வெள்ளி, 16 அக்டோபர், 2009

தண்ணீரில் மிதக்கும் பாறைகள்


ண்ணீரில் மிதக்கும் பாறைகள்

ன்னது... பாறை மிதக்குதா? அதுவும் தண்ணீரிலா? நம்பவே முடியலீயே... என்கிறீர்களா?

"ராமர் தானே கடலில் பாறைகளை மிதக்க விட்டு, அதன் மூலம் இலங்கைக்கு சீதையை மீட்கச் சென்றார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதுவா இது" என்று பலர் கேட்கலாம்? அதுக்கும், இதுக்கும் நிறையவே சம்பந்தம் உள்ளது என்கிறார்கள்.

அதற்குமுன், தண்ணீரில் மிதக்கும் பாறைகள் பற்றி பார்ப்போமே...

ராமேசுவரத்தில் உள்ள துளசி பாபா மடத்திற்கு சென்றபோது இந்த மிதக்கும் பாறைகளைப் பார்த்தேன். அங்கு, தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த பாறைகளை பார்க்க வந்த சிலருக்கு சந்தேகம் வர (எனக்கும் சந்தேகம் வந்தது), அங்குள்ளவர்கள் பாறை தூக்கி வேண்டுமானாலும் பாருங்கள் என்று கூறினார்கள். அதன்படி, பாறையை தூக்கிப்பார்த்தவர்கள், "அம்மாடியோவ்... என்ன அழகா பாறை தண்ணீரில் மிதக்கிறது" என்று முகபாவனையாலேயே வியப்பை தெரிவித்தனர். நானும் தூக்கிப்பார்த்து வியந்தேன்.

பாறையை கூர்ந்து கவனித்தபோது, உண்மையிலேயே இது பாறை தானா என்று சந்தேகம் வந்தது எனக்கு. அந்த மடத்தின் ஊழியர் ஒருவரிடம் அதுபற்றி கேட்டேன்.

"இதுவும் பாறை தான். ஆனால், வழக்கமான பாறை அல்ல. இதற்கு பெயர் பவளப்பாறை" என்றவர், அந்த பாறை இந்த மடத்திற்கு எப்படி வந்தது என்ற சம்பவத்தையும் என்னிடம் சொன்னார்.

"17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமபிரான் இலங்கைக்கு சீதையை மீட்க சென்றபோது குறுக்கிட்ட கடலை எப்படி கடப்பது என்று யோசித்தார். அப்போது பாறைகளை கடலுக்குள் தூக்கிப்போட்டார். அந்த பாறைகள் எல்லாம் கடலில் மூழ்காமல் மிதந்தன. மிதந்த பாறைகளின் வழியாக இலங்கை சென்று சீதையை மீட்டு வந்தார் ராமர்.

இந்த பாறைகள் தனுஷ்கோடிக்கும், இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளன. இதைத் தான் ராமர் பாலம் என்று அழைக்கிறோம்.

தற்போது, இந்த மடத்தில் உள்ள பாறைகள் தனுஷ்கோடியில் இருந்து எடுக்கப்பட்டவைதான். ராமர் இலங்கை செல்ல கடலுக்குள் தூக்கிப்போட்ட பாறைகள் தான் இவை. ராமர் தனுஷ்கோடி வழியாக இலங்கை சென்றதன் நினைவாக தனுஷ்கோடியில் ராமர் கோவில் ஒன்று இருந்தது. 1964ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடியே சின்னாபின்னாமானபோது இந்த கோவிலும் சிதைந்து போனது.

அந்த புயலுக்கு பின்னர், அங்கிருந்த ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோரது சிலைகள் இங்கு கொண்டு வரப்பட்டன. அப்போது, வடநாட்டு சாதுக்கள் தனுஷ்கோடி கடல்கரையில் ஏராளமான பாறைகள் மிதந்து கொண்டிருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டனர். அந்த பாறைகளில் சுமார் 2 ஆயிரம் பாறைகளை அவர்கள் சேகரித்து எடுத்தனர். அவர்கள் எடுத்துச் சென்ற பாறைகளில் 60 பாறைகள் இந்த மடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள பாறைகளை வட நாட்டிற்கு கொண்டு சென்றனர். இன்று பூரி ஜெகநாதர் கோவில், குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகா கிருஷ்ணர் கோவில் மற்றும் ரிஷிகேஷ், பத்திரிநாத், அலகாபாத், திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களில் காணப்படும் மிதக்கும் பாறைகள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டவையே! புதுச்சேரியில் உள்ள அனுமார் கோவிலிலும் இந்த மிதக்கும் பாறைகளை காணலாம்...." என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் அந்த ஊழியர்.

இந்த துளசி பாபா மடத்தில் ராமர் பயன்படுத்தியதாக கூறப்படும் பாறைகள் தவிர, தனுஷ்கோடியில் இருந்த ராமர் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோரது சிலைகளும் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள், யாத்திரீகர்கள் இங்கும் வந்துவிட்டு செல்கிறார்கள்.
Share:

ராமேசுவரம் தீர்த்தங்கள்


புண்ணியம் தரும்

 ராமேசுவரம் தீர்த்தங்கள்

ராமேசுவரத்தில் வழிபாடும், மஹோததியும் (வங்காள விரிகுடா கடல்), ரத்தினகரமும் (இந்திய பெருங்கடல்) கூடும் இடமான தனுஷ்கோடியில் (சேது) முழுக்கும் செய்தால் தான் காசி யாத்திரை பூர்த்தியாகும் என்பார்கள். இதனால் தான் வடநாட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கில் தினமும் ராமேசுவரத்திற்கு வந்து செல்கிறார்கள்.

அவ்வாறு வரும் பக்தர்கள் இங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடிச் செல்வதை பெரும் பாக்கியமாக கொண்டுள்ளனர். ராமேசுவரத்தில் மொத்தம் 53 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் 22 தீர்த்தங்கள் ராமநாதசுவாமி கோவிலுக்குள் அமைந்துள்ளன. மீதமுள்ள 31 தீர்த்தங்கள் ராமேசுவரத்தை சுற்றி அமைந்துள்ளன.

ராமநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ள தீர்த்தங்கள் பற்றி இங்கே பார்ப்போம்...

இந்த கோவிலில் உள்ள ஒவ்வொரு தீர்த்தமும் தனி மகிமை பெற்று காணப்படுகிறது. இங்குள்ள முதலாவது தீர்த்தம் மகாலெட்சுமி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இது இங்குள்ள அனுமார் கோவிலுக்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது தர்மராஜன் ஸ்நானம் செய்து ஐஸ்வர்யம் பெற்றதாக கருதப்படுகிறது.

இரண்டாவது தீர்த்தம் சாவித்திரி தீர்த்தம். மூன்றாவது தீர்த்தம் காயத்திரி தீர்த்தம். நான்காவது சரஸ்வதி தீர்த்தம். இந்த மூன்று தீர்த்தங்களும் இங்குள்ள அனுமார் கோவிலுக்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ளன. காசிபர் மகாராஜா சாபம் நீங்கியது இந்த தீர்த்தங்களில்தான் என்பது ஐதீகம்.

ஐந்தாவது தீர்த்தம் சேதுமாதவ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தெப்பக்குளம்தான் இந்த தீர்த்தம். இதில் நீராடுவதால் மகாலட்சுமியின் அனுக்கிரகமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் கிடைக்கும் என்கிறார்கள்.



ஆறாவது தீர்த்தம் கந்தமாதன தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சேது மாதவர் கோவில் பகுதியில் அமைந்துள்ள இதில் நீராடுவதால், தரித்திரம் நீங்கி சகல ஐஸ்வரியமும் கிடைக்கும், பிரம்மஹத்தியாதி பாவம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

ஏழாவது தீர்த்தம் சுவாட்ச தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இதுவும் சேது மாதவர் கோவில் பகுதியில் அமைந்துள்ளது. இதில் நீராடினால் நரகத்திற்கு யாரும் செல்ல மாட்டார்கள் என்பது ஐதீகம்.

எட்டாவது தீர்த்தம் கவாய தீர்த்தம். சேதுமாதவர் கோவில் பகுதியிலேயே அமைந்துள்ள இந்த தீர்த்தத்தில் நீராடினால் கற்பக விருச்சவாசம் கிடைக்கும் என்கிறார்கள்.

ஒன்பதாவது தீர்த்தம் நள தீர்த்தம். சேது மாதவர் கோவில் பகுதியில் உள்ள இதில் நீராடுபவர்கள் சூர்ய தேஜஸை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவார்கள் என்பது நம்பிக்கை.

பத்தாவது தீர்த்தமான நீள தீர்தத்தில் நீராடுவதால் சமஸ்தயாக பலனை அடைந்து அக்னியோக பதவி கிடைக்கும் என்கிறார்கள்.
11-வது தீர்த்தம் சங்கு தீர்த்தம். இதில், வத்ரிநாப முனிவர் செய்நன்றி மறந்த பாவம் நீங்கியது என்பது ஐதீகம்.

12-வது தீர்த்தமான சக்கர தீர்த்தம் சூரியன் பொன்கை பெற்றது என்றும், 13-வது தீர்த்தமான பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் பிரம்மஹத்தியாதி பாவம் தீர்ப்பதாகவும், 14-வது தீர்த்தமான சூரிய தீர்த்தம் திரிகால ஞானமும், அந்தந்த உலக பிராப்தியும் தருவதாகவும், 15-வது தீர்த்தமான சந்திர தீர்த்தத்தில் நீராடுவதால் திரிகாசி ஞானமும், அந்தநித உலக பிராப்தியும் கிடைப்பதாக நம்பப்படுகிறது.

16-வது தீர்த்தம் கங்கா தீர்த்தம். 17-வது தீர்த்தம் யமுனா தீர்த்தம். அதற்கு அடுத்தது கயா தீர்த்தம். இந்த 3 தீர்த்தங்களில் ஞான சுருதிராஜன் ஞானம் பெற்றதாக கூறுகிறார்கள்.

19-வது தீர்த்தம் சிவ தீர்த்தம். பைரவர் பிரம்மஹத்தி நிவர்த்தியானது இந்த தீர்த்தம் தான் என்கிறார்கள்.
20-வது தீர்த்தம் சாத்யமிர்த தீர்த்தம். அம்மன் சன்னதியில் உள்ள இந்த தீர்த்தத்தில் புகுரூனு சக்கரவர்த்தி சாபம் நீங்கப்பெற்றதாக ஐதீகம்.

21-வது தீர்த்தம் சர்வ தீர்த்தம். ராமநாதசுவாமி சன்னதி முன்புள்ள இந்த தீர்த்தத்தில் நீராடியதால் சுதரிசனர் பிறவிக்குருடு நோய் நீங்கியதாக கூறுகிறார்கள்.

22-வது தீர்த்தம் கோடி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ண பகவான் தனது மாமனாகிய கம்சனை கொன்ற பாவம் நீங்கியது இந்த தீர்த்தம் என்கிறார்கள். காசியில் உள்ள கங்கை நீருக்கு சமமானதாக இந்த தீர்த்தம் கருதப்படுகிறது.

- இந்த தீர்த்தங்களில் நீராட வருபவர்களுக்கு தண்ணீரை வாளிகளில் இரைத்து ஊற்ற கோவில் நிர்வாகம் சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாத்திரை பணியாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த பணியில் சுமார் 450 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு நாள் முழுக்க வேலை இருக்காது. கோவிலில் உள்ள அனைத்து தீர்த்தங்களுக்கும் ஒரு முறை சென்று பக்தர்கள் மீது வாளிகளில் நீரை இரைத்து ஊற்ற வேண்டும். ஒரு மணி நேரத்திற்குள் இவர்கள் தங்கள் பணியை முடித்துக்கொள்ள வேண்டும். அடுத்த ஷிப்ட்க்கு மற்றொரு நபர் வந்து விடுவார். ஒரு முறை வந்த நபர் அடுத்த முறை வர 2 நாட்கள் ஆகிவிடும்.

இவ்வாறு ஒரு முறை மட்டும் சென்று பக்தர்கள் மீது தீர்த்த நீர் இரைத்து ஊற்ற இவர்களுக்கு சம்பளம் ரூ.10 தான். இருந்தாலும், தீர்த்தமாட வரும் பக்தர்கள் இவர்களுக்கு தனியாக பணத்தை அன்பளிப்பாக தந்து மகிழ்ச்சிப்படுத்துகின்றனர். இதனால் தான், கடினமான வேலை என்றாலும் இந்த பணியை செய்கிறார்கள் இந்த தொழிலாளர்கள்.

-  நீங்களும் ராமேசுவரம் சென்றால் இந்த தீர்த்தங்களில் தீர்த்தமாடிவிட்டு தான் வாருங்களேன்...
Share:

அய்யப்பன் வரலாறு


அய்யப்பன் வரலாறு

"நாட்டின் அரசனான எனக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. ஆனால், ஒரு குழந்தை இல்லையே! கிருஷ்ணா... நீ எனக்கு கருணை காட்ட மாட்டாயா?"

- தீவிர கிருஷ்ண பக்தரான பந்தள நாட்டு அரசன் ராஜசேகர பாண்டியன் இப்படி வேண்டாத நாட்களே கிடையாது. எறும்பு ஊற, ஊற பாறையும் தேயும் என்பார்களே? அது, இந்த பந்தள மன்னன் விஷயத்திலும் உண்மையானது.

அது எப்படி என்பதற்கு முன்பு, அய்யப்பனின் அவதாரம் நிகழ்ந்த வரலாற்றை பார்ப்போமே...

"நான் யார் தலையில் கையை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகிவிட வேண்டும்" என்று சிவனிடம் வரம் பெற்ற பஸ்மாசுரனை, அழகிய பெண்ணான மோகினியாக அவதாரம் எடுத்து அழித்தார் கிருஷ்ணர். அந்த மோகினியின் அழகில் ‘கவரப்பட்ட‘ சிவபெருமான், அவளை இறுக கட்டித் தழுவ, மார்கழி மாதம் பஞ்சமி திதி சனிக்கிழமை அன்று உத்திரம் நட்சத்திரத்தில் அரி-ஹர புத்திரனாக அய்யப்பனின் அவதாரம் நிகழ்ந்தது.

இனி... பந்தள நாட்டு அரசனின் குழந்தை வேண்டுதல் எப்படி நிறைவேறியது என்பதை பார்ப்போம்...

ஒரு நாள் அரசன் ராஜசேகர பாண்டியன் வேட்டைக்கு சென்று கொண்டிருந்தான். திடீரென்று ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்று பார்த்தான். அழகிய, தெய்வீக அம்சம் நிறைந்த ஒரு ஆண் குழந்தையை கண்டு, அதை அப்படியே வாரியெடுத்து அணைத்து முத்தமிட்டான்.

"கிருஷ்ணா...! உன்னை வணங்கியது வீண் போகவில்லை. குழந்தை இல்லையே என்று ஏங்கிய எனக்கு அழகான ஆண் குழந்தையை கொடுத்துவிட்டாயே!" என்று மகிழ்ந்தான். அவனது கண்ணில் அந்த குழந்தை அகப்பட வேண்டும் என்று தான் சிவனும், கிருஷ்ணரும் அங்கே விட்டுச் சென்றிருந்தனர்.



காட்டில் கண்டெடுத்த குழந்தையை அரண்மனைக்கு எடுத்து சென்றான் ராஜசேகர பாண்டியன். அவனது ராணியும் அந்த குழந்தையை கண்டு மகிழ்ந்தாள். ஒரு குழந்தையை பெற்றெடுத்த உணர்வை பெற்றாள். தான் பெற்ற குழந்தை போலவே வளர்த்தாள். ‘மணிகண்டன்‘ என்ற பெயருடன் அரண்மனையில் அந்த குழந்தை வளரத் தொடங்கியது.

இதற்கிடையில், மகாராணி கர்ப்பமானாள். பத்தாவது மாதத்தில் அவளுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. தான் பெற்ற குழந்தையையும், மணிகண்டனையும் ஒரேமாதிரியாகவே வளர்த்தாள்.

சில வருடங்கள் உருண்டோடின. "மணிகண்டன் இருக்கும் வரை, தங்கள் மகனுக்கு அரசுரிமையில் முதலிடம் கிடைக்காது" என்று தூபம் போட்டு பிரச்சினையை ஆரம்பித்து வைத்தான், ஒரு அமைச்சன். மணிகண்டனை ஒழிக்க முடிவெடுத்தாள் மகாராணி.

ஒரு நாள் தலைவலி என்று படுத்துக் கொண்டாள். புலிப்பால் தான் அதற்கு மருந்து என்று அரண்மனை வைத்தியர் மூலம் மன்னனிடம் சொல்ல வைத்தாள். புலிப்பால் கொண்டுவர மணிகண்டன் காட்டுக்கு அனுப்பப்பட்டார்.
கணவன் சன்னியாசம் போக இடையூறாக இருந்ததால், அவனது சாபத்திற்கு ஆளாகிய ஒரு மனைவி மகிஷி என்ற எருமையாகி விடுகிறாள். "ஒரு பிரம்மச்சாரியால் நீ கொல்லப்பட்டு, சாபவிமோசனம் பெறுவாய்" என்று அவளுக்கு அவளது கணவன் சாபவிமோசனம் கொடுத்திருந்தான்.

அவள், புலிப்பால் தேடி காட்டுக்கு வந்த மணிகண்டனுடன் அழுதா நதிக்கரையில் போர் புரிந்தாள். மணிகண்டனால் கொல்லப்பட்ட பிறகு அவள் தனது சுய உருவத்தை அடைந்து, சாபவிமோசனம் பெற்றாள். மணிகண்டன் அழகில் மயங்கிய அவள், மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றாள். அதற்கு அவர், "நான் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன. அவற்றை எல்லாம் செய்து முடித்த பிறகு உன்னை மணக்கிறேன்" என்கிறார்.

தொடர்ந்து, புலிப்பால் பெற சென்ற அவருக்கு, தேவர்களே புலிகளாக மாறி காட்சி தந்தனர். அந்த புலிகளில் ஒன்றில் மணிகண்டன் ஏறி அமர்ந்து கொள்ள, மற்ற புலிகள் புடைசூழ அரண்மனைக்கு வந்தார். மணிகண்டனின் மகிமையை உணர்ந்த மகாராணியும், அமைச்சரும் திருந்தினர். புலிகளாக வந்த தேவர்கள் தங்கள் சுய உருவத்திற்கு மாறினர்.

தனது பிறப்பு உள்ளிட்ட அனைத்தையும் உணர்ந்த மணிகண்டன், தான் வந்த வேலை முடிந்து விட்டதாகவும், தான் போவதாகவும் கூறிவிட்டு செல்ல முயன்றார். அப்போது, பந்தள மகாராஜா ராஜசேகர பாண்டியன், "மீண்டும் உன்னை நான் எப்போது பார்க்க முடியும்?" என்று கேட்கிறார்.

அதற்கு மணிகண்டன், மகர சங்கராந்தி அன்று (தை 1-ம் தேதி) தான் ஜோதி வடிவில் எல்லோருக்கும் காட்சித் தருவதாகவும், தான் எய்தும் அம்பு எங்கே போய் நிற்கிறதோ, அங்கே தனக்கு ஒரு வாசஸ்தலம் கட்டித்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதன்படி அவர் எய்த அம்பு பம்பை நதிக்கரையில் நின்றது. அங்கு கோவில் எழுப்பப்பட்டது.


அதன்படி அமைந்தது தான் இன்றுள்ள சபரிமலை அய்யப்பன் கோவில். இங்குள்ள அய்யப்பன் விக்ரகத்தை பரசுராமர் பிரதிஷ்டை செய்தார். அன்று முதல் யோக சின் முத்திரை தாங்கிய கோலத்தில் அருள்பாலித்து வருகிறார் அய்யப்பன்.

அவரை மணந்துகொள்ள விரும்பிய மகிஷி, மாளிகைபுரத்து அம்மனாக, அவருக்கு இடது பக்கத்தில் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். இன்றுவரையிலும் அவள் அய்யப்பனுக்காக காத்திருப்பதாக சொல்கிறார்கள்.
Share:

பட்டின் முதல் கதை


நாங்கெல்லாம் சுத்த சைவமாக்கும் என்று, நான் வெஜ்ஜை ஒரு வெட்டு வெட்டும் பார்ட்டிகளைப் பார்த்து முகம் சுழிக்கும் பெண்கள், ஆயிரக்கணக்கான பட்டுப்பூச்சிகளின் உயிர்த் தியாகத்தில் உருவான பளபள பட்டுச் சேலைகளை மேனியில் இழுத்துப் போர்த்திக்கொண்டு வருவதை பார்க்கும்போது....

உங்களுக்கு என்னத் தோன்றும்?

பட்டு இழைகளாக மாறிய பட்டுப்பூச்சிகளுக்கு இரக்கப்படுவதா?
யாரோ செஞ்ச பாவத்துக்கு நாங்க என்ன செய்ய முடியும்? என்று கேட்காமல் கேட்கும் பெண்களுக்கு பாவ மன்னிப்பு வழங்குவதா?

சரி... இது நமக்கு வேண்டாம்.

இந்த பட்டு உருவானது எப்படி என்பது உங்களுக்குத் தெரியுமா?
அதை முதன் முதலாக கண்டறிந்த நிகழ்ச்சியே சுவராஸ்யமானது.

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 2,600 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்திற்கு நாம் இப்போது போவோமா...?

அந்த அழகான சீன நாட்டு அரசி அரண்மனை தோட்டத்தில் இருந்தபடி கிண்ணத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறாள். தோட்டத்தில் எங்குப் பார்த்தாலும் பச்சைப் பசேல். அந்த பச்சைக்கு மத்தியில், செல்லமாய் தட்டிவிட்ட தென்றல் காற்று மீது பொய் கோபம் கொண்டு ஆடி அசைகிறது ஒரு முசுக்கட்டை செடி.

இயற்கையின் அழகை ஏகத்துக்கும் பருகிய அரசியின் கண்கள் இந்த முசுக்கட்டை செடி மீது படர்ந்த அடுத்த கணம், ஏதோ அவளுக்குள் ஓர் உள்ளுணர்வு எழ... அந்த செடியையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள், ரசிக்கிறாள்.

அந்த செடியின் இலை மீது, பார்த்தாலே உவ்வே... என்ற ரியாக்ஷனை சட்டென்று ஏற்படுத்தும் புழு ஒன்று நெளிந்து கொண்டிருக்கிறது. அரசிக்கு, அந்த புழுவை பார்க்க ஒரு மாதிரியாக இருந்தாலும், அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை அறிய தனது பார்வையை கூர்மையாக்கிக் கொண்டாள்.

அப்போது, அவளது அழகான சிறிய உதட்டை அவ்வப்போது முத்தமிட்டு கீழ், மேலாக இறங்கிக் கொண்டிருந்த தேநீர் கப் இடம் மாறி இருந்தது. அரைகுறையாக தேநீர் பருகி முடித்தவளின் முகத்தின் திடீர் ஆச்சரிய ரேகைகள் ஓடத் தொடங்கின.

எப்படி இந்த புழுவால் இப்படியெல்லாம் முடிகிறது என்று யோசித்தாள். ஆம்... அந்த முசுக்கட்டை புழு அழகிய இழைகளால் ஒரு கூடு கட்டிக்கொண்டிருந்தது. அந்த சின்னஞ்சிறிய கூடு அரசிக்கு பிடித்துப் போய்விட, ஆர்வ மிகுதியில் அந்த புழுவை நெருங்கினாள்.

அது கஷ்டப்பட்டு கட்டி இருந்த கூட்டை, தனது அழகிய கரங்களால் அழகாகவே கிள்ளி எடுத்தாள். தனது முகத்திற்கு நேரே தூக்கிப் பார்த்தவளின் கண்களில், அந்த புழு பற்றிய ஆராய்ச்சி மட்டும் முடிந்ததாக தெரியவில்லை.

திடீரென்று என்ன நினைத்தாளோ, தான் மிச்சம் வைத்திருந்த, லேசாக ஆவி பறந்து கொண்டிருந்த தேநீர் கிண்ணத்திற்குள் அந்த புழு கட்டிய கூட்டை போட்டு விட்டாள். தேநீர் கிண்ணத்தில், தண்ணீரில் உயிருக்கு போராடுபவன் போல் மிதந்து மிதந்து மூழ்கிக் கொண்டிருந்த அந்த புழுவின் கூட்டை பார்க்க அரசியின் முகத்தின் மீண்டும் திடீர் மாற்றம்.

தேநீருக்குள் கிடந்த புழு கூட்டை வெளியே எடுத்துப்போட தயக்கம் காட்டிய அவளது கைகள், நீண்டு கொண்டிருந்த புழு கூட்டின் ஒரு பகுதியை மட்டும் பிடித்து இழுத்தன. என்ன ஆச்சரியம்... ஏதோ பளபளக்கும் நூல் வந்தது.

ஒரு புழுவின் கூட்டுக்குள் பளபளக்கும் இப்படி ஒரு பொருள் எப்படி வந்தது என்று தனது இளம் மூளையை கசக்கினாள் அரசி. தனது ஆடையில், இதே பளபளப்பு இருந்தால் எப்படி இருக்கும் என்ற பகல் கனவும் அப்போது அவளுக்குள் திடீரென்று உதயமாகி உசுப்பேற்றியது.

தனது ஆசை கணவனான அரசனிடம் தனது மேலான இந்த விருப்பத்தை சொன்னாள். அரசி சொன்னால் முடியாது என்று சொல்வானா அரசன்?
உடனேயே உத்தரவு பறந்தது. "புழு கூட்டில் இருந்து பளபள நூலை கொண்டு ஆடை நெய்ய வேண்டும். நாளையே அந்த ஆடை, என் ராணியின் மேனியை அலங்கரிக்க வேண்டும்" என்று கம்பீரத்தோடு சொன்னான் அவன்.

ஆடை நெய்பவன் அரசனிடம் பயந்து, பயந்து அந்த கேள்வியை கேட்டான். "மன்னா... இந்த ஒரு நூலை வைத்து தாங்கள் விரும்பும் அலங்கார ஆடையை நெய்ய முடியாது. இதுபோன்று பல நூல்கள் வேண்டும்" என்றான் அவன்.

அப்போது தான் அரசனுக்கும் உண்மை புரிந்தது. அரசி, முசுக்கட்டை செடியில் கண்டுபிடித்த புழு கூடுகளை எங்கிருந்தாலும் கொண்டு வாருங்கள் என்று தனது பணியாளர்களுக்கு அடுத்த கட்டளையை அவசரமாக பிறப்பித்தான். பணியாளர்கள் நாடு முழுவதும் முசுக்கட்டை செடிகளை தேடி ஓடினார்கள். அவற்றை எல்லாம் வெட்டியெடுத்து சேகரித்தார்கள்.

அந்த செடிகளில் கூடு கட்டியிருந்த புழுக்களின் கூடுகளை எல்லாம் ஒன்று சேர்த்து, அதில் இருந்த நூல்களை வெளியே எடுத்தனர். அவற்றைக் கொண்டு ஆடைகளை நெய்தனர். எதிர்பார்த்ததைவிட இன்னும் அதிகமாய் பளபளத்தது அந்த ஆடை.
அந்த பளபள ஆடையை, இந்த உலகில் முதன் முதலில் அணிந்து அழகு பார்த்த அந்த அரசியின் பெயர் சி-லிங்-ஷி. கி.மு.2600ல் சீனாவை ஆட்சி செய்த ஹவாங்-டி என்ற மன்னனின் மனைவி தான் அவள்.

அரசி முதன் முதலாக அணிந்து அழகு பார்த்த இந்த ஆடைக்கு என்ன பெயரிடலாம் என்று யோசித்த மன்னன் ஹவாங்-டி, அதற்கு ஷி என்று அரசியின் பெயரையே சூட்டினான். சீன மொழியில் ஷி என்றால் பட்டு என்று பொருள்.

 பட்டுவை முதன் முதலாக உலகிற்கு அறிமுகம் செய்த சீனர்கள், அந்த பார்முலாவை தங்களுக்குள் சிதம்பர ரகசியமாகவே வைத்திருந்தனர். வேறு யாருக்கும் தெரியவில்லை. பல நூற்றாண்டுகளுக்கு பிறகு தான், கொரியா வழியாக ஜப்பானை அடைந்தது அந்த தொழில் நுட்பம். ஜப்பானை இந்த தொழில் சென்றடைந்தது கி.பி. மூன்றாம் நூற்றாண்டில்

முதன் முதலில் பட்டு சீனாவில் தான் உருவானது என்று பண்டைய காலம் முதலே கூறப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், நம் இந்தியாவில் சீனாவுக்கு முன்பே பட்டு வந்து விட்டது என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

சமஸ்கிருத இலக்கியத்தில் கி.மு.4 ஆயிரமாவது ஆண்டிலேயே இந்தியாவில் பட்டுத் தொழில் நடைபெற்றதாக கூறப்படுகிறது என்கிறார்கள் அவர்கள்.
என்ன தான் இருந்தாலும், பட்டின் கண்டுபிடிப்பு இந்த மனித சமுதாயத்துக்கு கிடைத்த பெரிய கிப்ட் தானே..?
Share:

கனவு


திக்... திக்... - சிறுகதை

சுற்றிலும் இருந்த கும் இருட்டுக்கு மத்தியில் ஒற்றை மின்விளக்கு ஒளியில் திகில் நாவலில் மூழ்கி இருந்தான் அருண். நாவலின் சஸ்பென்ஸ் உச்சத்தால் அக்கம், பக்கம் என்ன நடக்கிறது என்பதையே அவன் மறந்திருந்தான்.

திடீரென ஆப் ஆன கரண்ட் அருணை அப்போது திசை திருப்பியது. திறந்திருந்த ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது, கருப்பு வர்ணம் பூசியதுபோன்று காணப்பட்டது வீதியெங்கும்.


"என்னங்க... கரண்ட் போனதுனால பேன் ஆப் ஆயிடுச்சு. கொஞ்சம் ஜன்னலை திறந்து வையுங்களேன்" - தாய் மரகதம், கணவன் நடராஜனிடம் பேசியது வீட்டின் மெயின் ஹாலையும் ஊடுருவி வந்து அருணின் காதுகளை தொட்டது.
"அருண்... படிச்சது போதும்; முதல்ல படு" - அப்போது அம்மாவின் குரல் சற்று கனத்துடன் வந்து, அருணுக்கு உத்தரவிட்டு மறைந்து போனது.


"சரிம்மா.." என்று, அம்மாவின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்தபடி தலைக்கு மேலே சுவரில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தை பார்த்தான். சரியாக நள்ளிரவு 12 மணியை காட்டிக்கொண்டிருந்த கடிகாரம், அந்த நிசப்தத்திலும் தன்னால் முடிந்த ஓசையை பலமாக எழுப்பிக் கொண்டு அருணை மிரட்டியது.

அடுத்த ஒரு மணி நேரம் வேகமாய் கரைந்திருந்த நிலையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான் அருண். ஆனால், அவனது ஆழ்மனதோ குரங்காய் மரம் விட்டு மரம் தாவிக்கொண்டிருந்தது.

அப்போது -
இரவின் நிசப்தம் மீது கோபம் கொண்டு, அதன் மீது மோதி வேகமாக வந்தது காற்று. காற்று வந்த வேகத்தில் அருண் பூட்டியிருந்த ஜன்னல் தானாக திறந்து டமார் என்ற சத்தத்துடன் அடித்துக்கொண்டு நின்றது.

சத்தம் கேட்டு திடுக்கென எழுந்தான் அருண். படுக்கும் முன் அமைதியாய் காணப்பட்ட இருள் சூழ்ந்த பகுதி, ஒருவித லேசான அலறலுடன் கொக்கரித்துக் கொண்டிருந்தது அப்போது.

திடீரென பின்புறத்தில் நனைந்திருந்த சட்டை அருண் நன்றாக வியர்த்திருந்ததை நினைவுப்படுத்தியது. அப்போது பொங்கி வந்த குளிருக்கு பயந்து சட்டையை கழற்றாமல், கையால் இருகப்பிடித்தபடி தானாக திறந்த ஜன்னலை நோக்கி சென்றான்.

ஜன்னலை மூட கை வைத்தபோது திடீரென ஒரு சத்தம், ஏதோ ஒரு பொருள் கீழே விழுந்து உடைந்ததை ஞாபகப்படுத்தியது. என்னதோ, ஏதோ என்று மனம் திடுக்கிட்டு போனதால் மெதுவாக திரும்பிப் பார்த்தான்.
மேஜை மீது வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பொம்மை கீழே விழுந்து உடைந்து நொறுங்கிக் கிடந்தது.

கல்லூரி டூருக்கு சென்ற இடத்தில் ஆசைப்பட்டு வாங்கிய அந்த பொம்மை திடீரென கீழே விழுந்து உடைந்ததற்கான காரணத்தை அவனால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. உடைந்து போன பொம்மையை கையில் எடுத்துப் பார்த்தான். மீண்டும் பயன்படுத்த வாய்ப்பே இல்லை என்பதை தனது தோற்றத்தால் உணர்த்தியது அந்த கண்ணாடி பொம்மை.

"டர்ர்ர்ர்...." - திடீரென வந்த சத்தம் கேட்டு பயந்து திரும்பப் போய், கையில் இருந்த கண்ணாடி பொம்மையின் உடைந்த ஒரு பகுதி கீழே விழுந்து அருணின் காலை பதம் பார்த்தது. அடிப்பட்ட பகுதியில் லேசாக எட்டிப் பார்த்த ரத்தம் அருணை இன்னும் அதிகமாக பயமுறுத்தியது.

இப்படி ஆயிடுச்சே என்று அவன் குனிந்தபோது, காற்றால் தானே திறந்துகொண்டு நின்ற ஜன்னல் கதவு மீண்டும் இயங்க ஆரம்பித்தது. டமார், டமார் என்று அது இடைவிடாது சிலமுறை அடித்து நின்றபோது நடுங்கியே விட்டான் அருண்.

ஜன்னலை திரும்பிப் பார்த்தபோது வெளியில் திடீரென இடி-மின்னலுடன் மழை கொட்ட ஆரம்பித்திருந்தது. ஜன்னல் அருகே செல்ல மெல்ல காலடி எடுத்து வைத்தான்.

ஜன்னல் வழியே வெளிப்பகுதியை கூர்ந்து நோக்கியபோது, ஒரு பெண் வீதியில் உதவி கேட்பதுபோல் போராடிக் கொண்டிருக்கும் காட்சி அவனது விழித்திரையில் லேசான அலசலோடு பதிவானது.


"யார் இவள்? இந்த நேரத்தில்... இங்கே எப்படி வந்தாள்?" - சில குழப்பங்களுக்கு விடை கொடுக்க கதவை திறந்து பார்க்க முற்பட்டான்.
கதவை திறக்க கை வைத்தபோது உதவி கேட்கும் சத்தம் கொஞ்சம் வேகமாகவே கேட்டது.

"யாராவது வந்து காப்பாத்துங்களேன்..." என்ற அந்த குரல் வெளியில் இருந்து வேகமாக வந்து அருணின் காதுகளை தொட்டது.

இந்த வேகத்தை போலவே தன்னை அறியாமல் கதவின் மீது வேகமாக கைகளால் பற்றினான் அருண். கதவு மீது கை வைத்த அடுத்த சில நொடிகளில், அருண் திறக்க முற்படாமலேயே கதவு தானாக திறக்க ஆரம்பித்தது.

அதிர்ச்சியில் உறைந்து போனான் அருண். வெளியில் வெள்ளை நிற ஆடையில் ஒரு அழகான பெண் வீதியில் கிடப்பதை வீட்டுக்குள் இருந்தபடியே கண்டான். வெளியில் சென்று உதவுவோமா, வேண்டாமா என்று திடீர் கணக்கு போட்ட அருண், அதற்கு விடையாக உதவலாம் என்று வர, மேற்கொண்டு வெளியில் செல்ல காலடி எடுத்து வைத்தான் மெதுவாக.

போர்ட்டிக்கோவை கடந்து வீட்டு முற்றத்தை அடைந்த போதிலும் அந்த பெண்ணின் முகம் சரியாக தெரியவில்லை. குனிந்த நிலையில், சந்திரமுகி ஜோதிகா போல் கிடந்தாள்.

அந்த பெண்ணை சில அடி தூரத்தில் எட்டியபோது அவனை அறியாமல் கால்கள் ஆட ஆரம்பித்து இருந்தன. யார் அது என்று கேட்க வாயெடுத்தபோது பேச்சும் வராமல் சிக்கித் திணறியது.

உளறலோடு யார் அது என்று கேட்டுக்கொண்டே அந்த பெண்ணை நெருங்கினான் அருண். அப்போது தான் அந்த பெண் யார் என்பது அடையாளம் தெரிந்தது.

கல்லூரி மாணவியான பக்கத்து வீட்டு மாலதி என்பதை அவள் அருகில் சென்றபோது தான் அவனால் உறுதி செய்ய முடிந்தது.
தன்னால் நடக்க முடியவில்லை என்று மாலதி கூறவும், அவளுக்கு உதவுவதற்காக வேகமாக வீட்டுக்குள் புறப்பட்டு சென்றான் அருண்.
வேகமாக சென்றவன் திடீரென நின்றான். அவனது கண்களில் பேயை நேரில் கண்டது போன்ற மிரட்சி. இதயத்தின் லப்-டப் வேகமும் தாறுமாறாக எகிறி இருந்தது.

"பக்கத்து வீட்டு மாலதி விபத்தில் இறந்துபோய் ஒரு வாரம் கூட ஆகவில்லையே; வேறு எப்படி இங்கே வர முடியும்?"
மாலதி பலியான அந்த சம்பவம் அருணுக்குள் மின்னல் வெட்டாய் வந்து போனது.

சாலையில் அடிபட்டு கிடந்த மாலதியை தனது மடியில் கிடத்தி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தான் அவள் இறந்து போனாள்.

மாலதி மறைந்துபோன சம்பவம் அருண் நெஞ்சை விட்டு இன்னும் அகலவில்லை.

அப்படி இருக்கும்போது இங்கே எப்படி மாலதி... என்று யோசித்தவன், மெதுவாக திரும்பிப் பார்த்தான்.

மீண்டும் அவனுக்குள் அதிர்ச்சி. வீதியில் கிடந்த மாலதியையே காணவில்லை. ஒருவேளை பேயாக வந்து பயமுறுத்துகிறாளா என்று மனதிற்குள் வேகமாக ஓட விட்டவன், மாலதி பேயாகத் தான் வந்திருக்கிறாள் என்பதை உறுதி செய்து, வீட்டுக்குள் போக எத்தனித்தான்.

அப்போது -
மீண்டும் வீட்டு முன்கதவு அருகில் மாலதி.
"ஓ"வென அலறிய அருண் மயக்கமாகி கீழே விழுந்தான்.
"என்ன ஆச்சுன்னு தெரியலியே; அருண் பெட் ரூமில் இருந்து சத்தம் வருகிறதே" என்று அவனது தாய் மரகதமும், தந்தை நடராஜனும் அங்கு வேகமாக வந்து பார்த்தனர்.

படுத்திருந்த பெட்டில் இருந்து கீழே விழுந்து கிடந்தான் அருண்.
மரகதம் அருண் மீது கை வைத்தபோது கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டான்.
"என்னடா ஆச்சு; கத்திக்கிட்டே கீழே விழுந்துட்ட. கெட்ட கனவு எதுவும் கண்டியா" என்று மரகதம் கேட்டதற்கு, ஆமா என்று மட்டும் தலையை ஆட்டிய அருணால் மேற்கொண்டு பேச முடியவில்லை.

"ஒரு டம்ளர் தண்ணீரை குடிச்சிட்டு படுடா" என்று கூறிய மரகதத்திற்கு தலையை அசைத்தே பதில் சொன்னான்.

பெற்றோர் அறையைவிட்டு வெளியேறியபோது தனது காலை திடீரென எட்டிப்பார்த்தான். கண்ணாடி பொம்மை கீழே விழுந்து காயம் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஜன்னலும் மூடப்பட்டே இருந்தது. வெளியே மழையும் பெய்யவில்லை.

அப்போது தான் அருணுக்கு தெரிந்தது. மாலதி வந்த சம்பவம் வெறும் கனவு என்று!

ஆக்கம் : நெல்லை விவேகநந்தா.
Share: