ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 21

ஊட்டி

சாக்லெட்டின்

கதை!
 
நெல்லை விவேகநந்தா

ட்டி தாவரவியல் பூங்காவின் அழகை அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருந்தாள் ஷ்ரவ்யா. விதவிதமான வண்ண மலர்கள்... நீண்டு வளர்ந்த மரங்கள்... பஞ்சு மெத்தைப் புல்வெளிகள், ஜில்லென்ற குளிர்ந்த காற்று... என்று, ரம்மியமாக அமைந்திருந்த அந்தப் பூங்கா அவளை இன்னும் உற்சாகமாக்கியது. ஆனந்தின் இடது கையைத் தனது வலது கைக்குகள் சிறைப்பிடித்துக் கொண்டு அந்தப் பூங்காவை வலம் வந்தாள்.

“ஆனந்த் இந்தப் பூங்கா ரொம்ப அழகா இருக்குல்ல?”

“ஊட்டின்னாலே அழகுதான். அங்குள்ள பூங்காவின் அழகு பத்திச் சொல்ல வேணுமா என்ன?”

“இப்படியொரு அழகான பூங்காவை வேறு எங்கேயும் நான் பார்த்ததே இல்லை.”

“அதுசரி, இந்தப் பூங்காவுக்கு இன்னொரு ஸ்பெஷாலிட்டியும் இருக்கு தெரியுமா?”

“என்னது?”

“இந்தப் பூங்காவின் புல்வெளிகளில் கதாநாயகிகளோடு உருண்டு புரளாத கதாநாயகன்களே இல்லை, அதனால்தான் அப்படிச் சொன்னேன்.”

“என்னது... இங்கே ஷூட்டிங் எல்லாம் எடுப்பாங்களா?”

“ஆமாம்... இடைக்கால சினிமாக்கள் பார்த்தாலே தெரியும். அழகழகான பூங்காவையும், மலைப்பிரதேசங்கள்ல மட்டுமே பார்க்கக் கூடிய மரங்களையும் காட்டுவாங்க. அந்த இடம் வேறு எதுவும் இல்லை. இதே இடம்தான். ஏன்... இப்போ நாம நின்னுட்டு இருக்கோமே... இந்த இடத்துல நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் எல்லோரும் ஸ்ரீதேவி, அம்பிகா, ராதா கூட டூயட் பாடியிருக்காங்க. நீ ஆசைப்பட்டா நாமளும் ஒரு டூயட் பாடிடுவோம்.”

“எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. ஆனா, பேக்ரவுண்ட்ல சாங்க் எதுவும் ஓடாதே...”

“பேக்ரவுண்ட்ல சாங்க் ஓடலன்னா என்ன, மனசுக்குள்ள ஓட்டிட வேண்டியதுதான்...” என்று சொன்ன ஆனந்த், ஷ்ரவ்யாவின் இடுப்பில் கிடுக்கிப்பிடி போட்டுக் கொண்டு மெய்மறந்து நடந்தான். அவன் எந்தக் கவலையை மறக்க வந்தானோ, அவை சட்டென்று காணாமல் போய் இருந்தன.

அப்போதுதான் அவனுக்கு அந்த நினைவு வந்தது. தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து, சில சாக்லெட்டுகளை வெளியே எடுத்தான். ஷ்ரவ்யாவிடம் நீட்டினான்.

“என்னங்க... எனக்குத் தெரியாம சாக்லெட் எங்கே வாங்கினீங்க? அதுவும், சாப்பிட்டுட்டு கொடுக்குற மாதிரி இருக்குது.”

“உனக்குக் கொடுக்காம நான் மட்டும் எப்படி சாக்லெட் சாப்பிடுவேன். அதுவும், உனக்கு பிடிக்குமேன்னு வாங்கி இருக்கேன்.”

“எனக்கு சாக்லெட் பிடிக்கும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“எல்லாப் பெண்களுக்கு பிடிச்ச விஷயம்தானே அது?”

“ஓ... நீங்க அந்த வழிக்கு வர்றீங்களா? அது சரி... இந்த சாக்லெட் ஏன், பைவ் ஸ்டார் சாக்லெட் மாதிரி பேக் செய்யப்படாம இப்படி ஓப்பனா இருக்கு...”

“நீ சொல்ற சாக்லெட் வேற. இது ஊட்டி சாக்லெட்!”

“என்னது... ஊட்டி சாக்லெட்டுக்குமா பேமஸ்?”

“ஆமா... அது உனக்குத் தெரியாதா?”

“தெரியாதுங்கறதுனாலதானே உங்கக்கிட்ட கேக்கறேன்...!”

“இந்த சாக்லெட்டுக்குப் பின்னாடி சுவாராசியமான ஹிஸ்ட்ரியே இருக்கு தெரியுமா?”

“அப்படீன்னா... சாக்லெட் பார்சலை அப்படியேக் குடுங்க...” என்று, அதை வாங்கிக் கொண்ட ஷ்ரவ்யா, சாக்லெட் துண்டுகளில் ஒன்றை எடுத்துக் கடித்தாள்.

“உண்மையிலேயே இந்த சாக்லெட் சூப்பரா இருக்கு ஆனந்த். வீட்டுச் சாப்பாடுன்னு சொல்வாங்க இல்லையா..? அந்த மாதிரியான ஒரு ஃபீலிங் இருக்கு.”


“நீ சொன்னதுதான் உண்மை. இந்த சாக்லெட்டோட பெயர் ஹோம் மேட் சாக்லெட். பெயர் ஒண்ணுதான்னாலும், க்ரன்ச், கேரமில்க், அல்மாண்ட் ஃபட்ஜ், பிஸ்தா ஃபட்ஜ், வால்நட் ஃபட்ஜ், ஃப்ரூட் அண்ட் நட்ஸ், நட் மில்க், ஹோல் நட், ரோஸ்டட் அல்மாண்ட்... இப்படி இருநூறுக்கும் மேற்பட்ட வெரைட்டீஸ் இதுல இருக்கு.”

“நீங்க சொல்றதப் பார்த்தா... இந்தச் சாக்லெட் உருவான கதை கண்டிப்பா சுவாராசியமாத்தான் இருக்கும். நடந்து கிட்டே நீங்க அந்தக் கதையைச் சொன்னா நான் மறந்துடுவேன். அதோ... அந்த இடத்துல அழகான புல்வெளி தெரியுது. அங்கே உட்கார்ந்து, சாலெட் சாப்பிட்டுக்கிட்டே பேசுவோமே...” என்ற ஷ்ரவ்யா, ஆனந்தை அங்கே அழைத்துச் சென்றாள்.

“சரி, இப்போ நீங்க சொல்லக்கூடிய ஊட்டி சாக்லெட்டுக்கும் பிரிட்டிஷ்காரங்களுக்கும் சம்பந்தம் இருக்கா என்ன?”

“எப்படி கரெக்ட்டா கண்டுப்பிடிச்ச?”

“உங்ககூட பேசிப் பேசியே நானும் அறிவு ஜீவி ஆயிட்டேன்.”

“என்னை ரொம்பப் புகழ்றேன்னு நினைக்கிறேன் ஷ்ரவ்யா. ஆனா, எனக்கு இந்தப் புகழ்ச்சி எல்லாம் பிடிக்காது.”

“பில்டப் கொடுத்தது போதும்... இப்போ ஊட்டி சாக்லெட் கதையை சொல்லுங்க...”

“இதோ சொல்றேன்...” என்ற ஆனந்த், ஊட்டி சாக்லெட் வந்த கதையை தெளிவாகச் சொன்னான்.

“இந்தியாவைக் கைப்பற்றி ஆங்கிலேயே ஆட்சி முறையை அமல்படுத்திய பிரிட்டிஷ்காரர்கள் சென்னையைத் தலைநகரமாகக் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு என்னவோ பிடித்த இடம் என்றால் அது ஊட்டிதான். அங்கு நிலவிய குளுகுளு சூழ்நிலை அவர்களுக்குப் பிடித்து இருந்தாலும், ஒரு விஷயத்தில் மட்டும் அவர்கள் நிறையவே ஏங்கினர். அதற்குக் காரணம், சாக்லெட்! இங்கிலாந்தில் அவர்கள் நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் விதவிதமான சாக்லெட்களை வாங்கி ருசிக்கலாம். ஆனால், ஊட்டிக்கு வந்து குடியேறிய ஆங்கிலேயர்களுக்கு சாக்லெட் நினைத்த மாத்திரத்தில் கிடைக்கவில்லை. அவர்களின் சாக்லெட் தாகத்தைப் புரிந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டிலேயே அவர்களுக்குத் தேவையான சாக்லெட் தயார் செய்து கொடுக்க ஆரம்பித்தார். இப்படித்தான் ஊட்டி சாக்லெட் வந்தது...” என்று, ஊட்டி ஹோம் மேட் சாக்லெட்டின் வரலாற்றை சொன்ன ஆனந்த், “இந்தச் சாக்லெட் சாப்பிட்டால் நிறைய நன்மை கிடைக்கும்னு சொல்றாங்க. அது என்ன தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, சஸ்பென்ஸ் ஆக நிறுத்தினான்.

“சஸ்பென்ஸ் வெச்சுப் பேசினது போதும். அப்படி என்ன நன்மைதான் இந்த சாக்லெட் சாப்பிடுறதுனால கிடைக்குது?” ஆர்வமாகக் கேட்டாள் ஷ்ரவ்யா.

“ஊட்டி ஹோம் மேட் சாக்லெட், ப்யூர் சாக்லெட்ங்கறதுனால அதைத் தொடர்ந்துச் சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளக்கும். இதயத்துக்கும் நல்லது. சர்க்கரை நோயாளிகளும் இதை சாப்பிடணும்ங்கறதுக்காக சுகர் ஃப்ரீ சாக்லெட்டும் இப்போ கிடைக்குது. இந்தச் சாக்லெட்டோட ஸ்பெஷாலிட்டி என்னான்னா... இந்தச் சாக்லெட்டை இங்கே தவிர, வேறு எங்கேயும் தயாரிக்க முடியாது.”

ஆனந்த் இப்படிச் சொன்னதும், “ஏன் தயாரிக்க முடியாது” என்று அப்பாவியாய் கேட்டாள் ஷ்ரவ்யா.

“ஊட்டியில தயாராகுற ஹோம் மேட் சாக்லெட்களை வெறும் கண்ணாடியில் வெச்சுதான் விற்கிறார்கள். ஊட்டியோட க்ளைமேட் காரணமா அது கெட்டுப் போகாம அப்படியே இருக்கும். ஆனா, மற்ற ஊர்கள்ல இதை செஞ்சா, ஃபிரிட்ஜ்ல வெச்சிருந்தா மட்டும்தான் அப்படியே இருக்கும். ஃபிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்தா... ஐஸ்கிரீம் மாதிரி உருகிப் போயிடும்...”

ஊட்டி ஹோம் மேட் சாக்லெட் உருவான கதையை விலாவாரியாகச் சொன்ன ஆனந்த்தை, ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஷ்ரவ்யா.

(தேனிலவு தொடரும்...)
Share:

இரண்டாம் தேனிலவு - தொடர் கதை 20

திடுக்கிட வைத்த ஆடை!

நெல்லை விவேகநந்தா

ள்ளிரவுதான் ஊட்டிக்கு வந்திறங்கியதால், அமுதா காலையில் கண் விழித்த போது மணி ஒன்பதை தொட்டிருந்தது. முந்தையநாள் அதிகாலை முதல் தொடர்ந்த பஸ் பயணமும், அதைத் தொடர்ந்து செய்த கார் பயணமும் அவளை மிகுந்த களைப்பிற்கு உள்ளாக்கி இருந்தது.

தனக்கு அருகில் படுத்திருந்த குணசீலனைப் பார்த்தாள். அவனைக் காணவில்லை.

“அவரு எங்கே போய் இருப்பாரு?” என்று அவள் கண்களால் வேகமாக தேடிய போது, குளித்து முடித்துவிட்டு ஃப்ரெஸ் ஆக வெளிப்பட்டான் குணசீலன்.

“முழிச்சிட்டீயா அமுதா? அடிச்சிப்போட்ட மாதிரி தூங்கிட்டு இருந்த. அதான்... கொஞ்ச நேரம் தூக்கட்டுமேன்னு விட்டுட்டேன். பைப்ல வெதுவெதுன்னு வெந்நீர் வந்துட்டு இருக்கு. வேகமாகப் போய் குளிச்சிட்டு வந்துடு. இப்பக் குளிக்கலன்னா... இன்னிக்கு முழுவதுமே நீ குளிக்க முடியாது.”

“ஏன்... தண்ணீர் வராதா?”

“தண்ணீர் வரும். ஆனா... ஐஸ் வாட்டர் ஆகியிருக்கும். நாமதான் குளிக்க முடியாது!”

“ஓ... அப்படியா? சரி... உடனே குளிச்சிட்டு வந்திடுறேன்...” என்ற அமுதா, வேகமாக பாத்ரூமிற்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டாள்.

அடுத்த இருபதாவது நிமிடத்தில் பாத்ரூமிற்குள் இருந்து அமுதா வெளியே வந்த போது, அவள் மீது வியப்பான பார்வையை வீசினான் குணசீலன்.

உடல் முழுக்க மஞ்சள் தேய்த்துக் குளித்து, சிகப்பு நிற நைட்டியில் வெளிப்பட்ட அமுதா, ஊட்டி ரோஸ் கார்டனில் பூத்த நடமாடும் ரோஜாவாகத் தெரிந்தாள்.

“வாவ்... வாட் எ பியூட்டி? அமுதா... இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்கத் தெரியுமா? என் கண்ணே பட்டுடும் போல இருக்கு...”

குணசீலனின் பாராட்டு மழை அமுதாவை நனைக்கவே இல்லை. அவன் சொன்னதற்கு, எந்தப் பதிலும் சொல்லாமல் அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தாள்.

“ஏன் அமுதா? நீ ரொம்ப அழகா இருக்கேன்னு வாய் நிறைய சொல்றேன். பதிலுக்கு எதுவும் பேசாவிட்டாலும், கொஞ்சமாவது சிரிச்சு வைக்கலாம் இல்லீயா?”

மறுபடியும் அமுதாவிடம் மவுனம்!

“நான் சொல்றது உன் காதுல விழுதா, இல்லையா?” சற்று குரல் உயர்த்திக் கேட்டான் குணசீலன்.

“என்னங்க ஆச்சு, உங்களுக்கு? திடீர்னு எங்கிட்ட கோபப்படுறீங்க?”

அமுதா இப்படிக் கேட்டதும் அமைதியாகிப் பேசினான் குணசீலன்.

“இல்லை அமுதா. நான் நார்மல் ஆகத்தான் இருக்கேன். நீதான் மவுனமா இருக்க. என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?”

“என்னங்க அப்படிக் கேட்டுட்டீங்க? நமக்கு கல்யாணம் ஆகி பத்து நாள்கூட ஆகல. இப்போ, நான் உங்ககூட ரொம்ப தொலைவுல தன்னந்தனியா இருக்கேன். அப்படி இருக்கும்போது, எங்கிட்ட பயம், பதற்றம் இல்லாம இருக்குமா?”

“அது ஓ.கே., வேற காரணம் ஏதும் இல்லையா?”

“இப்போதைக்கு இல்லதான்!”

“இப்போதைக்குன்னா...?”

‘ஏங்க... நான் என்ன சொன்னாலும் நீங்க கேள்விக் கேட்டுட்டே இருப்பீங்களா? சும்மா விளையாட்டுக்குக் கூட உங்ககிட்ட பதில் சொல்லக்கூடாதா?”

“ஓ... விளையாட்டுக்குத்தான் அப்படிச் சொன்னாயா? நான் வேற மாதிரி நினைச்சிட்டேன்.”

“வேற மாதிரின்னா?”

“ஏன்... நானும் உன்கிட்ட விளையாடக்கூடாதா?”

குணசீலனின் அந்தப் பேச்சு அமுதாவின் மவுனத்தை கலைத்தது. லேசாக சிரித்து வைத்தாள்.

அமுதா சிரித்த அதே கணம், அங்கிருந்த போன் மெதுவாக சிணுங்கியது. ரிசீவரை எடுத்த குணசீலன், அதை இடது காதுக்குள் கொடுத்தான்.

“குட்மார்னிங் ஸார்... ரிஸப்ஷனிஸ்ட் அனிதா பேசுறேன் ஸார். நீங்க இன்னிக்கு டிராவலுக்குக் கேட்ட கார் வந்திடுச்சு. உங்களுக்காக டிரைவர் வெயிட் பண்ணிட்டு இருக்காரு.”

“இன்னும் பத்து நிமிஷத்துல கீழே வந்துடுறேன்...” என்ற குணசீலன் போன் இணைப்பை அவசரமாகத் துண்டித்தான்.

“அமுதா... நான் ஏற்கனவே புக் பண்ணின டிராவல்ஸ் கார் கீழே ரெடியா நிக்குது. முதல்ல ஹோட்டலுக்கு போய் திருப்தியா சாப்பிட்டுட்டு, இன்னிக்கு முழுக்க ஊட்டியைச் சுற்றிப் பார்க்கப் போறோம். நாம இங்கே வந்திருக்கிறது ஹனிமூன்ங்றதுனால உனக்காகவே ஸ்பெஷலா டிரெஸ் வாங்கிட்டு வந்திருக்கேன், உனக்குத் தெரியாம! இது, நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி, பல ஆசைக் கனவுகளோட நானே எடுத்தது. இந்த டிரெஸ்ல என் மனைவி எப்படியெல்லாம் இருப்பான்னு கனவெல்லாம் கண்டிருக்கேன். அந்தக் கனவு இன்னிக்கு நனவாகப் போகுது...” என்றுச் சொல்லிப் பூரித்த குணசீலன், தனது சூட்கேசுக்குள் இருந்து அந்த டிரெஸ்ஸை எடுத்து அமுதாவிடம் நீட்டினான்.

அதைப் பிரித்துப் பார்த்த அமுதாவின் முகத்தில் பலத்த அதிர்ச்சி!

அவள் கையில் இருந்தது, நவநாகரீகப் பெண்கள் விரும்பும் ஜீன்ஸ், டீ-சர்ட்!

(தேனிலவு தொடரும்...)
Share: