சனி, 25 செப்டம்பர், 2010

அய்யா வைகுண்டர் - பகுதி 1


1.நாஞ்சில் நாட்டின் கதை
- நெல்லை விவேகநந்தா -


கேரளாவிற்கும் சென்னை மாகாணமாக இருந்த தமிழ்நாட்டிற்கும் இயற்கை அள்ளிக் கொடுத்த பரிசுகள் ஏராளம். மேற்குத் தொடர்ச்சி மலையைத் தன்னகத்தே கொண்ட கேரளாவிலும், தமிழகத்தின் தென்பகுதியிலும் உள்ள மலைப் பகுதிகளில் நன்கு வளர்ந்த ரப்பர் மரங்கள் நிறைந்த தோட்டங்கள், மிகப் பெரிய கனிகளைத் தரும் முக்கனிகளுள் இரண்டாவதான பலா மரங்கள் மற்றும் வாழைத் தோட்டங்கள், தென்னை மரங்கள், பனை மரங்கள், மிளகு, காபி, தேயிலைச் செடிகளின் அணிவகுப்புகள்... என்று, காணும் திசையெங்கும் பசுமையின் பாய் விரிப்பு. வருடத்தின் எல்லா நாட்களும் சலசலத்துக்கொண்டு ஓடும் நீரோடைகள், இறைச்சலுடன் பாயும் ஆறுகள், வெள்ளியை உருக்கிக் கொட்டுவது போன்ற நீர்வீழ்ச்சிகள்... என்று கேரளத்தின் அடையாளங்கள் ஏராளம்.

இந்த கேரள மாநிலத்தின் தென் பகுதிகளையும், இன்றைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கி இருந்த ஒரு சமஸ்தானம்தான் திருவிதாங்கூர். திருவனந்தபுரம் இவர்களது தலைநகரமாக இருந்தது. வெள்ளி நிறத்தில் வலம்புரிச் சங்கு பொறித்த செம்மை நிறக் கொடி, இந்த சமஸ்தானக் கொடியாக திகழ்ந்தது. 

இந்த சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்ததுதான் நாஞ்சில் நாடு. வயலில் உழுவதற்கு பயன்படும் கலப்பைக்கு நாஞ்சில் என்ற பெயரும் உண்டு. இந்த பகுதியில் உழவுத் தொழில் அதிக அளவில் நடந்ததால், இப்பகுதி நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்டது. இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம், பூக்களுக்கு பெயர்போன தோவாளை ஆகிய வட்டங்களை உள்ளடக்கி பகுதிதான் நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்டது.

இந்த நாஞ்சில் நாடு 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பாண்டிய மன்னர்களின் ஆட்சிப் பகுதியாக இருந்தது. அதன்பின், சேரர்கள் வசம் வந்தது. அவர்களுக்குப் பின் ஹோய்சாளர்கள் கை ஓங்கவே... சேரர்கள் வலுவிழந்து போனார்கள். இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கேரளாவின் வேனாடு மன்னர்கள், நாஞ்சில் நாட்டை தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். ஏறக்குறைய 4 நூற்றாண்டுகாலம் அவர்கள் நாஞ்சில் நாட்டை தங்கள் வசம் வைத்திருந்தனர். இவர்களுக்கும், பக்கத்து அரசான பாண்டிய மன்னர்களுக்கும் இடையில் அடிக்கடி எல்லைப் பிரச்சினை இருந்து வந்தது. 

கி.பி.1609ல் வடக்கே இருந்து வந்த விஜயநகர மன்னர்கள் பாண்டியர்களை வென்று, மதுரையைத் தங்கள் வசம் கொண்டு வந்தனர். அதே நேரத்தில், வேனாடு அரசியலில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டு, ஆற்காடு சந்தா சாகிபுவின் படையெடுப்புக்கு உள்ளானது. அப்போது வேனாட்டை ஆண்டை மார்த்தாண்ட வர்மாவின் வீரர்கள் போர்க்களத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வாங்கினர். மார்த்தாண்ட வர்மாவுக்கு பிறகு வந்த வேனாட்டு மன்னர்கள் வலுவிழந்தவர்களாக இருந்ததால், அப்போது இந்தியா முழுவதுமே நாடு பிடிக்கும் கொள்ளை(க)யில் ஈடுபட்ட ஆங்கிலேயர்கள், நாஞ்சில் நாட்டை உள்ளடக்கி வேனாட்டையும் தங்கள் வசம் கொண்டு வந்தனர்.

அப்போது, அவர்களது ஆசியுடன் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களின் ஆட்சி ஏற்பட்டது. ஆங்கிலேயர்களின் கைப்பாவையாக இருந்த அவர்கள், ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டிக் கொண்டு வழி வழியாக நாட்டை ஆண்டு வந்தனர். கி.பி.1729 முதல் 1956 வரை இவர்களே ஆட்சி புரிந்தனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்தவர் 'சித்திரை திருநாள்' (திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள், நட்சத்திரங்களின் பெயரையே தங்களுக்கு சூட்டிக்கொள்வார்கள்). 1798 முதல் 1810 வரை அவிட்டம் திருநாள் என்ற பாலராம வர்மா என்பவர் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னராக இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில்தான் அய்யா வைகுண்டர் முத்துக்குட்டியாக 1809-ஆம் ஆண்டு நாஞ்சில் நாட்டில் நாகர்கோவிலில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாமித்தோப்பில் நாடார் சமூகத்தில் பொன்னுமாடன் - வெயிலாள் என்ற தம்பதியருக்கு மகனாக அவதரித்தார். 

1947 ஆகஸ்ட் 15-ம் தேதி ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்தாலும், நாஞ்சில் நாட்டை உள்ளடக்கி திருவிதாங்கூர் சமஸ்தானம் 1956 வரை தொடர்ந்து இயங்கி வந்தது. அதன் பிறகு, அன்றைய தமிழகத்துடன் (சென்னை மாகாணம்) இணைந்தது. 1956 நவம்பர் 1-ம் தேதி புதிய மாநிலமாக கேரளா உருவாக்கப்பட்டபோது, அதனுடன் சேர்க்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நாஞ்சில் நாடு தமிழகத்துடன் இணைக்கப்பட்டு 'கன்னியாகுமரி' என்ற புதிய மாவட்டம் உதயமானது.

ஆன்மிக ரீதியாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தை அணுகினால், அதனை ஆண்டவர்கள், விஷ்ணுவின் ஒரு அம்சமான திருவனந்தபுரத்து பத்மநாபசுவாமியின் அடியவர்கள் என்னும் பொருள்பட தங்களை “பத்மநாததாசர்” என்று அழைத்துக் கொண்டனர். பரசுராமர், தனது கோடாரியைக் கடலுக்குள் எறிந்த போது உருவானதுதான் கேரளா என்று தனது ரகுவம்ச காவியத்தில் குறிப்பிடுகிறார் காளிதாசர்.

கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள மருந்துவாழ் மலையும் புகழ் பெற்றது. ராமர் மற்றும் ராவணன் யுத்தத்தின் போது, ஆஞ்சநேயர் கயிலாயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு வரும் போது, அதில் இருந்து உடைந்து விழுந்த ஒரு பகுதிதான் இந்த மருந்து வாழ் மலை என்கிறார்கள். இந்த மலையில் அரிய வகை மூலிகைகள் இன்றும் விளைகின்றன. அவற்றை உருவம் இல்லாமல் என்றும் சிரஞ்சீவியான சித்தர்கள் பயிரிடுவதாக ஒரு நம்பிக்கை உண்டு. 

மேலும், கணவனையே கண்கண்ட தெய்வமாக நினைத்து, கடவுளைக் குழந்தையாக்கிய கற்புக்கரசியான  அனுசுயாதேவி இங்கேதான் வாழ்ந்தாள். அவளது கற்பின் மகிமையை நாரதமுனி மூலம் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் அறிந்து வியப்புற்றனர். அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணிய அவர்கள் முறையே தங்களது கணவர்களான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளையும் அனுசுயாவின் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்களும், தேவியர் சொன்னபடியே வயோதிகர் வேடத்தில் அங்கு சென்றனர்.

தன் இல்லத்திற்கு வந்தவர்களுக்கெல்லாம் அமுது படைத்து ஆதரிக்கும் நற்குணங்களைப் பெற்ற அனுசுயா, வயோதிகர் வேடத்தில் வந்த மும்மூர்த்திகளையும் வரவேற்று ஆசிரமத்தில் அமர வைத்தாள். பின்னர் அவர்களுக்கு அமுது படைக்கத் தயாரானாள். ஆனால், அவர்கள் அதை ஏற்க மறுத்தனர். மாறாக, "நீ பிறந்த மேனியாக (நிர்வாண கோலம்) உணவு பரிமாறினால்தான் அவற்றை சாப்பிடுவோம்" என்று கூறி அவளை அதிர்ச்சியடையச் செய்தனர்.

உடனே அனுசுயா தனது கணவர் அத்திரி முனிவரை கண்மூடி தியானித்தாள். அப்போது அங்கு வயோதிகர்கள் வேடத்தில் வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்பதை அவள் உணர்ந்தாள். தன் கற்பின் நிலையை அவர்களுக்கு உணர்த்த விரும்பிய அவள், தன் கணவரின் பாதநீரை எடுத்து மும்மூர்த்திகளின் தலையிலும் தெளித்தாள். அந்த நிமிடமே மூவரும் தவழும் குழந்தைகளாக உருமாறினார்கள்.

குழந்தைப் பருவம் என்பது ஒன்றும் அறியாத பருவம் அல்லவா? எனவே, அந்த மூன்று குழந்தைகளையும் வாரி எடுத்து மார்போடு அணைத்த அனுசுயா, நிர்வாண கோலத்தில் அவர்களுக்குப் பாலூட்டி அவர்களின் பசியினை போக்கினாள். பின்னர், அங்கு வந்த தனது கணவர் அத்திரி முனிவரிடம் நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறினாள். மனைவியின் செயலைக் கண்டு பெருமிதப்பட்டார் அவர்.
நாட்கள் வேகமாக நகர்ந்தன. பூலோகம் சென்ற தங்களது கணவன்மார்களைக் காணாமல் முப்பெரும் தேவியரும் தவித்தனர். அவர்களிடம் நாரதர், நடந்த சம்பவத்தைக் கூறினார். 

உடனே, தேவியர் மூவரும் அனுசுயாவின் ஆசிரமத்திற்கு சென்று மாங்கல்யப் பிச்சை கேட்டனர். அங்கு குழந்தைகளாக இருந்த மும்மூர்த்திகளையும் எடுத்துச் செல்ல அனுசுயா அனுமதித்தாள். மூன்று குழந்தைகளும் ஒரே மாதிரியாக இருந்ததால் தங்களது கணவர் யார் என்று தெரியாமல் தேவியர் மூவரும் குழம்பி நின்றனர்.
பின்பு அவர்கள் அனுசுயாதேவியின் ஆலோசனைப்படி, மூன்று நீர்ச்சுனைகளை அங்கே உருவாக்கி, அதில் நீராடி, ஆதிபராசக்தியை நோக்கித் தவம் செய்தனர். அவர்களின் தவத்தை மெச்சிய ஆதிபராசக்தி மும்மூர்த்திகளையும் மீண்டும் உருப்பெற செய்தார்.  

இதுதான் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் புகழ் பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவிலின் தலவரலாறு. இங்குதான் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே வடிவத்தில் மூலவராக - தாணுமாலயனாக ஒருவித லிங்க வடிவில் காட்சி தருகின்றனர். இதில் தாணு என்பது சிவனையும், மால் என்பது விஷ்ணுவையும், அயன் என்பது பிரம்மாவையும் குறிக்கிறது. இந்தக் கோவில் நாகர்கோவில் - கன்னியாகுமரி சாலையில், நாகர்கோவிலில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

அனுசுயா போல், மற்றொரு ரிஷி பத்தினியான அகல்யாவும் இந்த நாஞ்சில் நாட்டோடு தொடர்புடையவள்தான். ஒருமுறை பூலோகத்தை வலம் வந்த தேவேந்திரன் பேரழகியான அகல்யாவைப் பார்த்து, அவளது அழகில் மயங்கிப் போனான். போதை தலைக்கேறிய அவன், அவளை நெருங்க சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
ஒரு நாள் நள்ளிரவில் அகல்யாவை அடைந்து விட வேண்டும் என்ற ஆவலில் அவன், சேவல் உருவத்திற்கு மாறிக் கூவினான். ஆசிரமத்தில் உறங்கிக் கொண்டிருந்த அகல்யாவின் கணவரான கவுதம முனிவர், பொழுது விடிந்து விட்டது என்று கருதி ஆற்றில் நீராடி வர  வெளியேறிச் சென்றார். இதைப் பயன்படுத்தி ஆசிரமத்திற்குள் சேவலாகப் புகுந்த தேவேந்திரன், கவுதம ரிஷி உருவம் எடுத்து அகல்யாவை நெருங்கினான். அவளை தனது விருப்பத்திற்கு உட்படுத்தினான்.

அதேநேரம், நீராடச் சென்ற கவுதமர், சலனமற்று கிடந்த ஆற்றைப் பார்த்து, இன்னும் விடியவில்லை என்பதை அறிந்தார். உடனே, ஆசிரமத்திற்கு திரும்பினார். இந்திரன் அங்கிருந்து பூனை உருவம் எடுத்து வெளியேறினான். அங்கே, நடந்தவைகளை தன் ஞான திருஷ்டியில் அறிந்தார். தனது மனைவியை இந்திரன் அடைந்து விட்டுச் சென்றதை அறிந்தார். அவர் கோபத்துடன் இந்திரனை "எதற்கு நீ ஆசைப்பட்டாயோ, உன் உடல் முழுவதும் அதுவாகவே ஆகட்டும்..." என்று சாபமிட்டார்.

அடுத்த நிமிடமே தேவேந்திரன் உடல் முழுவதும் யோனி (பெண் உறுப்பு) உருவம் தோன்றியது. கலங்கிப் போன அவன் முனிவரிடம் தான் செய்த தவறுக்காக வருந்தினான். அதனால், முனிவர் அவனுக்குப் பாவ விமோசனமும் அளித்தார்.

"சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே மூர்த்தியாக இருக்கும் தருணத்தில் அவர்களைப் பூஜித்தால் நீ உண்மையான நிலையை அடையலாம்’ என்பதுதான் அது. உடனே, தேவேந்திரன் சுசீந்திரம் வந்தான். அங்கே, அத்திரி மகரிஷிக்கும், அவரது தர்மபத்தினியான அகல்யாவுக்கும் (முந்தைய சம்பவ கற்புக்கரசி) மும்மூர்த்திகளும் தரிசனம் தந்த நேரத்தில், தானும் அந்த தரிசனத்தை பெறுவதற்காக முயன்றான். அதையொட்டி, தனது வெள்ளை யானையான ஐராவதத்திடம் தண்ணீர் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.

அது, தேவேந்திரன் உத்தரவுபடி ஒரு பெரிய மலையைப் பிளந்து தண்ணீர் எடுத்து வந்தது. அப்போது அங்கே தோன்றிய ஊற்று நீர் அந்த பகுதிகளில் வேகமாக பரவி, அப்பகுதி முழுவதையும் செழிப்பாக்கியது. அவ்வாறு ஐராவதத்தால் உருவானதுதான், கோட்டாறு என்கிற பழையாறு. சாமித்தோப்பை ஓட்டி இந்த ஆறு ஓடிக் கொண்டிருப்பதை இன்றும் பார்க்கலாம்.

(தொடரும்...)

     
Share:

பிள்ளைக் கறி வேண்டிய இறைவன்




தினமும் ஒரு சிவனடியாருக்காவது அமுது படைத்து விட்டு உண்பதுதான் சிவத் தொண்டரான பரஞ்ஜோதியார் குடும்பத்தின் வழக்கம். அன்று என்னவோ சிவனடியார் யாரும் அவர்களது இல்லத்திற்கு வருவதாக தெரியவில்லை. பக்கத்தில் எங்கேனும் சிவனடியார்கள் இருக்கிறார்களா என்பதை அறிய, பரஞ்ஜோதியார் வெளியில் சென்றார். 

ஆனால், எந்த சிவனடியாரும் அவரது பார்வைக்குக் கிடைக்கவில்லை.
மிகுந்த களைப்போடு வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அடுத்து என்ன செய்வது? என்பது போல் யோசித்தார்.

அப்போது, வீட்டிற்குள் இருந்து அவரது மனைவி வெளியே வந்தாள்.
“என்னங்க... இவ்வளவு நேரமா எங்கே போனீங்க?”

“ஒரு சிவனடியாராவது நம் பார்வைக்குக் கிடைக்க மாட்டாரா என்று தேடிப் போய் இருந்தேன். யாரும் கிடைக்காததால் வரத் தாமதமாகி விட்டது”.

“அந்தக் கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். சிறிது நேரத்திற்கு முன்புதான் நம் வீட்டிற்கு ஒரு சிவனடியார் வந்தார். அவரது தோற்றம் சற்று பயத்தை ஏற்படுத்தினாலும், மிகச் சிறந்த சிவனடியார் போன்று தெரிந்தது. நம் ஊரை ஒட்டியுள்ள ஆத்தி மரத்தடியில் இருப்பதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். அவரை அழைத்து வாருங்கள்...” என்றாள், கணவனைப் போலவே சிவநெறி வழுவாத பரஞ்ஜோதியாரின் மனைவி.

“சரி... நான் அவரை அழைத்து வருகிறேன். வீட்டில் நல்ல உணவு தயாரித்து வை!”

“ஆமாங்க... இப்போது நீங்கள் அவரை அழைத்து வரவேண்டியதுதான் பாக்கி...” என்றாள் அவள்.

ஆத்தி மரத்தடி நோக்கிச் சென்ற பரஞ்ஜோதியார், அங்கு காத்திருந்த சிவனடியாரை சரியாக அடையாளம் கண்டு கொண்டார்.

சிவனடியாரை பார்த்த மாத்திரத்தில் பரஞ்ஜோதியாருக்கும் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நெற்றியில் திருநீறும், கழுத்தில் உருத்திராட்சக் கொட்டை மாலையும், காவி உடையிலுமே சிவனடியார்களை பார்த்துப் பழக்கப்பட்ட அவருக்கு, அவர் மட்டும் சற்று வித்தியாசமாகத் தெரிந்தார்.

அவரது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த எலும்பு மாலையும், ஒரு கையில் திரிசூலமும், மறுகையில் மண்டையோடும் பரஞ்ஜோதியாரை சற்று மிரள வைத்தன. நடுங்கியபடியே அவர் முன் போய் நின்றார்.

“சுவாமி! நான் சிவனடியாருக்கு உணவு படைக்கும் பொருட்டு, சிவனடியாரைத் தேடிச் சென்ற நேரத்தில் தாங்கள் என் வீட்டிற்கு வந்ததாக என் மனைவி கூறினாள். தங்களை அழைத்துச் சென்று உணவு படைக்கவே இங்கே வந்திருக்கிறேன்...” என்றார்.

“உணவு படைப்பது சரி. ஆனால் நீ கொடுக்கும் உணவு எனக்கு பிடித்த உணவாக இருக்க வேண்டும்.”

“சரி சுவாமி...”

“அப்படியென்றால், நான் கேட்கும் உணவை கண்டிப்பாக நீ தருவாயா?”

“இதில் என்ன சந்தேகம் சுவாமி? உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் என் பணி. என்னிடம் இருப்பதில் நீங்கள் கேட்பது எதுவாக இருந்தாலும் நிச்சயமாக நான் தருகிறேன்...”

“சரி... நான் கேட்பது கிடைக்கும் என்பதால் வருகிறேன். எனக்கு என்ன உணவு வேண்டும் என்பதையும் இங்கேயே உன்னிடம் சொல்லி விடுகிறேன்”

“தாராளமாகச் சொல்லுங்கள் சுவாமி.”

“நான் வடபுலத்தைச் சேர்ந்தவன். ஆறு மாதத்திற்கு ஒருமுறை உணவு உட்கொள்வதுதான் எனது வழக்கம். எனது உணவே மனித மாமிசம்தான். அதுவும், ஐந்து வயதுக்கு உட்பட்ட தலைமகனான பாலகனின் மாமிசத்தை மட்டுமே சாப்பிடுவேன். அந்த உணவைத்தான் நான் உன் இல்லத்தில் எதிர்பார்க்கிறேன்...”

அந்த சிவனடியார் சொன்ன உடன் அதிர்ந்து போய்விட்டார் பரஞ்ஜோதியார். 

அவரால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. உடல் முழுக்க வியர்த்தது. வார்த்தைகள் வர மறுத்து வாய் நடுங்கியது.

அந்த சிவனடியார் தொடர்ந்து பேசினார். “நான் விரும்பும் உணவை உன்னால் தர முடியாது என்று எனக்கு நன்றாகவேத் தெரியும். அதனால்தான் உன்னிடம் திரும்பத் திரும்ப கேட்டேன். பரவாயில்லை. நான் வேறு இல்லத்தில் எனக்கு பிடித்தமான உணவைச் சாப்பிட்டுக் கொள்கிறேன்...” என்றார் அவர்.

ஒரு வழியாக மனதைத் தேற்றிக் கொண்டு பேசினார் பரஞ்ஜோதியார்.
“அவசரப்பட வேண்டாம் சுவாமி. உங்களுக்குப் பிடித்தமான உணவுக்கு நானே ஏற்பாடு செய்கிறேன்...” என்று கூறி, அவரை தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.

கணவன், சிவனடியாரோடு வருவதைக் கண்ட பரஞ்ஜோதியாரின் மனைவி முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால், பரஞ்ஜோதியாரின் முகமோ சற்று வாடிப்போய்தான் இருந்தது. சிவனடியாரை வீட்டிற்குள் அமர வைத்துவிட்டு, சமையலறைக்குள் கணவனை அழைத்துச் சென்று அதற்கான காரணத்தைக் கேட்டாள்.

சிவனடியார் கேட்ட உணவு பற்றி சொல்ல வாய் வர மறுத்தாலும், ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு சொன்னார். கணவன் கூறியதைக் கேட்டு அவளும் அதிர்ந்து போனாள். இருப்பினும் தருவதாக வாக்களித்தாகிவிட்டதே... என்று கருதிய அவர்கள், தங்கள் இளகிய மனதை கல்லாக்கிக் கொண்டு, தங்களது ஒரே மகனான ஐந்து வயது சீராளனை சிவனடியாருக்கு பலி கொடுத்து, உணவளிக்க முடிவெடுத்தனர்.

சீராளன் படித்து வந்த குருகுலத்திற்குச் சென்று அவனை அழைத்து வந்தார் பரஞ்ஜோதியார்.

வேகவேகமாக சிவனடியாருக்கு கறியமுது படைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிவபெருமானை மனதிற்குள் நினைத்துக் கொண்டு, ஒரே மகனை கறியாக்கி, அந்த சிவனடியாருக்கு படைத்தனர்.

இலையில் பரிமாறப்பட்ட பாலகனின் கறி உணவைச் சாப்பிட அமர்ந்த சிவனடியார், அடுத்த நொடியே கோபாமானார். “பாலகனின் கறி உணவு கேட்டால், நீ என்ன பசுவின் மாமிசத்தைக் கொண்டு கறி சமைத்து பரிமாறுகிறாயா?” என்று கோபத்துடன் கத்தினார்.

அவசரமாக மறுத்த பரஞ்ஜோதியார், “சத்தியமாக இது ஒரு பாலகனின் கறியமுதுதான்” என்று சொன்னார்.

அதை நம்ப மறுத்த சிவனடியார், “அப்படியென்றால்... தலைக்கறி எங்கே?” என்று கேட்டார்.

“தலைக்கறி உணவுக்கு ஆகாது என்று கருதி, அதை மட்டும் சமைக்காமல் விட்டுவிட்டோம். நாங்கள் செய்த இந்தக் குறையைப் பொறுத்து, தாங்கள் உணவு உண்ண வேண்டும்...” என்று அமைதியாக பதில் சொன்னாள் பரஞ்ஜோதியாரின் மனைவி.

ஆனாலும், சிவனடியார் விடுவதாக இல்லை. “எனக்குத் தலைக்கறிதான் வேண்டும்” என்று அடம் பிடித்தவர், “அந்தத் தலைக்கறி கிடைக்கா விட்டால் வெளியேறிவிடுவேன்...” என்று எச்சரித்தார்.

பரஞ்ஜோதியாரும், அவரது மனைவியும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவிக்க... சமையலறைக்குள் இருந்து வெளியே வந்தாள் பணிப்பெண்.

“அம்மா... இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்தே நான் தலைகறியை தனியாக சமைத்தேன். அதை இப்போது அடியாருக்கு பரிமாறுங்கள்...” என்றாள்.

முகத்தில் சிறிது மகிழ்ச்சியை வரவழைத்துக் கொண்டு தம்பதியர் இருவரும் சிவனடியாருக்கு அந்தத் தலைக்கறி உணவைப் பரிமாற முயன்றனர்.

அப்போது மீண்டும் கோபமானார் சிவனடியார்.

“நான் தனியொரு ஆளாகத் தலைக்கறி உணவு உண்பதில்லை. வேறு சிவனடியார் யாரேனும் இருந்தால் அழைத்து வரவும்...” என்றார்.

வேறு வழி தெரியாத பரஞ்ஜோதியார், வீட்டின் முற்றத்திற்கு ஓடிச் சென்று, யாரேனும் சிவனடியார்கள் வருகிறார்களா? என்று தேடிப் பார்த்தார். ஆனால், யாருமே அவர் கண்ணில் படவில்லை.

“யாருமே இல்லை” என்று அவர் சொல்ல... சிவனடியாரோ, “யாரும் இல்லை என்றால் என்ன, நீ என் அருகில் அமர்ந்து சாப்பிடு...” என்றார்.

‘என்ன கொடுமை இது? பெற்ற பிள்ளையைக் கொன்று கறி சமைத்து சாப்பிட்ட அவப்பெயரும் எனக்கு வர வேண்டுமா?’ என்று மனதிற்குள் குமுறியபடியே சிவனடியார் அருகில் அமர்ந்தார்.

சிவனடியாருக்கும், தனது கணவருக்கும் தன் பிள்ளைக்கறி உணவைப் பரிமாறினாள், பரஞ்ஜோதியாரின் மனைவி.

இப்போதாவது கறி உணவை சிவனடியார் சாப்பிட்டு விடுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு, மறுபடியும் ஏமாற்றமே மிஞ்சியது.

“உன் மகனை அழைத்து வா. அப்போதுதான் சாப்பிடுவேன்...” என்று மீண்டும் அடம்பிடித்தார்.

“அவனுக்கு இங்கே வேலை இல்லை...” என்று பரஞ்ஜோதியார் சொன்ன போது, “நீ அவனைக் கூப்பிடு; அவன் வருவான்...” என்றார்.

‘தவம் இருந்து பெற்ற மகன்தான் இங்கே கறி உணவாக இருக்கிறானே... எப்படி அவன் வருவான்?’ என்று மனதிற்குள் பரஞ்ஜோதியார் எண்ணினாலும், சிவனடியாரின் கோபத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதற்காக, வீட்டின் முற்றத்திற்குச் சென்று, “சீராளா...“ என்று அழைத்தார்.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

எந்த மகனைக் கறி சமைத்து சிவனடியாருக்கு பரிமாறினார்களோ, அதே சீராளன் ஓடி வந்தான். அவனைப் பார்த்த பரஞ்ஜோதியார் தம்பதியருக்கு இன்ப அதிர்ச்சி. அவனை அள்ளி அணைத்து கொஞ்சினர்.

கறி உணவு வேண்டி தங்கள் இல்லம் வந்த சிவனடியாரைப் பார்க்கத் திரும்பினர். அங்கே அவர் இல்லை. கறி உணவையும் காணவில்லை.

அப்போதுதான், பிள்ளைகறி கேட்டு வந்தவர் சாதாரண அடியார் இல்லை; அந்த சிவபெருமான்தான் என்பதை உணர்ந்தனர் அவர்கள்.

அப்போது, உமாதேவியுடன் காட்சி கொடுத்தார் சிவபெருமான். அடியாருக்காக தனது மகனையே கறியாய்ச் சமைத்த பரஞ்ஜோதியார் 63 நாயன்மார்களுள் ஒருவராக சிறுத்தொண்டு நாயனார் என்று பெருமை பெற்றார். 

- நெல்லை விவேகநந்தா.

Share: