சனி, 31 டிசம்பர், 2011

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 5


5. காணாமல் போன ஆனந்த்
- நெல்லை விவேகநந்தா -

"பயப்படாதீங்க ஆனந்த். அவரு எங்கிட்டதானே பேசனும்னு சொல்றாரு. மொபைலை குடுங்க..." ஆனந்திடம் இருந்து மொபைலை வாங்கிவிட்டாலும் ஷ்ரவ்யாவின் முகத்தில் லேசான கலவரம் தெரிந்தது. ஆனால், அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

எதிர்முனையில் ஷ்ரவ்யாவிடம் பேச பிரகாஷ் ஆர்வமாக காத்திருந்தான். 'நான்தான் இந்த பார்ட்டியை உனக்காக ஸ்பெஷலா ஏற்பாடு செய்து கொடுத்தேன். பணத்தைத் தாராளமா செலவு செய்யக்கூடிய பார்ட்டிதான். அவன் உனக்காகத் தந்த பணத்தில் எனக்கும் கொஞ்சம் தந்து விடு' என்று, தன் மனதிற்குள் உள்ள விஷயத்தை சொல்லத் தயாராக இருந்தான்.

"ஹலோ..."

ஷ்ரவ்யாவின் குரலைக் கேட்டதும் பிரகாஷின் முகம் மலர்ந்தது.

"அம்மாடி நான்தான் பிரகாஷ் பேசுறேன். நீ சேப்டியாதானே போய்க்கிட்டு இருக்க? உனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையே..."

"நான் சாந்திதான் பேசுறேன். இங்கே எந்தப் பிரச்சினையும் இல்ல. இப்போ, நீதான் பிரச்சினை."

"அய்யய்யோ... அப்படி சொல்லதம்மா. உன்ன அந்த கஸ்டமர் கூட அனுப்பி வைக்க ரெக்கமென்ட் பண்ணுனதே நான்தான்."

"சரி, இப்போ உனக்கு என்ன வேணும்?"

"அது வந்து...?"

படபடவென பேசிய ஷ்ரவ்யாவிடம், தனக்கான எக்ஸ்ட்ரா கமிஷன் பற்றி அவனால் சட்டென்று பேச முடியவில்லை. ஆனால், ஷ்ரவ்யாவுக்கு புரிந்து விட்டது.

"பொம்பள மாதிரி ரொம்பவும் வெட்கப்படாத. ஊட்டிக்குப் போயிட்டு வந்த உடனே உன்னையும் கவனிச்சிடுறேன்..." என்றாள் அவள்.

ஷ்ரவ்யா இப்படி சொன்ன பிறகுதான், பிரகாஷ் குரலில் உற்சாகம் பிறந்தது.

"சரி சாந்தி, அப்போ நாம அடுத்த வாரம் சந்திப்போம். மொபைல ஸார் கிட்ட குடுத்துடு. நான் மொபைலை வெச்சிடுறேன்..."

இதற்கும் மேல் அவனை பேசவிடாமல் மொபைலை ஆப் செய்தாள் ஷ்ரவ்யா.

ஆனந்த் எங்கே என்று தேடினாள். பல சந்தேகக் கேள்விகளை முகத்தில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

"ஆனந்த்... நீங்க என்ன யோசிக்கிறீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். ஷ்ரவ்யா எப்படி சாந்தி ஆனாள் என்றுதானே யோசிக்கிறீங்க?"

"ஆமாம்..." ஆர்வமாகத் தலையாட்டினான் ஆனந்த்.

அவனை ஒட்டி அமர்ந்து கொண்டு, தனது ப்ளாஷ்பேக் கதையை மெதுவாய், கொஞ்சம் சோகமாய் சொன்னாள் ஷ்ரவ்யா.

"என்னோட உண்மையான பேரு சாந்திதான். சின்னக்குழந்தையில நான் அழகா மட்டுமில்லாம, அமைதியாகவும் இருப்பேனாம். என்னோட முகத்தைப் பார்த்தாலே அம்மாவுக்கு மன அமைதி கிடைக்குமாம். என்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்தது மட்டுமல்லாம, என் முகத்தைப் பார்த்துப் பார்த்துத்தான் என்னோட குடிகார அப்பா கூட குடும்பம் நடத்தி இருக்குறாங்க. எங்க அம்மாவுக்கு நான் சாந்தி, மனஅமைதி கொடுத்ததுனால, என் பேரையும் சாந்தின்னு வெச்சிட்டாங்க. எனக்கு விவரம் தெரிஞ்ச பிறகு சாந்திங்குற பேருல உள்ள பொண்ணுங்க பலரோட வாழ்க்கையை பாத்திருக்கேன். அவங்க யாருமே நிம்மதியா வாழல. என்னோட வாழ்க்கையும் அப்படி அமைஞ்சிடுமோன்னு பயந்தேன். அம்மா கிட்ட சொன்னேன். நாம இப்போ தங்கத்தட்டுல சாப்பிட்டு, மாளிகையிலயா வாழ்ந்துட்டு இருக்கோம். நாம கெடக்குறது இந்தக் கூவம் நாத்தத்துக்குள்ள. இதைவிட கேவலமா எந்த மனுஷனும் வாழ மாட்டான். உன்னோட வாழ்க்கை இதுக்கு கீழே எப்படியும் போகாது. அதனால, சாந்திங்குற பேரே இருக்கட்டும். உனக்கு பிடிக்கலனா மாத்திக்கோன்னு சொல்லிட்டாங்க. அம்மாவே இப்படி சொல்லிட்டதுனால எனக்கும் பெயரை மாத்தணும்னு தோணல. அப்படியே விட்டுட்டேன். ஒருகட்டத்துல, குடிச்சு குடிச்சே அப்பா இறந்து போக... கொஞ்ச நாள்லயே அம்மாவும் பன்றிக் காய்ச்சலால பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்க முடியாம இறந்து போயிட்டாங்க. நான் ஒரே பொண்ணுங்குறதுனால, பக்கத்து வீட்டுல உள்ளவங்க சாப்பாடு கொடுத்து உதவினாங்க. நான் வயசுக்கு வந்த அழகான பொண்ணா இருந்ததுனாலேயும், எனக்கு ஆதரவா பேச யாருமே இல்லங்குறதுனாலேயே எல்லா வாலிப பசங்களோட பார்வையும் என் மேலத்தான் விழுந்தது..."

தொடர்ந்து, ஷ்ரவ்யாவை பேச அனுமதிக்கவில்லை ஆனந்த். அவனை நிமிர்ந்து பார்த்தாள் ஷ்ரவ்யா. அவனது கண்களின் ஓரமும் கசிந்திருந்தது.

"ஸாரி ஷ்ரவ்யா. உன்னோட கடந்த கால வாழ்க்கை இப்படி இருக்கும்னு நான் நெனைச்சுக்கூட பார்க்கல. ஸோ... ஸாரி!"

மறுபடியும் கலங்கினான் ஆனந்த்.

"நீங்க ரொம்ப நல்லவங்க ஆனந்த்..."

"எப்படிச் சொல்ற?"

"என்னோட கடந்த கால வாழ்க்கையில நடந்த ஒரு பார்ட் பத்தி சொன்னதுக்கே இவ்ளோ கண் கலங்கிட்டீங்களே. முழு கதையையும் சொன்னா... ஊட்டிக்கேப் போக வேண்டாம். இப்படியே சென்னைக்கு திரும்பிடுவோம்னு சொன்னாலும் சொல்லிடுவீங்க. அதனால, என்னோட கதையை நான் இதோட முடிச்சுக்கறேன்..." என்று சின்னக் குழந்தையைப் போல் சொன்னாள் ஷ்ரவ்யா. அவளது முகமும் மழை விட்ட வானம் போல் தெளிந்திருந்தது. உற்சாகமும் தெறித்தது.

"எப்படி ஷ்ரவ்யா... இவ்ளோ சோகத்தை உனக்குள்ள தாங்கிக்கிட்டு உன்னால சிரிக்க முடியுது? ஆனா, என்னால எந்தவொரு சோகத்தையும் தாங்கிக்க முடியலயே... இப்போ, நான் உன்கூட வர்றதுக்கு காரணமான பின்னணியிலும் ஒரு சோகம் இருக்கு. உன்னோட சோகத்தோட ஒப்பிடும்போது இது பெருசே இல்லதான். ஆனாலும் என்னோட மனசு மட்டும் நித்தம் நித்தம் வலிக்குது."

ஆனந்த் இப்படி சொன்போது நிஜமாகவே அவனது நெஞ்சு வலிக்க ஆரம்பித்துவிட்டது. வலது கையால் நெஞ்சை பிடித்துக் கொண்டான். நா வறண்டு போனதாலும், துக்கம் நெஞ்சை அடைத்ததாலும் பேச முடியாமல் திணறினான். ரெயிலில் எதிர் வரிசையில் இருந்தவர்களும் அதை கவனித்துவிட்டு பரபரப்பானார்கள்.

இவ்வளவு பரபரப்பையும் எதிர்பார்க்காத, எதிர் சீட்டில் அமர்ந்திருந்த, அடிக்கடி காதலனுடன் மொபைலில் கடலைப் போட்டுக் கொண்டு வந்த இளம்பெண் ஸ்வேதா, தனது பேக்கில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து ஷ்ரவ்யாவிடம் நீட்டினாள்.

நடுங்கிய கைகளோடு பாட்டிலைத் திறந்து, ஆனந்துக்கு தண்ணீரை குடிக்கக் கொடுத்தாள் ஷ்ரவ்யா. அவனது நெஞ்சையும் தடவிவிட்டாள்.

அவனது சட்டையில் வழிந்திருந்த மினரல் வாட்டரின் ஈரம், அவளது கையை மட்டுமின்றி அவளை மனதையும் நனைத்து குளிரச் செய்தது.

தனக்குள், தன்னையும் அறியாமல் விபரீதமாய் ஏதோ ஒரு கெமிஸ்ட்டி ஒர்க்கவுட் ஆகிக்கொண்டிருப்பதாகவே உணர்ந்தாள்.

சில நிமிடங்கள் கரைந்திருந்தன.

எதிரே வந்து தன் மீது மோதிய காற்று தந்த சுகத்தில், தனது சோகத்தில் இருந்து மீண்டும் வந்து கொண்டிருந்தான் ஆனந்த். அதுவரை கலகலவென பேசிக் கொண்டு வந்த அவனது முகத்தில் திடீர் மவுனம். பேய் மழை பெய்வதற்கு முன்பு வானம் கரும் மேகங்களால் மூடுமே... அதேபோன்ற இறுக்கம் அவனது முகத்தில் தெரிந்தது. 3 நாட்கள் ஷேவிங் செய்யாமல் விட்டதில் கருமையாய் வளர்ந்திருந்த தாடி முடிகள் அவனை இளம் தேவதாஸாய் அடையாளம் காட்டின.

10 நிமிடங்களுக்கு அவனிடம் இருந்து எந்த பேச்சும் இல்லை. 'இப்படிப்பட்ட ஒரு ஆளுடன், அவனது மகிழ்ச்சிக்காக உடன் செல்கிறோமே... நமக்கு ஏதாவது ஆபத்து என்றால் என்ன செய்வது" என்று ஷ்ரவ்யா யோசிக்க, அவளது ஒரு மனம் கட்டாயப்படுத்தினாலும், இன்னொரு மனதில் இரக்கம் சுரந்திருந்தது. 'சோகங்களும், துக்கங்களும் இல்லாத மனிதர்களே இல்லை. அவை ஒருவனுக்கு இருந்தால்தான் சொர்க்கத்தை தேடிச் செல்ல வேண்டும் என்ற வேகம் அவனுக்குள் எழும்...' என்று எப்போதே எங்கேயோ ஒரு புத்தகத்தில் படித்த வாசகம் அவளது மனக்கண் முன்பு அவசரமாய் வந்துவிட்டு போனது.

அதேநேரம், அதிரடி வேகத்தில் சென்று கொண்டிருந்த கோவை எக்ஸ்பிரஸ் திடீரென்று மவுனமாக பயணிக்க ஆரம்பித்தது. தன்னை திடீரென்று தாக்கிய சோகம், முகத்தில் தந்த தாக்கத்தை கர்ச்சிப்பால் துடைத்துவிட்டு வாட்சை பார்த்தான் ஆனந்த். இரவு 8.30 மணி ஆக 10 நிமிடங்களும், 35 நொடிகளும் பாக்கி இருந்தன.

ஏதோ ரெயில் நிலையம் வந்ததால், அது எந்த ஊர் என்பதை அறிய மஞ்சள் போர்டு எங்கே என்று தேடினான். 'ஈரோடு ஜங்ஷன்' என்ற பெயர்ப் பலகை பெரியதாய் பளிச்சிட்டது.

என்ன நினைத்தானோ, ஷ்ரவ்யாவிடம் எதுவும் சொல்லாமல் ரெயிலில் இருந்து இறங்கினான். ஷ்ரவ்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

அவனது லக்கேஜ் பேக் எங்கே என்று தேடினாள். அது, அவன் பயணித்த சீட்டிற்கு அடியில் பத்திரமாக இருந்தது.

'அப்படியென்றால், ரெயில் புறப்படுவதற்குள் வந்து விடுவான்' என்று தனக்குள் முடிவு செய்து கொண்டாள். 4 நிமிடங்கள் வரை அமைதியாக ஈரோடு ஜங்ஷனில் நின்றிருந்த ரெயில் புறப்படுவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. ரெட் சிக்னல் அணைந்து எல்லோ சிக்னல் விழுந்தது. சில நொடிகளில் கிரீன் சிக்னலும் விழுந்து விடும். ஆனால், ரெயிலை விட்டு இறங்கிச் சென்ற ஆனந்த் மீண்டும் ரெயிலில் ஏறவில்லை.

கிரீன் சிக்னலும் விழுந்தாயிற்று. ரெயில் என்ஜின் டிரைவர் பலமான ஹாரனை சற்று இடைவெளியின்றி எழுப்பிவிட்டு ரெயிலை மெதுவாக நகர்த்தினார். ஷ்ரவ்யாவின் பதற்றம் அதிகமானது.

'ரெயிலில் இருந்து இறங்கிப் போன மனிதன் வராமல் போனாலும் கூட பரவாயில்லை. தற்கொலை... என்று ஏதாவது விபரீத முடிவு எடுத்து விட்டால், அதற்கு நாமும் ஒருவகையில் காரணம் ஆகிவிடுவோமே...' என்று மனதிற்குள் பரபரத்தாள்.

இருக்கையை விட்டு எழுந்தவள் கதவு நோக்கி வேகமாக ஓடினாள். அப்போதும், ரெயில் மெதுவாகத்தான் நகர்ந்து கொண்டிருந்தது. ஓடி வந்தால் நிச்சயம் ரெயிலை பிடித்து விடலாம். ஆனால், அவள் எங்கு தேடியும் ஆனந்தை காணவில்லை.

பதற்றத்தில் தலைக்கு மேல் இரு கையையும் வைத்துக் கொண்டு, ஓடிக்கொண்டிருந்த ரெயிலின் கதவு அருகே அப்படியே உட்கார்ந்து விட்டாள். எப்போதும் இல்லாத சோகம் திடீரென்று அவளை தாக்கியது. அவளை அறியாமல் கண்ணீரும் வந்தது. ஓவென்று கதறி அழுதும் விட்டாள்.

திடீரென்று தனது காலை யாரோ மிதித்தது போன்ற ஒரு உள்ளுணர்வு. வந்த கண்ணீரை வேகமாக துடைத்துக் கொண்டு நிமிர்ந்துப் பார்த்தாள். வேகம் எடுத்திருந்த ரெயிலில் ஏறியிருந்தான் ஆனந்த். வேகமாக ஓடி வந்து ஏறியதில் மூச்சுவிட கொஞ்சம் சிரமப்பட்டான்.

அவனைப் பார்த்த மாத்திரத்தில் எழுந்த ஷ்ரவ்யா, அவனை வேகமாக ரெயிலுக்குள் பிடித்து இழுத்தாள். திடீரென்று என்ன நினைத்தாளோ,தன்னையும் அறியாமல் அவனை கட்டிப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். அருகே நின்றிருந்த பயணிகளும், என்னவோ... ஏதோ... என்று அங்கே கூடிவிட்டார்கள்.
(தேனிலவு தொடரும்...)
Share:

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 4


4. அமுதாவின் கோபம்
- நெல்லை விவேகநந்தா -

கல் முழுக்க வானில் நடந்து நடந்து களைத்துப் போன சூரியன், தூக்கம் கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தான். அதற்கு முன்னதாக அவன் மஞ்சள் தேய்த்துக் குளித்தானோ என்னவோ, அவன் அன்று கடைசியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மேற்கு வானத்தில் மஞ்சள் நிற மேகங்களின் சிதறல்கள் அழகான இயற்கை ஓவியத்தை வரைந்து விட்டிருந்தது.

இப்படி, இயற்கை வீட்டிற்கு வெளியே வர்ணஜாலங்களை நிகழ்த்திக் கொண்டிருக்க... வீட்டிற்கு முன்பு வந்து நின்ற டாடா இன்டிகா காரின் ஹாரன் சப்தம் கேட்டு வேகமாக வந்தாள் பாக்கியம். அவளது மருமகன் குணசீலன்தான் காரிலிருந்து இறங்கி வந்தான்.

"மாப்ள... நீங்க மட்டும்தான் வந்தீங்களா? வேறு யாரும் வரலீயா?" - ஆர்வமாக விசாரித்தாள் மாமியார் பாக்கியம்.

"இல்ல அத்த. அமுதாவுக்கு என்னன்னு தெரியல. எங்க வீட்டோட இன்னும் ஒட்ட மாட்டேங்குறா. அதனாலதான் நான் மட்டும் வந்தேன்."

"அய்யய்யோ... நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல மாப்ள. கல்யாணம் ஆன புதுசுல்ல, அதான் காரணம். வேறு எதுவும் இல்லை" என்று கூறி, மருமகன் தனது மகள் மீது அடுத்தக் குற்றச்சாட்டை கூற விடாமல் அவனது வாயை அடைத்தாள்.

வீட்டிற்குள் நுழைந்த குணசீலன், தனது புது மனைவி எங்கே என்று தேடினான். அட்டாச்டு பாத்ரூமில் இருந்து வெளிப்பட்ட அமுதா அவனது பார்வையில் தெரிந்தாள்.

அம்மா மட்டும்தான் வீட்டில் இருக்கிறாள் என்கிற தைரியத்தில் பாவாடையால் மட்டுமே மார்பு வரை மறைத்திருந்தாள். தலைமுடி தண்ணீரில் நனையாமல் இருக்க, அதை அழகாய் முடிந்து கொண்டை போட்டிருந்தாள். அவள் குளியலுக்குப் பயன்படுத்திய சீயக்காய் பவுடரின் வாசனை அவளுக்கு முன்பாக குணசீலனின் மூக்கை முத்தமிட்டு அவனை புது உற்சாகம் கொள்ளச் செய்தது.

புதுமனைவியை ஒரு மாதிரியாக பார்த்தவன் சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்தான். தான் அரைகுறை ஆடையோடு இருப்பதை உணர்ந்த அமுதா வேகமாக பெட்ரூமிற்குள் பாய்ந்தாள். அதேவேகத்தில் கதவையும் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள்.

"அமுதா... கதவ திற..."

கதவைத் தட்டிக் கொண்டே குரல் கொடுத்தான் குணசீலன். ஆனால், அமுதாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

மறுபடியும் குணசீலன் கதவைத் தட்ட... அவனைப் பார்த்து விட்டாள் பாக்கியம். டம்ளரில் சூடாக இருந்த பசும்பாலை ஆற்றிக் கொண்டே வந்தவள், குணசீலனைப் பார்த்ததும் அவனுக்கு சில அடி தூரம் தள்ளியே நின்று விட்டாள்.

"மாப்ள... அங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"

மாமியார் குரல் கேட்டதும் சட்டென்று திரும்பினான் குணசீலன்.

"ஒண்ணும் இல்ல அத்த... இப்பதான் அமுதா குளிச்சிட்டு வெளியே வந்தா. அவகிட்ட பேசலாம்னு முயற்சி பண்ணினா, அவ கதவை பூட்டிக்கிட்டா. அதான் கதவை தட்டிட்டு நிக்கிறேன்."

குணசீலனின் பதிலில் அவன் லேசாக வழிந்ததும் பாக்கியத்திற்கு தெரியாமல் இல்லை. அவளும் திருமணம் ஆகிப் பிள்ளைகள் பெற்று, அவர்களுக்குத் திருமணமும் செய்து கொடுத்தவள்தானே? திருமணம் ஆகி ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் முதலிரவைக் காணாத தனது மாப்பிள்ளையின் ஏக்கத்தை அவள் புரிந்து கொண்டாள்.

"முதல்ல இங்கே வந்து உட்காருங்க. இந்தப் பாலை குடிச்சுட்டு வெயிட் பண்ணுங்க. அவளே கொஞ்ச நேரத்துல வந்திடுவா..." என்றவள், நேராக அமுதா தாழ்ப்பாள் போட்டிருந்த கதவை தட்டினாள்.

"அம்மாடி... மாப்ளதான் வந்திருக்காரு. டிரெஸ் பண்ணி முடிச்சதும் அவரு கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இரு. நான் பூக்காரம்மா வீட்டு வரைக்கும் போயிட்டு கொஞ்ச நேரத்துல வந்திடுறேன்."

அமுதாவின் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து அகன்றாள் பாக்கியம்.

குணசீலனுக்கு நேரம் போகவில்லை. விவசாயமே கதியென்று கிடக்கும் மாமனார் தங்கதுரை வீடு திரும்ப தினமும் இரவு 7 மணி தாண்டிவிடும் என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததால், மீதமிருக்கும் கொழுந்தியாளிடமாவது பேசலாமே என்று வாணியை தேடினான். அவளும் வீட்டில் இல்லை. அமுதா தாழ்ப்பாளிட்ட கதவையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த கதவு இப்போதைக்கு திறப்பதற்கான அறிகுறியே தென்படாததால், தான் கையோடு கொண்டு வந்திருந்த லேப்டாப்பைக் கையில் எடுத்து ஆன் செய்தான். ரிலையன்ஸ் டேட்டா கார்டையும் லேப்டாப்போடு இணைத்தவன், கூகுள் வழியாக தனது ஜி மெயிலுக்குள் நுழைந்து, தனக்கு வந்திருந்த திறக்கப்படாத மெயில்களை திறந்து படிக்க ஆரம்பித்தான்.

ஷைலஜா என்ற பெயரில் வந்திருந்த மெயிலை அவன் திறந்த போது, அதில் இன்னும் ஆர்வமாக மூழ்கினான். ஹாய் ஷாம்... என்று ஆரம்பித்த அந்த மெயில் கடிதத்தை கீ போர்டால் எழுதிய ஷைலஜா, தனது பெர்சனல் போட்டோக்கள் சிலவற்றை இணைத்திருந்தாள். அவற்றில் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் மெல்லிய சேலையில் அழகாக பளிச்சிட்டுக் கொண்டிருந்தாள் ஷைலஜா.

ஒவ்வொரு படத்தையும் பெரிதாக்கிப் பார்த்து ஜொள் விட்டவன், கடைசியாக சில வரிகளில் எழுதப்பட்டு இருந்ததைப் படித்து லேசாக அதிர்ந்தான்.

'ஷாம்... நானும் எத்தனை நாளைக்குத்தான் பேச்சுலராகவே இருப்பது. நானும் உன்னைப் போன்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து விட்டேன். வீட்டில் ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள். மாப்பிள்ளை வீட்டில், எனது போட்டோவைக் கேட்டிருக்கிறார்கள். என்னை அழகாக புகழ்ந்தவர்களில் நீதான் டாப். அதனால்தான் இந்தப் போட்டோக்களை உனக்கு அனுப்பி இருக்கிறேன். உனக்குப் பிடித்த போட்டோவை செலெக்ட் செய்து அனுப்பு. அதையே நான் மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி விடுகிறேன். உனக்கு பெர்சனலாக ஒன்றை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். உன்னுடன் நான் எத்தனையோ முறை படுக்கையை பகிர்ந்து இருக்கிறேன். அதுதான் சொர்க்கம் என்றும் நினைத்திருக்கிறேன். இதையெல்லாம் தாண்டி ஒரு பந்தம் இருக்கிறது. அதுதான் திருமணம். நீ உன் விருப்பப்படி கிராமத்துப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு விட்டாய். நானும் உன் வழியிலேயே படித்த கிராமத்துப் பையனைத்தான் எதிர்பார்க்கிறேன். எனக்கும் உன்னைப் போன்று கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பையனே கணவனாக கிடைக்க வேண்டும் என்று உன் இஷ்ட தெய்வத்திடம் எனக்காக வேண்டிக்கொள். நானும் உன் நல்வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன். இப்படிக்கு, அன்புடன் ஷைலஜா.'

மெயில் கடிதத்தைப் படித்தவன், டி சர்ட்டில் ஒய்யாரமாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்த ஷைலஜா உருவப்படத்தின் மீது விரல்களால் வீணை மீட்டிக் கொண்டிருந்தான். கடைசியாக அவன் தனது ஆள்காட்டி விரலால் தொட்ட இடம் அவனையே வெட்கம் கொள்ளச் செய்தது. அக்கணமே ஷோபாவில் தலை சாய்த்து ஓரிரு நொடிகள்தான் கண்களை மூடி இன்ப வெள்ளத்தில் மூழ்கியிருப்பான். அடுத்த நொடியே கண்களைத் திறந்தான். எதிரே அமுதா நின்று கொண்டிருந்தாள்.

"ஆமா... இதுல என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"

அமுதா கேட்ட கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் திணறியவன், "தப்பா நினைக்காத அமுதா. அது, எனக்கு வந்த மெயில் இல்ல. வேறு யாருக்கோ போக வேண்டியது எனக்கு வந்து விட்டது. அது யாருக்கு வந்திருக்கும்னு யோசிச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ள நீ வந்துட்ட..." என்றான்.

"நீங்க என்ன சொல்றீங்க? ஏதோ டி.வி. மாதிரி கையிலே வெச்சு இருக்கீங்களே... அது என்னன்னு தெரிஞ்சுக்கலாமேன்னுதான் கேட்டேன்."

அமுதாவின் பேச்சில் வேகம் இல்லாததால், லேப்டாப்பில் தான் செய்து கொண்டிருந்ததை அவள் பார்க்கவில்லை என்று அவசரமாக கணித்துக் கொண்டான் குணசீலன். அதேநேரம், அவள் லேப்டாப்பை டி.வி. என்று தவறாக சொன்ன வார்த்தையை சரியாக பிடித்துக் கொண்டான்.

"ஆமா... இது என்னன்னு சொன்ன?"

தான், கையில் வைத்திருந்த லேப்டாப்பை அமுதாவிடம் காண்பித்துக் கேட்டான் குணசீலன்.

"இது சின்ன டி.வி. பாக்ஸ் தானே?"

மடி கணினிதான் லேப்டாப் என்பதுகூட தெரியாமலேயே வாழ்ந்திருக்கிறாள் அமுதா.

"இது டி.வி. பாக்ஸ் இல்ல அமுதா. இதுவும் ஒரு கம்ப்யூட்டர்தான். இதோட பெயர் லேப்டாப். இத எங்கே வேண்டுமானாலும் நாம எடுத்துட்டுப் போகலாம்."

"இங்கே எதுக்காக இத எடுத்துட்டு வந்தீங்க?"

"என்ன அமுதா இப்படியொரு கேள்வி கேட்டுட்ட? என்னோட டியூட்டியில இது இல்லாம எதுவும் முடியாது."

"அப்படியா?"

இதற்கு மேல் அமுதாவால் அதுபற்றி விளக்கம் கூட கேட்க முடியவில்லை.

வீடே கதியென்று கிடந்து விட்டதால் உலக அளவில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியைக் கூட அவளால் அளவிட முடியவில்லை. அதேநேரம், 'எனக்கு ஒரு லேப்டாப் வேண்டும்; அதை வாங்கப் பணம் கொடுங்கள்...' என்று சில மாதங்களுக்கு முன்பு தனது தங்கை வாணி அடம் பிடித்தது இப்போது அமுதாவுக்கு நினைவுக்கு வந்து போனது.

'அப்படியென்றால், அவளும் பெரிய படிப்புதான் படிக்கிறாள். படிப்பு முடிந்ததும் பட்டணத்திற்குப் போய் நிறைய சம்பாதிப்பாள்' என்று மனதிற்குள் தனக்கு தானே சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.

"அமுதா... என்ன யோசிச்சுட்டு இருக்க? லேப்டாப்னா என்னன்னு தெரியாம வளர்ந்துட்டோமேன்னு வருத்தமா இருக்கா? அது பெரிய விஷயமே கிடையாது. நானே உனக்கு எல்லாத்தையும் கத்துக் கொடுக்கிறேன்" என்ற குணசீலன், அவளை அவசரமாக அமைதிப்படுத்தினான்.

'இங்கே என்ன நடக்குது? மருமகன் வேற கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் வீட்டுக்கு வந்தாரு. அமுதாவும் வீட்டுலதான் இருக்கா. வேற ஏன் வீட்டுக்கு வெளியே லைட் போடாம இருக்குறா?'

தனக்குத்தானே சொல்லிக் கொண்டே, வெளியே சென்ற பாக்கியம் வீட்டிற்குள் நுழைந்தாள். அவள் கொண்டு வந்த கூடை நிறைய மல்லிகைப்பூ இருந்தது. அவள் வீட்டிற்குள் நுழையும் முன்பே, மல்லிகையின் வாசனை வந்துவிட்டது.

வீட்டிற்குள் மகளையும், மருமகனையும் பார்த்தவள், "ஓ... நீங்க இங்கேதான் இருக்குறீங்களா? மொட்ட மாடிக்கு போயிட்டீங்களோன்னு பார்த்தேன்" என்று சொன்னபடியே, தான் கொண்டு வந்த மல்லிகைப்பூக்கள் நிரம்பியிருந்த கூடையை அமுதாவிடம் கொடுத்தாள்.

"இதெல்லாம் மல்லிகைப்பூதான். உங்களுக்காகத்தான் வாங்கிட்டு வந்தேன். பெட்ரூமில் கொண்டுபோய் வை..." மகளின் முகத்தைக் கூட பார்க்காமல் சொல்லிவிட்டு அகன்றாள்.

மாமியார் எதற்காக அவசரமாக மல்லிகைப்பூ வாங்கி வந்திருக்கிறார் என்பது குணசீலனுக்கு புரிந்துவிட்டது. திருமணமாகி ஒரு வாரம் மேலாகியும் இன்னுமே நடக்காத முதலிரவுக்கான ஏற்பாடுதான் அது என்பதை அறிந்து குஷியானான்.

அமுதாவுக்கும் புரிந்து விட்டது. அதுவரை, லேப்டாப் கூட தெரியாமல் வளர்ந்துவிட்ட தனது அறியாமையை எண்ணி வருந்தியவள், சட்டென்று கோபமானாள்.

மல்லிகைப்பூ கூடையோடு பெட்ரூமிற்குள் நுழைந்தவள், அதை வேகமாக வீசியெறிந்தாள்.

(தேனிலவு தொடரும்...)
Share:

சனி, 10 டிசம்பர், 2011

விபரீத ஆசை


உன்
கொஞ்சலும்
கிச்சுகிச்சு மூட்டுகிறது

உன்
கெஞ்சலும்
சிலிர்க்க வைக்கிறது

எல்லாம்
சற்று தொலைவில்
நீ
பக்கத்து வீட்டு
குழந்தையை கொஞ்சும்போது...

எனக்கும்
ஓர் நப்பாசை;

அந்த சேயாய்
நான் மாற வேண்டும்
நீயும்
என் விருப்பப்படி
மாற வேண்டும்
காதலியாக அல்ல;
ஒரு தாயாக!

ஆம்...
நான்
இன்னொருமுறை
பிரசவமாக வேண்டும்
உன் சேயாக...

இது
நடக்காத பேராசை அல்ல;

காதலிக்கும்
இணையற்ற பாசமுண்டு என்று
என்
பெற்றோரிடம் நிரூபிக்க!

- கவிஞர் நெல்லை விவேகநந்தா
















Share: