திங்கள், 22 நவம்பர், 2010

சூப்பர் ஸ்டார் சுட்டிக்காட்டிய பிகரு...

 அந்த பொண்ணு மாடர்ன் கேர்ளு. அவ மேல அவனுக்கு ஒரு கண்ணு. ஒரு நாளு பொறந்தது ஆசை. அடுத்தநொடியே பாடவும் ஆரம்பித்துவிட்டான், இப்படி...

பல்லவி

இவ தானா?
இவ தானா?
அன்று
சூப்பர் ஸ்டாரு
சுட்டிக்காட்டிய
சூப்பர் பிகரு இவ தானா?

கவியரசர்
கிறங்கிப்போன
கில்மா இவ தானா?

சரணம் - 1

ப்ளவுசு போயி டாப்சுக்கு மாறிட்டா
பட்டன் மறந்து ப்ரீயா ஆயிட்டா

தங்கம் விலை மலையேறியாச்சு
வகை வகையா பேஷன் வந்தாச்சு
இவளும் மாறிட்டா
ஓல்டு கல்ச்சருக்கு
டாட்டா, பை&பை காட்டிட்டா...

சரணம் - 2
 
ப்ளுயண்டா வந்து பாயும் இங்கிலீசு
இவ சிரிச்சாலே எளச்சுப் போகுது
தகிடதத்தோம் போடும் டமிலு
போன இடம் எப்பவோ மறந்துபோச்சு...

ஹீல்சுக்கு டைவ் ஆச்சு இவ லெக்கு
அதுக்கு இல்லாம போச்சு இலக்கு
குட்டையும் நெட்டையாச்சு
ஓட்டையும் ஒய்யாரமாச்சு
சிங்கார தமிழும்
சென்னைத் தமிழும் கலந்தாச்சு
இவ மனசு மட்டும் தனியாச்சு

சரணம் - 3

கட்டிங்...
கூல்டிரிங்...
புட்டிங்...
எல்லாமே நியூ பேஷனாச்சு...

லோ நெக்கும்
ஹை டெக்கும்
இவ "ஐ" ஆச்சு...

ஹேர் ப்ரீயும்
பெர்சனலும்
ஓப்பன் ஆச்சு...

கல்ச்சரா...
அது என்ன?
கேட்கும் காலம் பொறந்தாச்சு
வெட்கமும் போயே போயாச்சு
கூப்பிடும் தூரத்தில்
எல்லாமே வந்தாச்சு...

சரணம் - 4

கூசும் அங்கமெல்லாம்
டாட்டூஸ் குத்தியாச்சு
அடிக்கடி கெமிஸ்டிரியும்
ஒர்க்கவுட் ஆயாச்சு!

எல்லாமே ஊ லா... லா... லா...
எங்கும் லா... லா... லா...

நீயும் வாடி பியூட்டி
நாமும் போகலாம் ஊட்டி
அங்கே பண்ணலாம் லூட்டி - அதுக்கு
இப்பவே நான் ரெடி?

 ஆக்கம் : கவிஞர் நெல்லை விவேகநந்தா
 
Share:

வெள்ளி, 19 நவம்பர், 2010

பிரசவமாகும் ஒரு சினிமா பாடல்!



இது எனது 150-வது இடுகை! 
வனுக்கு அழகான அத்தைப் பெண் ஒருத்தி இருக்கிறாள். சின்ன வயதிலேயே அவளுக்கு இவன்தான், இவனுக்கு அவள்தான் என்று பேசி முடித்துவிட்டார்கள் பெரியவர்கள். அதனால்தான் என்னவோ, தன் முறைப்பெண்ணை உரிமையோடு அழைக்கிறான், திருமணம் செய்ய.

பல்லவி

அழகே
அத்த மகளே
நீ ஏஞ்சலா?
நான் உன் ஊஞ்சலா?

இங்கே கொஞ்சம் வா - என்
மஞ்சம் கொள்ளை கொள்ள வா...

நித்தம் உன்னை அள்ளவா?
முத்தத்தால் கிள்ளவா?

ஆமாம் புள்ள...
உண்மைய சொல்லு புள்ள
அதுக்கு ஏன்
வெட்கம் உனக்குள்ள...

சரணம் - 1

தென்றல் வீசும் நேரத்தில்
புயலுக்கு என்ன வேலை?
சோலை கொண்ட கானகத்தில்
நமக்கு நல்ல வேளை!

கொஞ்சிப்பேச இருக்கு நோக்யா
நேரம் காலம் பார்க்காம - நீ
என்னை எப்பவும் நோக்கியா!

சரணம் - 2

மின்னும் வைரம்கூட தோத்துப்போச்சு
உன் அழகு எப்போ வெட்ட வெளிச்சமாச்சு?

முறைப்பையன் நான் இங்கிருக்க
ஊரைக் கூட்டி என்ன கேட்க?

ஆட்டு நீயும் தலைய
நானும் போடுறேன் மூணு முடிச்ச...

சரணம் - 3

கனவு வந்தா களவும் மறந்துபோகும்
நனவு வந்தா பேச்சும் நின்னுபோகும்

ஒட்டுமொத்த மாயமும் உனக்குள்ள...
வேட்டு வெச்சுபுட்டியே எனக்குள்ள...

சரணம் - 4

தூக்கம் போயி நாளாச்சு
நீயும் நானாச்சு
நானும் நீயாச்சு
வேறு என்ன சொல்ல பொட்டப்புள்ள?
உடனே நீயும் என்ன அள்ளுபுள்ள


- நெல்லை விவேகநந்தா
Share:

செவ்வாய், 16 நவம்பர், 2010

அய்யா வைகுண்டர் வரலாறு - 5


5. விதவையை மணந்ததால் வந்த வினை
 -நெல்லை விவேகநந்தா-

ருநாள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரத்தை அடுத்த புவியூர் என்ற கிராமத்திற்கு தொழில் நிமித்தமாக சென்றார் முத்துக்குட்டி. அங்கு திருமாலை என்ற பெண் அவருக்கு அறிமுகமானார். அந்தப் பகுதியில் உள்ள ஊரல்வாய்மொழி என்ற ஊரைச் சேர்ந்த ஒருவரோடு திருமணம் ஆகி விதவை ஆன அந்தப் பெண்ணுக்கு 2 குழந்தைகளும் இருந்தனர்.

ஒரு விதவைப் பெண்ணுக்குத்தான் வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்ற புரட்சி எண்ணம் கொண்ட முத்துக்குட்டி, திருமாலையை திருமணம் செய்ய முடிவு செய்தார். திருமாலையும் அதற்கு இசைந்தார். தனது விருப்பத்தைப் பெற்றோரிடம் கூறினார் முத்துக்குட்டி. இதைக் கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். மகனின் திருமண முடிவை எதிர்த்தனர். பெற்றோரை எதிர்த்துத் திருமாலையை திருமணம் செய்து இல்லறத்தில் இணைந்தார் முத்துக்குட்டி. 

திருமாலையுடன் இல்லறத்தில் இணைந்த முத்துக்குட்டி, பனை ஏறும் தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால் குடும்பம் நடத்த முடியாமல் தவித்தார். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதனீரை சமஸ்தான கைக்கூலிகள் பறித்துச் சென்றதால் பல நாட்கள் குடும்பத்தோடு பட்டினி கிடக்கவும் நேர்ந்தது. பெற்றோரை எதிர்த்து விதவைப் பெண்ணை மணம் முடித்ததால், அவருடைய உறவினர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.

பெற்றெடுத்த ஒரே பிள்ளை படும் கஷ்டத்தை தாங்க முடியாத முத்துக்குட்டியின் பெற்றோர், அடுத்துத் தங்களை மாற்றிக் கொண்டனர். மகனையும், மருமகளையும் ஏற்றுக்கொண்டனர். 

அவ்வாறு பிரிந்து கிடந்த குடும்பங்கள் ஒன்றாக இணைந்த போதுதான் பெரும் சோதனையும் ஏற்பட்டது. திடீரென்று மர்ம நோய் தாக்கி உடல் மெலிந்து படுத்த படுக்கை ஆனார், இளைஞரான முத்துக்குட்டி. என்ன நோய் தாக்கி இருக்கிறது என்பதை அவருக்கு சிகிச்சை அளித்த நாட்டு மருத்துவர்களால் உறுதி செய்ய இயலவில்லை. பல்வேறு வைத்தியர்களிடம் அழைத்துச் சென்றும் முத்துக்குட்டியின் நோய் மட்டும் தீர்ந்தபாடில்லை.

”வந்தவள் நேரம் சரியில்ல. ஏற்கனவே, புருசனை விழுங்கியவள்தானே... அதனால்தான் முத்துக்குட்டிக்கு இப்படி ஆகிவிட்டது... எல்லாம் விதவையை மணந்ததால் வந்த வினை... ” என்று முத்துக்குட்டியின் உறவினர்களும், நண்பர்களும் திருமாலையைக் குறை சொல்லத் தொடங்கினர்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. முத்துக்குட்டி படுத்த படுக்கையாகவே கிடந்தார். அவரது மரணம் நெருங்கியது எல்லோருக்கும் நன்றாகவே தெரிந்தது. அந்தச் சூழ்நிலையில்தான், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசி மகா மகம் வந்தது.

ஒருநாள் வெயிலாளின் கனவில் தோன்றிய திருமால், திருச்செந்தூரில் நடக்க உள்ள மாசித் திருவிழாவில் கடலில் முத்துக்குட்டியைப் புனித நீராட வைத்தால் முத்துக்குட்டியின் நோய் சரியாகிவிடும் என்று கூறிவிட்டு மறைந்தார்.

“வந்து சொன்ன உத்தரவை மகனே நீ கேளு என்று
விந்து வழிக் கிளையோர் மிகுவாகக் கேட்டிருக்க
சொல்லுகிறாள் அந்த சொற்பனத்தை அன்போரே
நல்லுறவாய்க் கேளுமென்று நவிலுகிறாள் அன்போரே
ஆயிரத்து எட்டு ஆண்டு இதுவாம் இவ்வருடம்
மாசியென்னும் மாதமிது வாய்த்த தேதி பத்தொன்பது
இம்மாதம் இத்தேதி ஏற்ற திருச்செந்தூரில்
நம்மாணைக் கொடியேற்றி
நல்ல திருநாள் நடக்கும்
அங்கு உன் மகனை அழைத்து வருவாயானால்
எங்குளோரும் அறிய இப்பிணியும் தீர்த்து
நல்ல பேறும் கொடுப்போம்
நம் ஆணை தப்பாது...”
- என்று இதுகுறித்து அகிலத்திரட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனவு கலைந்து எழுந்த வெயிலாள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதுபற்றி கணவரிடம் கூறினார். மறுநாளே, அறுபடை நாயகன் முருகப்பெருமான் அருள்பாலிக்கும் திருச்செந்தூர் செல்ல பொன்னுமாடன் நாடாரும், வெயிலாளும் ஏற்பாடுகளைச் செய்தனர்.
சாமித்தோப்பில் இருந்து 80 மைல் தொலைவில் உள்ள திருச்செந்தூர் செல்ல ஒன்று... வண்டி பூட்டி செல்ல வேண்டும் இல்லை கால்நடை பயணம்தான்.

திருவிதாங்கூர் சமஸ்தான கெடுபிடிகளால் வண்டி பூட்டி செல்ல முடியாது என்பதால், தூளி கட்டி அதில் முத்துக்குட்டியைக் கிடத்தி, வெயிலாளும், திருமாலையும் தூக்கிக் கொண்டனர். அவர்களுக்குத் தேவையான ஒரு வார உணவையும் கட்டிக் கொண்டனர். பொன்னுமாடனும் அவரது உறவினர் சிலரும் சேர்ந்து புறப்பட்டனர்.
சில நாள் பயணத்திற்கு பிறகு ஒருவழியாக திருச்செந்தூர் வந்து சேர்ந்தனர்.

அன்று மாசி 19-ந் தேதி (தமிழ் வருடப்படி 1008-ம் ஆண்டு). அன்றுதான் மகா மகம்.

திருச்செந்தூர் கடலில் புனித நீராட, தூளியில் படுத்துக் கிடந்த முத்துக்குட்டியைத் தூக்கி நிறுத்தினர். சிறிய பாத்திரத்தில் கடல்நீரை மொண்டு முத்துக்குட்டியின் மீது ஊற்றினர். அப்போதுதான் அவர்கள் எதிர்பார்க்காத அந்த சம்பவம் நடந்தது. திடீரென்று நோய் நீங்கியதுபோல் எழுந்து நின்றார் முத்துக்குட்டி. நேராக கடலுக்குள் நடந்து சென்றார். அப்போது வேகமாக வந்த அலை ஒன்று முத்துக்குட்டியை வாரி சுருட்டிக் கொண்டு சென்றது. அதை நேரில் கண்ட முத்துக்குட்டியின் உறவினர்கள் திகைத்துப் போனார்கள்.

(தொடரும்...)
Share:

கன்னிப்பெண் கேட்ட சீதனம்

 
பானாசுரன் எனும் அரக்கன் மிகுந்த பலம் கொண்டவனாக மாற விரும்பி அதற்காக சிவபெருமானை வேண்டித் தவம் இருந்தான்.

பானாசுரனின் சீரிய தவம் ஈசனின் மனதைக் கரைத்தது. அவன் முன்பு தோன்றினார். 

“பக்தா! உன் வேண்டுதல் என்ன? எதற்காக என்னை நோக்கி தவம்?”

“தங்களிடம் வரம் வேண்டிதான் இந்த தவம் அய்யனே...”

“என்ன வரம் வேண்டும்? நீயே கேள்...”

“எந்த ஆண் மகனாலும் எனக்கு அழிவு ஏற்படக்கூடாது. ஒரே ஒரு கன்னிப்பெண் தவிர, வேறு எவருக்குமே போரில் என்னை வெல்லும் தகுதி இருக்கக் கூடாது...” என்று வரம் கேட்டான் பானாசுரன்.

சிவபெருமான்,  அவன் கேட்ட வரத்தைத் தந்து மறைந்தார்.

ஈசனிடம் பெற்ற வரத்தின் மூலம் மிகுந்த பலசாலி ஆன பானாசுரன் மனிதர்கள் மட்டுமின்றி தேவர்கள், முனிவர்கள் எல்லோருமே தனக்கு அடிமை என்று மமதை கொண்டான். அவர்களைப் பலவாறு துன்புறுத்தத் தொடங்கினான்.

அசுரனின் கொடுமை தாங்க முடியாத தேவர்களும், முனிவர்களும் அன்னை பராசக்தியிடம் இது குறித்து முறையிட்டனர். அவனை அழித்துத் தங்களைக் காப்பாற்றும்படி வேண்டினர். அவளும் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்தாள்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் உதவுவதாக வாக்களித்த அன்னை பராசக்தி ஒரு கன்னிப் பெண்ணாகப் பூமியில் அவதரித்தாள். தென் தமிழகத்தில் முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனையில் நின்றபடி தவம் புரிந்தாள்.

கன்னியாகுமரி அருகே உள்ள சுசீந்திரத்தில் கோவில் கொண்டுள்ள தாணுமாலயன் (சிவபெருமான்). அவளை முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். தனது விருப்பம் பற்றி பராசக்தியிடம் கூற... அவளும் திருமணத்திற்குச் சம்மதித்தாள்.

இதையறிந்த தேவர்களும், முனிவர்களும் வேறு மாதிரியாக சிந்தித்தனர். கன்னிப்பெண்ணாக அவதரித்த பராசக்திக்கு கல்யாண ஆசை வந்து  திருமணமும் நடந்து விட்டால் பானாசுரனை அழிக்கும் எண்ணம் மாறிப் போய்விடும் என்று அஞ்சினர். 

துபற்றி ஈசனிடம் கூறத் துணிவில்லாததால் நாரதரிடம் உதவி வேண்டினர். அவரும் அவர்களுக்கு உதவுவதாக வாக்களிக்க, மகிழ்ச்சியுடன் திரும்பினர்.

தொடர்ந்து, நாரதரே அன்னை பராசக்தி சார்பில் தாணுமாலையனை சந்தித்து, திருமணம் சம்பந்தமாக பேசினார். தன்னை மணக்க இரு நிபந்தனைகளை பராசக்தி விதித்து இருப்பதாக அப்போது தாணுமாலையனிடம் அவர் கூறினார்.

“என்ன நிபந்தனை அவை? ” என்றார் தாணுமாலையன்.

“கன்னிப்பெண்ணை மணக்க வேண்டும் என்றால் சீர்வரிசைப் பொருட்களாக கண் இல்லாத தேங்காய், காம்பு இல்லாத மாங்காய், நரம்பு இல்லாத வெற்றிலை, கணு இல்லாத கரும்பு, இதழ் இல்லாத பூ ஆகியவற்றை சீதனப் பொருட்களாக கொண்டுவர வேண்டும். இது முதல் நிபந்தனை”.

“அடுத்தது...?”

“சுவாமி! சூரிய உதயத்தில் திருமணம் நடைபெற வேண்டும். அதற்கு ஒரு நாழிகை முன்பாகவே மாப்பிள்ளை மணவறைக்கு வந்து சேர்ந்து விட வேண்டும். இவைதான் அன்னை பராசக்தியின் நிபந்தனைகள்”.

“சரி... நானும் அதை ஏற்றுக் கொண்டேன் என்று பதில் சொல்லிவிடும்” என்று நாரதரிடம் கூறினார் ஈசன்.

திருமணத்திற்காக குறித்த நாளும் வந்தது. அன்னை பராசக்தி கூறியபடி சீர்வரிசைப் பொருட்களை தேடிக் கண்டுபிடித்து வரவழைத்து விட்டார் ஈசன். அவற்றைக் கன்னியாகுமரிக்கு அனுப்பி வைத்தார். சரியான நேரத்திற்குள் மணவறைக்குச் சென்றுவிட வேண்டும் என்ற வேகத்தில் தாணுமாலயனும் குமரிக்குப் புறப்பட்டார்.

ஏற்கனவே நிபந்தனை என்ற பெயரில் கலகத்தை ஆரம்பித்து வைத்த நாரதர், தாணுமாலையன் செல்லும் வழியில் சேவல் உருவெடுத்து கொக்கரக்கோ... என்று கூவினார்.

‘முகூர்த்த நேரம் தவறி, இப்போதே விடிந்துவிட்டதே. பராசக்தி சொன்னபடி கன்னியாகுமரிக்கு செல்ல முடியாதே...’ என்று தவித்த தாணுமாலயன், வேறு வழியின்றி வந்த வழியே  சுசீந்திரத்திற்கே திரும்பி விட்டார்.

அதேநேரம், தன்னைத் திருமணம் செய்து கொள்ள சிவபெருமான் வருவார் என் நம்பிக்கையில் பராசக்தி. நின்றபடியான தனது தவத்தைத் தொடர்ந்தாள்.

இதற்கிடையில், கன்னிப்பெண்ணான பராசக்தி குமரிமுனையில் தவம் இருப்பதை அறிந்த பானாசுரன், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவளுக்கு தூது அனுப்பினான். அவனது கோரிக்கையை நிராகரித்த பராசக்தி, ‘ஒரு அசுரனுக்கு இவ்வளவு தைரியமா?’ என்று பொங்கியெழுந்தாள்.

ஆனால், பானாசுரனோ, திருமணம் செய்தால், பராசக்தியைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒற்றைக்காலில் நின்றான். எப்படியாவது அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த அவன், அதற்காக அவளை கடத்திக் கொண்டு வர முடிவு செய்தான்.

ஒருநாள் பராசக்தியைக் கடத்திச் செல்ல முயன்றான். ஆக்ரோஷமாக பொங்கியெழுந்தாள் தேவி. தேவர்கள், முனிவர்கள் எதிர்பார்த்தது போலவே இருவருக்கும் போர் மூண்டது. இறுதியில், பானாசுரனை வதம் செய்தாள் பராசக்தி. தேவர்களும், முனிவர்களும் பூமாரி பொழிந்து பராசக்தியை வாழ்த்தினர்.

பானாசுரனை அழித்த பிறகும் குமரி முனையில் தனது தவத்தைத் தொடர்ந்தாள் பராசக்தி. அவளது தவம் இன்றும் தொடர்வதாக நம்பிக்கை உள்ளது. தவத்திலிருக்கும் பராசக்திதான் குமரி பகவதி அம்மனாக நமக்கு அருள் புரிந்து கொண்டிருக்கிறாள்.

அன்னை பராசக்தி குமரி முனையில் நின்றபடி தவம் புரிந்த பாறை ‘ஸ்ரீபாறை’ என்று அழைக்கப்படுகிறது. சுவாமி விவேகானந்தர் பாறைக்கு எதிரே இது உள்ளது.

 விவேகானந்தர் பாறைக்கு எதிரே ‘ஸ்ரீபாறை’

பின்குறிப்பு : அன்னை பராசக்திக்குத் திருமண சீர்வரிசைப் பொருட்களாக தாணுமாலையன் அனுப்பி வைத்த கண் இல்லாத தேங்காய், காம்பு இல்லாத மாங்காய், நரம்பு இல்லாத வெற்றிலை, கணு இல்லாத கரும்பு, இதழ் இல்லாத பூ ஆகியவையே பல்வேறு நிறம் கொண்ட மணல்களாக இன்றும் குமரி கடற்கரையில் கிடப்பதாக நம்பிக்கை.

(திருவிளையாடல்கள் தொடரும்)
Share:

திங்கள், 8 நவம்பர், 2010

பிரம்படி பெற்ற இறைவன்

 
திடீரென்று வைகை ஆற்றில் பெரும் வெள்ளம். 

மதுரையில் வைகைக் கரையோரம் அமைந்திருந்த பகுதிகள் எல்லாம் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன.

இந்த வெள்ளப்பெருக்கு மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனையும் திடுக்கிடச் செய்து விட்டது.

வீட்டுக்கு ஒரு ஆண் மண்வெட்டியுடன் புறப்பட்டால்தான், கட்டுக்கடங்காமல் ஓடும் வெள்ளத்திற்கு அணை போட முடியும் என்பதால், மன்னனிடம் இருந்து உடனடியாக உத்தரவு பறந்தது. வீட்டிற்கு ஒரு ஆண் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த புறப்பட்டனர்.

ந்த மதுரை மாநகரில் வந்தியம்மை என்ற முதிய பெண்மணி, புட்டு விற்று தனியாக பிழைப்பு நடத்தி வந்தாள். தினமும் புட்டை விற்க ஆரம்பிக்கும் முன்பு, முதல் புட்டை சிவபெருமானுக்கு படைப்பது இவளது வழக்கம். சிவபெருமான் மீது அந்த அளவுக்கு பக்தி கொண்டிருந்தாள்.

வைகையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்த வந்தியம்மையின் பொருட்டு செல்ல ஆண்கள் யாரும் இல்லை. ஆனாலும், அவளை அந்த பணியில் ஈடுபடச் செய்ய உத்தரவு மட்டும் வந்துவிட்டது.

முதியவளான என்னால் என்னச் செய்ய முடியும்? என்று, தினமும் தான் வணங்கும் சிவபெருமான் முன்பு கண் கலங்கினாள். அவளது கண்ணீர் அந்த இறைவனையே உருக வைத்து விட்டது.

அப்போது, “அம்மா...” என்று யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தாள்.

அங்கே ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். ஆம்... அந்த இளைஞன் வேறுயாருமில்லை. சிவபெருமான் தான்!

அம்மா, ங்களுக்காக நான் வெள்ளப் பெருக்கைத் தடுக்கச் செல்கிறேன். அதற்குக் கூலியாக எனக்கு நீ புட்டு தர வேண்டும்” என்று கேட்டார் இளைஞன் உருவில் இருந்த சிவபெருமான்.
ந்தியம்மையும் அதற்கு சம்மதித்தாள். 

அவள் கொடுத்த சிறிதளவு புட்டை அங்கேயே வாங்கி சாப்பிட்டு விட்டு, கையில் மண்வெட்டியுடன் வைகைக் கரையை அடைக்க புறப்பட்டார் சிவபெருமான்.

அங்கே, வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தும் பணியில் ஏராளமான ஆண்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பாண்டிய மன்னனின் ஆட்கள் பணிகளை முடுக்கி விட்டுக் கொண்டிருந்தனர். 

மன்னனும் பணிகள் எப்படி நடக்கிறது என்று பார்வையிட்டுக் கொண்டே வந்தான்.

ஓரிடத்தில் ஒரு இளைஞன் மண்வெட்டியை ஓரமாக வைத்து விட்டு வேலை செய்யாமல் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த மன்னனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. நேராக அவனை நோக்கிச் சென்றான்.
அந்த இளைஞன் வேறு யாருமல்ல. புட்டுக்காக மண் சுமக்க வந்த சிவபெருமானேதான். மன்னன் அருகே வந்து நிற்பது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தார். 

ஏற்கனவே கோபத்தின் உச்சியில் இருந்த மன்னன், அருகில் கிடந்த பிரம்பை எடுத்து சிவபெருமானை ஓங்கி அடித்தான். அந்த அடி பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிர்களிடமும் எதிரொலித்தது. அடித்த மன்னனுக்கும் வலித்தது.

பிரம்பைக் கீழே போட்டபடி அந்த இளைனைப் பார்த்தான் மன்னன். அப்போதுதான், அந்த இளைஞன் சிவபெருமான் என்பதை உணர்ந்தான் மன்னன். 

அவன் தவறை உணர்ந்த அடுத்த நொடியே இறைவனும் மறைந்து விட்டார். தான் புட்டு வாங்கி உண்ட வந்தியம்மைக்கு முக்தியும் அளித்தார்.

உலக உயிர்கள் அனைத்தும் நானே... என்ற தத்துவத்தை உணர்த்த சிவபெருமான் நிகழ்த்திய 61-வது திருவிளையாடல் இது.

இந்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் மதுரை மாநகரிலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் ஆவணி மூல உற்சவத்தில் இறைவன் பிரம்படிபட்ட நிகழ்வு புட்டுத் திருவிழாவாக இடம் பெறுகிறது. இந்த திருவிழா நடைபெறும் மதுரை - ஆரப்பாளையம்  அருகேயுள்ள வைகை கரையோரம் அமைந்துள்ள பகுதியை இன்றும் ‘புட்டுத்தோப்பு’ என்றே அழைக்கின்றனர்

(திருவிளையாடல்கள் தொடரும்)


Share:

சனி, 6 நவம்பர், 2010

செவ்வாய் கிரகத்தில் உங்கள் பெயரை பதியலாம்

 பூமியில் இருந்து பல கோடி மைல் தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம். சந்திரனுக்கு அடுத்தப்படியாக மனிதன் அதிக ஆர்வம் காட்டும் கிரகம் இதுதான்.

பூமியை விட்டால், அடுத்து மனிதன் குடியேற தகுதியான இடம் இந்த செவ்வாயாகத்தான் இருக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு. இதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளிக்கழகம் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இப்போதைய நிலவரப்படி செவ்வாயில் மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலைகள் இல்லை என்று தெரிய வந்தாலும், அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்றே கணிக்கின்றனர் விஞ்ஞானிகள்.
செவ்வாய் கிரகத்தை சென்றடைய சில வருடங்கள் பயணிக்க வேண்டும் என்பதால், அந்த கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் முழுமையான முன்னேற்றங்கள் இதுவரை ஏற்படவில்லை.

என்றாலும், இந்த கிரகம் தொடர்பாக நாசா விண்வெளிக்கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு அனைவரையும் மகிழ்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு உங்கள் பெயரை அனுப்ப வேண்டுமா? நாங்க ரெடி... நீங்க ரெடியா? என்பதுதான் அந்த அறிவிப்பு.

நாசா விண்வெளிக்கழகம் சார்பில் அடுத்த 2011-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு ஒரு செயற்கைக்கோள் அனுப்பப்பட உள்ளது. அந்த செயற்கைக்கோளில் நமது பெயர்களை ஒரு மைக்ரோசிப்பில் பதிவு செய்து அனுப்பவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

உங்கள் பெயரையும் நாசா அனுப்பும் மைக்ரோ சிப்பில் பதிய வேண்டுமா?
இதற்கு நீங்க செய்ய வேண்டியது, ஆன் லைனில் சிறிதுநேரம் இருக்க வேண்டியது மட்டும்தான். வேறு எந்த செலவும் இல்லை.

http://marsparticipate.jpl.nasa.gov/msl/participate/sendyourname/    - இந்த இணைய தள பக்கத்திற்கு செல்லுங்கள். உங்கள் பெயர் மற்றும் உங்களது நாட்டின் பெயர், உங்கள் ஏரியாவின் 6 இலக்க கோடு நம்பர் ஆகியவற்றை டைப் செய்து, சப்மிட் செய்துவிட்டால் போதும்.

அடுத்த நொடியே இன்னொரு பைல் திறக்கும். நீங்கள் உங்கள் பெயரை பதிவு செய்ததற்கான நன்றி கடிதம்தான் அது. உங்கள் பங்களிப்பை உறுதி செய்ததற்கான நம்பரும் இதில் இடம்பெற்று இருக்கும்.

அந்த பக்கத்தில் உள்ள பிரின்ட் ஆப்சனில் கிளிக் செய்தால், உங்கள் பங்களிப்புக்கான சான்றிதழ் திறக்கும். அதை நீங்கள் பிரிண்ட் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.

இனி நீங்கள், என் பெயர் செவ்வாய் கிரகத்துலேயும் இருக்கு என்று தைரியமாக மார்தட்டிக் கொள்ளலாம். பொய் சொல்வதற்கு அளவே இல்லையா என்று யாரேனும் கேட்டால் அவர்களிடம் அந்த சான்றிதழை காண்பித்து, அவர்களது வாயை அடைத்து விடுங்கள்.

-      நெல்லை விவேகநந்தா
Share:

செவ்வாய், 2 நவம்பர், 2010

அய்யா வைகுண்டர் வரலாறு - 4


4. முத்துக்குட்டியின் முடிவு

இன்றைய சாமித்தோப்பில் பொன்னுமாடன் நாடார் - வெயிலாள் தம்பதியருக்கு மகனாக பிறந்த முத்துக்குட்டியின் இளமைகால வாழ்க்கை அவ்வளவு இனிமையானதாக அமையவில்லை. தாழ்த்தப்பட்ட ஜாதி பட்டியலில் இடம் பெற்றிருந்த நாடார் சமூகத்தில் பிறந்ததே அதற்கு காரணம். முத்துக்குட்டி கல்வி கற்கும் வயதை அடைந்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் கல்வி கற்கக்கூடாது என்ற எழுதப்படாத சட்டம் இருந்ததால் முத்துக்குட்டியால் பள்ளிக்கூடத்திற்குச் சென்று கல்வி கற்க முடியவில்லை.

அப்போது, ஆதிக்க ஜாதியினருக்கு மட்டுமே கல்விக் கூடங்கள் செயல்பட்டன. பல இடங்களில் கோவில்களே கல்விக்கூடங்களாக மாறி கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. இங்கும் உயர் ஜாதியினரின் குழந்தைகள் மட்டும்தான் கல்வி கற்க முடியும். தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்த 18 ஜாதியினர் கோவில் பக்கமே எட்டிப் பார்க்கக் கூடாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் முத்துக்குட்டிக்கு எங்கே கல்வி கிடைக்கும்? ஆனாலும், சாமித்தோப்பு பகுதியில் வாழ்ந்த தாழ்த்தப்பட்டவர்களின் மரியாதைக்குரியவராக பொன்னுமாடன் இருந்ததால், அந்த ஊரில் பெரியவர் ஒருவர் நடத்திய பகுதி நேர திண்ணைப் பள்ளிக்கூடத்தில் முத்துக்குட்டியை சேர்த்து விட்டார். பெரியவரிடம் கல்வி பயின்ற முத்துக்குட்டி பல்வேறு நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொண்டார். 

தந்தையைப் போலவே இரக்க குணமும் இவரிடம் நிரம்பியிருந்தது. அதேநேரம், தாழ்த்தப்பட்டவர்கள் அனுதினமும் நசுக்கப்படுவதை கண்டு உணர்ச்சி வசப்படுபவராகவும் இருந்தார். ஆதிக்க ஜாதியினர், தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவதை நேரில் கண்டு மனம் வருந்திய அவர், ஆதிக்க ஜாதியினரின் கொட்டத்தை அடக்குவதற்கு வீரம் தேவை என்பதை உணர்ந்தார். 

அதையொட்டி, களறி உள்ளிட்ட சண்டைப் பயிற்சிகளில் ஈடுபட்டு சிறந்த தேர்ச்சி பெற்றார். நாட்கள் வேகமாக நகர்ந்தன. முத்துக்குட்டி வேகமாக வளர்ந்து இளைஞர் ஆனார்.

தந்தை பொன்னுமாடன் தீவிர பெருமாள் பக்தர் என்பதால், அந்த தாக்கம் முத்துக்குட்டியிடமும் ஒட்டிக் கொண்டது. சிறு வயது முதலே திருமால் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டார். ஆனால், அன்றைய சூழ்நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள் கோவில்களுக்குள் வரக்கூடாது என்ற ஆதிக்க ஜாதியினரின் தடை இருந்ததால், வீட்டிலேயே திருமால் பீடத்தை அமைத்து வணங்க ஆரம்பித்தார்.

அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியில் திருமால் போன்ற தெய்வங்கள் கூட ஆதிக்க ஜாதியினரின் தெய்வங்களாகவே இருந்தனர். தாழ்த்தப்பட்டவர்கள் அவர்களை வணங்க தகுதி அற்றவர்கள் என்றே அறிவிக்கப்பட்டனர். அதனால், தாழ்த்தப்பட்டோர் திருமால் போன்ற ஆதிக்க ஜாதியினர் வழிபட்ட தெய்வ விக்கிரகங்களை கண்ணால் பார்க்கக்கூட முடியாத நிலையே தொடர்ந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், திருமாலுக்கு வீட்டிலேயே பீடம் அமைத்து வழிபட்ட முத்துக்குட்டியை சமூக புரட்சியாளர் என்று தாராளமாகச் சொல்லலாம்.

முத்துக்குட்டி இளமையிலேயே புரட்சி எண்ணம் கொண்டு வளர்வதைக் கண்ட அவரது பெற்றோர் ஒருவகையில் கவலைப்பட்டாலும், மற்றொரு வகையில்... தாழ்த்தப்பட்டவர்களின் அடிமை விலங்குகளை உடைத்தெறிய இப்படியொருவன் நமது சமுதாயத்திற்கு தேவைதான் என்று எண்ணி பெருமிதப்பட்டுக் கொண்டனர்.

மேலும், முத்துக்குட்டியின் புரட்சி எண்ணங்கள், அவர் சார்ந்த சமுதாயத்தினருக்கும், பிற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் உற்சாகம் கொடுப்பதாக அமைந்தது.

“ஊருக்குத் தலைவன் உடைய வழிக்குந் தலைவன்
ஆருக்குந் தலைவன் என்று அன்னை பிதா வளர்த்தார்
ஞாயமிருப்பதனால் நாடாள்வானென்று சொல்லி
தாய் மக்களெல்லாம் தாங்கி மிக வளர்த்தார்
சொல்லுக்கும் வல்லவனாய் சூராதி சூரனிவன்
மல்லுக்கும் வல்லவனாய் உபாயத்திலும் பெரியோன்
மங்கையர்க்கு மேற்றவனாய் மாமோகக் காமீகன்
எங்கும் பேர் கேட்க வைப்பான் இவன் கீர்த்தி நலவளமை
பல்லாக்கு ஏறிடுவான் பார் முழுதும் ஆண்டிடுவான்
எல்லார்க்கும் நல்லவனாய் இவன் சமைவான் என்று சொல்லி
ஈவதற்கு தர்மன் என எளியோரை கண்பார்த்து
ஆய்வதற்கு நல்லான் என்றே மிக வளர்ந்தார்...”

- இப்படி, முத்துக்குட்டியின் இளமை வாழ்க்கை பற்றி குறிப்பிடுகிறது அகிலத்திரட்டு.

தந்தை எவ்வழியோ மகனும் அவ்வழி என்பார்கள். அதுபோல், முத்துக்குட்டியும் தந்தை மேற்கொண்ட பனை ஏறுதல் உள்ளிட்ட பனை சார்ந்த தொழிலில் ஈடுபட்டார். ஆனால், அவருக்கு அதில் ஈடுபாடு இல்லை. காரணம், இங்கேயும் ஆதிக்கம் செலுத்தினர், உயர் ஜாதியினர். அதாவது, ‘கட்டுக்குத்தகை’ என்ற பெயரில் தாழ்த்தப்பட்டவர்கள் வைத்திருக்கும் சிறு சிறு நிலங்களையும் ஆதிக்க ஜாதியினர் பிடுங்கிக் கொண்டனர். அந்த நிலத்தில் அவர்களையே விவசாயப் பணிகள் செய்ய வைத்து, விளைச்சலை எல்லாம் ஒட்டு மொத்தமாக அபகரித்துக் கொண்டனர். இருந்த சிறு நிலத்தை மட்டுமின்றி, உழைப்பையும் பறி கொடுத்து, கூலி வேலையை விடவும் கேவலமான வேலையே தாழ்த்தப்பட்டவர்களுக்கு மிஞ்சியது.

இதையெல்லாம் பார்த்து சகிக்க முடியாத முத்துக்குட்டி வெகுண்டு எழுந்தார். “எவ்வளவு காலத்திற்குத்தான் நாம் எல்லாம் ஆதிக்க ஜாதியினருக்கு அடிமையாக இருப்பது? இப்படியே போனால் நமக்கு உணர்ச்சி என்பதே இல்லாமல் போய்விடும். அப்புறம்... களத்தில் சொன்னதைச் செய்யும் காளை மாட்டிற்கும், நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்...” என்று, தனது சமுதாய இளைஞர்களிடம் பொங்கியெழுந்தார். அவரது புரட்சிக்கரமான பேச்சு நாதியற்று, உரிமைப் பற்றி பேச திறனற்று கிடந்த தாழ்த்தப்பட்ட இளைஞர்களை உசுப்பி விட்டது.

மேலும், தந்தையைப் போலவே பனைத்தொழில் செய்து வந்த முத்துக்குட்டி, மேல் ஜாதியினரால் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக்கப்பட... அவருக்குள் புரட்சித் தீ இன்னும் வேகமாக பற்றி எரிந்தது. அதைத் தொடர்ந்து, தனது சமுதாய மக்கள் ஏன் இன்னும் குட்டக் குட்ட குனிந்து கொண்டே போகிறார்கள்? என்ற தேடலிலும் இறங்கினார்.

காலம் காலமாக தொடர்ந்து வந்த மூடநம்பிக்கைகளும், எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் அடங்கிப் போகும் குணமுமே தனது சமுதாய மக்கள் இன்னும் முன்னேறாமல், ஆதிக்க ஜாதியினரின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கு காரணம் என்பதை உணர்ந்தார்.

இதையடுத்து, தனது சமுதாய மக்களிடம் என்னென்ன மூட பழக்கவழக்கங்கள் உள்ளன என்பது பற்றி ஆராய்ந்தார். அதில் முதலிடம் பிடித்தது, கணவனை இழந்த பெண்களின் நிலை. அவர்களை, திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்க விடாமல் ஒதுக்கி வைத்திருந்தனர். இவற்றை நேரில் கண்ட முத்துக்குட்டி, திருமணம் என்று ஒன்று தனக்கு நடந்தால், அது கணவனை இழந்த ஒரு பெண்ணுடன்தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தார். அப்போது முத்துக்குட்டிக்கு வயது 17 ஆகியிருந்தது.

(தொடரும்...)
Share: