செவ்வாய், 16 நவம்பர், 2010

அய்யா வைகுண்டர் வரலாறு - 5


5. விதவையை மணந்ததால் வந்த வினை
 -நெல்லை விவேகநந்தா-

ருநாள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரத்தை அடுத்த புவியூர் என்ற கிராமத்திற்கு தொழில் நிமித்தமாக சென்றார் முத்துக்குட்டி. அங்கு திருமாலை என்ற பெண் அவருக்கு அறிமுகமானார். அந்தப் பகுதியில் உள்ள ஊரல்வாய்மொழி என்ற ஊரைச் சேர்ந்த ஒருவரோடு திருமணம் ஆகி விதவை ஆன அந்தப் பெண்ணுக்கு 2 குழந்தைகளும் இருந்தனர்.

ஒரு விதவைப் பெண்ணுக்குத்தான் வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்ற புரட்சி எண்ணம் கொண்ட முத்துக்குட்டி, திருமாலையை திருமணம் செய்ய முடிவு செய்தார். திருமாலையும் அதற்கு இசைந்தார். தனது விருப்பத்தைப் பெற்றோரிடம் கூறினார் முத்துக்குட்டி. இதைக் கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். மகனின் திருமண முடிவை எதிர்த்தனர். பெற்றோரை எதிர்த்துத் திருமாலையை திருமணம் செய்து இல்லறத்தில் இணைந்தார் முத்துக்குட்டி. 

திருமாலையுடன் இல்லறத்தில் இணைந்த முத்துக்குட்டி, பனை ஏறும் தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால் குடும்பம் நடத்த முடியாமல் தவித்தார். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதனீரை சமஸ்தான கைக்கூலிகள் பறித்துச் சென்றதால் பல நாட்கள் குடும்பத்தோடு பட்டினி கிடக்கவும் நேர்ந்தது. பெற்றோரை எதிர்த்து விதவைப் பெண்ணை மணம் முடித்ததால், அவருடைய உறவினர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.

பெற்றெடுத்த ஒரே பிள்ளை படும் கஷ்டத்தை தாங்க முடியாத முத்துக்குட்டியின் பெற்றோர், அடுத்துத் தங்களை மாற்றிக் கொண்டனர். மகனையும், மருமகளையும் ஏற்றுக்கொண்டனர். 

அவ்வாறு பிரிந்து கிடந்த குடும்பங்கள் ஒன்றாக இணைந்த போதுதான் பெரும் சோதனையும் ஏற்பட்டது. திடீரென்று மர்ம நோய் தாக்கி உடல் மெலிந்து படுத்த படுக்கை ஆனார், இளைஞரான முத்துக்குட்டி. என்ன நோய் தாக்கி இருக்கிறது என்பதை அவருக்கு சிகிச்சை அளித்த நாட்டு மருத்துவர்களால் உறுதி செய்ய இயலவில்லை. பல்வேறு வைத்தியர்களிடம் அழைத்துச் சென்றும் முத்துக்குட்டியின் நோய் மட்டும் தீர்ந்தபாடில்லை.

”வந்தவள் நேரம் சரியில்ல. ஏற்கனவே, புருசனை விழுங்கியவள்தானே... அதனால்தான் முத்துக்குட்டிக்கு இப்படி ஆகிவிட்டது... எல்லாம் விதவையை மணந்ததால் வந்த வினை... ” என்று முத்துக்குட்டியின் உறவினர்களும், நண்பர்களும் திருமாலையைக் குறை சொல்லத் தொடங்கினர்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. முத்துக்குட்டி படுத்த படுக்கையாகவே கிடந்தார். அவரது மரணம் நெருங்கியது எல்லோருக்கும் நன்றாகவே தெரிந்தது. அந்தச் சூழ்நிலையில்தான், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசி மகா மகம் வந்தது.

ஒருநாள் வெயிலாளின் கனவில் தோன்றிய திருமால், திருச்செந்தூரில் நடக்க உள்ள மாசித் திருவிழாவில் கடலில் முத்துக்குட்டியைப் புனித நீராட வைத்தால் முத்துக்குட்டியின் நோய் சரியாகிவிடும் என்று கூறிவிட்டு மறைந்தார்.

“வந்து சொன்ன உத்தரவை மகனே நீ கேளு என்று
விந்து வழிக் கிளையோர் மிகுவாகக் கேட்டிருக்க
சொல்லுகிறாள் அந்த சொற்பனத்தை அன்போரே
நல்லுறவாய்க் கேளுமென்று நவிலுகிறாள் அன்போரே
ஆயிரத்து எட்டு ஆண்டு இதுவாம் இவ்வருடம்
மாசியென்னும் மாதமிது வாய்த்த தேதி பத்தொன்பது
இம்மாதம் இத்தேதி ஏற்ற திருச்செந்தூரில்
நம்மாணைக் கொடியேற்றி
நல்ல திருநாள் நடக்கும்
அங்கு உன் மகனை அழைத்து வருவாயானால்
எங்குளோரும் அறிய இப்பிணியும் தீர்த்து
நல்ல பேறும் கொடுப்போம்
நம் ஆணை தப்பாது...”
- என்று இதுகுறித்து அகிலத்திரட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனவு கலைந்து எழுந்த வெயிலாள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதுபற்றி கணவரிடம் கூறினார். மறுநாளே, அறுபடை நாயகன் முருகப்பெருமான் அருள்பாலிக்கும் திருச்செந்தூர் செல்ல பொன்னுமாடன் நாடாரும், வெயிலாளும் ஏற்பாடுகளைச் செய்தனர்.
சாமித்தோப்பில் இருந்து 80 மைல் தொலைவில் உள்ள திருச்செந்தூர் செல்ல ஒன்று... வண்டி பூட்டி செல்ல வேண்டும் இல்லை கால்நடை பயணம்தான்.

திருவிதாங்கூர் சமஸ்தான கெடுபிடிகளால் வண்டி பூட்டி செல்ல முடியாது என்பதால், தூளி கட்டி அதில் முத்துக்குட்டியைக் கிடத்தி, வெயிலாளும், திருமாலையும் தூக்கிக் கொண்டனர். அவர்களுக்குத் தேவையான ஒரு வார உணவையும் கட்டிக் கொண்டனர். பொன்னுமாடனும் அவரது உறவினர் சிலரும் சேர்ந்து புறப்பட்டனர்.
சில நாள் பயணத்திற்கு பிறகு ஒருவழியாக திருச்செந்தூர் வந்து சேர்ந்தனர்.

அன்று மாசி 19-ந் தேதி (தமிழ் வருடப்படி 1008-ம் ஆண்டு). அன்றுதான் மகா மகம்.

திருச்செந்தூர் கடலில் புனித நீராட, தூளியில் படுத்துக் கிடந்த முத்துக்குட்டியைத் தூக்கி நிறுத்தினர். சிறிய பாத்திரத்தில் கடல்நீரை மொண்டு முத்துக்குட்டியின் மீது ஊற்றினர். அப்போதுதான் அவர்கள் எதிர்பார்க்காத அந்த சம்பவம் நடந்தது. திடீரென்று நோய் நீங்கியதுபோல் எழுந்து நின்றார் முத்துக்குட்டி. நேராக கடலுக்குள் நடந்து சென்றார். அப்போது வேகமாக வந்த அலை ஒன்று முத்துக்குட்டியை வாரி சுருட்டிக் கொண்டு சென்றது. அதை நேரில் கண்ட முத்துக்குட்டியின் உறவினர்கள் திகைத்துப் போனார்கள்.

(தொடரும்...)
Share:

கன்னிப்பெண் கேட்ட சீதனம்

 
பானாசுரன் எனும் அரக்கன் மிகுந்த பலம் கொண்டவனாக மாற விரும்பி அதற்காக சிவபெருமானை வேண்டித் தவம் இருந்தான்.

பானாசுரனின் சீரிய தவம் ஈசனின் மனதைக் கரைத்தது. அவன் முன்பு தோன்றினார். 

“பக்தா! உன் வேண்டுதல் என்ன? எதற்காக என்னை நோக்கி தவம்?”

“தங்களிடம் வரம் வேண்டிதான் இந்த தவம் அய்யனே...”

“என்ன வரம் வேண்டும்? நீயே கேள்...”

“எந்த ஆண் மகனாலும் எனக்கு அழிவு ஏற்படக்கூடாது. ஒரே ஒரு கன்னிப்பெண் தவிர, வேறு எவருக்குமே போரில் என்னை வெல்லும் தகுதி இருக்கக் கூடாது...” என்று வரம் கேட்டான் பானாசுரன்.

சிவபெருமான்,  அவன் கேட்ட வரத்தைத் தந்து மறைந்தார்.

ஈசனிடம் பெற்ற வரத்தின் மூலம் மிகுந்த பலசாலி ஆன பானாசுரன் மனிதர்கள் மட்டுமின்றி தேவர்கள், முனிவர்கள் எல்லோருமே தனக்கு அடிமை என்று மமதை கொண்டான். அவர்களைப் பலவாறு துன்புறுத்தத் தொடங்கினான்.

அசுரனின் கொடுமை தாங்க முடியாத தேவர்களும், முனிவர்களும் அன்னை பராசக்தியிடம் இது குறித்து முறையிட்டனர். அவனை அழித்துத் தங்களைக் காப்பாற்றும்படி வேண்டினர். அவளும் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்தாள்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் உதவுவதாக வாக்களித்த அன்னை பராசக்தி ஒரு கன்னிப் பெண்ணாகப் பூமியில் அவதரித்தாள். தென் தமிழகத்தில் முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனையில் நின்றபடி தவம் புரிந்தாள்.

கன்னியாகுமரி அருகே உள்ள சுசீந்திரத்தில் கோவில் கொண்டுள்ள தாணுமாலயன் (சிவபெருமான்). அவளை முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். தனது விருப்பம் பற்றி பராசக்தியிடம் கூற... அவளும் திருமணத்திற்குச் சம்மதித்தாள்.

இதையறிந்த தேவர்களும், முனிவர்களும் வேறு மாதிரியாக சிந்தித்தனர். கன்னிப்பெண்ணாக அவதரித்த பராசக்திக்கு கல்யாண ஆசை வந்து  திருமணமும் நடந்து விட்டால் பானாசுரனை அழிக்கும் எண்ணம் மாறிப் போய்விடும் என்று அஞ்சினர். 

துபற்றி ஈசனிடம் கூறத் துணிவில்லாததால் நாரதரிடம் உதவி வேண்டினர். அவரும் அவர்களுக்கு உதவுவதாக வாக்களிக்க, மகிழ்ச்சியுடன் திரும்பினர்.

தொடர்ந்து, நாரதரே அன்னை பராசக்தி சார்பில் தாணுமாலையனை சந்தித்து, திருமணம் சம்பந்தமாக பேசினார். தன்னை மணக்க இரு நிபந்தனைகளை பராசக்தி விதித்து இருப்பதாக அப்போது தாணுமாலையனிடம் அவர் கூறினார்.

“என்ன நிபந்தனை அவை? ” என்றார் தாணுமாலையன்.

“கன்னிப்பெண்ணை மணக்க வேண்டும் என்றால் சீர்வரிசைப் பொருட்களாக கண் இல்லாத தேங்காய், காம்பு இல்லாத மாங்காய், நரம்பு இல்லாத வெற்றிலை, கணு இல்லாத கரும்பு, இதழ் இல்லாத பூ ஆகியவற்றை சீதனப் பொருட்களாக கொண்டுவர வேண்டும். இது முதல் நிபந்தனை”.

“அடுத்தது...?”

“சுவாமி! சூரிய உதயத்தில் திருமணம் நடைபெற வேண்டும். அதற்கு ஒரு நாழிகை முன்பாகவே மாப்பிள்ளை மணவறைக்கு வந்து சேர்ந்து விட வேண்டும். இவைதான் அன்னை பராசக்தியின் நிபந்தனைகள்”.

“சரி... நானும் அதை ஏற்றுக் கொண்டேன் என்று பதில் சொல்லிவிடும்” என்று நாரதரிடம் கூறினார் ஈசன்.

திருமணத்திற்காக குறித்த நாளும் வந்தது. அன்னை பராசக்தி கூறியபடி சீர்வரிசைப் பொருட்களை தேடிக் கண்டுபிடித்து வரவழைத்து விட்டார் ஈசன். அவற்றைக் கன்னியாகுமரிக்கு அனுப்பி வைத்தார். சரியான நேரத்திற்குள் மணவறைக்குச் சென்றுவிட வேண்டும் என்ற வேகத்தில் தாணுமாலயனும் குமரிக்குப் புறப்பட்டார்.

ஏற்கனவே நிபந்தனை என்ற பெயரில் கலகத்தை ஆரம்பித்து வைத்த நாரதர், தாணுமாலையன் செல்லும் வழியில் சேவல் உருவெடுத்து கொக்கரக்கோ... என்று கூவினார்.

‘முகூர்த்த நேரம் தவறி, இப்போதே விடிந்துவிட்டதே. பராசக்தி சொன்னபடி கன்னியாகுமரிக்கு செல்ல முடியாதே...’ என்று தவித்த தாணுமாலயன், வேறு வழியின்றி வந்த வழியே  சுசீந்திரத்திற்கே திரும்பி விட்டார்.

அதேநேரம், தன்னைத் திருமணம் செய்து கொள்ள சிவபெருமான் வருவார் என் நம்பிக்கையில் பராசக்தி. நின்றபடியான தனது தவத்தைத் தொடர்ந்தாள்.

இதற்கிடையில், கன்னிப்பெண்ணான பராசக்தி குமரிமுனையில் தவம் இருப்பதை அறிந்த பானாசுரன், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவளுக்கு தூது அனுப்பினான். அவனது கோரிக்கையை நிராகரித்த பராசக்தி, ‘ஒரு அசுரனுக்கு இவ்வளவு தைரியமா?’ என்று பொங்கியெழுந்தாள்.

ஆனால், பானாசுரனோ, திருமணம் செய்தால், பராசக்தியைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒற்றைக்காலில் நின்றான். எப்படியாவது அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த அவன், அதற்காக அவளை கடத்திக் கொண்டு வர முடிவு செய்தான்.

ஒருநாள் பராசக்தியைக் கடத்திச் செல்ல முயன்றான். ஆக்ரோஷமாக பொங்கியெழுந்தாள் தேவி. தேவர்கள், முனிவர்கள் எதிர்பார்த்தது போலவே இருவருக்கும் போர் மூண்டது. இறுதியில், பானாசுரனை வதம் செய்தாள் பராசக்தி. தேவர்களும், முனிவர்களும் பூமாரி பொழிந்து பராசக்தியை வாழ்த்தினர்.

பானாசுரனை அழித்த பிறகும் குமரி முனையில் தனது தவத்தைத் தொடர்ந்தாள் பராசக்தி. அவளது தவம் இன்றும் தொடர்வதாக நம்பிக்கை உள்ளது. தவத்திலிருக்கும் பராசக்திதான் குமரி பகவதி அம்மனாக நமக்கு அருள் புரிந்து கொண்டிருக்கிறாள்.

அன்னை பராசக்தி குமரி முனையில் நின்றபடி தவம் புரிந்த பாறை ‘ஸ்ரீபாறை’ என்று அழைக்கப்படுகிறது. சுவாமி விவேகானந்தர் பாறைக்கு எதிரே இது உள்ளது.

 விவேகானந்தர் பாறைக்கு எதிரே ‘ஸ்ரீபாறை’

பின்குறிப்பு : அன்னை பராசக்திக்குத் திருமண சீர்வரிசைப் பொருட்களாக தாணுமாலையன் அனுப்பி வைத்த கண் இல்லாத தேங்காய், காம்பு இல்லாத மாங்காய், நரம்பு இல்லாத வெற்றிலை, கணு இல்லாத கரும்பு, இதழ் இல்லாத பூ ஆகியவையே பல்வேறு நிறம் கொண்ட மணல்களாக இன்றும் குமரி கடற்கரையில் கிடப்பதாக நம்பிக்கை.

(திருவிளையாடல்கள் தொடரும்)
Share: