சனி, 20 பிப்ரவரி, 2010

கலர்புல் கொண்டாட்டம்!



ந்துக்கள் கொண்டாடும் கலர்புல் திருவிழா ஹோலி. இந்தியாவின் வட மாநிலத்தை சேர்ந்தவர்களே இந்த திருவிழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கிறார்கள். பனி காலத்திற்கு விடையளித்து, வசந்த காலத்திற்கு வழிவிடும் விதத்தில் இந்த விழா அமைகிறது.

கிருஷ்ண பகவான், தனது இளம் வயதில் கோபியர்களுடன் ஆடிய விளையாட்டை நினைவுபடுத்தும் வகையிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

தீராத விளையாட்டு பிள்ளையான கிருஷ்ணர், தனது அன்னை யசோதாவிடம், "ராதை அழகாக இருக்கிறாள். நான் மட்டும் ஏன் கருமையாக இருக்கிறேன்?" என்று கேட்டார். அதற்கு யசோதா, "ராதையின் நிறம் மீது உனக்கு பொறாமை இருந்தால் அவள் மீது வர்ணங்களைப் பூசு. அவ்வாறு பூசினால் அவளும் உன்னைப் போன்ற கருமையான நிறத்தில் காட்சியளிப்பாள்" என்று பதிலளித்தார். அதன்படி, கிருஷ்ணரும் ராதை மீது வர்ணங்களை அள்ளிப்பூசினார்.

இப்போதைய ஹோலிப்பண்டிகை கொண்டாட்டத்தின்போதும், வண்ணப் பொடிகளை இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வீசியும், பூசியும், வண்ண நீரை பீய்ச்சியடித்தும் மகிழ்கிறார்கள்.

இந்த பண்டிகை கொண்டாட்டத்துக்கு காரணமாக இரணியன் கதையையும் சொல்கிறார்கள்.

இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுளாக வணங்க வேண்டும் என்று எண்ணினான். ஆனால், அவனது மகனான பிரகலாதனோ, மகாவிஷ்ணுவே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். கோபம் கொண்ட இரணியன், மகன் என்றும் பார்க்காமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே பூஜிக்கும்படி வற்புறுத்தினான்.

இதற்கு தீர்வு காண நினைத்த இரணியன், தனது சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான். ஹோலிகா, நெருப்பினால் எரியாத சக்தி கொண்டவள். அவளிடம் தனது மகனை அழிக்கும் பணியை ஒப்படைத்தான்.

அதன்படி, பிரகலாதனை தூக்கிக்கொண்டு நெருப்புக்குள் புகுந்தாள் ஹோலிகா. அந்த நெருப்பில் தனது மகன் இறந்து விடுவான் என்று கணக்கு போட்டான் இரணியன். ஆனால் நடந்ததோ வேறு.


மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் இருந்த பிரகலாதனை நெருப்பு ஒன்றும் செய்யவில்லை. ஆனால், தீய எண்ணத்துடன் தீக்குள் நுழைந்த ஹோலிகா எரிந்து சாம்பலானாள்.

இதை நினைவுபடுத்தும் வகையில் ஹோலி பண்டிகை அன்று திறந்தவெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வதும் உண்டு. இவ்வாறு ஹோலிகா அழிந்த தினமே ஹோலி பண்டிகையாக மாறிவிட்டது என்கிறது அந்த புராணக்கதை.

காமன் விழா :
மன்மதன்

தமிழ்நாட்டில் காமதேவனது உன்னதத் தியாகத்தை வியந்து போற்றும் வழிபாட்டு நிகழ்வாக ஹோலிப் பண்டிகை கருதப்படுகிறது.

ஒருசமயம் பார்வதி தேவி தட்சனுக்கு மகளாகப் பிறந்து தாட்சாயிணி எனப் பெயர் பெற்றாள். பின்னர் தவம் செய்து ஈசனை அடைந்தாள்.

இந்நிலையில், தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். அதற்கு தேவர்கள் அனைவரையும் அழைத்தான். ஆனால் தன் மாப்பிள்ளையான சிவபெருமானை அழைக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட  தாட்சாயிணி, தன் தந்தை யாகம் நடத்தும் இடத்திற்குச் சென்று நியாயம் கேட்டாள். தட்சன் சிவபெருமானை அவமரியாதையாகப் பேசியதால், அந்த யாகத் தீயில் விழுந்து உயிர்விட்டாள்.

அதற்குப்பின் பல நிகழ்வுகள் நடந்தன. சிவபெருமானின் அருளால் மலை அரசனான பர்வதராஜனின் மகளாகப் பார்வதி என்ற  பெயரில் மீண்டும் பிறந்து, ஐந்தாவது வயதில் சிவபெருமானை நோக்கித் தவம் செய்தாள் பார்வதி.

காலம் கடந்தது. தன் மனைவியைப் பிரிந்த ஏக்கத்தில் சிவபெருமான் தியானத்தில் அமர்ந்திருந்தார்.  அதனால் உலகில் உயிர்களின் பிறப்பு இல்லாமல் போனது. இதனால் தேவர்கள்  பிரம்மாவின் தலைமையில் திருமாலிடம் சென்று, உலகின் உயிர்களின் நிலை பற்றிச் சொன்னார்கள். அதைக் கேட்ட திருமால், சிவபெருமானின் தியானத்தை கலைக்கத் தகுந்தவன் காமன் எனப்படும் மன்மதனே என்று உணர்ந்து,  அவனை அழைத்தார். சிவபெருமானின் தியானத்தைக் கலைக்கும்படி கூறினார்.

திருமாலின் கட்டளைப்படி மன்மதன் தன் மனைவி ரதியுடன் சிவபெருமான் தியானம்  செய்யும் இடம் நோக்கிச் சென்றான். காதல் நினைவாக இருத்தல், அதனை எண்ணிப்  புலம்பல், சோகம், மோகம், மரணம் ஆகியவற்றைக் குறிக்கும் முறையே தாமரை, அசோகு, முல்லை,  மா, நீலம் எனும் ஐந்து மலர்களையும் அம்பாகக் கொண்டு, கரும்பை வில்லாக வளைத்து  சிவபெருமான்மீது தொடுத்தான் மன்மதன்.

மலர் அம்பால் தாக்கப்பட்ட சிவபெருமானின் தியானம் கலைந்தது. தன் தியானத்தைக் கலைத்தது யார்? என்று கோபத்துடன் சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறக்க... அடுத்த நிமிடமே மன்மதன் எரிந்து சாம்பலானான்.

அருகில் இருந்த  ரதி, அதனைக் கண்டு துடிதுடித்தாள். சிவபெருமானிடம் சென்று தன் கணவனை மீண்டும் உயிர் பெறச் செய்மாறு மன்றாடினாள். ரதியின் நிலை அறிந்து, மனமிரங்கிய சிவபெருமான், "நான் பார்வதியைத் திருமணம் செய்து கொண்டபின் உன் கணவன் உயிர்பெற்று எழுவான். ஆனால், உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான்; மற்றவர்களுக்குத் தெரிய மாட்டான்' என்று வரம் அருளினார்.

இந்த சம்பவத்தின்படி சிவபெருமான், காமனை எரித்த இடம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருக்குறுங்கை ஆகும். இங்கு காமதகன விழா ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவில் நடைபெறுகிறது. இங்குள்ள குளத்தின் அடிப்பகுதியில் சாம்பல் மயமாக இருப்பதை இன்றும் நாம் பார்க்கலாம்.

திருக்குறுங்கை கிராமத்தைச் சுற்றி சில கிராமங்கள் இந்த வரலாற்றின் அடிப்படையில்  பெயர்களைக் கொண்டுள்ளன. சிவபெருமான் மீது மலர் அம்பினை ஏவ மன்மதன் கங்கணம்  செய்துகொண்ட இடம் "கங்கணநல்லூர்" என்றும், அவர் தன் கால்களை வளைத்து குறி பார்த்த இடம் "கால்விளை" என்றும், வில் ஏந்திய இடம் "வில்லியநல்லூர்" என்றும் அழைக்கப்படுகின்றன.

ஹோலி கொண்டாட்டம் ...

Share:

கரு வளையம் உங்களை உறுத்துதா?



உங்களை பளிச்சென்று காட்டுவது முகஅழகு தான். அந்த முகத்தில் வசீகரமான அழகை தருவது கண்கள் தான். இதனால் தான் மீன் போன்ற கண்கள் கொண்ட பெண்களை ‘மீன் விழியாள்‘ என்றும், கூரான அம்பு போன்ற கண்களை கொண்டவர்களை ‘வேல் விழியாள்‘ என்றும் சொல்வார்கள்.

சில பெண்களுக்கு அந்த கண்களே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்துவிடுவது உண்டு. கண் குறைபாட்டை நாம் இங்கே சொல்லவரவில்லை. அழகான கண்ணை சுற்றிலும் திடீரென்று தோன்று கருவளையத்தை தான் சொல்ல வருகிறோம்.


கண்களுக்கு கீழ் நோக்கினால் இந்த கருவளையத்தை கண்டுபிடித்து விடலாம். அந்த இடத்தில், சுமார் அரை அங்குலம் அகலத்திற்கு லேசான கருப்பு நிறத்தில் வில் போன்ற வளைவாக சருமம் காணப்படும். இது ஒரு பெண்ணின் அழகையே கெடுத்துவிடும்.

இந்த கருவளையம் ஏற்பட பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முதல் காரணம், அந்த இடத்தில் தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து காணப்படுவது தான். அந்த சுருக்கமே கருப்பு நிறமாக மாறி, கருவளையத்தை ஏற்படுத்தி விடுகிறது.

போஷாக்கு இல்லாத உணவு வகைகளை உண்பதுகூட இதற்கு காரணமாக அமையலாம். தோலை வெளுப்படையச் செய்யும் தாது உப்புகளும், புரதமும், கொழுப்புச்சத்தும் உள்ள உணவு பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் இந்த கருவளையம் நாளடைவில் மறைந்துவிடும்.

கண்களுக்கு அதிக வேலை கொடுத்தாலும் கருவளையம் வரலாம். அதாவது, அதிக நேரம் கண் விழித்து படிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது டி.வி. பார்த்து வந்தாலோ கருவளையம் தோன்றலாம். நீண்டகாலம் உடல்நலக்குறைவாக இருப்பதும், உணவு கட்டுப்பாட்டில் இருப்பதும்கூட இதற்கு காரணமாக அமையலாம்.


சில பெண்கள் என்ன வேலையாக இருந்தாலும் இழுத்துப்போட்டுக்கொண்டு தாங்களே செய்வார்கள். வேலையை கொஞ்சமாவது பகிர்ந்து கொள்வோம் என்று எண்ண மாட்டார்கள். இப்படி எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு பார்த்தாலும்கூட கருவளையம் வந்துவிடும். அதாவது, அதிகப்படியான வேலையை தொடர்ந்து செய்யும்போது அதிகப்படியான சோர்வு ஏற்பட்டு, ஏற்பட்டு இக்குறைபாடு வந்துவிடும்.

ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்களுக்கும்கூட கண்ணில் கருவளையம் வரலாம்.
சரி... வந்த கருவளையத்தை எப்படி போக்கலாம் என்று கேட்கிறீர்களா? இதற்காக ரொம்பவும் ரிஸ்க் எடுக்க வேண்டாம். அன்றாட சமையலில் கொஞ்சம் அக்கறை காட்டினாலே போதும்.

கண்ணில் உள்ள கருவளையத்தை நீக்க இரும்புச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகளை அதிகம் உண்ண வேண்டும். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, முள்ளங்கி, சின்ன வெங்காயம், பூண்டு, அவரைக்கீரை, ஆப்பிள், நெல்லிக்காய், விளாம்பழம், நாவல்பழம், கமலா ஆரஞ்சு, வாழைப்பழம், வெள்ளரிப்பழம், பாகற்காய், வாழைத்தண்டு போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. பொன்னாங்கன்னி கீரை கூட இதற்கு நல்லது தான்.

இந்த காய்கறிகளை சமையலில் அதிகம் பயன்படுத்தினாலே நாளடைவில் கருவளையத்தின் பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம். அழகான கண்களுக்கு சொந்தக்காரி ஆகிவிடலாம்.

கருவளையம் உள்ளவர்கள், இதுபோக இன்னொரு முறையையும் பின்பற்றலாம்.

வெற்றிலை போட பயன்படுத்தும் சுண்ணாம்பை ஒரு பட்டாணி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை 1/2 கப் குளிர்ந்த நீரில் கரைத்து சுமார் 1/2 மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அந்த சுண்ணாம்பு நீரானது தெளிந்தவுடன், அதில் இருந்து 2 ஸ்பூன் தெளிந்த தண்ணீரை வேறொரு கிண்ணத்தில் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.

பிரித்தெடுத்த தண்ணீரின் அளவுக்கு எலுமிச்சைச்சாறும் பிழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். தொடர்ந்து, இரண்டையும் ஒன்றாக கலந்து, அதை1/2 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்ணை சுற்றி பூசுங்கள். கண்விழியில் பட்டுவிடக்கூடாது.

இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் கண் கருவளையம் மறைந்துவிடும். அதன்பின்னர் கருவளையமே வரக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், உணவு முறையில் தான் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதாவது, இரும்புச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இனி... கரெக்ட்டா பாளோ பண்ணுவீங்க தானே...?
Share:

இனி நீங்களும் அழகி தான்...!


ழகாக இருக்க வேண்டும் என்று எல்லா பெண்களுக்குமே ஆசை இருக்கும். இயற்கை தந்துள்ள அழகை இன்னும் மெருகூட்டுவது ஆடைகள் தான். அந்த ஆடையை அணிந்து கொள்ளும் விதமே அழகை நிர்ணயிக்கிறது.
தங்கள் உடல் அளவுக்கு ஏற்ப, வயதுக்கு ஏற்ப ஆடையை அணிந்து கொண்டால் எந்த பெண்ணும் அழகியாக ஜொலிக்கலாம்.

ஒல்லியாகவும், உயரமாகவும் கலராக உள்ள பெண்கள் கோடு அல்லது கட்டம் போட்ட ஆடைகள் பக்கம் போய்விட வேண்டாம். முடியை கழுத்துக்கு மேல் தூக்கி சிகை அலங்காரமும் செய்யக்கூடாது. சிறிய பார்டர் சேலை அல்லது நீள வாக்கில், அதாவது மார்பில் இருந்து நுனி வரை பூ வேலை செய்த சுடிதார் அணியவும் கூடாது.

கொஞ்சம் பெரிய பூக்கள் போட்ட பளிச்சென்று மின்னும் சேலைகள் அல்லது சுடிதாரும், பாட்டமும் பூ போட்ட சுடிதார்கள் அணிந்தால் நீங்கள் அதற்கு மிகவும் பொருத்தமாக இருப்பீர்கள். நீளமான, அகலமான பிளெயின் துப்பட்டாவை பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை, கருப்பு நிறங்களில் அணிந்து நீங்கள் நடந்து வந்தால் உங்களை ‘ஜொள்’ளுபவர்களின் எண்ணிக்கையை தவிர்க்க முடியாததாகிவிடும். அந்த அளவுக்கு நீங்கள் எடுப்பாக தெரிவீர்கள்.

ஒல்லியாகவும், உயரமாகவும் உள்ள கருப்பு அல்லது மாநிறமாக உள்ள பெண்கள் மிகவும் டார்க்கான கலர் ஆடைகளை தேர்வு செய்யக்கூடாது. அப்படியே தேர்ந்தெடுத்தாலும், டார்க் மற்றும் லைட் கலர்கள் மாறி, மாறி வருவதுபோல் ஆடையை தேர்வு செய்யலாம்.

இப்படி ஆடையை தேர்வு செய்யும்போது, அந்த ஆடையில் உள்ள ஏதாவது ஒரு கலரில், முடிந்தால் ஆடையில் உள்ள லைட் கலரில் ப்ளவுஸோ, துப்பட்டாவோ அணியலாம்.

குட்டையாகவும், சிகப்பு கலருமாக இருக்கும் பெண்கள் ப்ளெயின் கலரில் ஆடை அணியக்கூடாது. அதையும் மீறி அணியும்போது, அணிந்திருக்கும் ஆடை புடவையாக இருந்தால் ப்ளவுஸ் காண்ட்ராஸ்டாகவோ அல்லது வேலைபாடுகள் கொண்டதாகவோ இருக்கலாம்.

கருப்பாகவும், குள்ளமாகவும் இருப்பவர்கள் மெல்லிய சரிகை பார்டர் வைத்தோ அல்லது மெல்லிய பார்டருடனோ புடவை அணியலாம். முடிந்தவரை பார்டரும், தலைப்பும் உள்ள புடவைகளை தவிர்ப்பது நல்லது.
மிகவும் டார்க் நிற ஆடைகளை கருப்பு நிறம் கொண்டவர்கள் அணியக்கூடாது.

அப்படியே அணிந்தாலும், அதில் சிறிய வெளிர் நிறப்பூக்களோ அல்லது புள்ளிகளோ இருக்கும்படியான ஆடைகளை தேர்வு செய்து அணியலாம். இவர்கள், ஒற்றை ஒற்றையாக தனித்தனி டிசைன்களும், அந்த டிசைன்களுக்கு நடுவே நிறைய இடைவெளியும் இல்லாமல் இருப்பதுபோன்ற புடவைகளை தேர்வு செய்து அணிந்தால் அம்சமாக இருக்கும்.

குண்டாக இருப்பவர்கள், உடலுடன் ஒட்டியவாறு எந்தவொரு ஆடையையும் அணியக்கூடாது. அப்படி அணிந்தால் பப்ளிமாஸ் என்று தான் கிண்டல் செய்வார்கள்.

ஒல்லியாக இருப்பவர்கள் ஸ்டார்ச் செய்த காட்டன் ஆடைகளை அணியலாம். டாப்பும், பாட்டமும் வெவ்வேறு கலரில் இருப்பதுபோல் சுடிதார் அணிந்தால் இன்னும் சூப்பராக இருக்கும். மிடியில் கூட முன்பக்கம் பட்டையாக தைத்து, அதில் அடி நுனி வரை பூ வேலைபாடுகள் அல்லது மணி சம்கி அமைந்திருந்தால் தோற்றத்தை சற்று உயர்த்திக்காட்டும். ஆடையும் அழகாக இருக்கும்.

ஒல்லியாக இருப்பவர்கள் பிரில் வைத்த ஆடைகளை அணிந்தால் சிறிது குண்டாக தூக்கிக் காட்டும். இவர்கள் இறுக்கமான ஆடைகளை தவிர்த்துவிட வேண்டும்.
பேன்ட், டீ ஷர்ட் அணியும் பெண்கள் டீ சர்ட்டை இன் செய்யாமல் அணியலாம். பேன்ட், ஷர்ட் அணிபவர்கள், ஷர்ட்டில் ஒரு எம்பிராய்டரியோ, மோடிபோ, பேன்ஸி பட்டனோ இருக்கும்படி அணியலாம்.

மொத்தத்தில், என்ன விலை கொண்ட ஆடை அணிகிறோம் என்பது முக்கியமல்ல, மேட்சிக்கான ஆடையை தேர்வு செய்கிறோமா என்பது தான் முக்கியம். உங்கள் செலக்ஷன் சரியாக இருந்தால், இனி நீங்களும் அழகி தான்...!
Share: