சனி, 31 டிசம்பர், 2011

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 5


5. காணாமல் போன ஆனந்த்
- நெல்லை விவேகநந்தா -

"பயப்படாதீங்க ஆனந்த். அவரு எங்கிட்டதானே பேசனும்னு சொல்றாரு. மொபைலை குடுங்க..." ஆனந்திடம் இருந்து மொபைலை வாங்கிவிட்டாலும் ஷ்ரவ்யாவின் முகத்தில் லேசான கலவரம் தெரிந்தது. ஆனால், அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

எதிர்முனையில் ஷ்ரவ்யாவிடம் பேச பிரகாஷ் ஆர்வமாக காத்திருந்தான். 'நான்தான் இந்த பார்ட்டியை உனக்காக ஸ்பெஷலா ஏற்பாடு செய்து கொடுத்தேன். பணத்தைத் தாராளமா செலவு செய்யக்கூடிய பார்ட்டிதான். அவன் உனக்காகத் தந்த பணத்தில் எனக்கும் கொஞ்சம் தந்து விடு' என்று, தன் மனதிற்குள் உள்ள விஷயத்தை சொல்லத் தயாராக இருந்தான்.

"ஹலோ..."

ஷ்ரவ்யாவின் குரலைக் கேட்டதும் பிரகாஷின் முகம் மலர்ந்தது.

"அம்மாடி நான்தான் பிரகாஷ் பேசுறேன். நீ சேப்டியாதானே போய்க்கிட்டு இருக்க? உனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையே..."

"நான் சாந்திதான் பேசுறேன். இங்கே எந்தப் பிரச்சினையும் இல்ல. இப்போ, நீதான் பிரச்சினை."

"அய்யய்யோ... அப்படி சொல்லதம்மா. உன்ன அந்த கஸ்டமர் கூட அனுப்பி வைக்க ரெக்கமென்ட் பண்ணுனதே நான்தான்."

"சரி, இப்போ உனக்கு என்ன வேணும்?"

"அது வந்து...?"

படபடவென பேசிய ஷ்ரவ்யாவிடம், தனக்கான எக்ஸ்ட்ரா கமிஷன் பற்றி அவனால் சட்டென்று பேச முடியவில்லை. ஆனால், ஷ்ரவ்யாவுக்கு புரிந்து விட்டது.

"பொம்பள மாதிரி ரொம்பவும் வெட்கப்படாத. ஊட்டிக்குப் போயிட்டு வந்த உடனே உன்னையும் கவனிச்சிடுறேன்..." என்றாள் அவள்.

ஷ்ரவ்யா இப்படி சொன்ன பிறகுதான், பிரகாஷ் குரலில் உற்சாகம் பிறந்தது.

"சரி சாந்தி, அப்போ நாம அடுத்த வாரம் சந்திப்போம். மொபைல ஸார் கிட்ட குடுத்துடு. நான் மொபைலை வெச்சிடுறேன்..."

இதற்கும் மேல் அவனை பேசவிடாமல் மொபைலை ஆப் செய்தாள் ஷ்ரவ்யா.

ஆனந்த் எங்கே என்று தேடினாள். பல சந்தேகக் கேள்விகளை முகத்தில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

"ஆனந்த்... நீங்க என்ன யோசிக்கிறீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். ஷ்ரவ்யா எப்படி சாந்தி ஆனாள் என்றுதானே யோசிக்கிறீங்க?"

"ஆமாம்..." ஆர்வமாகத் தலையாட்டினான் ஆனந்த்.

அவனை ஒட்டி அமர்ந்து கொண்டு, தனது ப்ளாஷ்பேக் கதையை மெதுவாய், கொஞ்சம் சோகமாய் சொன்னாள் ஷ்ரவ்யா.

"என்னோட உண்மையான பேரு சாந்திதான். சின்னக்குழந்தையில நான் அழகா மட்டுமில்லாம, அமைதியாகவும் இருப்பேனாம். என்னோட முகத்தைப் பார்த்தாலே அம்மாவுக்கு மன அமைதி கிடைக்குமாம். என்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்தது மட்டுமல்லாம, என் முகத்தைப் பார்த்துப் பார்த்துத்தான் என்னோட குடிகார அப்பா கூட குடும்பம் நடத்தி இருக்குறாங்க. எங்க அம்மாவுக்கு நான் சாந்தி, மனஅமைதி கொடுத்ததுனால, என் பேரையும் சாந்தின்னு வெச்சிட்டாங்க. எனக்கு விவரம் தெரிஞ்ச பிறகு சாந்திங்குற பேருல உள்ள பொண்ணுங்க பலரோட வாழ்க்கையை பாத்திருக்கேன். அவங்க யாருமே நிம்மதியா வாழல. என்னோட வாழ்க்கையும் அப்படி அமைஞ்சிடுமோன்னு பயந்தேன். அம்மா கிட்ட சொன்னேன். நாம இப்போ தங்கத்தட்டுல சாப்பிட்டு, மாளிகையிலயா வாழ்ந்துட்டு இருக்கோம். நாம கெடக்குறது இந்தக் கூவம் நாத்தத்துக்குள்ள. இதைவிட கேவலமா எந்த மனுஷனும் வாழ மாட்டான். உன்னோட வாழ்க்கை இதுக்கு கீழே எப்படியும் போகாது. அதனால, சாந்திங்குற பேரே இருக்கட்டும். உனக்கு பிடிக்கலனா மாத்திக்கோன்னு சொல்லிட்டாங்க. அம்மாவே இப்படி சொல்லிட்டதுனால எனக்கும் பெயரை மாத்தணும்னு தோணல. அப்படியே விட்டுட்டேன். ஒருகட்டத்துல, குடிச்சு குடிச்சே அப்பா இறந்து போக... கொஞ்ச நாள்லயே அம்மாவும் பன்றிக் காய்ச்சலால பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்க முடியாம இறந்து போயிட்டாங்க. நான் ஒரே பொண்ணுங்குறதுனால, பக்கத்து வீட்டுல உள்ளவங்க சாப்பாடு கொடுத்து உதவினாங்க. நான் வயசுக்கு வந்த அழகான பொண்ணா இருந்ததுனாலேயும், எனக்கு ஆதரவா பேச யாருமே இல்லங்குறதுனாலேயே எல்லா வாலிப பசங்களோட பார்வையும் என் மேலத்தான் விழுந்தது..."

தொடர்ந்து, ஷ்ரவ்யாவை பேச அனுமதிக்கவில்லை ஆனந்த். அவனை நிமிர்ந்து பார்த்தாள் ஷ்ரவ்யா. அவனது கண்களின் ஓரமும் கசிந்திருந்தது.

"ஸாரி ஷ்ரவ்யா. உன்னோட கடந்த கால வாழ்க்கை இப்படி இருக்கும்னு நான் நெனைச்சுக்கூட பார்க்கல. ஸோ... ஸாரி!"

மறுபடியும் கலங்கினான் ஆனந்த்.

"நீங்க ரொம்ப நல்லவங்க ஆனந்த்..."

"எப்படிச் சொல்ற?"

"என்னோட கடந்த கால வாழ்க்கையில நடந்த ஒரு பார்ட் பத்தி சொன்னதுக்கே இவ்ளோ கண் கலங்கிட்டீங்களே. முழு கதையையும் சொன்னா... ஊட்டிக்கேப் போக வேண்டாம். இப்படியே சென்னைக்கு திரும்பிடுவோம்னு சொன்னாலும் சொல்லிடுவீங்க. அதனால, என்னோட கதையை நான் இதோட முடிச்சுக்கறேன்..." என்று சின்னக் குழந்தையைப் போல் சொன்னாள் ஷ்ரவ்யா. அவளது முகமும் மழை விட்ட வானம் போல் தெளிந்திருந்தது. உற்சாகமும் தெறித்தது.

"எப்படி ஷ்ரவ்யா... இவ்ளோ சோகத்தை உனக்குள்ள தாங்கிக்கிட்டு உன்னால சிரிக்க முடியுது? ஆனா, என்னால எந்தவொரு சோகத்தையும் தாங்கிக்க முடியலயே... இப்போ, நான் உன்கூட வர்றதுக்கு காரணமான பின்னணியிலும் ஒரு சோகம் இருக்கு. உன்னோட சோகத்தோட ஒப்பிடும்போது இது பெருசே இல்லதான். ஆனாலும் என்னோட மனசு மட்டும் நித்தம் நித்தம் வலிக்குது."

ஆனந்த் இப்படி சொன்போது நிஜமாகவே அவனது நெஞ்சு வலிக்க ஆரம்பித்துவிட்டது. வலது கையால் நெஞ்சை பிடித்துக் கொண்டான். நா வறண்டு போனதாலும், துக்கம் நெஞ்சை அடைத்ததாலும் பேச முடியாமல் திணறினான். ரெயிலில் எதிர் வரிசையில் இருந்தவர்களும் அதை கவனித்துவிட்டு பரபரப்பானார்கள்.

இவ்வளவு பரபரப்பையும் எதிர்பார்க்காத, எதிர் சீட்டில் அமர்ந்திருந்த, அடிக்கடி காதலனுடன் மொபைலில் கடலைப் போட்டுக் கொண்டு வந்த இளம்பெண் ஸ்வேதா, தனது பேக்கில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து ஷ்ரவ்யாவிடம் நீட்டினாள்.

நடுங்கிய கைகளோடு பாட்டிலைத் திறந்து, ஆனந்துக்கு தண்ணீரை குடிக்கக் கொடுத்தாள் ஷ்ரவ்யா. அவனது நெஞ்சையும் தடவிவிட்டாள்.

அவனது சட்டையில் வழிந்திருந்த மினரல் வாட்டரின் ஈரம், அவளது கையை மட்டுமின்றி அவளை மனதையும் நனைத்து குளிரச் செய்தது.

தனக்குள், தன்னையும் அறியாமல் விபரீதமாய் ஏதோ ஒரு கெமிஸ்ட்டி ஒர்க்கவுட் ஆகிக்கொண்டிருப்பதாகவே உணர்ந்தாள்.

சில நிமிடங்கள் கரைந்திருந்தன.

எதிரே வந்து தன் மீது மோதிய காற்று தந்த சுகத்தில், தனது சோகத்தில் இருந்து மீண்டும் வந்து கொண்டிருந்தான் ஆனந்த். அதுவரை கலகலவென பேசிக் கொண்டு வந்த அவனது முகத்தில் திடீர் மவுனம். பேய் மழை பெய்வதற்கு முன்பு வானம் கரும் மேகங்களால் மூடுமே... அதேபோன்ற இறுக்கம் அவனது முகத்தில் தெரிந்தது. 3 நாட்கள் ஷேவிங் செய்யாமல் விட்டதில் கருமையாய் வளர்ந்திருந்த தாடி முடிகள் அவனை இளம் தேவதாஸாய் அடையாளம் காட்டின.

10 நிமிடங்களுக்கு அவனிடம் இருந்து எந்த பேச்சும் இல்லை. 'இப்படிப்பட்ட ஒரு ஆளுடன், அவனது மகிழ்ச்சிக்காக உடன் செல்கிறோமே... நமக்கு ஏதாவது ஆபத்து என்றால் என்ன செய்வது" என்று ஷ்ரவ்யா யோசிக்க, அவளது ஒரு மனம் கட்டாயப்படுத்தினாலும், இன்னொரு மனதில் இரக்கம் சுரந்திருந்தது. 'சோகங்களும், துக்கங்களும் இல்லாத மனிதர்களே இல்லை. அவை ஒருவனுக்கு இருந்தால்தான் சொர்க்கத்தை தேடிச் செல்ல வேண்டும் என்ற வேகம் அவனுக்குள் எழும்...' என்று எப்போதே எங்கேயோ ஒரு புத்தகத்தில் படித்த வாசகம் அவளது மனக்கண் முன்பு அவசரமாய் வந்துவிட்டு போனது.

அதேநேரம், அதிரடி வேகத்தில் சென்று கொண்டிருந்த கோவை எக்ஸ்பிரஸ் திடீரென்று மவுனமாக பயணிக்க ஆரம்பித்தது. தன்னை திடீரென்று தாக்கிய சோகம், முகத்தில் தந்த தாக்கத்தை கர்ச்சிப்பால் துடைத்துவிட்டு வாட்சை பார்த்தான் ஆனந்த். இரவு 8.30 மணி ஆக 10 நிமிடங்களும், 35 நொடிகளும் பாக்கி இருந்தன.

ஏதோ ரெயில் நிலையம் வந்ததால், அது எந்த ஊர் என்பதை அறிய மஞ்சள் போர்டு எங்கே என்று தேடினான். 'ஈரோடு ஜங்ஷன்' என்ற பெயர்ப் பலகை பெரியதாய் பளிச்சிட்டது.

என்ன நினைத்தானோ, ஷ்ரவ்யாவிடம் எதுவும் சொல்லாமல் ரெயிலில் இருந்து இறங்கினான். ஷ்ரவ்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

அவனது லக்கேஜ் பேக் எங்கே என்று தேடினாள். அது, அவன் பயணித்த சீட்டிற்கு அடியில் பத்திரமாக இருந்தது.

'அப்படியென்றால், ரெயில் புறப்படுவதற்குள் வந்து விடுவான்' என்று தனக்குள் முடிவு செய்து கொண்டாள். 4 நிமிடங்கள் வரை அமைதியாக ஈரோடு ஜங்ஷனில் நின்றிருந்த ரெயில் புறப்படுவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. ரெட் சிக்னல் அணைந்து எல்லோ சிக்னல் விழுந்தது. சில நொடிகளில் கிரீன் சிக்னலும் விழுந்து விடும். ஆனால், ரெயிலை விட்டு இறங்கிச் சென்ற ஆனந்த் மீண்டும் ரெயிலில் ஏறவில்லை.

கிரீன் சிக்னலும் விழுந்தாயிற்று. ரெயில் என்ஜின் டிரைவர் பலமான ஹாரனை சற்று இடைவெளியின்றி எழுப்பிவிட்டு ரெயிலை மெதுவாக நகர்த்தினார். ஷ்ரவ்யாவின் பதற்றம் அதிகமானது.

'ரெயிலில் இருந்து இறங்கிப் போன மனிதன் வராமல் போனாலும் கூட பரவாயில்லை. தற்கொலை... என்று ஏதாவது விபரீத முடிவு எடுத்து விட்டால், அதற்கு நாமும் ஒருவகையில் காரணம் ஆகிவிடுவோமே...' என்று மனதிற்குள் பரபரத்தாள்.

இருக்கையை விட்டு எழுந்தவள் கதவு நோக்கி வேகமாக ஓடினாள். அப்போதும், ரெயில் மெதுவாகத்தான் நகர்ந்து கொண்டிருந்தது. ஓடி வந்தால் நிச்சயம் ரெயிலை பிடித்து விடலாம். ஆனால், அவள் எங்கு தேடியும் ஆனந்தை காணவில்லை.

பதற்றத்தில் தலைக்கு மேல் இரு கையையும் வைத்துக் கொண்டு, ஓடிக்கொண்டிருந்த ரெயிலின் கதவு அருகே அப்படியே உட்கார்ந்து விட்டாள். எப்போதும் இல்லாத சோகம் திடீரென்று அவளை தாக்கியது. அவளை அறியாமல் கண்ணீரும் வந்தது. ஓவென்று கதறி அழுதும் விட்டாள்.

திடீரென்று தனது காலை யாரோ மிதித்தது போன்ற ஒரு உள்ளுணர்வு. வந்த கண்ணீரை வேகமாக துடைத்துக் கொண்டு நிமிர்ந்துப் பார்த்தாள். வேகம் எடுத்திருந்த ரெயிலில் ஏறியிருந்தான் ஆனந்த். வேகமாக ஓடி வந்து ஏறியதில் மூச்சுவிட கொஞ்சம் சிரமப்பட்டான்.

அவனைப் பார்த்த மாத்திரத்தில் எழுந்த ஷ்ரவ்யா, அவனை வேகமாக ரெயிலுக்குள் பிடித்து இழுத்தாள். திடீரென்று என்ன நினைத்தாளோ,தன்னையும் அறியாமல் அவனை கட்டிப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். அருகே நின்றிருந்த பயணிகளும், என்னவோ... ஏதோ... என்று அங்கே கூடிவிட்டார்கள்.
(தேனிலவு தொடரும்...)
Share:

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 4


4. அமுதாவின் கோபம்
- நெல்லை விவேகநந்தா -

கல் முழுக்க வானில் நடந்து நடந்து களைத்துப் போன சூரியன், தூக்கம் கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தான். அதற்கு முன்னதாக அவன் மஞ்சள் தேய்த்துக் குளித்தானோ என்னவோ, அவன் அன்று கடைசியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மேற்கு வானத்தில் மஞ்சள் நிற மேகங்களின் சிதறல்கள் அழகான இயற்கை ஓவியத்தை வரைந்து விட்டிருந்தது.

இப்படி, இயற்கை வீட்டிற்கு வெளியே வர்ணஜாலங்களை நிகழ்த்திக் கொண்டிருக்க... வீட்டிற்கு முன்பு வந்து நின்ற டாடா இன்டிகா காரின் ஹாரன் சப்தம் கேட்டு வேகமாக வந்தாள் பாக்கியம். அவளது மருமகன் குணசீலன்தான் காரிலிருந்து இறங்கி வந்தான்.

"மாப்ள... நீங்க மட்டும்தான் வந்தீங்களா? வேறு யாரும் வரலீயா?" - ஆர்வமாக விசாரித்தாள் மாமியார் பாக்கியம்.

"இல்ல அத்த. அமுதாவுக்கு என்னன்னு தெரியல. எங்க வீட்டோட இன்னும் ஒட்ட மாட்டேங்குறா. அதனாலதான் நான் மட்டும் வந்தேன்."

"அய்யய்யோ... நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல மாப்ள. கல்யாணம் ஆன புதுசுல்ல, அதான் காரணம். வேறு எதுவும் இல்லை" என்று கூறி, மருமகன் தனது மகள் மீது அடுத்தக் குற்றச்சாட்டை கூற விடாமல் அவனது வாயை அடைத்தாள்.

வீட்டிற்குள் நுழைந்த குணசீலன், தனது புது மனைவி எங்கே என்று தேடினான். அட்டாச்டு பாத்ரூமில் இருந்து வெளிப்பட்ட அமுதா அவனது பார்வையில் தெரிந்தாள்.

அம்மா மட்டும்தான் வீட்டில் இருக்கிறாள் என்கிற தைரியத்தில் பாவாடையால் மட்டுமே மார்பு வரை மறைத்திருந்தாள். தலைமுடி தண்ணீரில் நனையாமல் இருக்க, அதை அழகாய் முடிந்து கொண்டை போட்டிருந்தாள். அவள் குளியலுக்குப் பயன்படுத்திய சீயக்காய் பவுடரின் வாசனை அவளுக்கு முன்பாக குணசீலனின் மூக்கை முத்தமிட்டு அவனை புது உற்சாகம் கொள்ளச் செய்தது.

புதுமனைவியை ஒரு மாதிரியாக பார்த்தவன் சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்தான். தான் அரைகுறை ஆடையோடு இருப்பதை உணர்ந்த அமுதா வேகமாக பெட்ரூமிற்குள் பாய்ந்தாள். அதேவேகத்தில் கதவையும் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள்.

"அமுதா... கதவ திற..."

கதவைத் தட்டிக் கொண்டே குரல் கொடுத்தான் குணசீலன். ஆனால், அமுதாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

மறுபடியும் குணசீலன் கதவைத் தட்ட... அவனைப் பார்த்து விட்டாள் பாக்கியம். டம்ளரில் சூடாக இருந்த பசும்பாலை ஆற்றிக் கொண்டே வந்தவள், குணசீலனைப் பார்த்ததும் அவனுக்கு சில அடி தூரம் தள்ளியே நின்று விட்டாள்.

"மாப்ள... அங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"

மாமியார் குரல் கேட்டதும் சட்டென்று திரும்பினான் குணசீலன்.

"ஒண்ணும் இல்ல அத்த... இப்பதான் அமுதா குளிச்சிட்டு வெளியே வந்தா. அவகிட்ட பேசலாம்னு முயற்சி பண்ணினா, அவ கதவை பூட்டிக்கிட்டா. அதான் கதவை தட்டிட்டு நிக்கிறேன்."

குணசீலனின் பதிலில் அவன் லேசாக வழிந்ததும் பாக்கியத்திற்கு தெரியாமல் இல்லை. அவளும் திருமணம் ஆகிப் பிள்ளைகள் பெற்று, அவர்களுக்குத் திருமணமும் செய்து கொடுத்தவள்தானே? திருமணம் ஆகி ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் முதலிரவைக் காணாத தனது மாப்பிள்ளையின் ஏக்கத்தை அவள் புரிந்து கொண்டாள்.

"முதல்ல இங்கே வந்து உட்காருங்க. இந்தப் பாலை குடிச்சுட்டு வெயிட் பண்ணுங்க. அவளே கொஞ்ச நேரத்துல வந்திடுவா..." என்றவள், நேராக அமுதா தாழ்ப்பாள் போட்டிருந்த கதவை தட்டினாள்.

"அம்மாடி... மாப்ளதான் வந்திருக்காரு. டிரெஸ் பண்ணி முடிச்சதும் அவரு கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இரு. நான் பூக்காரம்மா வீட்டு வரைக்கும் போயிட்டு கொஞ்ச நேரத்துல வந்திடுறேன்."

அமுதாவின் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து அகன்றாள் பாக்கியம்.

குணசீலனுக்கு நேரம் போகவில்லை. விவசாயமே கதியென்று கிடக்கும் மாமனார் தங்கதுரை வீடு திரும்ப தினமும் இரவு 7 மணி தாண்டிவிடும் என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததால், மீதமிருக்கும் கொழுந்தியாளிடமாவது பேசலாமே என்று வாணியை தேடினான். அவளும் வீட்டில் இல்லை. அமுதா தாழ்ப்பாளிட்ட கதவையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த கதவு இப்போதைக்கு திறப்பதற்கான அறிகுறியே தென்படாததால், தான் கையோடு கொண்டு வந்திருந்த லேப்டாப்பைக் கையில் எடுத்து ஆன் செய்தான். ரிலையன்ஸ் டேட்டா கார்டையும் லேப்டாப்போடு இணைத்தவன், கூகுள் வழியாக தனது ஜி மெயிலுக்குள் நுழைந்து, தனக்கு வந்திருந்த திறக்கப்படாத மெயில்களை திறந்து படிக்க ஆரம்பித்தான்.

ஷைலஜா என்ற பெயரில் வந்திருந்த மெயிலை அவன் திறந்த போது, அதில் இன்னும் ஆர்வமாக மூழ்கினான். ஹாய் ஷாம்... என்று ஆரம்பித்த அந்த மெயில் கடிதத்தை கீ போர்டால் எழுதிய ஷைலஜா, தனது பெர்சனல் போட்டோக்கள் சிலவற்றை இணைத்திருந்தாள். அவற்றில் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் மெல்லிய சேலையில் அழகாக பளிச்சிட்டுக் கொண்டிருந்தாள் ஷைலஜா.

ஒவ்வொரு படத்தையும் பெரிதாக்கிப் பார்த்து ஜொள் விட்டவன், கடைசியாக சில வரிகளில் எழுதப்பட்டு இருந்ததைப் படித்து லேசாக அதிர்ந்தான்.

'ஷாம்... நானும் எத்தனை நாளைக்குத்தான் பேச்சுலராகவே இருப்பது. நானும் உன்னைப் போன்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து விட்டேன். வீட்டில் ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள். மாப்பிள்ளை வீட்டில், எனது போட்டோவைக் கேட்டிருக்கிறார்கள். என்னை அழகாக புகழ்ந்தவர்களில் நீதான் டாப். அதனால்தான் இந்தப் போட்டோக்களை உனக்கு அனுப்பி இருக்கிறேன். உனக்குப் பிடித்த போட்டோவை செலெக்ட் செய்து அனுப்பு. அதையே நான் மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி விடுகிறேன். உனக்கு பெர்சனலாக ஒன்றை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். உன்னுடன் நான் எத்தனையோ முறை படுக்கையை பகிர்ந்து இருக்கிறேன். அதுதான் சொர்க்கம் என்றும் நினைத்திருக்கிறேன். இதையெல்லாம் தாண்டி ஒரு பந்தம் இருக்கிறது. அதுதான் திருமணம். நீ உன் விருப்பப்படி கிராமத்துப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு விட்டாய். நானும் உன் வழியிலேயே படித்த கிராமத்துப் பையனைத்தான் எதிர்பார்க்கிறேன். எனக்கும் உன்னைப் போன்று கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பையனே கணவனாக கிடைக்க வேண்டும் என்று உன் இஷ்ட தெய்வத்திடம் எனக்காக வேண்டிக்கொள். நானும் உன் நல்வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன். இப்படிக்கு, அன்புடன் ஷைலஜா.'

மெயில் கடிதத்தைப் படித்தவன், டி சர்ட்டில் ஒய்யாரமாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்த ஷைலஜா உருவப்படத்தின் மீது விரல்களால் வீணை மீட்டிக் கொண்டிருந்தான். கடைசியாக அவன் தனது ஆள்காட்டி விரலால் தொட்ட இடம் அவனையே வெட்கம் கொள்ளச் செய்தது. அக்கணமே ஷோபாவில் தலை சாய்த்து ஓரிரு நொடிகள்தான் கண்களை மூடி இன்ப வெள்ளத்தில் மூழ்கியிருப்பான். அடுத்த நொடியே கண்களைத் திறந்தான். எதிரே அமுதா நின்று கொண்டிருந்தாள்.

"ஆமா... இதுல என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"

அமுதா கேட்ட கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் திணறியவன், "தப்பா நினைக்காத அமுதா. அது, எனக்கு வந்த மெயில் இல்ல. வேறு யாருக்கோ போக வேண்டியது எனக்கு வந்து விட்டது. அது யாருக்கு வந்திருக்கும்னு யோசிச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ள நீ வந்துட்ட..." என்றான்.

"நீங்க என்ன சொல்றீங்க? ஏதோ டி.வி. மாதிரி கையிலே வெச்சு இருக்கீங்களே... அது என்னன்னு தெரிஞ்சுக்கலாமேன்னுதான் கேட்டேன்."

அமுதாவின் பேச்சில் வேகம் இல்லாததால், லேப்டாப்பில் தான் செய்து கொண்டிருந்ததை அவள் பார்க்கவில்லை என்று அவசரமாக கணித்துக் கொண்டான் குணசீலன். அதேநேரம், அவள் லேப்டாப்பை டி.வி. என்று தவறாக சொன்ன வார்த்தையை சரியாக பிடித்துக் கொண்டான்.

"ஆமா... இது என்னன்னு சொன்ன?"

தான், கையில் வைத்திருந்த லேப்டாப்பை அமுதாவிடம் காண்பித்துக் கேட்டான் குணசீலன்.

"இது சின்ன டி.வி. பாக்ஸ் தானே?"

மடி கணினிதான் லேப்டாப் என்பதுகூட தெரியாமலேயே வாழ்ந்திருக்கிறாள் அமுதா.

"இது டி.வி. பாக்ஸ் இல்ல அமுதா. இதுவும் ஒரு கம்ப்யூட்டர்தான். இதோட பெயர் லேப்டாப். இத எங்கே வேண்டுமானாலும் நாம எடுத்துட்டுப் போகலாம்."

"இங்கே எதுக்காக இத எடுத்துட்டு வந்தீங்க?"

"என்ன அமுதா இப்படியொரு கேள்வி கேட்டுட்ட? என்னோட டியூட்டியில இது இல்லாம எதுவும் முடியாது."

"அப்படியா?"

இதற்கு மேல் அமுதாவால் அதுபற்றி விளக்கம் கூட கேட்க முடியவில்லை.

வீடே கதியென்று கிடந்து விட்டதால் உலக அளவில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியைக் கூட அவளால் அளவிட முடியவில்லை. அதேநேரம், 'எனக்கு ஒரு லேப்டாப் வேண்டும்; அதை வாங்கப் பணம் கொடுங்கள்...' என்று சில மாதங்களுக்கு முன்பு தனது தங்கை வாணி அடம் பிடித்தது இப்போது அமுதாவுக்கு நினைவுக்கு வந்து போனது.

'அப்படியென்றால், அவளும் பெரிய படிப்புதான் படிக்கிறாள். படிப்பு முடிந்ததும் பட்டணத்திற்குப் போய் நிறைய சம்பாதிப்பாள்' என்று மனதிற்குள் தனக்கு தானே சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.

"அமுதா... என்ன யோசிச்சுட்டு இருக்க? லேப்டாப்னா என்னன்னு தெரியாம வளர்ந்துட்டோமேன்னு வருத்தமா இருக்கா? அது பெரிய விஷயமே கிடையாது. நானே உனக்கு எல்லாத்தையும் கத்துக் கொடுக்கிறேன்" என்ற குணசீலன், அவளை அவசரமாக அமைதிப்படுத்தினான்.

'இங்கே என்ன நடக்குது? மருமகன் வேற கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் வீட்டுக்கு வந்தாரு. அமுதாவும் வீட்டுலதான் இருக்கா. வேற ஏன் வீட்டுக்கு வெளியே லைட் போடாம இருக்குறா?'

தனக்குத்தானே சொல்லிக் கொண்டே, வெளியே சென்ற பாக்கியம் வீட்டிற்குள் நுழைந்தாள். அவள் கொண்டு வந்த கூடை நிறைய மல்லிகைப்பூ இருந்தது. அவள் வீட்டிற்குள் நுழையும் முன்பே, மல்லிகையின் வாசனை வந்துவிட்டது.

வீட்டிற்குள் மகளையும், மருமகனையும் பார்த்தவள், "ஓ... நீங்க இங்கேதான் இருக்குறீங்களா? மொட்ட மாடிக்கு போயிட்டீங்களோன்னு பார்த்தேன்" என்று சொன்னபடியே, தான் கொண்டு வந்த மல்லிகைப்பூக்கள் நிரம்பியிருந்த கூடையை அமுதாவிடம் கொடுத்தாள்.

"இதெல்லாம் மல்லிகைப்பூதான். உங்களுக்காகத்தான் வாங்கிட்டு வந்தேன். பெட்ரூமில் கொண்டுபோய் வை..." மகளின் முகத்தைக் கூட பார்க்காமல் சொல்லிவிட்டு அகன்றாள்.

மாமியார் எதற்காக அவசரமாக மல்லிகைப்பூ வாங்கி வந்திருக்கிறார் என்பது குணசீலனுக்கு புரிந்துவிட்டது. திருமணமாகி ஒரு வாரம் மேலாகியும் இன்னுமே நடக்காத முதலிரவுக்கான ஏற்பாடுதான் அது என்பதை அறிந்து குஷியானான்.

அமுதாவுக்கும் புரிந்து விட்டது. அதுவரை, லேப்டாப் கூட தெரியாமல் வளர்ந்துவிட்ட தனது அறியாமையை எண்ணி வருந்தியவள், சட்டென்று கோபமானாள்.

மல்லிகைப்பூ கூடையோடு பெட்ரூமிற்குள் நுழைந்தவள், அதை வேகமாக வீசியெறிந்தாள்.

(தேனிலவு தொடரும்...)
Share:

சனி, 10 டிசம்பர், 2011

விபரீத ஆசை


உன்
கொஞ்சலும்
கிச்சுகிச்சு மூட்டுகிறது

உன்
கெஞ்சலும்
சிலிர்க்க வைக்கிறது

எல்லாம்
சற்று தொலைவில்
நீ
பக்கத்து வீட்டு
குழந்தையை கொஞ்சும்போது...

எனக்கும்
ஓர் நப்பாசை;

அந்த சேயாய்
நான் மாற வேண்டும்
நீயும்
என் விருப்பப்படி
மாற வேண்டும்
காதலியாக அல்ல;
ஒரு தாயாக!

ஆம்...
நான்
இன்னொருமுறை
பிரசவமாக வேண்டும்
உன் சேயாக...

இது
நடக்காத பேராசை அல்ல;

காதலிக்கும்
இணையற்ற பாசமுண்டு என்று
என்
பெற்றோரிடம் நிரூபிக்க!

- கவிஞர் நெல்லை விவேகநந்தா
















Share:

செவ்வாய், 22 நவம்பர், 2011

நெல்லை விவேகநந்தா நூலுக்கு நடிகர்-நடிகையர் பாராட்டு!


நெல்லை விவேகநந்தா எழுதியுள்ள 'பேரழகி கிளியோபாட்ரா - உலகம் போற்றும் காதல் காவியம்' வரலாற்று நாவல் இன்னும் ஒருசில தினங்களில் வெளியிடப்பட உள்ளது. பாரம்பரியம் கொண்ட - கவிஞர் கண்ணதாசனுக்கு புகழ் பல பெற்றுத் தந்த வானதி பதிப்பகமே இந்நூலை வழக்கம்போல் அழகுற வெளியிடுகிறது.


இந்த நூலுக்கு நடிகர் கம் டைரக்டர் ரா.பார்த்திபன் வழங்கியுள்ள பாராட்டுரை...


அகப்படாததெல்லாம் அற்புதங்களே! அப்படியே அகப்பட்டா லும் அதை அதுவாய் பார்ப்பதில்லை நாம்! அதில் கொஞ்சம் மசாலா தூவி, உப்பிட்டு வேறொன்றுடன் ஒப்பிட்டே மகிழ்கிறோம்.


பெண்ணை பெண்ணாக மதிப்பதில் ஏதோ உள்குத்து நம் அனைவரிடமும் உள்ளது. ‘கிளி மாதிரி இருக்கா... கிளியோபாட்ரா மாதிரி இருக்கா’ன்னு உவமை/உதாரணம் சொல்வோம்.


எந்தக் கிளியையாவது ஒரு பொண்ணு மாதிரி அழகாயிருக்கு அதுன்னு ‘சைட்’ அடிச்சிருக்கோமா? அலகால இல்லாம, தன் அழகால நம்மை கொத்திகிட்டு போறப் பொண்ணை கிளின்னு விளிக்கலாம். சரி, அது யாரு கிளியோபாட்ரா?


கருப்பா? சிவப்பா? தொடும்வரை அழகா? உயிர் விடும்வரை அழகா? விட்டுப் பிரிந்து இத்துனை 365-களுக்குப் பிறகும் அழகுக்கு கிளியோபாட்ரா மட்டும் ஏன் உதாரணப் புருஷியாக விளங்குகிறாள்? என்ற என்னுடைய ஈர்ப்புடைய சந்தேகம் அனைத்திற்கும் ஏற்புடைய விளக்கமாகவும், விரும்பும்படியாகவும், எளிமையாகவும் இருக்கிறது நண்பர் நெல்லை விவேகநந்தா செதுக்கியுள்ள ‘கிளியோபாட்ரா’.


கல்லை செதுக்குபவரை சிற்பி என்போம்.    நெல்லை விவேகநந்தா ஒரு சிலையையே இன்னும் நேர்/சீர்/கூர் படுத்தி கலைநயத்தோடு செதுக்கியிருக்கிறார்.

வாழ்த்துக்கள்

+ ப்ரியமுடன்

ரா.பார்த்திபன்

இதேபோல், இதே நூலுக்கு நடிகை பூர்ணா தந்துள்ள வாழ்த்துரை...


வணக்கம். கிளியோபாட்ராவின் வரலாறு கூறும் இந்த நூலைப் பற்றி அறிவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.


உலகின் நிரந்தர அழகியான கிளியோபாட்ராவைப் பற்றிய இந்தப் புத்தகம் பல்வேறு விவரங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இன்றுவரை கிளியோபாட்ராதான் பேரழகி என்று வர்ணிக்கப்படுகிறாள். அவள் எவ்வளவு திறமையானவளாக, அறிவு நிறைந்தவளாக இருந்தாள் என்பது இந்தப் புத்தகத்தில் இருந்து தெரிய வருகிறது.


அழகு மட்டுமல்ல, அவளது மற்ற திறமைகளும் சேர்ந்துதான் உலகம் அவளைப் போற்ற காரணமாக இருந்தது என்று தெரிகிறது. மேலும், பண்டைய ரோமானிய, எகிப்திய அரசுகள் பற்றியும், ஜூலியஸ் சீஸர், மார்க் ஆண்டனி ஆகியோர் பற்றியும் மிகவும் விவரமாக தெரிந்து கொள்ள முடிகிறது.


புத்தகத்தின் ஆசிரியர் திரு.நெல்லை விவேகநந்தா அவர்கள், இதற்காக பெரும் முயற்சி எடுத்து, ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடிகிறது. அவருக்கு என் பாராட்டுக்கள்!


தமிழின் சிறந்த நூல்களுள் ஒன்றாக சாதனை படைக்க எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்!


நடிகை பூர்ணா
Share:

ஞாயிறு, 13 நவம்பர், 2011

புத்தக வடிவில் கிளியோபாட்ரா வரலாற்று நாவல்!



பேரழகி கிளியோபாட்ராவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், அவளைப் பற்றிக் கேட்டால், அவள் மிகவும் பேரழகி, கழுதைப்பாலில் குளித்து, தனது அழகை தக்க வைத்து வந்தாள் என்று சொல்வார்கள். இன்னும் கொஞ்சம் தெரிந்தவர்கள், அவள் எகிப்தை ஆண்ட பேரரசி. ரோமானிய மாவீரர்களான ஜூலியஸ் சீஸர், ஆண்டனி ஆகியோர் அவள் மடியில் மயங்கிக் கிடந்தார்கள் என்பார்கள்.


கிளியோபாட்ராவின் வரலாறு பெருங்கடல் என்றால், அதில் இந்த தகவல்கள் மிக மிக சொற்பமே. அவள் யாருக்கு பிறந்தாள், எப்படி ஆட்சிக்கு வந்தாள், ஏன் தம்பிகளை திருமணம் செய்து கொண்டாள், சீஸர் உடனான அவளது காதல் எப்படி போனது, சீஸருக்குப் பிறகு ஏன் ஆண்டனியை காதலித்தாள், ஆண்டனியை காதலிக்கப் போய் ரோமானிய சரித்திரம் எப்படி மாறியது, தற்கொலை முடிவை தேர்வு செய்யும் அளவுக்கு அவளுக்கு என்ன நேர்ந்தது... இப்படி யாரும் அறியாத வரலாற்றுப் பக்கங்களைக் கொண்டது கிளியோபாட்ரா வாழ்க்கை வரலாறு.


அவளது அந்த வரலாறு ஏ டூ இசட் வரையில் இப்போது புத்தக வடிவில் வந்து விட்டது. நெல்லை விவேகநந்தா எழுதிய "பேரழகி கிளியோபாட்ரா - உலகம் போற்றும் காதல் காவியம்" என்ற வரலாற்று நாவலில் நீங்கள் கிளியோபாட்ரா பற்றி தெரியாத ஏராளமான தகவல்கள் உள்ளன. நாவல் வடிவில், மிக மிக எளிய நடையில் உலகத் தரத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நாவலுக்கு உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிகர்-டைரக்டர் ரா.பார்த்திபன், சின்ன அசின் என்று சினிமா உலகில் அழைக்கப்படும் நடிகை பூர்ணா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி இருக்கிறார்கள்.


இன்னும் சில தினங்களில் புத்தகம் வெளியாக இருக்கிறது. புத்தகத்தை, வழக்கம்போல் பதிப்புலகில் புகழ்பெற்ற வானதி பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள்.


324 பக்கங்களில் வெளியாகும் இந்த நூலுக்கு உங்களது ஆதரவு வழக்கம் போல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.


இந்த புத்தகம் எங்கெல்லாம் கிடைக்கும், என்ன விலை என்பன போன்ற விவரங்களுடன் விரைவில் சந்திக்கிறேன். நாளை... எனது நூலுக்கு உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிகர் - டைரக்டர் ரா.பார்த்திபன், நடிகை பூர்ணா எழுதிய வாழ்த்துரைகளை பார்க்கலாம்.


புத்தகம் பற்றிய ஆர்டர் மற்றும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க...

வானதி பதிப்பகம்

23, தீனதயாளு தெரு,

தி.நகர், சென்னை-17

போன் : 044 - 24342810, 24310769





நட்புடன்

நெல்லை விவேகநந்தா
Share:

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

சாந்திமுகூர்த்த சாபம்


வர் ஒரு சிறந்த ஜோதிடர். ஆனால் குழந்தை இல்லை. பலவித விரதங்கள் மேற்கொண்டதன் பலனாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் ஜாதகத்தை கணித்த தந்தையான ஜோதிடர் அதிர்ந்து போனார். சாந்திமுகூர்த்தம் அன்று அவளது கணவர் இறந்து போவான் என்று உணர்ந்தார். பெரிதும் வருந்தினார். இருந்தாலும், பாக்கியவதி என்று தனது மகளுக்கு பெயர் சூட்டினார்.


ஆண்டுகள் நகர்ந்தன. அந்த குழந்தை வளர்ந்து பருவ வயதை அடைந்தது. மகளை மணக்க விரும்புகிறவர்களிடம், சாந்திமுகூர்த்தம் அன்று மணமகன் இறந்து போவான் என்று உண்மையைச் சொல்வார் ஜோதிடர். வந்தவர்கள் வந்த வழியே சென்றுவிடுவார்கள். இப்படியே பலர் வந்து போனார்கள். பாக்கியவதிக்கு திருமணம் ஆகாமல் பல காலம் கழிந்தது.


ஒருநாள், அறிவில் சிறந்த, துணிச்சல் மிகுந்த இளைஞன் ஒருவன் ஜோதிடரை அணுகி, அவரது மகளை மணக்க விரும்புவதாக கூறினான். ஜோதிடரும் வழக்கம்போல், "நீ சாந்திமுகூர்த்தம் அன்று இறந்து போவாய்" என்றார். உடனே, அந்த இளைஞன், "நானும் சாஸ்திரங்களை கற்றறிந்தவன் தான். மரணத்திற்கு அஞ்சுபவன் கோழை. நான் வீரன்" என்று சூளுரைத்தான்.


ஒரு நல்ல நாளில் பாக்கியவதி, அந்த இளைஞன் திருமணம் நடந்தது. அன்று இரவு சாந்திமுகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்தார் ஜோதிடர். நாளை மருமகன் உயிரோடு இருக்க மாட்டான் என்று உறுதி செய்து கொண்டு, அவனது இறுதிச்சடங்குக்கும் கூடவே ஏற்பாடு செய்தார். பாக்கியவதி முதல் நாள் இரவில் தனிமையில் கணவனை சந்தித்தாள். தான் கற்றறிந்த வேதங்கள் பற்றி அவளுக்கு கூறினான்.


அப்போது, அவனுக்கு திடீரென்று வயிற்றுவலி உண்டானது. அன்றைய தினம் உணவு அதிகமாக சாப்பிட்டதால் அந்த நிலை ஏற்பட்டது. அருகில் உள்ள தோப்புக்கு சென்றான். வயிற்று உபாதை நீங்கியதும் பக்கத்தில் தண்ணீர் தேங்கி நின்ற சிறிய குட்டையில் கால் அலம்பச் சென்றான். அப்போது அவனது காலை ஒரு முதலை கவ்விக்கொண்டது.


"மரணம் வரும் என்று எனக்கு முன்பே தெரியும். மரணத்தை கண்டு நான் அஞ்ச மாட்டேன். என்னை கொஞ்சம் விடு. எனது அன்பு மனைவியிடம் தகவல் கூறிவிட்டு மீண்டும் வருகிறேன்" என்றான். "நீ என்ன அரிச்சந்திரனா? உன்னை விட்டால் வரமாட்டாய். எனக்கு பசிக்கிறது. அதனால் நீ எனக்கு வேண்டும்" என்றது அந்த முதலை.


உடனே, அவன், "முதலையே! நான் சத்தியத்தை மதிப்பவன். என்னை நம்பு. உறுதியாக வருகிறேன்" என்றான்.


அதற்கு முதலை, "மனைவியிடம் தகவல் கூறிவிட்டு வராமல் போவேன் என்றால், சாப்பிடுகின்றபோது விளக்கு அணைந்த பின் எவன் உண்பானோ அவன் போகின்ற நரகம் போவேன் என்று சத்தியம் செய், விடுகிறேன்" என்றது. அதன்படி அவன் சத்தியம் செய்ய, முதலை அவனை விட்டது.


சாந்திமுகூர்த்தத்திற்காக காத்துக்கொண்டிருந்த மனைவியிடம் நடந்ததை கூறி, அவளை தழுவி விடைபெற்று முதலை இருக்கும் இடத்தை நோக்கி மீண்டும் வந்தான். பாக்கியவதி பெரிதும் வருந்தினாள். இறைவன் அருளாள் அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. கணவனுக்கு தெரியாமல் அவனை பின்தொடர்ந்தாள்.


அந்தநேரம் முதலை அருகில் வந்த அவளது கணவன், "முதலையே! நான் வந்து விட்டேன். என்னை உணவாக ஏற்றுக்கொள்" என்றான். முதலை ஆவலுடன் அவனது காலை பற்றிக்கொண்டது. அந்தநேரம், அவனை பின்தொடர்ந்து வந்த பாக்கியவதி, எரிகின்ற ஒரு விளக்கை காண்பித்து அணைத்துவிட்டாள். இதை கண்ட முதலை அவளது கணவனது தனது பிடியில் இருந்து விட்டுவிட்டது.


"உன்னை நான் உண்ணும் நேரத்தில் விளக்கு அணைந்து விட்டது. அதனால் உண்ண மாட்டேன். நீ போகலாம்" என்றபடி விலகிக்கொண்டது முதலை. திரும்பி பார்த்தான் அவன். அருகே மகாலட்சுமியைபோல் நிற்கும் மனைவி பாக்கியவதியை கண்டான். அவளது மதிநுட்பத்தை எண்ணி வியந்தான்.


ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்பார்கள். இங்கே ஒரு கணவனின் அல்லல் அழிந்ததும் ஒரு பெண்ணாலே தான். இதை எல்லோரும் உணருங்கள்.


- இந்தக் கதையை சொன்னவர் திருமுருக கிருபானந்த வாரியார்.


Share:

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

கெட்டிமேளம் கொட்ட வைக்கும் நித்ய கல்யாண பெருமாள்





ந்த கோவிலுக்குள் நுழைந்தபோது, இன்று முகூர்த்த நாளா என்று சந்தேகம் வந்துவிட்டது. காரணம், மாலையும், கழுத்துமாக ஏராளமான புதுமண ஜோடியினர் கோவிலை வலம் வந்து கொண்டிருந்தது தான். ஆனால், அன்று முகூர்த்த நாள் இல்லை.


வேறு ஏன் இவர்கள் இப்படி வலம் வருகிறார்கள்? என்று யோசித்தபடியே பார்வை இன்னொரு பக்கம் திருப்பியபோது, அங்கே தனியாக ஆண்களும், பெண்களும் கழுத்தில் மாலையுடன் பயபக்தியாக கூப்பிய கரங்களுடன் வலம் வந்து கொண்டிருந்தனர்.


ஏன் இப்படி மாலையும், கழுத்துமாக கோவிலை வலம் வருகிறார்கள் என்று அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம் கேட்டோம்.


"இந்த கோவிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் சட்டென்று திருமணம் முடிந்து விடும். அவ்வாறு திருமணம் முடிந்த தம்பதியர், இந்த கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்திக் கொள்வார்கள். அவர்கள் தான் இங்கே ஜோடிகளாக வலம் வருவது. தனியாக வருபவர்கள், திருமணம் உடனே நடைபெற வேண்டி பிரார்த்தனை செய்பவர்கள்" என்று விளக்கம் கொடுத்தார் அவர்.


இத்தகைய சிறப்புமிக்க கோவில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் சென்னைக்கு அருகில் திருவிடந்தை என்ற இடத்தில் அமைந்துள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலாகும்.



வேண்டுதல் : திருமணம் ஆகாத ஆண், பெண்கள் இந்த கோவிலுக்கு தங்களது பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்களுடன் வர வேண்டும். ஒரு பூ மாலையை வாங்கிக்கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை செய்ய கொடுக்க வேண்டும். சுவாமிக்கு அர்ச்சனை செய்து முடித்ததும் அந்த மாலையை கொடுப்பார்கள். அதை கழுத்தில் போட்டுக்கொண்டு, கோவிலை 9 முறை வலம் வர வேண்டும். வலம் வந்து முடித்ததும், கோவில் கொடிக்கம்பம் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.


பிறகு, அந்த மாலையுடன் நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும். வீட்டு பூஜை அறையில் அந்த மாலையை வைத்துவிட வேண்டும். திருமணம் முடிந்ததும், தம்பதியராக வந்து அந்த மாலையை கோவிலில் சேர்த்துவிட வேண்டும் (இதற்கென்று கோவில் பின்புறம் ஒரு மரம் உள்ளது. அந்த மரத்தில் மாலையை கட்டி வைத்து விடுகிறார்கள்).


இந்த எளிய பரிகாரத்தை செய்து திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பவர்கள் ஏராளம்.


தல வரலாறு : முன்னொரு காலத்தில், 360 மகள்களுடன் வாழ்ந்து வந்த காலவ ரிஷியின் வேண்டுதலை ஏற்று, பிரம்மச்சாரியாக வந்து, தினமும் ஒரு பெண்ணாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் செய்து கொண்டு, கடைசி நாளன்று அனைவரையும் ஒருவராக்கி தனது இடப்பாகத்தில் வைத்துக் கொண்டு காட்சி தந்தார் பெருமாள். அதனாலேயே இங்குள்ள பெருமாள் 'நித்ய கல்யாண பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார் என்கிறது இக்கோவில் தலபுராணம்.


அதனாலேயே திருமணத்தடை போக்கும் தலமாக இந்த கோவில் திகழ்கிறது. தினமும் மாலையும், கழுத்துமாக தம்பதியர் வலம் வருவதையும் காண முடிகிறது.


இங்குள்ள வராக தீர்த்தத்தில் மாசி மாதம் நீராடி பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்றும், கல்யாண தீர்த்தத்தில் சித்திரை மாதம் நீராடி பெருமாளை வணங்கினால் பாவங்கள் அகலும் என்றும் கூறுகிறார்கள். தம்பதி சமேதராக ஆதிசேஷன், பெருமாளின் திருவடியை தாங்கும் திருக்கோலத்தில் இங்கு காட்சித் தருவதால் இத்தலத்தில் வழிபடுவோருக்கு ராகு, கேது தோஷங்களும் நீங்குகின்றன.


உற்சவர் நித்ய கல்யாண பெருமாளுக்கும், கோமளவல்லி தாயாருக்கும் இயற்கையிலேயே திருஷ்டி பொட்டு அமைந்துள்ளதால், இவர்களை மனம் உருகி வேண்டும்போது திருஷ்டிகளும் நீங்குகின்றன.


நடை திறப்பு :  காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.


திருவிழா :  ஆனி கருட சேவை, ஆடிப்பூரம், கஜேந்திரமோட்ச கருடசேவை, நவராத்திரி, விஜயதசமி, கார்த்திகை தீபம், தனுர் மாத பூஜை, மாசி மகம், சித்திரை பிரம்மோற்சவம், வைகாசி வசந்த உற்சவம் போன்ற திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.


அமைவிடம் : சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலையில், 40 கிலோமீட்டர் தொலைவில் கோவளத்திற்கு முன்னதாக திருவேடகத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல சென்னை, மாமல்லபுரம் பகுதிகளில் இருந்து போக்குவரத்து வசதி உள்ளது.

உங்கள் இல்லத்திலும் கெட்டிமேளம் கொட்ட வேண்டுமா? வாழ்க்கையில் வசந்தக்காற்று வீச வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் தரிசிக்க வேண்டியது, நித்தமும் கல்யாணம் புரிந்த இந்த நித்ய கல்யாண பெருமாளைத் தான்!

Share:

சனி, 15 அக்டோபர், 2011

இரண்டாம் தேனிலவு பகுதி - 3


3. காதல் தந்த சோகம்

இதுவரை....

திருவள்ளூரைக் கடந்து அரக்கோணம் நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது சென்னை - கோவை எக்ஸ்பிரஸ். சேலையில் ஊட்டி ரோஜாவாய் மலர்ந்திருந்த ஷ்ரவ்யாவை வாயாரப் புகழ்ந்து கொண்டே வந்தான் ஆனந்த்.


"ஷ்ரவ்யா... இந்த ரோஸ் கலர் சாரியில் நீங்க ரொம்பவும் அழகா இருக்கீங்க."


"உண்மையாத்தான் சொல்றீங்களா? இல்ல... ஏதாவது பேசணுமேங்றதுக்காக இப்படிச் சொல்றீங்களா?"


"அப்படியெல்லாம் இல்லீங்க. என் மனசுல பட்டதத்தான் பேசுறேன்."


"மனசுல இருந்து பேசுறேன்னு சொல்றீங்க. அப்போ நான் உலக அழகியாகத்தான் இருக்க முடியும்."


"என்னங்க... நீங்க அழகா இருக்கீங்கன்னு சொன்னதுக்கு ஐஸ்வர்யாராய் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்குறீங்க... இதுதான் சந்து கேப்புல சிந்து பாடுறதுன்னு சொல்றதோ..."


"நீங்க எப்படி வேணும்னாலும் எடுத்துக்கோங்க. என்னைப் பொறுத்தவரை நான்தான் உலக அழகி. ஐஸ்வர்யாராய் எல்லாம் அதுக்கு அப்புறம்தான்."


"ஆமாம்... நான் ஒண்ணு சொன்னா தப்பா நெனைச்சுக்க மாட்டீங்களே..."


"இல்லை... தாராளமா சொல்லுங்க."


"அழகு விஷயத்துல எல்லாப் பொம்பளைங்களும் இப்படித்தானா?"


"ஏன்... இப்போ எல்லாப் பொம்பளைங்களையும் வம்புக்கு இழுக்குறீங்க?"


"வம்புக்கெல்லாம் இழுக்கல. நான் பார்த்து பழகின பொண்ணுங்கள்ல பெரும்பாலும் எல்லோருமே தான் மட்டும்தான் உலக அழகின்னு நினைச்சுக்கிட்டாங்க. இப்போ நீங்களும் அந்த லிஸ்ட்டுல வந்துட்டீங்க."


"இந்த அழகு விஷயத்தை இதோட நீங்க நிறுத்தலன்னா நானே உங்கள அடிப்பேன்..." என்று செல்லமாய் கோபத்தை வெளிப்படுத்திய ஷ்ரவ்யா, தனது அழகிய தோளால் ஆனந்தை அவன் பொறுக்கும் வேகத்தில் இடித்தாள்.


அவள் இடித்த வேகத்தில், பின் குத்தாத அவளது சேலை பட்டென்று விலகியது. இதை எதிர்பார்க்காத ஆனந்த், என்ன நினைத்தானோ சட்டென்று தன் கையால் விலகிய சேலையை இழுத்துப் போர்த்தி விட்டான். அவனை வியப்பாகப் பார்த்தாள் ஷ்ரவ்யா.


"நான் சந்திச்ச ஆண்கள்ல நீங்க மட்டும் வித்தியாசமாகத் தெரியுறீங்க ஆனந்த். எல்லா ஆண்களும் என் உடம்பைப் பார்க்கத்தான் வருவாங்க. ஆனா... நீங்கதான் எனக்கும் மத்த பொண்ணுங்களப் போல மானம்னு ஒண்ணு இருக்குன்னு இப்போ நிரூபிச்சி இருக்கீங்க..."


இதற்கு மேல் ஷ்ரவ்யாவால் பேச முடியவில்லை. இமைகளின் ஓரங்களில் நீர் கோர்க்கத் துவங்கியிருந்தது.


"அய்யோ... என்னாச்சு ஸ்ரவ்யா? இதுக்கெல்லாம் போய் ஏன் ஃபீல் பண்ணுறீங்க? நீங்க ஒண்ணும் சின்னக் குழந்தை இல்ல. பெரியப் பொண்ணு. முதல்ல அழுகையை நிறுத்துங்க."


ஆனந்த் சொன்ன பிறகுதான் அழுகையை நிறுத்தினாள்.


பக்கத்தில் இத்தனையும் நடந்து கொண்டிருக்க... எதிரே இருந்த மாடர்ன் கேர்ள் ஸ்வேதாவோ, யாரோ ஒரு ஆணிடம் கடலைப் போட்டுக் கொண்டிருந்தாள். ரெயில், வில்லிவாக்கத்தை தாண்டிய பிறகுதான் அவள் ஹெட் போனை இரு காதுகளுக்குள்ளும் கொடுத்துப் பேச ஆரம்பித்து இருந்தாள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகியும் கூட அவளது மொபைல் மட்டும் ஓய்வெடுக்கவில்லை. நிச்சயமாக அவள், தனது காதலனுடன்தான் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பது ஆனந்த், ஷ்ரவ்யா இருவருக்கும் புரிந்தது.


சீட்டில் தலை சாய்த்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்த ஸ்வேதாவுக்கு முதுகு வலித்ததோ என்னவோ திடீரென்று குனிந்தபடி மொபைல் பேச்சைத் தொடர்ந்தாள்.


அவள் அணிந்திருந்தது லோ நெக் டாப்ஸ் என்பதால், அவளது மார்பக அழகு பளீரென எலுமிச்சம் பழக் கலரில் பளிச்சிட்டது. அதை எதார்த்தமாக கவனித்து விட்டான் ஆனந்த். அடுத்த நொடியே இடது பக்கம் திரும்பிக் கொண்டான். ஷ்ரவ்யா அவனுக்கு மிக அருகில் இருந்தாள். அவளும், ஸ்வேதாவின் கவர்ச்சி தரிசனத்தைப் பார்த்த பிறகுதான், 'ஓ... இதற்கு வெட்கப்பட்டுதான் ஸார் இங்கே திரும்பி இருக்காரோ...' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு கொஞ்சம் அமைதியாய் சிரித்தும் வைத்தாள்.


"ஆனந்த்... நீங்க அந்தப் பொண்ணைப் பாத்தீங்களா?"


"எந்தப் பொண்ணை?"


"எதிரே கவர்ச்சிக்கன்னியாக இருக்கிறாளே... அவளைத்தான்!"


"அவளைப் பார்த்த பிறகுதான் சமீபத்தில் படித்த ஒரு தகவல் என் நினைவுக்கு வந்தது."


"என்ன தகவல்?"


ஷ்ரவ்யாவின் கேள்வியில் அவ்வளவு ஆர்வம் தெரிந்தது. நிச்சயம் அந்த தகவல் கிளுகிளுப்பான ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, அதைக் கேட்க ஆவலாகத் தனது முகத்தை அவனுக்கு நேர் எதிராக வைத்துக் கொண்டாள்.


"ஷ்ரவ்யா... நான் சொல்லப் போகும் சம்பவத்தின்படி நீங்கள் ஒருவரை காதலிப்பதாக வைத்துக் கொள்வோம்."


"சரி..."


"அப்படி நீங்க ஒருவரை காதலிக்கும் போது அவருக்கு எத்தனை தடவை மொபைலில் பேசுவீங்க?"


"என்ன ஆனந்த், இதெல்லாம் ஒரு கேள்வியா? நீங்க வேறு எதையோ சொல்வீங்கன்னு ஆர்வமா நெனைச்சா..." அதற்கு மேல் ஷ்ரவ்யாவை அவன் பேச விடவில்லை.


"நீங்க எதிர்பார்க்குற விஷயம் இந்தக் கேள்வியிலேயும் இருக்கு. நான் கேக்குற கேள்விக்கு நீங்க சரியா பதில் சொல்லிட்டு வந்தா, நானும் சரியாச் சொல்லுவேன்."


"அப்படின்னா, பதில் சொல்றேன். என்ன... அதிகபட்சமாக ஒரு 20 அல்லது 30 தடவை பேசுவேன்" என்றாள் ஷ்ரவ்யா.


"அவ்வளவுதானா?" தான் எதிர்பார்த்த பதில் கிடைக்காதது போல் கேட்டான் ஆனந்த்.


"ஒருவேளை அந்தக் காதலன் நீங்களா இருந்தா 100 தடவை பேசியிருப்பேன்."


"எங்கேயோ சுத்தி, கடைசியில எங்கிட்டேயே வந்துட்டீங்களா? பரவாயில்ல... இப்போ நான் சொல்ற விஷயம் கொஞ்சம் ஷாக் தரக்கூடியதுதான். இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண், தன்னுடைய காதலனுக்கு தினமும் 178 தடவை மொபைலில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறாள். இந்த கணக்குப்படி பார்த்தா, போன வருடம் மட்டும் 65 ஆயிரம் தடவை அந்த பெண் மட்டுமே பேசி இருக்கிறாள்."


"ஏன்... அவங்க காதல் அவ்வளவு ஸ்ட்ராங்கா?"


"ஆரம்பத்துல ஸ்ட்ராங்க் மாதிரி தெரிஞ்சாலும், இப்படி ஓவரா அந்தப் பெண் பேசினதுனால அந்தக் காதலன் போலீஸ் வரைக்கும் போய்விட்டான்."


"அப்புறம்..."


"அப்பும் என்ன... வழக்கம்போல் கைதுதான்!"


"கைதா? யாரைக் கைது பண்ணினாங்க?"


"அந்தப் பெண்ணைதான்!"


"போன் பண்ணினது தப்பா-?"


"போன் பண்ணுறது தப்பு கிடையாது. அடுத்தவங்களை அளவுக்கு மீறி இம்சை பண்ணுறதுதான் தப்பு. இதை நான் சொல்லல. இங்கிலாந்து போலீஸ் சொல்லியிருக்கு."


"அது இருக்கட்டும் ஆனந்த். இப்போது எதுக்காக இந்த புள்ளிவிவரம்?"


"எதிரே பேசிட்டு இருக்குற பொண்ணைப் பார்த்ததும் அந்த புள்ளிவிவரம் ஞாபகத்துக்கு வந்துச்சு. உங்களுக்கும் இந்தத் தகவல் யூஸ்புல்லா இருக்கும்னு நெனைச்சேன், சொல்லிட்டேன்."


ஸ்ரவ்யா தனது ஞாபக சக்தியைப் பாராட்டுவாள் என்று எண்ணினான் ஆனந்த். ஆனால், அவளிடம் இருந்து எந்த பாராட்டும் வரவில்லை. அதனால் மறுபடியும் அவனே அவளது வாயை கிளறினான்.


"ஸ்ரவ்யா... உங்களுக்கு இன்னொன்னு தெரியுமா?"


"நீங்க சொன்னதான் தெரியும்..."


"ஆமால்ல.. நான் புள்ளிவிவரத்துல காதலனுக்கு மொபைல்ல மணிக்கணக்குல பேசி இம்சை பண்ணின காதலிக்கு எவ்ளோ வயசு இருக்கும்னு நெனைக்குறீங்க?"


"ஒரு பதினெட்டுல இருந்து இருபத்தைந்து வரைக்கும்..."


"அதுதான் இல்ல; அந்த பொண்ணோட வயது 42."


"அப்படின்னா, காதலன் வயது...?"


"62 வயதாம்!"


"இந்த வயசுலேயுமா லவ் பண்ணுவாங்க. உண்மையைச் சொல்லணும்னா கொஞ்சம் இல்ல, ரொம்பவே ஓவராத்தான் தெரியுது..." என்று கொஞ்சம் சலித்துக் கொண்டாள் ஸ்ரவ்யா.


"அப்படியெல்லாம் இல்ல ஸ்ரவ்யா... உண்மையான காதலுக்கு கெடைக்கிற சக்தி வேற எதுக்குமே இல்ல. உண்மையா காதலிச்சவங்க சூழ்நிலை காரணமாக பிரிஞ்சிட்டாலும் கூட அந்தக் காதல நெனைச்சு ஏங்கிக்கிட்டே இருப்பாங்க. தண்ணீர் மேல் எழுதுன எழுத்து இல்ல உண்மை காதல்."


ஆனந்தின் பேச்சு, அவனுக்குள் புதைந்து கிடந்த காதலை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. ஷ்ரவ்யாவுக்கு அவனது காதலைத் தெரிந்து கொள்ள ஆசை. அதைச் சட்டென்று கேட்டும் விட்டாள்.


"ஆனந்த்... உங்ளோட பேச்சைப் பார்த்தா நிச்சயமாக் காதலிச்சு இருக்கீங்க, அதுவும் உண்மையா! யாரு அந்தக் காதலி? இப்போ அவங்க எங்க இருக்காங்க? நீங்க அவங்கள எப்போ மேரேஜ் பண்ணப் போறீங்க?" கேள்வி மேல் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.


ஆனந்திடம் மவுனம்தான் நிலவியது. அதுவரை காதல் பற்றிய புள்ளி விவரங்களைக் கூட அடுக்கிய அவனால், இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல முடியவில்லை. அவனது முகத்திலும் லேசான சோக ரேகை தெரிந்தது. திடீரென்று நெஞ்சு பாரமானதால் எச்சிலை அவசரமாக விழுங்கி, அதை ஆசுவாசப்படுத்த முயன்றான்.


தனது கேள்வி ஆனந்திடம் இவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஷ்ரவ்யா சிறிதும் எதிர்பார்க்கவில்லை.


"தப்பா நெனைச்சுக்காதீங்க ஆனந்த். நான் கேட்டது தப்புன்னா என்ன மன்னிச்சிக்கோங்க."


ஷ்ரவ்யாவின் இந்த மன்னிப்புக் கோரிக்கை ஆனந்தை மறுபடியும் பேச வைத்தது.


"எல்லோரையும் போல நானும் காதலிச்சேன், உயிருக்கு உயிரா! ஆனா இன்னிக்கு அந்தக் காதல் உயிரோட இல்ல..."


இதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. வேகமாக வந்த அழுகையைக் கட்டுப்படுத்த முயன்றான். எதிரே இருப்பவர்கள் அதைக் கவனித்துவிடக் கூடாது என்பதற்காக கர்ச்சிப்பால் அவசரமாக முகத்தை மூடிக்கொண்டு கண்ணீரை வடிகட்டினான்.


ஆனந்தின் மனதைக் கஷ்டப்படுத்தி விட்டோமே... என்று ஷ்ரவ்யா வருந்த... இருக்கையில் இருந்து வேகமாக எழுந்த அவன் வாஷ் பேஷின் இருக்கும் இடம் நோக்கி நகர்ந்தான். ரெயிலோடு சேர்ந்து அசைந்து கொண்டிருந்த கண்ணாடியில் கஷ்டப்பட்டு முகம் பார்த்து, அதில் வருத்தம் தெரிகிறதா என்று ஒருமுறைக்கு பலமுறை பார்த்து சோதித்துக் கொண்டான்.


அப்போதுதான் கண்ணாடியின் ஓரம் அந்தக் காட்சி அவனது பார்வையில் தெரிந்தது. ஒரு இளம் ஜோடி தங்களது இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருக்க வேண்டும். அந்தப் பெண்ணின் கழுத்தில் கிடந்த புத்தம் புதிய மஞ்சள் கயிறு அதை அப்பட்டமாகக் காட்டியது. அந்த ஜோடிகள் மட்டுமே சிரித்துப் பேசிக்கொண்டு வந்தார்கள். அவர்களுடன் வேறு யாரும் வரவில்லை. அவர்கள் ஹனிமூனுக்காக கோவை சென்று ஊட்டி செல்லலாம் என்று யூகித்துக் கொண்டான்.


திரும்பவும் கண்ணாடியில் முகத்தை பார்த்துவிட்டு தனது இருக்கைக்கு திரும்பினான். திரும்பும் வழியில் புதிதாய் திருமணம் ஆகியிருந்த ஜோடியைப் பார்த்தான். கணவன் பதவிக்கு வந்திருந்த இளைஞன் தனது புதுமனைவியை இருக்கமாக தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கொண்டு சிரித்து சிரித்துப் பேசினான்.


அந்த இளம் ஜோடிகள் ஆனந்தின் கண்களுக்குள் ஆழமாக ஊடுருவி பதிந்து போனார்கள்.


'நானும் மனைவியோடு ஊட்டிக்கு இப்போது ஹனிமூன் சென்று கொண்டிருக்க வேண்டும். ஆனால் விதி... ஒரு கால் கேர்ளை அழைத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறேன்' என்று, மனதிற்குள் தன்னைத்தானே நொந்து கொண்டான்.


சிறிது நேரத்திற்குப் பிறகு இருக்கையில் வந்து அமர்ந்தவனை ஆதரவாகப் பார்த்தாள் ஷ்ரவ்யா.


"ஆனந்த்... நான் உங்ககிட்ட அப்படியொரு கேள்வி கேட்டது தப்பா? என்னன்னு தெரியல. உங்களைப் பார்த்தது முதலே நானும் கொஞ்சம் மாறிப் போய் விட்டேன். எத்தனையோ பேருக்கு பணத்துக்காக முந்தானை விரிச்சவதான் நான். இப்பவும் அந்த வகையிலதான் நான் உங்களோட வர்றேன். ஆனாலும், நான் தப்பான தொழிலுக்காக உங்களோட வர்றேனுங்குற ஃபீலிங் எங்கிட்ட சுத்தமா இல்ல. அதனாலதான் உங்க கிட்ட இவ்ளோ உரிமை எடுத்துப் பேசிட்டு வர்றேன். என்னோட பெர்ஷனல் விஷயங்கள் பற்றி கேட்காதன்னு நீங்க சொன்னா அதுபற்றி பேசவே மாட்டேன்..." என்று தன்னிலை விளக்கம் கொடுத்த ஷ்ரவ்யாவை வியப்பாகப் பார்த்தான் ஆனந்த்.


ஷ்ரவ்யாவிடம் ஏதோ சொல்ல வாயெடுத்தான். அப்போது, திடீரென்று அவனது மொபைல் சினுங்கியது.


'புரோக்கர்' என்கிற ஆங்கில வார்த்தை மொபைலின் திரையில் பளிச்சிட்டது.


பச்சைப் பட்டனை ஆன் செய்து வலது காதில் வைத்தான்.


"ஸார்... நான்தான் பிரகாஷ். அந்தப் பொண்ணு உங்க கூடதானே இருக்கு?"


"ஆமா..."


"நீங்க ரெயில்ல ஏறுன உடனேயே பேசனும்னு நினைச்சேன். அதுக்குள்ள இன்னொரு கஸ்டமர் வந்துட்டார். அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு."


"பரவாயில்ல..."


"அப்போ நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க. நாங்க எப்படி உங்களுக்கு சேப்ட்டியோட பொண்ணை அனுப்பி வெச்சோமோ, அதே சேப்ட்டியோட எங்ககிட்ட திரும்பவும் ஒப்படைச்சிடுங்க. இன்னிக்கு மே 1ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை. மே 8 ம் தேதி அவ எங்ககிட்ட இருக்கணும்..." என்று அக்ரிமென்ட் கன்டிஷனைச் சொன்ன பிரகாஷ், "சரி ஸார்... கொஞ்சம் சாந்தி கிட்ட மொபைலை கொடுங்க" என்றான்.


ஆனந்துக்கு ஒன்றும் புரியவில்லை.


"என்னது... சாந்தியா?" என்றான்.


அவன் சாந்தி என்று சொன்னதும் அருகில் இருந்த ஷ்ரவ்யா உஷார் ஆனாள்.


படைப்பு : நெல்லை விவேகநந்தா 



(தேனிலவு தொடரும்...)





Share:

வெள்ளி, 7 அக்டோபர், 2011

இரண்டாம் தேனிலவு பகுதி - 2


2. ஒரு மவுனத்தின் அழுகை

- நெல்லை விவேகநந்தா -


வுனமாக இருந்தாள் அமுதா. அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம்தான் ஆகிறது. ஆனால், அந்த கல்யாணக்களை மட்டும் ஏனோ மிஸ்ஸிங்.


"அம்மாடி... இப்படியே இங்கேயே பொறந்த வீட்டோட இருந்தரலாம்னு முடிவே பண்ணிட்டீயா?"


அமுதாவின் ஒரு வார மவுன விரதத்தைத் தானே முடித்து விடுவது போல் பேசினாள் அவளது அம்மா பாக்கியம்.


அமுதாவிடம் இருந்து மவுனமே பதிலாக வந்தது.


"ஆயிரத்தெட்டு பிரச்சனைங்க, மனஸ்தாபங்க இருந்தாலும் அதையெல்லாம் சமாளிச்சுதான் வாழணும். ஒருத்தனுக்கு வாக்கப்பட்ட பிறகு இப்படி குத்துக் கல்லாட்டம் பொறந்த வீட்டுல கெடக்குறது எந்தப் பொண்ணுக்கும் அழகே இல்ல. இத முதல்ல புரிஞ்சுக்க. எந்தவொரு தாய்க்கும் தன் பொண்ணு, புகுந்த வீட் டுல நல்லா வாழணும்னுதான் ஆசப்படுவா. ஆனா, உம் போக்கப் பாத்தா நீ அசைஞ்சு கொடுக்குற மாதிரியே தெரியலீயே... கூடப் பொறந்த அண்ணன் கல்யாணத்தை பார்த்தவதானே நீ? அவன் வெளிநாட்டுல சம்பாதிக்குறான். அவனோட பொண்டாட்டி, அதான் எம் மூத்த மருமக... இங்கே குடித்தனம் இருக்குற துப்பு இல்லாம பொறந்த வீட்டுல கிடக்குறா. என் வயித்துல பொறந்த உனக்குமா அவ புத்தி வரணும்?"


பாக்கியத்தின் அட்வைஸோடு சில அர்ச்சனைகளும் வேகமாக வந்து விழுந்தன.


ஆனால் அமுதாவின் முகத்தில் மறுபடியும் அதே மவுனம்.


அதைப் பார்த்த பாக்கியத்தின் முகம் இன்னும் வேகமாக சிவந்தது.


"உன்னோட வாழ்க்கை ஓஹோன்னு இருக்கனும்னு ஆசைப்பட்டேனே... நீ இப்படி பிடிவாதமா இருக்குறதப் பார்த்தா என்னோட ஆசையெல்லாம் பலிக்காமப் போயிடும் போலிருக்கே..." என்று புலம்ப ஆரம்பித்து விட்டாள்.


திடீரென்று எங்கிருந்து கோபம் வந்ததோ, அதுவரை மவுனம் காத்து வந்த அமுதா சட்டென்று ஆவேசமாகப் பேசினாள்.


"சும்மா புலம்பிட்டு இருக்காத. என்னோட கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கனும்ங்றதுல உன்னை விட எனக்கு நிறையவே அக்கறை இருக்கு. என்ன முடிவு எடுக்கணுங்றதும் எனக்கு நல்லாவே தெரியும்."


திடீரென்று வேகமாகப் பேசிய அமுதாவை வியப்பாகப் பார்த்தாள் பாக்கியம். மறுபடியும் அமுதாவே பேசினாள்.


"இப்போ உன் பேச்சையே கேட்குறேன். இன்னிக்கு அவரை வரச் சொல்லு. நான் என் புருஷன் வீட்டுக்கு கௌம்புறேன்."


அமுதாவின் இந்தப் பேச்சுக்குப் பிறகுதான் உற்சாகம் ஆனாள் பாக்கியம்.


அடுத்த நிமிடமே திருநெல்வேலி மாவட்டத்தில் கடற்கரையோரம் அமைந்திருந்த குட்டம் என்னும் கிராமத்தில் புதுமாப்பிள்ளை குணசீலனின் மொபைல் அலற ஆரம்பித்தது. சமீபத்தில் வெளியான சினிமாவின் குத்துப்பாட்டை மொபைலின் ரிங் டோனாக வைத்திருந்ததுதான் அதற்குக் காரணம்.


மொபைலின் பச்சைப் பட்டனை ஆன் செய்து காதில் வைத்த குணசீலன் பேச்சில் நிறையவே மரியாதை தெரிந்தது.


"யாரு... அத்தையா பேசுறீங்க?"


"ஆமாம் மாப்பிள்ளை. நான்தான் பாக்கியம்."


"சொல்லுங்க... அமுதா எதுவும் பேசினாளா? என்கிட்ட மனம் விட்டு பேச அவ தயங்கினதாலதான் அங்கே உங்க வீட்டுல விட்டுட்டு வந்தேன். மற்றபடி எ ந்த பிரச்சினையும் இல்லையே?"


"அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நீங்க இன்னிக்கே, இப்பவே இங்கே புறப்பட்டு வாங்க. மத்ததெல்லாம் நேரில் பேசிக்கலாம்."


"இதோ கிளம்பிடுறேன்..." தனது முடிவை உறுதியாகச் சொன்னான் குணசீலன்.


ஒற்றைப் பல்லை விடுக்கென்று நீட்டி அமைதியாய் சிரித்துக் கொண்டிருந்த லேண்ட் லைன் போனில் ரிசீவரை வைத்தாள் பாக்கியம்.


அக்கணமே அமுதாவை நோக்கி அவசரமாக சென்றாள்.


"நான் பெத்த மகளே... மருமகனை வரச் சொல்லிட்டேன். இப்போ அவரு கார்ல புறப்பட்டா இன்னும் ஒண்ணறை மணி நேரத்துல இங்கே வந்திருவாரு. மணி மூணு ஆகப்போகுது. காலையிலேயும் சாப்பிடல, இப்பவும் சாப்பிடல. வாய்க்கு ருசியா நானே ஆக்கி வெச்சிருக்கேன். சாப்பிட்டுட்டு தெம்பா இரு..." என்று எப்.எம். ரேடியோவை போன்று தொணதொணவென்று பேசிய அம்மா பாக்கியத்தை கோபத்தில் முறைத்தாள் அமுதா.


"போதும்மா. உனக்கு கல்யாணம் ஆகி புருஷனும் வந்துட்டார், கூடவே வாழ்றதுக்கு ஒரு குடும்பமும் வந்துட்டு. அங்கேயும் இப்படி முறைச்சிட்டு இருக்காத. பக்குவமாக நடந்தாதான் நல்ல மருமகள்னு சொல்லுவாங்க. இல்லேன்னே... எந்த சிறுக்கிக்கு பொறந்ததோ இங்கே வந்து உயிர வாங்குதுன்னு உன்ன மட் டுமில்ல, என்னையும் சேர்த்துதான் திட்டுவாங்க. இதுக்குமேல உன்கிட்ட சொல்றதுக்கு எதுவும் இல்லை. நீதான் இந்த வீட்டுக்கு மூத்தப் பொண்ணு. குடும்பம்ன்னா என்னன்னு உனக்கு தெரியாதது இல்ல. புரிஞ்சு நடத்துக்க. இப்போ, பானையில சாப்பாடு இருக்குது. கிடாக்கறிதான் ஆக்கியிருக்கேன். போய் சாப்பிடு. மருமகனும் இங்கே வந்துட்டு இருக்கறதுனால, அவருக்கும் நல்ல கிடாக்கறியா கொஞ்சம் எடுத்து வெச்சுக்க. இல்லேன்னா உன்னோட தங்கச்சியே எல்லாத்தையும் சாப்பிட்டுக் காலி பண்ணிடுவா..." என்று பரபரத்துவிட்டு அங்கிருந்து அகன்றாள்.


இருந்த இடத்திலேயே ஒட்டிக்கொண்டு 24 மணி நேரமும் நிற்காமல் வேலை செய்து கொண்டிருக்கும் சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள் அமுதா.


சரியாக பிற்பகல் 3 மணி ஆகியிருந்தது.


வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள். காலையிலும் சாப்பிடாததால் ஒட்டிப்போய் இருந்தது. சோகமான முகத்தைக் கழுவிவிட்டு சாப்பிடலாம் என்று நினைத்தவள் எழுந்து நடந்தாள். மதிய வெயிலில் கொஞ்சம் சூடாகிப்போன நீரில் முகத்தை கழுவி, டர்க்கி டவலால் துடைத்துக் கொண்டு பெட்ரூமுக்குள் வந்தாள்.


ஆளுயர கண்ணாடி பொருத்தப்பட்டு இருந்த பீரோவின் முன்பு வந்து நின்றவள், முகத்தின் முன்பு விழுந்த முடிகளை இரு கைகளாலும் இரு காதுகளுக்கும் பின்புறம் கொண்டு சென்று சிறை வைத்தாள். பக்கத்தில் இருந்த இசட் பவுடர் டப்பாவை எடுத்து வலது கையால் அழுத்தினாள். அடுத்த நொடியே வாசனை நிரம்பிய பவுடர் அவளது இடது கையில் கொட்டியது. பவுடர் டப்பாவை கீழே வைத்தவள், இரு உள்ளங்கைகளிலும் பவுடரை சரியாக தேய்த்து முகத்தில் அப்பி எல்லா இடங்களிலும் லேசாக மசாஜ் செய்து படர விட்டாள். தொடர்ந்து, தனக்குப் பிடித்த சிறிய ரக மெரூன் கலர் ஸ்டிக்கர் பொட்டை தனது இரு புருவங்களுக்கும் மத்தியில் சரியாக அழுத்தி வைத்தாள்.


பவுர்ணமி நிலவுக்கு பொட்டு வைத்தால் எவ்வளவு அழகாக இருக்குமோ அது போன்று இருந்தது அவளது வட்ட முகம். தனது அழகை தானே பார்த்து பொறாமை கொண்டவள், அந்த ஆளுயரக் கண்ணாடியில் எப்போதும் இல்லாத அளவுக்கு தன்னை விசித்திரமாகப் பார்த்தாள்.


நன்கு சிவந்த தேகம்தான் அமுதாவுக்கு. ஆனால், உயரம்தான் சராசரியைவிட கொஞ்சம் குறைவு. 25 வயது ஆனாலும், கல்லூரியில் படிக்கும் மாணவி போலவே தெரிந்தாள். கல்லூரிக்கு நேரடியாகச் சென்று படிக்கா விட்டாலும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி வழியில் பி.ஏ. வரலாறு படித்ததால், திருநெல்வேலியில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் நடைபெறும் மாதாந்திர வகுப்புகளில் மட்டும் பங்கேற்று இருக்கிறாள். அவளது கல்லூரி வாசனை அந்த அளவுக்கே! அவ்வாறு வெளியூர் சென்றால் மாத்திரம் சுடிதாருக்கு மாறிக்கொள்வாள். மற்றபடி, சேலை அல்லது நைட்டிதான் அவளது பிரதான ஆடை.


இப்போதும் அவள் மெரூன் கலரில் சேலை அணிந்திருந்தாள். அது அவளது அழகை இன்னும் மெருகூட்டிக் காண்பித்தது. உச்சந்தலையில் இருந்து கால்வரை பார்வையைப் படரவிட்டாள். இயற்கையாகவே அடர்ந்து வளர்ந்திருந்த கருமையான முடி இடுப்பு வரை நீண்டிருந்தது. பியூட்டி பார்லர் பக்கமே போகாமல் இயற்கை அழகில் ஒளிர்ந்தது அவளது முகம். கண் மை தீண்டாத கண் இமை முடிகள் பட்டாம்பூச்சாய் சிறகடித்தன. குவிந்த கன்னங்கள் ஆப்பிள் பழத்தை நினைவுபடுத்தின.


அளவான மூக்கு, அளவான கழுத்து. அதற்கு கீழேதான், அவளைப் படைத்த பிரம்மன் கொஞ்சம் நின்று யோசித்துவிட்டான் போலும். சராசரியை விடவும் கொஞ்சம் பெரியதாக, மற்றவர்களை ஜொள்விட வைத்தன அவளது மாதுளம் பழ மார்பகங்கள். அவள் மூக்கு வழியாக ஆக்சிஜனை உள்ளே இழுத்த போது, தானாக நிமிர்ந்த அந்த மார்பகங்கள் அவளையே அப்போது சிலிர்க்க வைத்தன.


அந்த மார்பகங்களுக்குக் கீழேப் பார்வையை நகர்த்தினாள். அங்கே விலகிப் போய் இருந்த சேலை அவளது குவிந்த இடுப்பு பிரதேசத்தையும், குழிந்த தொப்புளையும் அப்பட்டமாகக் காண்பித்தன. இலேசாக அந்த இடுப்புப் பகுதியை வருடிக் கொண்டாள் அமுதா.


"இவ்வளவு நேரமா அங்க என்னடி பண்ணிட்டு இருக்க?"


திடீரென்று பின்னால் இருந்து அம்மா பாக்கியத்தின் குரல் பலமாக ஒலித்ததால் அதிர்ந்து போனாள் அமுதா. சட்டென்று, இடுப்பில் விலகிப்போய் இருந்த சேலையை எடுத்து தொப்புளுக்கு மேலாகச் சொருகிக் கொண்டு பேசினாள்.


"பாத்தா தெரியல... கட்டுன சேலையை சரி செய்துட்டு இருக்கேன்."


"அது எனக்கும் தெரியுது. சீக்கிரம் போய் சாப்பிடு-. தட்டுல எல்லாத்தையும் எடுத்து வெச்சிருக்கேன்..."


பாக்கியம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளைக் கடந்து சென்று சமையல் அறைக்குள் புகுந்தாள் அமுதா.


வழக்கத்தைவிட சற்று கூடுதலாக சாப்பாட்டைத் தட்டில் போட்டு, பக்கத்தில் ஒரு கிண்ணம் நிறைய இறைச்சிக் கறியை வைத்திருந்தாள் பாக்கியம்.


'இவளுக்கு இன்னிக்கு என்ன ஆச்சு? என்னை இந்த வீட்டுல இருந்து அனுப்புறதுலேயே குறியா இருக்குற மாதிரி தெரியுது...' என்று, அம்மாவை மனதிற்குள் லேசாக திட்டிக்கொண்டே சாப்பிட அமர்ந்தாள்.


"வாணி... இங்கே வா..."


லிவ்விங் ரூமை நோக்கி ராக்கெட் வேகத்தில் பறந்த அவளது குரலுக்கு பதில் குரலும் அங்கிருந்து வந்தது.


"இதோ வந்துட்டேன் அக்கா..."


அடுத்த ஓரிரு நொடிகளில் அமுதா முன்பு வந்து ஆஜரானாள் அவளது கடைசி தங்கை வாணி.


அக்காவைப் போன்றே இவளது மேனியிலும் அழகு தாறுமாறாகக் கொட்டிக் கிடந்தது. 22 வயதான இவள் திருநெல்வேலியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். 'தங்கை நேரடி கல்லூரியில் நிறைய படிக்கணும், பட்டணத்துக்குப் போய் வேலை பார்க்கணும், கைநிறைய சம்பளம் வாங்கணும், மொத்தத்துல ஆண்களுக்கு நிகரா இருக்கணும்' என்கிற அமுதாவின் விருப்பம்தான் இவளது என்ஜினீயரிங் படிப்புக்குக் காரணம். அக்காவின் திருமணம் முடிந்த கையோடு, இவளது மாப்பிள்ளை பார்க்கும் படலத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டு வைத்திருக்கிறார்கள்.


"அமுதா... எதுக்கு என்ன கூப்பிட்ட?"


"கிச்சனுக்குப் போய் ஒரு தட்டு எடுத்துட்டு வா."


"சரிக்கா..." என்ற வாணி, அந்தத் தட்டை எடுத்து வந்து அமுதாவிடம் நீட்டினாள்.


அந்தத் தட்டில், தனக்குப் போட்டு வைத்திருந்த சாதத்தில் இருந்து பாதியை எடுத்து வைத்துவிட்டு சாப்பிடத் துவங்கினாள்.


அப்போது அவளது வீட்டு லேண்ட் லைன் போன் உதவி கேட்பது போல் வேகமாக கத்தியது. அந்த நிமிடமே அவளது அத்தைப் பையன் அசோக் நினைவும் அவளுக்கு வந்தது.


மதுரையில் தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல பதவியில் இருந்தான் அவன். சிறு வயதில் எப்போதோ ஒருமுறை 'இவளுக்கு அவன், அவனுக்கு இவள்' என்று சொல்லியிருந்ததால் இருவரும் உரிமையோடு பழகினார்கள். அதுவே அவர்களுக்குள் காதலாகவும் அரும்பியது. அந்தக் காதல் மலர்வதற்குள் அந்த காதல் பூவையே கிள்ளி எறிந்து விட்டார்கள். ஆம்... அமுதாவை அவசரம் அவசரமாக இன்னொருவனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள். அதனால்தான் இன்று சோகமாக இருக்கிறாள் அமுதா. சாப்பிடவும் அவளுக்கு பிடிக்கவில்லை.


உதவி கேட்டு கத்திய தொலைபேசியில் அசோக் அல்லாத வேறு யாரோ ஒருவர் பேசிக் கொண்டிருக்க... அமுதாவின் மனம் மட்டும் அவளையும் அறியாமல் அவனுக்காக அழுதது.


"என்னை இங்கே இப்படி தவிக்க விட்ட அந்த அசோக் மட்டும், நான் இல்லாமல் எப்படி சந்தோஷமாக வாழ்வான்?"



(இன்னும் வருவாள்...)


Share:

புதன், 5 அக்டோபர், 2011

இரண்டாம் தேனிலவு பகுதி - 1


1. உல்லாசப் பயணம்
  
- நெல்லை விவேகநந்தா -


தியம் 1.30 மணி -சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் வருவதும் போவதுமாக இருந்தனர். எப்பொழுதாவது அதிரடியாக பின்பற்றப்படும் பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாததால் மெட்டல் டிடெக்டர் சோதனை வாயில் வழியாக செல்வதை அலட்சியப்படுத்திச் சென்று கொண்டிருந்தனர் அவசர கதியில் ஓடிய பயணிகள்.


ரெயில் நிலையத்திற்குள் ஆங்காங்கே பளிச்சிட்ட பெரிய மானிட்டர்களில் எந்தெந்த ரெயில் எப்பொழுது புறப்படும் என்கிற விவரம் நின்று நிதானமாக ஓடிக்கொண்டிருந்தது.


பயணிகளின் கனிவான கவனத்திற்கு... என்று ஆரம்பிக்கும் ரெக்கார்டு செய்யப்பட்ட பெண்ணின் அழகான குரல், பயணிகளின் பலத்த ஓசைகளுக்கு மத்தியில் தேனிசையாக தவழ்ந்து வந்து கொண்டிருந்தது.


"மே ஐ ஹெல்ப் யூ" என்று பெரிதாக எழுதப்பட்டு இருந்த ரெயில்வே தகவல்களைப் பெறும் அறையில் ஒருசில பயணிகள் எதையோ விசாரித்துக் கொண்டு இருந்தார்கள்.


உலகம் முழுக்க தமிழர்களின் கைமணத்தை பரப்பிய சரவணபவனின் ரெயில்வே கிளை ஹோட்டலில் இருந்து வந்த கமகம வாசனை பெரும்பாலான பயணிகளை அந்த ஹோட்டலை நோக்கி ஒருகணம் திரும்ப வைத்தது. அந்த ஹோட்டலுக்குள் ஒரு டேபிளில் பரபரப்பாக அமர்ந்திருந்தான் ஆனந்த். அடிக்கடி ஹேண்ட் வாட்சை பார்த்துக்கொண்டிருந்தான். தனக்கு முன்பாக டேபிள் மீது வைத்திருந்த விலை உயர்ந்த நோக்யா மொபைலையும் அடிக்கடி எடுத்துப் பார்த்துக்கொண்டான்.


சிறிதுநேரத்தில் ஹோட்டல் சப்ளையர் அவன் ஆர்டர் செய்த காபியை கொண்டு வந்து டேபிளில் வைத்துவிட்டு அவனைப் பார்த்தார்.


"ஸார்... உங்களுக்கு காபி மட்டும் போதுமா? வேறு ஏதாவது வேணுமா?"


"இப்போது சாப்பிட எதுவும் வேண்டாம். 2 செட் வடை மட்டும் பேக் செய்யுங்கள். இரண்டுக்கும் சேர்த்து பில் கொண்டு கொண்டு வாருங்கள்."


ஆனந்த் சொன்னதும் அங்கிருந்து அகன்றார் சப்ளையர்.


ஆவி பறந்து கொண்டிருந்த காபியை உதட்டுக்கு கொடுத்து சப்பத் துவங்கினான் ஆனந்த். அவன் காபி குடித்துக்கொண்டிருக்கும்போதே மொபைல் பளிச்சிட்டு சினுங்கியது. ஆர்வமாய் மொபைலை ஆன் செய்து பேசினான்.


"ஸார்... நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நாங்கள் சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்துவிட்டோம்."


எதிர் முனையில் பேசிய ஆசாமி கூறினான்.


"நான் சரவணபவன் ஹோட்டலில் இருக்கிறேன். இதோ வெளியே வந்து விடுகிறேன். நீங்கள் ரெயில் நிலையத்திற்குள் வாருங்கள்."


"நான் ரெயில் நிலையத்திற்குள் வர முடியாது ஸார்."


"ஏன்?"


"நீங்கள் கோவைக்கு இரண்டு டிக்கெட்தானே ரிசர்வ் செய்து வைத்திருக்கிறீர்கள்?"


"ஆமாம்!"


"நான் உள்ளே வர வேண்டுமானால் பிளாட்பார டிக்கெட் எடுக்க வேண்டும். டிக்கெட் கவுண்டரில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால், ரெயில்வே ஸ்டேஷனுக்கு முன்பு வாருங்கள்."


"சரி... நீங்கள் அங்கே நில்லுங்கள். நான் ஒரு நிமிடத்தில் வந்துவிடுகிறேன். ஆமாம்..." இதற்கு மேல் சொல்லும் போதுதான் பேச்சில் சற்று தடுமாறினான் ஆனந்த்.


"பயப்படாதீங்க ஸார். அந்த பொண்ணும் என்கூடத்தான் இருக்கு. நீங்க தாராளமா கூட்டிட்டு போகலாம்!"


"சரி... இதோ வந்துவிட்டேன்."


அவசரமாக மொபைல் இணைப்பை துண்டித்தவன், தான் குடித்துக் கொண்டிருந்த காபியைப் பார்த்தான். அது நன்றாக ஆறிப்போய் இருந்தது. அதனால் அதை அப்படியே வைத்துவிட்டான்.


அவன் ஆர்டர் செய்த இரண்டு செட் வடையும் பில்லோடு வந்துவிட்டதால், அதற்கான பணத்தை வேகமாக கொடுத்துவிட்டு, வடையை தனது பேக்கிற்குள் திணித்துக் கொண்டு ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதிக்கு ஓடினான்.


ஓடி வந்த வேகத்தில் எதிரே சற்று உயரத்தில் பளிச்சிட்ட மானிட்டரில் நேரத்தைப் பார்த்தான். மதியம் 2 மணி 10 நிமிடம் 7 நொடி என்பது பளிச்சிட்டது.


ரெயில் புறப்பட இன்னும் 20 நிமிடம்தான் இருக்கிறது என்கிற வேகத்தில் ஓடி வந்தவன், தன்னைத் தேடி வந்தவர்கள் எங்கே என்று பதற்றமாய் தேடினான்.


அப்போதுதான், நாம் தேடி வந்தவர்களை இதற்கு முன்பு நேரில் பார்த்தது கிடையாதே... வேறு எப்படி அவர்களை அடையாளம் காண்பது? என்று யோசித்து நின்றான்.


மொபைலில் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவன் அருகில் ஒருவன் வந்து நின்றான்.


"ஸார்... நீங்கள்தானே ஆனந்த்?"


"ஆமாம். நீங்கள்...?"


"நான்தான் பிரகாஷ்."


"ஸாரி... நான் உங்கள் பெயரையே மறந்து போய்விட்டேன்."


"ரெயில் புறப்பட நேரமாகிவிட்டது என்று நினைக்கிறேன். நம்ம அக்ரிமென்ட்டை எந்த சூழ்நிலையிலும் மீறிவிட வேண்டாம். மீறி நடந்தால், நடக்கும் விபரீதங்களுக்கு நீங்கள்தான் பொறுப்பாக வேண்டும்."


"இன்னும் எந்த காரியமும் நடக்கவில்லையே... அதற்குள் ஏன் நடக்காததைப் பற்றி பேசுகிறீர்கள்?"


"இல்லை... ஒரு முன்னெச்சரிக்கைகாகத்தான் சொன்னேன்."


"சரி..." என்ற ஆனந்த், மறுபடியும் கண்களால் அந்தப் பெண்ணைத் தேடினான்.


"ஸார்... நீங்க ரொம்பவும் ஆர்வமாக இருக்குறீங்க. அந்தப் பெண் உங்களை ஏற்கனவே பார்த்துவிட்டாள். நீங்கள்தான் அவளை இன்னும் பார்க்கவில்லை."


"அப்படியானால் அவள் எங்கே?"


மறுபடியும் ஆனந்திடம் அதீத ஆர்வம் பளிச்சிட்டது.


"உங்களை மேலும் சோதிக்க விரும்பவில்லை. உங்களுக்கான அந்த இளம்பெண் உங்கள் ரிசர்வ் செய்த ரெயில் பெட்டியில் இந்நேரம் ஏறி உட்கார்ந்து இருப்பாள் என்று நினைக்கிறேன்."


"டிக்கெட் என்னிடம் அல்லவா இருக்கிறது? அவளுக்கு எப்படி பயணிக்க வேண்டிய கோச் தெரியும்?"


"என்ன ஸார் மறுபடியும் மறந்துட்டீங்களா? நீங்கள் தானே இன்னிக்கு காலையில் கோவை எக்ஸ்பிரஸில் பயணிக்க உள்ள கோச் மற்றும் சீட் நம்பர் பற்றி மெஸ்ஸேஜ் செய்தீர்கள்?"


"ஆமாம், மறந்துவிட்டேன்..." என்ற ஆனந்த் சற்று வழிந்து தொலைத்தான்.


"ஆனந்த் ஸார்... இதுக்கு மேலேயும் உங்களது பொறுமையை சோதிக்க நான் விரும்பவில்லை. நீங்கள் எங்கள் பாஸின் Ôஇன்டியன் பேங்க்Õ அக்கவுண்ட்டிற்கு அனுப்பிய பணம் 70 ஆயிரம் ரூபாய் கிரெடிட் ஆகிவிட்டது. ஸோ... என்ஜாய் யுவர் ஊட்டி ஜார்னி" என்று கை கொடுத்து வாழ்த்தி விட்டு திரும்பினான் பிரகாஷ்.


பதற்றத்தோடு கோவை செல்ல தயாராக நின்றிருந்த சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் நிற்கும் ஆறாவது பிளாட்பார்ம் நோக்கி வேகமாக ஓடினான் ஆனந்த்.


"பயணிகளின் கனிவான கவனத்திற்கு... அரக்கோணம், காட்பாடி, சேலம் வழியாக கோவை வரை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் ஆறாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்" என்கிற தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியிலான அறிவிப்புகளால் அடுத்த ஓரிரு நிமிடங்களில் தனக்குரிய சீட் ஒதுக்கப்பட்டு இருந்த கோச்சான டி5-ஐ சென்றடைந்தான்.


அது சிட்டிங் ரெயில். அதாவது, அமர்ந்து மட்டுமே செல்லும் பயணிக்கும் பகல் நேர ரெயில் என்பதால் ஒவ்வொரு பயணிகளும் தங்களுக்குரிய இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். 42, 43 ஆகிய எண்கள் கொண்ட சீட்கள் ஆனந்த்துக்கும், அவனுடன் பயணிக்கும் 22 வயது இளம்பெண்ணுக்கும் ஒதுக்கப்பட்டு இருந்தன.


தன்னுடன், தன்னுடைய எல்லா சேவையையும் பூர்த்தி செய்ய வரப்போகும் அந்த அழகி யார் என்பதை அறிய ஆவலாய் தன் இருக்கையைப் பார்த்தான். அங்கே அந்தப் பெண் இல்லை. பக்கத்தில் எங்கேயாவது நிற்கிறாளா என்பதை அறிய சுற்றும் முற்றும் பார்த்தான். ஆங்காங்கே பல இளம்பெண்கள் நின்றிருந்ததால், ஒரு வாரத்திற்கு மட்டும் தனக்குரியவளாக உடன் வாழப் போகும் அந்த பெண்ணை தேடினான்.


அடுத்த நிமிடமே, அந்த ரெயில் புறப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனந்தின் பதற்றம் இன்னும் அதிகமாகியது.


'அந்த பெண்ணை இன்னும் காணவில்லை. 70 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டார்களா? நானும், அவர்களை நம்பி இப்படியொரு ஜென்டிமென் அக்ரிமென்ட் போட்டுக் கொண்டது முட்டாள்த்தனமானதா?' என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு அப்செட் ஆனான்.


தனது இருக்கையில் சோகத்தோடு அமர்ந்த அவன் எதார்த்தமாக நிமிர்ந்தான். அவனுக்கு எதிரில் 22 வயது மதிக்கத்தக்க அழகான இளம்பெண் உட்கார்ந்திருந்தாள்.


டைட்டாக ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்திருந்தாள். அவளது ஒட்டுமொத்த அழகையும் அந்த ஆடை பளிச்சென்று காட்டியது. அவளது லிப்ஸ்டிக் உதட்டில் திருநெல்வேலி அல்வாவின் இனிப்பு தெறித்தது.


நிச்சயம் அவள்தான் தனக்காக அனுப்பப்பட்டவளாக இருக்க வேண்டும் என்று நினைத்த ஆனந்த், அவளுக்கு புன்னகையோடு ஒரு ஹாய் சொன்னான்.


நிமிர்ந்து பார்த்த அந்த பெண், லேசாக புன்னகைத்துவிட்டு மறுபடியும் குனிந்து கொண்டாள்.


தன்னை அவளிடம் எப்படி அறிமுகப்படுத்துவது என்று தெரியாமல் திணறினான் ஆனந்த்.


"மேடம்..."


"யெஸ். வாட் யூ வான்ட்?"


"ஐ ஆம் ஆனந்த். ஆர் யூ...?"


"ஐ ஆம் ஸ்வேதா."


தன் பெயரை மட்டும் சொன்ன அவள், அதற்கு மேல் பேச ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை.


'இவளது பேச்சைப் பார்த்தால் நமக்காக அனுப்பப்பட்டவள் போன்று தெரியவில்லையே...' என்று திடீரென பதற்றமான ஆனந்த், சீட்டில் இருந்து அவசரமாக எழுந்தான். தனக்குரிய பெண்ணை அனுப்பி வைக்க ரெயில்வே ஸ்டேஷன் வரைக்கும் வந்துவிட்டு போன பிரகாஷ் மொபைலை அவசரமாக தொடர்பு கொண்டான்.


தனது கைக்குழந்தை மொபைலை வெகுநேரம் சினுங்க விடவில்லை பிரகாஷ். உடனே ஆன் செய்தான்.


"என்ன பிரகாஷ் என்னை ஏமாற்ற பாக்குறீங்களா? ரெயில்வே ஸ்டேஷனுக்கு முன்பு அந்த பெண்ணை கூட்டிட்டு வந்ததாக முதலில் சொன்னீர்கள். நான் அங்கே வந்தபோது ரெயிலில் ஏறி இருப்பாள் என்றீர்கள். இப்போது அந்த பெண் இங்கே வரவேயில்லை. என்னை சாதாரண ஆளுன்னு நினைச்சு ஏமாற்ற நினைக்காதீங்க. என்னுடைய க்ளோஸ் ப்ரெண்ட் இந்த சென்னையில்தான் ஜாயின்ட் கமிஷனரா இருக்கான். அவனுக்கு நான் ஒரு போன் பண்ணுனாலே போதும். நீங்க எல்லாம் கூண்டோடு உள்ளே இருப்பீங்க..."


"ஸார்... அவசரப்பட்டு கத்தாதீங்க. நீங்க யாரு, உங்க பேக்ரவுண்ட் என்ன என்று எல்லாவற்றையும் விசாரித்துதான் அந்த பெண்ணை உங்களோடு அனுப்பி வைக்கிறோம். எங்களுக்கும் தொழில் தருமம்னு ஒண்ணு இருக்கு. வாங்கின பணத்துக்கு நாங்க ஏமாத்த மாட்டோம். ரெயில் புறப்படும்போது அவள் உங்களோடு இருப்பாள். அதுக்குப் பிறகும் அவள் வரவில்லை என்றால் என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டுங்க. இப்போது மொபைலை கட் பண்ணுங்க..." என்று சொல்லிவிட்டு மொபைல் இணைப்பை துண்டித்துவிட்டான் பிரகாஷ்.


"ச்சே..."


ஆனந்துக்கு மொபைலை வீசியெறிய வேண்டும் என்பது போல் இருந்தது. கோபத்துடனேயே தனது சீட்டில் உட்கார்ந்தான். அப்போதுதான் யாரோ ஒரு இளம்பெண் தன்னை உரசி இருப்பது போல் உணர... திரும்பிப் பார்த்தான்.-


அங்கே, நடிகை அனுஷ்கா சாயலில் அழகான இளம்பெண், அவனை ஒட்டி அமர்ந்திருந்தாள்.


ஆனந்த் பேசுவதற்கு முன்பாக அவளே தனது அழகான வாயைத் திறந்தாள்.


"நீங்கள் தானே ஆனந்த்?"


"ஆமாம்!"


"நான் ஷ்ரவ்யா. ஒரு வாரத்திற்கான உங்களது பார்ட்னர்."


புடவையில் ஹோம்லியாக வந்திருந்த ஷ்ரவ்யாவை பார்ப்பதற்கே ஆனந்துக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படியொரு அழகியா தனக்கு 'கம்பெனி' கொடுக்கப் போகிறாள் என்பதை அந்த நிமிடம் வரை அவனால் நம்ப முடியவில்லை.






(இன்னும் வருவாள்...)
Share: