வியாழன், 9 செப்டம்பர், 2010

விநாயகருக்கு எலி வாகனம் ஆனது எப்படி?

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்! 
ந்தர்வ மன்னனான அவனது பெயர் கிரவுஞ்சன். விநாயகரின் பக்தனும் கூட! கந்தவர்கள், நினைத்த மாத்திரத்தில் ஆகாய மார்க்கமாக எங்கு வேண்டுமானாலும் செல்பவர்கள்தானே?

அதன்படி ஒருநாள் இமயமலைச்சாரல் வழியாக ஆகாய மார்க்கத்தில் சென்று கொண்டிருந்தான் கிரவுஞ்சன். திடீரென்று பூமியில் ஓரிடத்தில் ஏதோ ஒன்று தனது கண்களை வசீகரிக்க... அப்படியே நின்றான். பார்வையை அந்த இடத்தை நோக்கி செலுத்தினான்.

‘ஆஹா... என்னவொரு அழகு?’ என்று தன்னை அறியாமலேயே புகழ்ந்தான். ஆம்... அவன் பார்த்தது ஒரு அழகான இளம்பெண்ணை. அதுவும், ஒரு ரிஷி பத்தினியை!

அவள் பெயர் மனோரமை. சவுபரி என்ற முனிவரின் மனைவியான அவள் மிகவும் பேரழகி. எவ்வளவு பேரழகியாக இருந்தாலும், எளிமையாக இறைபக்தியோடு வாழ்ந்து வந்தாள் அவள்.

தனது குடிலில், செடியில் இருந்து பறித்த பூக்களை அவள் மாலையாக தொடுத்து கொண்டிருந்தபோதுதான் கிரவுஞ்சன் பார்வையில் சிக்கிவிட்டாள். அவளது அழகில் மயங்கிய அவன் அவளது குடிலுக்கு வந்தான்.

அவனைப் பார்த்த மாத்திரத்தில் சட்டென்று எழுந்துவிட்டாள் மனோரமை. எதிரில் வருவது யார்? என்பது தெரியாததால் குழப்பமான பார்வையை அவன் மீது வீசினாள். ஆனால், அவனோ போதை தலைக்கேறியவன்போல் அவளது அழகை ரசித்தபடியே நெருங்கினான்.

இப்போது அவளை மிகவும் அருகில் நெருங்கிவிட்டான். ரிஷி பத்தினிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளே பேசினாள்.

“தாங்கள் யார் என்று தெரியவில்லை. என் கணவரும் இப்போது இங்கே இல்லை. தங்களுக்கு என்ன வேண்டும்?” - மனோரமை கேட்டாள்.

அவளிடம் பதில் சொல்லும் நிலைமையிலா இருந்தான் கிரவுஞ்சன்? அவளது அழகை பருகிய மாத்திரத்தில் போதையில் அல்லவா திளைத்துக் கொண்டிருந்தான்?

மனோரமை கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதற்கு பதிலாக, பார்வையாலேயே தின்று விடுவதுபோல் அப்படியரு பார்வை பார்த்தான்.

கூனிக் குருகி, லேசாக தலை குனிந்து நின்றிருந்தாள் மனோரமை. பருவச் செழிப்பு அவளது மேனியில் நிறையவே கொட்டிக் கிடந்தது. அவளது மீனைப் போன்ற விழிகளும், சிவந்த கன்னங்களும், சிறுத்த இடுப்பும், வாழைத்தண்டு கால்களும் அவனை என்னமோ செய்தன.

அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதற்கு பதிலாக, வேகமாக அவளது கையை பற்றினான். தன் மார்போடு இறுக அணைத்தான்.

இதை எதிர்பார்க்காத மனோரமை அவன் பிடியில் இருந்து விடுபட திமிறினாள். ‘உதவி... உதவி...’ என்று கத்தினாள்.

குடிலை நெருங்கிக் கொண்டிருந்த சவுபரி முனிவர், தனது பத்தினி மனைவியின் அலறல் கேட்டு அங்கே வேகமாக ஓடி வந்தார். தனது மனைவியை ஒரு கந்தர்வன் கவர முயன்று கொண்டிருப்பதைக் கண்ட அவர் கோபத்தில் பொங்கியெழுந்தார்.

“அடே கந்தர்வா...” என்று அவரது கொந்தளிப்பான குரலில் திடுக்கிட்டு நின்றான் கிரவுஞ்சன். அப்போதுதான் அவனுக்கு செய்த தவறு நினைவுக்கு வந்தது. மனோரமையை தனது பிடியில் இருந்து விட்டுவிட்டு முனிவர் பக்கம் திரும்பினான்.

முனிவரின் கண்கள் கோபத்தில் கொப்பளித்துக் கொண்டிருந்தன. அடுத்த நொடியே அவனுக்கு சாபமிட்டார்.

“எந்த ஆடவனையும் ஏறெடுத்துப் பார்க்காத என் தர்ம பத்தினியின் கையை பிடித்து இழுத்து, அவளை அடைய முயன்ற உன்னை மன்னிக்கவே முடியாது. இப்போதே நீ, மண்ணைத் தோண்டி வளையில் ஒளியும் பெருச்சாளியாக மாறுவாயாக...” என்று சபித்தார் முனிவர்.

கிரவுஞ்சனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. செய்த தவறுக்காக மன்னிப்பு வேண்டினான்.

“என்னை மன்னித்து விடுங்கள் முனிவரே... தங்கள் தர்ம பத்தினியின் பேரழகு என் கண்களை மறைத்துவிட்டது. அவளது அழகில் மங்கி, இப்படியரு தவற்றை செய்ய துணிந்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். சபித்து விடாதீர்கள்...” என்ற கிரவுஞ்சன் முனிவரின் காலில் கண்ணீர் விட்டு அழுதான்.

“தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும். ஆனாலும், உன் மேல் எனக்கு இரக்கம் ஏற்படுகிறது. கொடுத்த சாபத்தை திரும்ப பெற முடியாது. நிச்சயம் நீ பெருச்சாளியாக மாறித்தான் ஆக வேண்டும்”.

“அப்படியென்றால், எனக்கு பாவ விமோசனமே கிடையாதா?”

“கண்டிப்பாக உண்டு. அந்த விநாயகப் பெருமான் உன்னை காப்பாற்றுவார்...” என்றார் சவுபரி முனிவர்.

அடுத்தநொடியே மிகப்பெரிய பெருச்சாளியாக மாறிய கிரவுஞ்சன், நேராக காட்டுக்குள் ஓடினான்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன.

புத்திர பாக்கியம் வேண்டி தவம் இருந்த ஒரு மகாராணிக்கு ஐங்கரனாக அவதாரம் பிறந்த விநாயகரும் அதே பகுதியில் அவதரித்தார்.

ஒருநாள் பெருத்த அட்டகாசத்தில் ஈடுபட்ட கிரவுஞ்ச பெருச்சாளி மீது தனது பாசக்கயிற்றை வீசினார் விநாயகர். அதில் சிக்கிக்கொண்ட பெருச்சாளியால் தப்பிக்க முடியவில்லை. அப்போதுதான் அதற்கு, தன் மீது பாசக்கயிற்றை வீசியது விநாயகர் என்பது புரிந்தது. தனது செயலுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டது.

கருணையே வடிவான விநாயகர் கிரவுஞ்ச பெருச்சாளியை மன்னித்தார். அதை, தனது வாகனமாகவும் ஏற்றுக்கொண்டு அருள் வழங்கினார்.

இப்படித்தான் விநாயகப் பெருமானுக்கு எலி வாகனமானது.
    


Share:

ஜூ.வி. ஆசிரியருடன் ஒரு சந்திப்பு - பாகம் 2



ஜூ.வி., பொறுப்பாசிரியர் திரு.குள.சண்முகசுந்தரம் உடனான பேட்டியின்  தொடர்ச்சி...

கேள்வி : ஜூ.வி.,யில் விளம்பரம் அதிகம் வருவது இல்லையே... இடப்பற்றாக்குறையா? அல்லது சமூக அவலங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைபாடா?

பதில் : சமூக அவலங்களை எடுத்துரைக்க வேண்டும் என்பதுதான் இதற்கு காரணம். மற்றபடி, நாங்கள் விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. விளம்பரம் தேடி வந்தால் மாத்திரமே வாங்கிக்கொள்வோம். ஒரு செய்தியை பிரசுரிக்க ஒரு விளம்பரத்தை நிறுத்திதான் ஆகவேண்டும் என்றால், நிச்சயமாக அந்த விளம்பரத்தை நிறுத்திவிடுவோம். ஜூ.வி.யை பொறுத்தவரை செய்திகளுக்கே முதலிடம்!

கேள்வி : சமூக சேவையில் ஜூ.வி., தானே இறங்கியது உண்டா?

பதில் : நிறைய உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்காக விகடன் நிறுவனம் செய்துள்ளது. செய்தும் வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி தண்ணீர் வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டு எலிக்கறியை உணவாக உட்கொள்ளும் நிலைக்கு ஆளான நரிமணம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு உதவி செய்தோம். அந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு மாதம்தோறும் 30 கிலோ அரிசி வழங்கினோம். எங்கள் ஆசிரியர்கள், செய்தியாளர்கள் அனைவருமே இந்த சேவையில் இறங்கி ஈடுபட்டோம். இதுபோன்று பல உதவிகளை செய்துள்ளோம். தற்போதும் இது தொடர்கிறது.

கேள்வி : அரசியல், ஊழல், கற்பழிப்பு, கொலை போன்ற செய்திகளை வெளியிடும்போது கொலை மிரட்டல் அல்லது வேறுவிதமான பாதிப்பு ஏற்படுமா? அப்படி ஏற்பட்டால் எப்படி சமாளிப்பீர்கள்?

பதில் : என்னை பொறுத்தவரை கொலை மிரட்டல் அதிகம் வருவதில்லை. ஆனால், மிரட்டல் நிறையவே வரும். செய்தி சேகரிக்க செல்லும் இடங்களில் அடி-உதை விழுந்ததும் உண்டு. நானும் இந்த வகையில் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். கடந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் பற்றிய ஒரு சிறிய பாக்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தோம். காலை 7 முதல் 10 மணி, மாலை 7 முதல் 10 மணி என அவரது தேர்தல் பிரச்சார நேரம் முரசொலி இதழில் வெளியாகி இருந்தது. அதை வைத்து, கிளப் நேரம் போக மற்ற நேரம் ஓட்டு கேட்கப் போகிறார் போலிருக்கு என்று அந்த செய்தியை வெளியிட்டு இருந்தோம். செய்தி வெளியானபோது அவர் இதுபற்றி ஒன்றும் கேட்கவில்லை. அவர் வெற்றிபெற்ற பின்னர், வெற்றி குறித்து அவரிடம் கேட்க சென்றபோது, அவருடன் இருந்த சிலர் மேற்கண்ட செய்தி வெளியிட்டதற்காக என்னை தாக்கிவிட்டார்கள். உடனே போலீசுக்குச் சென்றோம். வழக்குப்பதிவு செய்யும்போது பி.டி.ஆர். உயிருடன் இல்லை. பெரிய செய்திதான் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது இல்லை. சிறிய செய்தி கூட பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தலாம்.



கேள்வி : பிற புலனாய்வு இதழ்களுக்கும், ஜூ.வி.,க்கும் உள்ள வித்தியாசம்?

பதில் : ஒற்றுமை என்று எடுத்துக்கொண்டால் ஒரே பாணியைதான் பின்பற்றுகிறோம். எல்லோரும் என்பதைவிட முன்னணியில் உள்ள ஜூ.வி., குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். வேற்றுமை என்றால், எங்களது நடைமுறையைச் சொல்லலாம். அதாவது, சில நேரங்களில் வெளியிடப்படும் செய்திகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் இருந்து மறுப்பு கடிதம் வரும். அதை நாங்கள் உதாசீனப்படுத்தாமல், அதற்கு மரியாதை கொடுத்து, இன்ன இன்ன ஆதாரங்கள் செய்தி வெளியிட்டதற்கு இருக்கின்றன என்று பதில் கடிதம் எழுதுவோம். அதன்பின்னர் அவர்கள் அதுபற்றி மீண்டும் எதுவும் கேட்க மாட்டார்கள். சிலநேரங்களில் ஆதாரம் இல்லாவிட்டால் மறுப்பை பிரசுரம் செய்யவும் செய்கிறோம். விளக்கம் கேட்பவரை மதிக்கும் இந்த தன்மையை நாங்கள் பின்பற்றி வருவது, மற்ற புலனாய்வு இதழ்களில் இல்லாதது.

சந்திப்பு : நெல்லை விவேகநந்தா.

(பேட்டி நிறைவுற்றது)

Share: