ஞாயிறு, 30 அக்டோபர், 2011

சாந்திமுகூர்த்த சாபம்


வர் ஒரு சிறந்த ஜோதிடர். ஆனால் குழந்தை இல்லை. பலவித விரதங்கள் மேற்கொண்டதன் பலனாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் ஜாதகத்தை கணித்த தந்தையான ஜோதிடர் அதிர்ந்து போனார். சாந்திமுகூர்த்தம் அன்று அவளது கணவர் இறந்து போவான் என்று உணர்ந்தார். பெரிதும் வருந்தினார். இருந்தாலும், பாக்கியவதி என்று தனது மகளுக்கு பெயர் சூட்டினார்.


ஆண்டுகள் நகர்ந்தன. அந்த குழந்தை வளர்ந்து பருவ வயதை அடைந்தது. மகளை மணக்க விரும்புகிறவர்களிடம், சாந்திமுகூர்த்தம் அன்று மணமகன் இறந்து போவான் என்று உண்மையைச் சொல்வார் ஜோதிடர். வந்தவர்கள் வந்த வழியே சென்றுவிடுவார்கள். இப்படியே பலர் வந்து போனார்கள். பாக்கியவதிக்கு திருமணம் ஆகாமல் பல காலம் கழிந்தது.


ஒருநாள், அறிவில் சிறந்த, துணிச்சல் மிகுந்த இளைஞன் ஒருவன் ஜோதிடரை அணுகி, அவரது மகளை மணக்க விரும்புவதாக கூறினான். ஜோதிடரும் வழக்கம்போல், "நீ சாந்திமுகூர்த்தம் அன்று இறந்து போவாய்" என்றார். உடனே, அந்த இளைஞன், "நானும் சாஸ்திரங்களை கற்றறிந்தவன் தான். மரணத்திற்கு அஞ்சுபவன் கோழை. நான் வீரன்" என்று சூளுரைத்தான்.


ஒரு நல்ல நாளில் பாக்கியவதி, அந்த இளைஞன் திருமணம் நடந்தது. அன்று இரவு சாந்திமுகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்தார் ஜோதிடர். நாளை மருமகன் உயிரோடு இருக்க மாட்டான் என்று உறுதி செய்து கொண்டு, அவனது இறுதிச்சடங்குக்கும் கூடவே ஏற்பாடு செய்தார். பாக்கியவதி முதல் நாள் இரவில் தனிமையில் கணவனை சந்தித்தாள். தான் கற்றறிந்த வேதங்கள் பற்றி அவளுக்கு கூறினான்.


அப்போது, அவனுக்கு திடீரென்று வயிற்றுவலி உண்டானது. அன்றைய தினம் உணவு அதிகமாக சாப்பிட்டதால் அந்த நிலை ஏற்பட்டது. அருகில் உள்ள தோப்புக்கு சென்றான். வயிற்று உபாதை நீங்கியதும் பக்கத்தில் தண்ணீர் தேங்கி நின்ற சிறிய குட்டையில் கால் அலம்பச் சென்றான். அப்போது அவனது காலை ஒரு முதலை கவ்விக்கொண்டது.


"மரணம் வரும் என்று எனக்கு முன்பே தெரியும். மரணத்தை கண்டு நான் அஞ்ச மாட்டேன். என்னை கொஞ்சம் விடு. எனது அன்பு மனைவியிடம் தகவல் கூறிவிட்டு மீண்டும் வருகிறேன்" என்றான். "நீ என்ன அரிச்சந்திரனா? உன்னை விட்டால் வரமாட்டாய். எனக்கு பசிக்கிறது. அதனால் நீ எனக்கு வேண்டும்" என்றது அந்த முதலை.


உடனே, அவன், "முதலையே! நான் சத்தியத்தை மதிப்பவன். என்னை நம்பு. உறுதியாக வருகிறேன்" என்றான்.


அதற்கு முதலை, "மனைவியிடம் தகவல் கூறிவிட்டு வராமல் போவேன் என்றால், சாப்பிடுகின்றபோது விளக்கு அணைந்த பின் எவன் உண்பானோ அவன் போகின்ற நரகம் போவேன் என்று சத்தியம் செய், விடுகிறேன்" என்றது. அதன்படி அவன் சத்தியம் செய்ய, முதலை அவனை விட்டது.


சாந்திமுகூர்த்தத்திற்காக காத்துக்கொண்டிருந்த மனைவியிடம் நடந்ததை கூறி, அவளை தழுவி விடைபெற்று முதலை இருக்கும் இடத்தை நோக்கி மீண்டும் வந்தான். பாக்கியவதி பெரிதும் வருந்தினாள். இறைவன் அருளாள் அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. கணவனுக்கு தெரியாமல் அவனை பின்தொடர்ந்தாள்.


அந்தநேரம் முதலை அருகில் வந்த அவளது கணவன், "முதலையே! நான் வந்து விட்டேன். என்னை உணவாக ஏற்றுக்கொள்" என்றான். முதலை ஆவலுடன் அவனது காலை பற்றிக்கொண்டது. அந்தநேரம், அவனை பின்தொடர்ந்து வந்த பாக்கியவதி, எரிகின்ற ஒரு விளக்கை காண்பித்து அணைத்துவிட்டாள். இதை கண்ட முதலை அவளது கணவனது தனது பிடியில் இருந்து விட்டுவிட்டது.


"உன்னை நான் உண்ணும் நேரத்தில் விளக்கு அணைந்து விட்டது. அதனால் உண்ண மாட்டேன். நீ போகலாம்" என்றபடி விலகிக்கொண்டது முதலை. திரும்பி பார்த்தான் அவன். அருகே மகாலட்சுமியைபோல் நிற்கும் மனைவி பாக்கியவதியை கண்டான். அவளது மதிநுட்பத்தை எண்ணி வியந்தான்.


ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்பார்கள். இங்கே ஒரு கணவனின் அல்லல் அழிந்ததும் ஒரு பெண்ணாலே தான். இதை எல்லோரும் உணருங்கள்.


- இந்தக் கதையை சொன்னவர் திருமுருக கிருபானந்த வாரியார்.


Share: