாக்குறை ஏற்படுவது தான்.

மனைவி வந்த புதிதில் அவளுக்கு அடிக்கடி மல்லிகைப்பூ வாங்கிக்கொடுத்து அசத்துபவர்கள், குழந்தைகள் பிறந்து ஆளான பிறகு, மல்லிகைப் பூவையே மறந்து விடுகிறார்கள். தெருவில் செல்லும்போது, பூ வாங்கலீயா... பூ வியாபாரி கூவும் திசை நோக்கி திரும்பும்போது தான் மலரும் நினைவுகளாக இளமைக்காலம் சற்று கண்முன் நிழலாடிவிட்டு மறையும். அன்று அப்படி இருந்த நானா, இன்று இப்படி மாறிவிட்டேன் என்ற யோசிக்க கூட அவர்களுக்கு அப்போது நேரம் இருக்காது. காரணம், இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கும் பரபர வாழ்க்கை தான்.

நீங்களும் ஐம்பது வயதிலும் மன அளவில் இளமையாய் இருக்கலாம். அதற்காக, ஒவ்வொரு மனைவியரும் தங்கள் கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி இங்கே பார்ப்போம் :

* உங்கள் கணவர் அலுவலகத்தில் பணிபுரிபவர் என்றாலும் சரி, சுயதொழில் செய்பவர் என்றாலும் சரி எப்படியும் டென்ஷன் இருக்கும். செய்யும் தொழிலை பொறுத்து டென்ஷன் குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கலாம். அதை வீட்டிலும் அவர் வெளிப்படுத்தலாம். அதனால், முடிந்தவரை கணவரை டென்ஷன் ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவர் டென்ஷனோடு வந்தால் அதை குறைக்கும் வகையில் இதமாக பேசுங்கள். ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லுங்கள். டென்ஷனின் வேகம் தணியும். பிரச்சினைகளுக்கு தீர்வும் கிடைக்கும்.

* சில பெண்கள் 40 வயதை தாண்டினாலே எல்லாம் முடிந்துவிட்டது என்று எண்ணிவிடுகிறார்கள். ஆடை விஷயத்திலும் அலங்காரத்தை தவிர்த்து எளிமைக்கு மாறிவிடுகிறார்கள். இந்த தோற்றத்தில் உங்களை உங்களவர் பார்க்கும்போது, நமது மனைவிக்கு வயது ஆகிவிட்டதோ என்று தான் தோன்றும். ஆள் பாதி, ஆடை மீதி என்பதை எல்லா பெண்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். முடிந்தவரை, இளமையான தோற்றத்தை தரக்கூடிய ஆடைகளையே அணியுங்கள். அதற்காக, காஸ்ட்லியான ஆடை தான் அணிய வேண்டும் என்பது இல்லை. சிம்பிளான ஆடையிலும்கூட நீங்கள் Ôயூத்Õ ஆக மின்னலாம். எல்லாம் உங்கள் பக்குவம் தான். நீங்கள் அந்த பக்குவத்தோடு நீங்கள் ஆடை அணிந்தால் கணவனை எளிதில் உங்கள் வசப்படுத்தலாம். திருமணம் ஆன புதிதில் எப்படியெல்லாம் உங்களை வர்ணித்தாரோ, அதே அளவுக்கு இல்லாவிட்டாலும் ஏறக்குறைய அதை நெருங்கும் அளவுக்கு உங்களை வர்ணித்து மகிழ்ச்சிப்படுத்தவார்.

* யாராக இருந்தாலும் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கத் தான் செய்யும். இரவில் படுக்கைக்கு செல்லும்போது அதுபற்றி மூச்சு விட்டுவிடாதீர்கள். படுக்க தயாராகும் முன் மனதை அமைதிப்படுத்துவது அவசியம். அதனால் படுக்கையறையில் கணவன் முன்பு பிரச்சினைகளை கொட்டாமல் இருப்பது தான் நல்லது.

* உங்கள் கணவர் பிறந்த நாள், உங்கள் திருமண நாள் போன்றவற்றை உங்கள் கணவர் மறந்திருந்தாலும், அதை சஸ்பென்சாக வைத்து, அந்த நாளில் அவருக்கு ஆச்சரியத்தக்க பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுங்கள். உங்கள் கணவர் விரும்பும் பரிசாக அது இருந்தால் இன்னும் நல்லது.

* உங்கள் கணவரது பெற்றோர், அதாவது உங்கள் மாமனார்-மாமியார் உங்களுடன் வசித்தால், அவர்களை அடுத்தவரது பெற்றோர் என்று எண்ணாமல் உங்கள் பெற்றோர் போலவே எண்ணிப் பாருங்கள், உபசரியுங்கள். இதை பார்க்கும் உங்கள் கணவர், என் மனைவி போல் எந்த பெண்ணும் இருக்க மாட்டாள் என்று புளங்காகிதம் கொள்வார்.

* பசி வந்தால் பத்தும் பறந்து போய்விடும் என்பார்கள். அப்படிப்பட்ட பசியை போக்குவதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பசியோடு வரும் கணவனுக்கு, அவரது வாய்க்கு ருசியாக, விதவிதமாக உணவு வகைகளை தயார் செய்து பரிமாறுவது கணவர் மனதில் உங்கள் மீதான மதிப்பை அதிகரிக்கச் செய்யும்.

* எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். உங்கள் கணவர் என்னென்ன எதிர்பார்க்கிறாரோ, அவற்றை எல்லாம் தெரிந்து, முடிந்தவரை அவர்களை நிவர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள். நீங்கள் அவரை எல்லா செயல்களாலும் மகிழ்ச்சிப்படுத்தும்போது, அவர் நிச்சயம் உங்களையும் மகிழ்ச்சிப்படுத்துவார்.

- இப்படியெல்லாம் நீங்கள் இருந்தாலும், உங்களவருக்கு 50 வயது ஆனாலும் ஐ லவ் யூ சொல்லத் தானே செய்வார்..?
Share:

செவ்வாய், 12 ஜனவரி, 2010

சுகப்பிரசவத்திற்கு தியானம் செய்யுங்கள்

தியானத்தின் அவசியம் இப்போது உலகம் முழுவதும் உள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மனப்பக்குவம் பெற்ற எல்லோருமே தியானம் செய்யலாம். கர்ப்பிணிகள் தியானம் செய்தால், குழந்தை பிறப்பு பற்றிய பயம் விலகும். பதற்றம் குறையும. மனநெருக்கடி விட்டுவிலகும். கத்தியின்றி, அதனால் ஏற்படும் ரத்தமின்றி சுகப்பிரசவம் நிகழும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

வெளிநாடுகளில், பிரசவிக்க தயாராக இருக்கும் பெண்களை தண்ணீருக்குள் அமரச் செய்து தியானச் சிகிச்சை அளிக்கிறார்கள். இதை மெடிடேசன் தெரபி என்கிறார்கள்.

இந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் கர்ப்பிணிப் பெண்ணை, தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டிக்குள் சாய்ந்து படுக்குமாறு செய்கிறார்கள். தொடர்ந்து, அந்த பெண்ணை, கண்ணை மூடும்படி கூறிவிட்டு, அவருக்கு லேசாக மசாஜ் செய்கிறார்கள்.

இதுபற்றி அந்த டாக்டர்கள் கூறும்போது, "இந்த மெடிடேசன் தெரபியால் கர்ப்பிணி பெண்களின், பிரசவம் பற்றிய பயம் விலகுகிறது. அந்த பிரசவத்தை சுகமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெறுகிறார்கள். மேலும், அதுபற்றிய டென்ஷனும் விலகிவிடுகிறது. அதனால், அவர்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்புகள் மிகவும் அதிகரிக்கிறது. ஏன்... 100 சதவீதம் சுகப்பிரசவம் நிகழும் என்றுகூட கூறலாம்" என்கின்றனர்.

நம் நாட்டில் இந்த அளவுக்கு கர்ப்பிணிப் பெண்களுக்கான தியானம் பிரபலம் ஆகாவிட்டாலும்கூட, சம்பந்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் வீடுகளிலேயே தியானம் செய்யலாம். தண்ணீர் தொட்டிக்குள் அமர்ந்துதான் அதைச் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. அந்த வாய்ப்பு இருந்தால், அதை பயன்படுத்திக் கொள்வதிலும் தவறில்லை.

மன அமைதி தரும் இடமாக இருந்தாலே, அந்த இடத்தை தியானம் செய்ய தேர்வு செய்யலாம். ஏன்... கடற்கரையில் அமர்ந்து, இயற்கையான சுத்தமான காற்றை சுவாசித்தபடி தியானம் செய்வதுகூட மிகச்சிறந்த பலனை கொடுக்கும்.

அதுசரி... தியானம் செய்வது எப்படி இன்று கேட்கிறீர்களா?

அதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே கிளிக் செய்யுங்கள்....

தியானம் செய்யுங்கள்... சூப்பர் ஸ்டார் ஆகுங்கள்..

Share:

தியானம் செய்வது எப்படி?


ந்த மலைப் பகுதியில் இயற்கையின் செழிப்பு நிறையவே காணப்பட்டது. அத்தனை மரம், செடி, கொடிகளும் பசுமையாய் மலர்ந்திருந்தன.
நான்கு கால் விலங்குகளின் நடமாட்டம் குறைவாக காணப்பட்ட அந்த இடத்தில், சின்னச் சின்ன பறவைகள் நிறையவே நிறைந்திருந்தன. அவற்றின் கீச்சொலிகளே அதை உறுதிப்படுத்தின.

இப்படிப்பட்ட அந்த கானகத்தில், மலையடிவாரத்தின் ஒரு பகுதியில் இருந்தது அந்த குகை. அந்த இடத்திற்கு வந்த 3 ஞானிகள் அதை தியானம் செய்யும் இடத்திற்காக தேர்ந்தெடுத்தனர்.

குகையின் உள்ளே தகுதியான இடத்தை தேர்வு செய்து மூன்று பேரும் அமர்ந்தனர். கண்களை மூடி தியானத்தில் மூழ்கினர். உணவை, தூக்கத்தை மறந்தனர்.

குகையின் வெளிப்பகுதியில் குதிரை ஓடும் சத்தம் கேட்டது. அந்த குதிரை ஒரு மனிதனின் பிடியில் இருப்பது 3 ஞானிகளுக்கும் தெரிந்தது.
அடுத்த ஓரிரு நொடிகளில் அந்த குதிரையோடு மனிதன் குகையை வேகமாக கடந்து சென்றான்.

மூன்று ஞானிகளும் எந்தவித சலனமும் இல்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தனர்.

12 வருடங்கள் கழிந்தது...

3 ஞானிகளில் ஒருவர் சொன்னார்; "அந்த குதிரை வெள்ளை நிறம்" என்று நினைக்கிறேன்.

அதன்பிறகு அங்கே முழு அமைதி. பதிலுக்கு மற்ற இரு துறவிகள் வாயைத் திறக்கவில்லை.

மீண்டும் 12 வருடங்கள் கழிந்தது...

இரண்டாவது இருந்த ஞானி சொன்னார்; "இல்லை... இல்லை... அந்த குதிரை வெள்ளை நிறம் கொண்டது இல்லை. அது கருப்பு குதிரை!"

மீண்டும் அங்கே அமைதி. மற்ற துறவிகள் வாயைத் திறக்கவில்லை.

மறுபடியும் 12 வருடங்கள் வேகமாக ஓடின.

அப்போது மூன்றாவது ஞானி சொன்னார்; "இப்படி நீங்கள் இடைவிடாமல் பேசினீர்கள் என்றால் எப்படி தியானம் செய்ய முயும்? நான் இங்கே இருக்கவா அல்லது போய்விடவாவா?”

- கண்களை மூடினால் மாத்திரம் தியானம் வந்துவிடுவதில்லை. மனம் அமைதியாக இருந்தால்தான் தியானம் வரும் என்பதை அழகாக கூறுகிறது இந்த கதை.

மேற்படி சம்பவம் உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை என்று நாம் கருதினாலும்கூட, மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்தால் நம்மை மறக்கலாம்; மணிக்கணக்கில் பேரானந்தம் என்னும் இன்ப வெள்ளத்தில் மிதந்து திளைக்கலாம் என்பதை நாம் உணரலாம்.

வேதாத்திரி மகரிஷிகூட தியானம் எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றி அழகாகச் சொல்கிறார்...

“தியானம் செய்ய உட்கார்ந்து விட்டு, ‘என்ன... எனக்கு இன்னும் தியானம் வரவில்லை..? தியானம் எப்படி இருக்கும்?‘ என்று தொடர்ந்து மனம் எண்ணிக் கொண்டிருந்தால் தியானம் வராது. தியானம் செய்ய அமரும்போதே, ‘நான் அடுத்த 10 அல்லது 20 நிமிடங்களுக்கு எதைப் பற்றியும் எண்ண மாட்டேன்‘ என்று மனதில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
தியானம் செய்ய அமர்ந்தவுடன் மனம் ஏகப்பட்ட எண்ணங்களை அவிழ்த்துவிடும். அப்போது ‘நாம் தியானத்தில் இருக்கிறோம்‘ என்ற உணர்வுடன், அந்த எண்ணங்களுடன் கலந்து நம்மை மறந்து பின் செல்லாமல், அந்த எண்ணங்களை சற்று விலகி நின்று உற்று பார்க்க வேண்டும். இதற்குதான் நமது விழிப்புணர்வு உதவுகிறது.

விழிப்புணர்வின் ஆற்றல் அதிகமாக உள்ளவர்களுக்கு எண்ணங்களை அவற்றுடன் ஒட்டாமல் விலகி நின்று பார்ப்பது எளிதாகிறது. அப்படி பார்க்க, பார்க்க... எண்ணங்கள் மெதுவாக தங்கள் வலுவை இழக்கின்றன. எண்ணங்கள் மெதுவாக அடங்குகின்றன. அப்படி எண்ணங்கள் அற்ற நிலையில் தான் தியானத் தன்மை உண்டாகிறது” என்கிறார் மகரிஷி.
ஆனால், நம்மில் பலருக்கு தியானம் செய்யவே நேரமில்லை.

பணம்... பணம்... பணம் மாத்திரமே என்றாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில், மனித சமுதாயம் அந்த பணத்தை தேடித்தான் பயணிக்கிறது. அதனால்தான், காலையில் கண் விழித்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும்வரை டென்ஷன்... டென்ஷன்... என்று தவிக்கிறார்கள்.

அப்படி, வாழ்க்கையே டென்ஷனாகி, மன அமைதிக்கான வழி தெரியாதவர்கள் எங்கே அமைதி என்று கோவில் கோவிலாக அழைகிறார்கள். அங்கேயும் அமைதி கிடைக்கவில்லை என்றால், தியானம் செய்தால் அமைதி வந்துவிடும் என்று சொல்கிறார்களே... என்று கேட்டு, தியானம் கற்றுக்கொடுக்கும் இடங்களை நோக்கி படையெடுக்கிறார்கள்.

அதன்விளைவு... பணம் கொடுதத்து தியானத்தை கற்றுக்கொள்ள வேண்டிய அவல நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால், உங்களுக்கு அந்த கவலை தேவையில்லை.

மனதை ஒருமுகப்படுத்தினாலே தியானத்தை எளிதில் கற்றுக் கொள்ள லாம். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

1. முதலில் மிகவும் அமைதியான இடத்தை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு பிடித்தமான - மன அமைதியைத் தரக்கூடிய இடமாக அது இருக்க வேண்டும். பூஜையறையாகக்கூட இருக்கலாம்.

2. நீங்கள் அணிந்திருக்கும் ஆடையும் தியானத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. அணிந்திருக்கும் ஆடையானது மிகவும் இறுக்கமானதாக - குறிப்பாக ஜீன்ஸ் பேண்ட் - இருக்கக்கூடாது. சற்று தளர்வான ஆடையே இதற்கு பொருந்தும்.

3. தியானம் செய்வதற்கு ஏற்ற நேரத்தை தேர்வு செய்வதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அந்த நேரம் காலைப் பொழுதாகவோ அல்லது மாலை நேரமாகவோ இருப்பது மிகவும் நல்லது. அந்த நேரங்களில் மனதை ஒருமுகப்படுத்துவது எளிது.

4. அடுத்ததாக தியானம் செய்ய தேர்வு செய்த இடத்தில் அமர்ந்து விடுங்கள். தரையில் மென்மையான துணி விரிப்பை விரித்து, அதன்மீது அமருங்கள். மார்பை நிமிர்த்துக் கொண்டுதான் தியானம் செய்ய வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு சவுகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.

5. தொடர்ந்து, கண்களை மூடி தியானம் செய்ய ஆரம்பியுங்கள். உங்கள் இரு புருவங்களுக்கு மத்தியில் உங்களது இஷ்ட தெய்வத்தை அல்லது இஷ்ட உருவத்தை நிறுத்துங்கள். அந்த உருவத்தையே உங்கள் மனக் கண்களால் உற்றுப்பாருங்கள். அந்த உருவத்தின் மீது மட்டும்தான் உங்கள் கவனம் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இது கஷ்டமாகத் தெரிந்தாலும், போகப்போக சரியாகிவிடும் என்பதால் பதற்றப்படாமல் இருங்கள். நேரம் செல்ல செல்ல அந்த உருவத்திற்குள்ளேயே தொலைந்து போங்கள். அதாவது, அந்த உருவத்திற்குள் நீங்கள் கலந்துவிட்டதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அருகில் என்ன நடக்கிறது என்பதை கேட்கவோ, கவனிக்கவோ இடம் தர வேண்டாம்.

6. இப்போது நீங்கள் அந்த உருவத்திற்குள் தொலைந்து போய்விட்டீர்கள், அதாவது ஒன்றிப்போய்விட்டீர்கள். அப்போது, உங்களை அறியாமலேயே ஒரு பரவச நிலை ஏற்படும். மகான்கள் இதை சமாதி நிலை என்கிறார்கள். உதாரணம் : இரவில் உறங்கும்போது நம் மனம் எங்கேயெல்லாமோ சென்றுவிட்டு வருகிறதே, அதுபோன்ற உணர்வு நிலை இது. உங்கள் உடல் முழுவதும் ஆனந்த வெள்ளம் - பரவசம் பரவி ஓடும். எங்கோ பறப்பதுபோல் உணர்வீர்கள்.

7. உங்கள் மனம் அந்த பரவத்திலேயே தொடர்ந்து லயித்துப்போனால், நீங்கள் தியானம் செய்யும் அளவு அதிகமாகும். ஒரு மணி நேரத்தை கடந்தும்கூட தியானம் செய்து கொண்டிருப்பீர்கள். நேரம் சென்றதே உங்களுக்குத் தெரியாது.

8. குறிப்பிட்ட கால அளவுக்குள் உங்கள் தியானத்தை நிறைவு செய்யுங்கள். இப்போதும் உங்களுக்குள் அந்த பரவச உணர்வு இருப்பதை உணர்வீர்கள். சுறுசுறுப்பு அதிகமாக காணப்படும். சினிமா படங்களில் நடிகை சிநேகா சிரிப்பாங்களே, அதுபோன்ற புன்னகை உங்கள் முகத்தில் தவழும்.

9. அப்புறம் என்ன...? நீங்கள் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பிப்பீர்கள். எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றியில் முடியும்.

10. தியானத்தை ஒருவர் தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் அவருக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. எதையும் எதிர்கொள்ளும் திறன் வளர்கிறது. எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெறுகிறது. இவை எல்லாம் கிடைத்துவிட்டால், வெற்றி மீது வெற்றி வந்து குவியத்தானே செய்யும்?

பின்குறிப்பு : மனப்பக்குவம் பெற்ற எல்லோருமே தியானம் செய்யலாம். கர்ப்பிணிகள் தியானம் செய்தால், குழந்தை பிறப்பு பற்றிய பயம் விலகும், பதற்றம் குறையும், மனநெருக்கடி விட்டுவிலகும், கத்தியின்றி - அதனால் ஏற்படும் ரத்தமின்றி சுகப்பிரசவம் நிகழும்.


அதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே கிளிக் செய்யுங்கள்....

சுகப்பிரசவத்திற்கு தியானம் செய்யுங்கள்

Share:

கந்த சஷ்டி கவசம்


காப்பு
துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.


நூல்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் முருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக

ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விபச சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென

வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யளி சௌவும் உயிரைங் கிலியும்

கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியளி யவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்பரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றூந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

இறுதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா


பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலால் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக

அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமுந்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதும் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய


ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
திசைமன்ன ரண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளும் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேன பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!

கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவாய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!
Share: