செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

விடுதலை கொடு அன்பே...


எனக்கு
ரொம்ப பிடிக்கும்
அன்றலர்ந்த தாமரையாய்
உந்தன் முகத்தில் பிரகாசிக்கும்
அந்த
வெள்ளி நீர்வீழ்ச்சிச் சிரிப்புகள்...

அதை காண
கண்கள் கோடி வேண்டும்...
வரம் அருள மாட்டாரா
அந்த பிரம்மன்?
எத்தனிக்கும்
எந்தன் ஆவல்களுக்கு
ஆறுதல் தேடுகிறேன் பல நேரம்!

உந்தன்
பொற்பாதத்தில் சிணுங்கும்
கொலுசொலியின் கீதத்தில்
என்னை எனக்குள்ளேயே
நானே தொலைத்த நாட்கள்
அனுதினமும் மலராதா?

மெல்லிய உரையாடலில்
ஏகத்துக்கும் எனை தழுவிய
உந்தன் ஞாபகங்களின் தாலாட்டில்
எந்தன் வாழ்க்கைக்கு - ஓர்
அர்த்தம் பெறுகிறேன்...

உந்தன்
சின்ன விரல்களின்
இனிய தீண்டலில்
முன்னுரையுடன் பயணமாகும்
எந்தன் கனவுகளுக்கு
உயிர் கொடுக்க மாட்டாயா?

நான் - நான்தானா?
என்னுள் பலபரீட்சை
செய்வித்த நீ - உந்தன்
அழியா நினைவுகளுடன்
எந்தன் வாழ்வில்
அணைபோட மாட்டாயா?

உந்தன் விழி வலையில் சிக்கி
தூக்கத்தை தொலைத்த
எந்தன் கண்களுக்கு
விடுதலை கொடுத்துவிடு;
அப்படியே
என்னையும்
உனதாய் ஏற்றுவிடு...!
- கவிஞர் நெல்லை விவேகநந்தா.

Share:

கேப்டனுடன் ஒரு நாள்...


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அரசியலுக்கு வர வேண்டும், தமிழக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த லட்சக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன். அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். ஆனால், அவர் ஆட்சிக்கட்டிலில் அமரும் நாள்தான் இன்னும் கைகூடவில்லை. விரைவில் அந்த நாள் வரும் என்று நம்புகிறேன்.

ஒருமுறை அவரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் ஒரு பத்திரிக்கையாளன் என்பதால் அப்போது நீண்ட நேரம் அவருடன் பேச முடிந்தது. காரைக்குடியில் உள்ள ஒரு செட்டிநாட்டு பங்களாவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவருடன் பேசினேன்.

கேப்டன் அரசியலுக்கு வந்தது ஏன்? என்பதில் தொடங்கி, இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்கிற - அவரது ஆழ்மனதில் புதைந்து கிடக்கிற பேராசை, லஞ்சம் ஒழிய வேண்டும் என்கிற அவரது கொந்தளிப்பான பேச்சு... என்று என்னை அப்போது அவரிடம் இருந்து கவர்ந்த விஷயங்கள் பல.

இந்த சந்திப்புக்கு முன்னதாகவே, கேப்டன் அரசியலுக்கு வந்த புதிதில் அவருக்காக ஒரு பாடல் எழுதி இருந்தேன். ஒருவேளை நான் சினிமா பாடலாசிரியராக இருந்தால் நிச்சயம் அந்த பாடல் அவரது ஒரு படத்தில் ஓப்பனிங் சாங் ஆக இடம் பெற்றிருக்கும். ஆனால், நான் சாதாரண பத்திரிக்கையாளன் தானே...

அதேநேரம், அந்த பாடலை நீங்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் என்ற எனது ஆசை வெகுநாட்களுக்கு பிறகு இப்போது எனது இந்த வலைப்பூ வழியாக நிறைவேறியுள்ளது. அதற்காக நான் மட்டற்ற மகிழ்ச்சி அடையும் அதேநேரத்தில், உங்களையும் எனது பாடல் ஈர்க்கும் என்று நம்புகிறேன்.

இதோ அந்த பாடல், சரணம் - பல்லவியுடன்...

பல்லவி
வர்றாரு... வர்றாரு... நம்ம தலைவரு வர்றாரு
நம் நாடு செழிக்கப் போகுது;
தரணி மகிழப் போகுது, சொல்றாரு - அத
செய்வாரு நம்ம தலைவரு!

இமயத்த விட உயர்ந்தவன்டா
ஏழைகள் மனச புரிஞ்சவன்டா
இப்படி ஒருவன் இந்த உலகில் யாரடா?
அதுதான் நம்ம தலைவரு,
சொல்றாங்க மக்கள் சொல்றாங்க (வர்றாரு...)

சரணம் - 1

கப்பலுக்கு தேவை ஒரு கேப்டன் - நம்ம
மக்களுக்கு தேவை இந்த கேப்டன்!
எதிரியும் இவருக்கு சிலர் இருந்ததுண்டு
மதியும் மறந்து அவர்கள் பேசியதுண்டு
பொறுத்தார் பூமியாள்வார் - சொன்னவர்
நம்ம தலைவரடா - இனி
அதை செய்பவரும் நம்ம தலைவரடா! (வர்றாரு...)

சரணம் - 2

வாரி கொடுப்பதில் தராதரம் தெரியாது இவனுக்கு
அவனுக்கு துரோகம் செய்தால்... - அவன்
பார்வை ஒன்றே போதுமே எதிரிக்கு!

கொடுத்து கொடுத்து கரம் சிவந்தவன் இவனடா
வாரி வழங்குவதில் இவனுக்கு ஈடு யாரடா? (வர்றாரு...)

சரணம் - 3

இவன் அகராதியில் அச்சத்திற்கு பொருளில்லை - அந்த
சிந்தைக்கும் இங்கே இடமில்லை!
இவன் பார்த்தால் எரிமலையும் அடங்கிவிடும்;
சீறும் அலை கடலும் இவன் காலடியில் பணிந்துவிடும்!

இவனுக்கோர் சிம்மாசனம் உள்ளதடா
இந்த மக்கள் மத்தியில் அது தெரியுதடா
இனி நாளும் நல்லநேரம்தான் - அது
உனக்கும் எனக்கும் தெரியும்தான்! (வர்றாரு...)

சரணம் - 4

தொடங்கட்டும் ஒரு புரட்சி
மலரட்டும் புதிய ஆட்சி
அதற்கு நாமே சாட்சி! (வர்றாரு...)

- கவிஞர் நெல்லை விவேகநந்தா.

Share: