சனி, 25 பிப்ரவரி, 2012

இரண்டாம் தேனிலவு பகுதி - 7


7. ஏன் இந்த கொலைவெறி?


- நெல்லை விவேகநந்தா -

ன்றரை மணி நேரத்திற்கு முன்பாக ஈரோட்டில் நடந்த திடீர் களேபரத்திற்குப் பிறகு ஆனந்த், ஷ்ரவ்யா இருவரும் அதிகம் பேசாமல் மவுனமாகவே கோவை எக்ஸ்பிரஸில் பயணித்தனர். மணி இரவு பத்தைக் கடந்த சிறிது நேரத்தில் கோவை நகருக்குள் பயணித்தது ரெயில்.



"ஷ்ரவ்யா..."



அதுவரை அமைதியாய் ஏதோ சிந்தனையில் மூழ்கிப்போய் இருந்த ஷ்ரவ்யாவை தனது குரலால் எழுப்பினான் ஆனந்த்.



"கூப்பிட்டீங்களா?" ஷ்ரவ்யா கேட்டாள்.



"ஆமா... நாம கோவை வந்துட்டோம். இன்னும் கொஞ்ச நேரத்துல ரெயில்ல இருந்து இறங்கணும். அதான் கூப்பிட்டேன்."



"சரி, இதோ நான் ப்ரெஷ் ஆயிட்டு வந்துடுறேன்..." என்ற ஷ்ரவ்யா பாத்ரூம் பக்கம் உள்ள வாஷ் பேஷினை நோக்கி நடந்தாள்.



கோவை ரெயில் நிலையம் நெருங்கி வந்ததால் வாஷ் பேஷினை ஒட்டியிருந்த கம்பார்ட்மென்ட் வாசலில் சிலர் தங்களது லக்கேஜ்களை அடுக்கி வைத்திரு ந்தனர். கொஞ்சம் சிரமப்பட்டு வாஷ் பேஷின் கண்ணாடி முன்பு போய் நின்றவள் வெகுநேரத்திற்குப் பிறகு தனது முகத்தை உன்னிப்பாகக் கவனித்தாள்.



ஏதோ ஒருவித சோகம் அவளது முகத்தில் இழையோடிக் கொண்டிருந்தது. கண்களும் தூக்கத்தை தொலைத்ததாய் பொலிவிழந்து காணப்பட்டன.



தற்காலிகமாய்க் காணாமல் போயிருந்த தனது அழகை அவளாலேயே காண முடியவில்லை போலும். இரு கைகளிலும் தண்ணீரை பிடித்தவள், மெதுவாய் அதை முகத்துக்கு கொண்டு சென்று, அதில் படிந்திருந்த கவலை ரேகைகளை அழித்து விட்டாள்.



முகம் கழுவி முடித்ததும், இடுப்புப் பிரதேசத்தில் சொருகி வைத்திருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தில் அடம் பிடித்து ஒட்டிக் கொண்டிருந்த தண்ணீரை ஒற்றியெடுத்தாள். சற்று இடம் மாறியிருந்த குட்டியான ஸ்டிக்கர் பொட்டை இரு புருவங்களுக்கும் மத்தியில் சிறைப்பிடித்தாள்.



கோவை ரெயில் நிலையம் வந்துவிட்டபடியால் ஷ்ரவ்யாவை சுமந்து வந்த ரெயிலின் வேகம் தணிந்தது. வேகமாக ஆனந்த் அருகில் சென்றவள் தனக்குரிய ல க்கேஜை தூக்கிக் கொண்டாள். ஆனந்தும் அவனுக்குரிய சூட்கேசை எடுத்துக் கொண்டு இறங்குவதற்கு தயாரானான்.



கோவை ரெயில் நிலையத்திற்குள் முழுவதுமாய் நுழைந்த கோவை எக்ஸ்பிரஸ் ஓய்வெடுத்துக் கொள்ள, சக பயணியரோடு இறங்கி நடக்க ஆரம்பித்தனர் ஆனந்தும், ஷ்ரவ்யாவும்!



ரெயில் நிலையத்திற்கு முன்பாக வந்து நின்றபோது தனது வாட்சைப் பார்த்தான் ஆனந்த். அது, இரவு 10.20 மணி என்று காட்டியது.



நள்ளிரவை நோக்கிப் பயணிக்கும் நேரம் என்பதால் ரெயில் நிலையம் முன்பு ஆட்டோக்களும், கால் டாக்ஸிகளும் மட்டுமே நின்றிருந்தன.



ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளில் பலர் ஆட்டோ டிரைவர்களிடம் பேரம் பேசாமல் பயணிக்க ஆரம்பித்தார்கள். ஆனந்த் மட்டும் கையைப் பிசைந்து கொண்டு நின்றிரு ந்தான்.



”ஆனந்த்... இப்போ நாம எங்கே போகப் போறோம்? இப்பவே ஊட்டிக்கு கிளம்புறோமா-? இல்ல... இங்கே லாட்ஜ் எங்கேயும் தங்கிட்டு, நாளைக்கு காலையில புறப்படுறோமா?”



”இன்னிக்கு நைட் இங்கேதான் ஸ்டே பண்ணுறோம். நாம தங்கப் போகுற இடம் லாட்ஜ் இல்ல, என்னோட ப்ரெண்ட் வீடு.”



”ப்ரெண்ட் வீடுன்னு சொல்றீங்க. நம்மள தப்பா நெனைக்க மாட்டாங்களா?”



”தப்பாதான் நெனைப்பாங்க. ஆனா, நான் சொல்லப் போகுற பொய்யில் அந்த தப்பு எல்லாம் காணாமல் போய்விடும்.”



”அப்படி என்ன பொய் சொல்லப் போறீங்க?”



”அது மட்டும் சஸ்பென்ஸ்.”



”ஆனந்த்... நான் ஒண்ணு கேட்பேன்; தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே...”



”ஒண்ணு இல்ல, ரெண்டே கேளு...”



”வேறு ஒண்ணும் இல்ல; இன்னிக்கு ஒரு நாள்லயே நான் உங்க முகத்துல ஏகப்பட்ட சந்தோஷங்களையும் பார்த்து விட்டேன், சோகங்களையும் பார்த்து விட்டேன். கூடவே, விளையாட்டுப் பிள்ளையாய் பேசும் பேச்சையும் ரசித்து விட்டேன். நீங்க எப்போதுமே இப்படித்தானா? இல்ல... இன்னிக்கு மட் டும்தான் இப்படியா?”



”பட்டிமன்றம் நடத்துற நேரம் இது இல்ல. முதல்ல என்னோட ப்ரெண்ட் இங்கே எங்கே இருக்குறாருன்னு கண்டுபிடிப்போம்.”



”அவரு உங்க ப்ரெண்ட் தானே? வேறு எப்படி அட்ரஸ் தெரியாம இருக்கும்?”



”நான் இதுக்கு முன்னாடி கோவைக்கு வந்து இருந்தாலும், இந்த ப்ரெண்ட் வீட்டுக்கு போனது கிடையாது. இவரும் 6 மாசத்துக்கு முன்னாடிதான் எங்க சென்னை ஆபீஸ்ல இருந்து டிரான்ஸ்பர் வாங்கிட்டு இங்கே வந்திருக்காரு. இப்போ நான் இங்கே வர்றது பற்றி அவருக்கு தகவல் சொல்லவே இல்ல. அதான் எப்படி பேசலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்.”



”அப்போ... நாம உங்க ப்ரெண்ட் வீட்டுக்கு போக வேண்டாம். ஏதாவது ஒரு நல்ல லாட்ஜ்ல தங்கிட்டு நாளைக்கு காலையில ப்ரெஷ் ஆக புறப்படுவோம்.”



”நோ ஸ்ரவ்யா. எனக்கு இதுக்கு முன்னாடி லாட்ஜ்ல தனியா தங்கின அனுபவம் எனக்கு கிடையாது. அதுவும் உன்னைப் போல ஒரு பொண்ணோட திடீர்னு லாட்ஜ் பக்கம் போய் நின்னா, அங்கே உள்ள எல்லோருமே ஒரு மாதிரியா பார்ப்பாங்க. அப்படியொரு அவமானம் வேண்டாம்னு நினைக்கிறேன்.”



”அப்படீன்னா, இப்போ நாம எதுக்குதான் ஊட்டிக்குப் போறோமாம்?”



ஷ்ரவ்யாவின் இந்த கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்த ஆனந்த், மொபைல் மூலம் தனது ப்ரெண்டைத் தொடர்பு கொண்டான்.



”என்ன ஆனந்த்... எப்படி இருக்குறீங்க? எங்கே இருக்குறீங்க? திடீர்னு இந்த நேரத்துல போன் பண்ணுறீங்க” - எதிர்முனையில் ஆனந்தின் நண்பர் அண்ணாத்துரை பேசினார்.



”அது ஒண்ணும் இல்ல, ஊட்டிக்கு போகலாம்னு வந்தேன். இப்போ நைட் ஆகிட்டதுனால உங்க வீட்டுல தங்கிட்டு போகலாமான்னு தோணுச்சு. அதான் பேசுறேன்.”



”அப்படீன்னா... நீங்க இப்போ கோவையிலேயா இருக்குறீங்க?”



”ஆமாம்...”



“அப்போ உடனே கிளம்பி வீட்டுக்கு வாங்க. பக்கத்துல உள்ள ஆட்டோ டிரைவர் கிட்ட மொபைலை குடுங்க. அவரு கிட்ட நான் அட்ரஸ் சொல்றேன். ரெயில்வே ஸ்டேஷன்ல இருந்து இங்கே வர்றதுக்கு 60 ரூபாதான். அதுக்கு மேலே ஒரு பைசா கூட குடுக்காதீங்க...” என்று அண்ணாதுரை சொல்ல... மொபைலை பக்கத்தில் வந்து நின்ற ஆட்டோ டிரைவரிடம் கொடுத்தான். டிரைவரும், எதிர்முனையில் பேசிய அண்ணாதுரை வசிக்கும் வீட்டின் முகவரியை மனதிற்குள் உள்வாங்கிக் கொண்டான்.



ஆனந்தும், ஷ்ரவ்யாவும் ஆட்டோவில் ஏறி அமர்ந்தனர்.



“ஸார்... இது மிட்நைட் நேரம். நீங்க 120 ரூபா கொடுத்தாதான் நான் அங்கே வரைக்கும் போக முடியும். முடியாதுன்னா இப்பவே கீழே இறங்கிடுங்க...”



ஆட்டோ டிரைவரின் மிரட்டல் தொனியில் அமைந்த பேச்சு ஆனந்தை எரிச்சல் படுத்தினாலும் அமைதியாகவேப் பேசினான்.



”முதல்ல அந்த அட்ரசுக்கு போங்க. 120 என்ன, 150 ரூபாயே தர்றேன்” என்று ஆனந்த் சொன்ன பிறகு ஆட்டோவை வேகமாகக் கிளப்பினார் டிரைவர்.



சுமார் 15 நிமிடத்தில் அண்ணாதுரை வசித்து வந்த வாடகை வீட்டு முன்பு நின்றது ஆட்டோ. நண்பனை வரவேற்க வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தார் அண்ணாதுரை.



ஆட்டோவில் இருந்து இறங்கிய ஆனந்த்தை உற்சாகமாக அழைக்க நெருங்கியவர், அவனுக்கு அருகில் இருந்த ஷ்ரவ்யாவைப் பார்த்துவிட்டு அப்படியே நின்றார். ஷ்ரவ்யா யார் என்று நண்பர் கேட்பதற்குள் ஆனந்தே முந்திக்கொண்டு சொன்னான்.



”இவ என்னோட அத்தை மகள்தான். இன்னும் தெளிவா சொன்னனும்னா இவ என்னோட உட்பீ. அதான் என்னோட வந்திருக்கா...” என்று ஆனந்த் சொல்ல, ஷ்ரவ்யாவையும் புன்னகையோடு வரவேற்றார் அண்ணாதுரை.



கராறாக ரேட் பேசி வந்த ஆட்டோ டிரைவரிடம் 150 ரூபாயை ஆனந்த் திணிக்க... ”ரொம்ப தாங்ஸ் ஸார்” என்று சொல்லிவிட்டு பறந்தான் ஆட்டோ டிரைவர்.



”நீங்க ரெண்டு பேரும் வருவீங்கன்னு முன்னாடியே சொல்லியிருந்தா தடபுடலா சாப்பாட்டிற்கு ஏற்பாடு செஞ்சிருப்பேன். இப்பதான் நாங்க எல்லோரும் சாப்பிட்டு விட்டு படுத்தோம். கால் மணி நேரம் பேசிட்டே இருங்க. கொஞ்ச நேரத்துல சட்னி வெச்சு, தோசை சுட்டு கொண்டு வருகிறேன்...” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தார் அண்ணாத்துரையின் மனைவி ரஞ்சனி.



ஆனந்த்தும், ஷ்ரவ்யாவும் அடுத்தடுத்து பாத்ரூமிற்குள் சென்று ப்ரெஷ் ஆகிவிட்டு வெளியே வந்த சற்று நேரத்தில் சுடச்சுட தோசையோடு, தேங்காய்ச் சட்னியையும் கொண்டு வந்து வைத்தார் ரஞ்சனி. இருவரும் ருசித்து சாப்பிட்டார்கள்.



படுக்கும் நேரம் வந்தது. ஷ்ரவ்யாவை தனியாக அழைத்தார் ரஞ்சனி.



”கல்யாணத்துக்குப் பிறகுதான் ரெண்டு பேரும் சேர்ந்து படுக்கணும். அதுவரைக்கு தனித்தனியா படுக்குறதுதான் நல்லது...” என்று ஸ்ரவ்யாவின் காதுகளுக்குள் கிசுகிசுத்தவர், அவளைத் தனது படுக்கையறைக்கு அழைத்துச் சென்றார்..      



ஆனந்தும், அண்ணாத்துரையும் லிவ்விங் ரூமில் பாய் விரித்து படுத்தனர். நீண்ட தூர பயணக் களைப்பில் சட்டென்று உறங்கிப் போனான் ஆனந்த். அதேநேரம், அவன் மனதிற்குள் ஊசலாடிக்கொண்டிருந்த ”கொலை வெறி” மிருகம் மட்டும் விழித்துக் கொண்டது.


(தேனிலவு தொடரும்...)
Share: