திங்கள், 9 ஏப்ரல், 2012

இரண்டாம் தேனிலவு - 11


11. சுவையான ஊட்டி வரலாறு!

நெல்லை விவேகநந்தா

மேட்டுப்பாளையம் ப்ளாக் தண்டரைத் தாண்டி ஊட்டியை நோக்கி மலையேறத் துவங்கியிருந்தது ஆனந்தும், ஷ்ரவ்யாவும் பயணித்த கார்.

நீண்டு வளர்ந்த பாக்கு மற்றும் யூகலிப்டஸ் மரங்கள், கிளைகள் பரப்பித் தாறுமாறாக வளர்ந்திருந்த காட்டுப் பலா, தேக்கு மரங்களின் நிழலில் கோடை வெயில் கொஞ்சம் கொஞ்சமாக விடை பெற்றுக் கொண்டு வந்தது.

அடிக்கடி குறுக்கிட்ட கொண்டை ஊசி வளைவுகள் வழியாக பயணித்த போதெல்லாம் கரு மேகங்களை எளிதில் தொட்டு விடலாம் போலிருந்தது. ஆங்காங்கே மரங்களில் அமர்ந்து கொண்டு சேட்டைகளில் ஈடுபட்டிருந்த குரங்குகளும் இனம் புரியாத மகிழ்ச்சியைத் தந்தன.

மலை மேல் ஏற... ஏற... நகரத்து ஏ.சி.க்களில் இருந்து வெளிப்படும் குளிர்ந்த காற்றை, அங்கே இயற்கையன்னை இலவசமாக தந்தாள்.

ஷ்ரவ்யா இப்போதுதான் முதன் முறையாக ஊட்டிக்குச் செல்கிறாள் என்பதால் அவள் முகத்தில் ஏகத்துக்கும் மகிழ்ச்சி அப்பிக் கிடந்தது. அதை கவனித்துவிட்டான் ஆனந்த்.

”ஷ்ரவ்யா... நீ ரொம்பவும் உற்சாகமாக இருப்பது போல் தெரிகிறதே...?”

”ஆமாம்... இதுக்கு முன்னாடி நான் ஊட்டிக்கு வந்தது கிடையாது. சினிமாக்களில் ஊட்டி அழகைப் பார்த்ததோடு சரி. இப்படியொரு இன்பம் கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் எப்போதோ ஊட்டிக்கு வந்திருப்பேன். கூடவே, ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஊட்டியில் ஆஜராகியிருப்பேன்.”

”இப்போதுதான் ஊட்டிக்கு வந்தாகி விட்டதே... இனி, ஒவ்வொரு தடவையும் ஊட்டிக்கு வந்துவிடு; அவ்வளவுதானே!”

”நாம் இன்னும் ஊட்டிக்குச் செல்லவில்லை. அதற்குள் இயற்கை இவ்வளவு ஜில்லென்று இருக்கிறதே... ஊட்டிக்குப் போக இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?”

”மலையேறத் துவங்கி அரை மணி நேரம்தானே ஆகிறது? இன்னும் ஒன்றரை மணி நேரம் பயணித்தால் ஊட்டியில் நாம் தங்கும் லாட்ஜ் முன்பு காரில் போய் இறங்கிவிடலாம்.”

”என்னது... இன்னும் ஒன்றரை மணி நேரமா? இப்போதே நாம் ஒரு மலை மீது முழுவதுமாக ஏறிவிட்டோமே... அப்படியென்றால், நாம் இன்னும் நிறைய மலைகளை ஏறிக் கடக்க வேண்டுமா?”

”ஆமாம்... இன்னும் நிறைய மலைகளைத் தாண்டினால்தான் ஊட்டிக்குப் போக முடியும்...” என்ற ஆனந்தை, திடீரென்று முகத்தில் பல கேள்விகளை வைத்துக்கொண்டு பார்த்தாள் ஷ்ரவ்யா.

“என்னாச்சு ஷ்ரவ்யா? ஏதோ கேட்க நினைக்கிறாய்; ஆனால், வார்த்தைதான் வாய் வரை வந்து, அப்படியே நின்றுவிட்டது. எதைக் கேட்க நினைத்தாயோ, அதைத் தைரியமாகக் கேள்.”

“திடீரென்று எனக்கு ஸ்கூல் ஞாபகம் வந்தது.”

“அதற்கும், உன் கேள்விக்கும் என்ன சம்பந்தம்?”

“பெருசா ஒண்ணும் இல்லை. நான் ஸ்கூலில் படிக்கும்போது ஊட்டிக்கு மலைகளின் அரசின்னு இன்னொரு பெயர் இருப்பதாக படித்திருக்கிறேன். ஆனால், இந்த ஊட்டியை உருவாக்கியது யார் என்று தெரியாது. அதுபற்றி கேட்கலாம் என்று தோன்றியது. ஆனால், உங்களுக்கு அதுபற்றி தெரிய வாய்ப்பு இருக்கிறதா? என்று தெரியவில்லை. அதனால்தான் அமைதியாகி விட்டேன்.”

“இது சாதாரண மேட்டர். ஜர்னலிஸ்ட் ஆக இருந்து கொண்டு இதுவும் தெரியவில்லை என்றால் என்ன அர்த்தம்?”

“அப்படியென்றால் ஊட்டி வரலாற்றை சொல்லுங்களேன்... எனக்கு என்னவோ அதுபற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.”

“சரிங்க அம்மணி. உத்தரவு போட்டுட்டீங்க... இதோ விடையைச் சொல்றேன்...” என்ற ஆனந்த், ஊட்டியின் வரலாற்றை சொல்ல ஆரம்பித்தான்.

“கடல் மட்டத்தில் இருந்து 2,239 மீட்டர், அதாவது 7,347 அடி உயரத்தில் ஊட்டி என்கிற இந்த உதகமண்டலம் அமைந்துள்ளது. உதகமண்டலத்தைச் சுருக்கமாக உதகை என்றும் அழைப்பார்கள். ஊட்டி அமைந்துள்ள மாவட்டம் நீலகிரி என்று அழைக்கப்படுகிறது.” இதற்கு மேல் ஆனந்த்தை பேச விடாமல் தடுத்தாள் ஷ்ரவ்யா.

“நான் என்ன கேட்டேன்?”

“ஊட்டி வரலாறுதானே?”

“ஊட்டி வரலாறுதான். அதுக்காக, ஊட்டிக்கு உதகை, உதகமண்டலம்னு பெயர் இருக்குன்னு சின்னக் குழந்தைகளுக்கு சொல்ற விஷயங்களை எல்லாம் சொல்ல வேண்டாம். எனக்குத் தெரியாத மேட்டருக்கு வாங்க.”

“மறுபடியும் உத்தரவுங்க அம்மணி.”

“ஆமாம்... நான் முதல்லயே கேட்கனும்னு நினைச்சேன். என்ன... திடீர்னு அம்மணி இம்மணின்னு கோயமுத்தூர் பாஸையில கூப்பிடுறீங்க?”

“எல்லாம் ஒரு மரியாதைக்குதாங்க...”

“சரி, சரி... மரியாதை மனசோட இருந்தா போதும்...” என்ற ஷ்ரவ்யா, செல்லமாக ஆனந்தின் கன்னத்தைக் கிள்ளினாள். கன்னத்தைக் கிள்ளிய வேகத்தில் அவன் மடியில் விழுந்தும் விட்டாள். அவளைத் தடுக்க கைகளால் அணை போட்டான் ஆனந்த். அதில், அவனது கரங்கள் அவளது உடலில் ஏடாகூடமாகப் பட... சிலிர்த்துப் போய் சட்டென்று எழுந்துவிட்டாள்.

இவர்களது இன்பச் சேட்டைகள் கார் டிரைவரையும் ஒருமாதிரியாக நெளிய வைத்தது. இருக்கையில் வளைந்து நிமிர்ந்தவன், “இதற்குப் பிறகும் அந்தக் காட்சியைப் பார்த்தால் எதிரே வரும் வண்டி தெரியாமல் போய்விடும்; ஜாக்கிரதை!” என்று தன்னைத்தானே எச்சரித்துக் கொண்டான்.

“என்னாச்சு ஆனந்த்... ஊட்டி வரலாறு இன்னிக்கு இவ்ளோதானா?”

“நிறைய இருக்குத்தான்.”

“அப்படீன்னா சொல்லுங்க... அதை விட்டுட்டு தேவையில்லாதத பத்தி கற்பனை பண்ணிக்காதீங்க.”

“நீ என்ன சொல்றன்னு எனக்கு நல்லாவே புரியுது. இப்போ எதுவும் வேணாம்னு நினைக்கிறேன்...” என்றவன், “சரி... அதுபற்றி இப்போ பேசிக்க வேண்டாம். நேரா ஊட்டி வரலாறுக்கே வந்து விடுகிறேன்.”

“நீங்க சொல்றதுதான் கரெக்ட். ஊட்டி ஹிஸ்ட்ரிய முதல்ல சொல்லுங்க.”

“சரி...” என்ற ஆனந்த், தொண்டையை சற்று இறுமிக் கொண்டு, ஊட்டி புராணத்தை மறுபடியும் தொடர்ந்தான்.

“உதகமண்டலம் என்பதுதான் ஊட்டியோட ஆரம்ப கால பெயர். இந்தப் பெயர் வந்ததுக்கு பல காரணங்கள் சொல்றாங்க. ஒத்தைக் கல் மந்து என்ற பெயரே உதகமண்டலம் ஆனதா இங்கு இப்போதும் வாழும் மலைவாழ் மக்கள் சொல்றாங்க. மூங்கில் காடு இருந்ததாலும், நீர் அதிகம் இருந்ததாலும் அந்த பெயர் வந்ததா இன்னொரு தகவலும் உண்டு. உதகம் என்றால் தண்ணீர் என்று பொருள். மண்டலம் என்றால் வட்ட வடிவம். அதாவது, வட்ட வடிவில் அமைந்துள்ள தண்ணீர் என்பதுதான் உதகமண்டலத்தின் பொருள். இப்படிப் பார்த்தால் உதகமண்டலம் என்பது அங்கிருக்கும் ஏராளமான ஏரிகளை குறிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒட்டெகமண்ட் எனவும் இது அழைக்கப்பட்டது. அதுவே சுருங்கி ஊட்டி ஆகிவிட்டது. 12-ஆம் நூற்றாண்டில் நீலகிரி மலையானது ஹோய்சாளர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. பிறகு, மைசூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த திப்பு சுல்தான் வசமானது. 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் கைக்கு மாறியது. அப்போது கோவை மாவட்ட ஆளுநராக இருந்த ஜான் சுலிவன் என்பவர், இப்பகுதியின் குளுமையான தட்பவெட்ப நிலையை விரும்பி அங்கு தங்க நினைத்தார். இதையடுத்து, அங்கிருந்த தோடர், இரும்பா, படுகர் போன்ற பழங்குடியின மக்களிடம் இருந்து நிலங்களை வாங்கினார். இவரே உதகமண்டலத்திற்குச் சென்ற முதல் வெள்ளையர் ஆவார். அடுத்த சில ஆண்டுகளில் அவர் அங்கு ஒரு வீட்டை கட்டினார். அதன்பிறகு ஆங்கிலேயர்கள் அதிக அளவில் ஊட்டிக்கு படையெடுத்தார்கள். அங்கே மக்கள் தொகை அதிகரித்தது. கி.பி. 1855ல் இது நகராட்சியாக மாறியது. பின்னாளில், ஊட்டிக்கு மலை ரெயில் பாதையும் போடப்பட்டு, ரெயில் போக்குவரத்து துவங்கியது. இங்கிலாந்தில் உள்ள காலநிலை ஊட்டியில் நிலவியதால், ஆங்கிலேயர்கள் கோடைக்காலத்தில் அன்றைய மதராஸில் இருந்து ஊட்டிக்கு தங்களது தலைநகரத்தை மாற்றிக்கொண்டு ஆட்சி செய்திருக்கிறார்கள்...” மூச்சுவிடாமல் ஊட்டி வரலாற்றை ஷ்ரவ்யாவுக்கு சொல்லி முடித்தான் ஆனந்த்.

அப்போது, கார் டிரைவர் திடீரென்று பேசத் துவங்கினான்.

“ஸார்... ஊட்டிக்கு இவ்ளோ பெரிய வரலாறு இருக்குன்னு எனக்கே தெரியாது ஸார். ஆனா, நீங்க கைடு மாதிரி புள்ளி விவரமாச் சொல்றீங்க. எங்கே இருந்து இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டீங்க ஸார்...?” என்றான் அவன்.

“அப்போ, இவ்ளோ நேரமாக நாங்க என்ன பேசிட்டு வந்தோம்னுதான் கவனிச்சிட்டு இருந்தீங்களா? இந்த மலைப் பயணத்துல இது ஆகாது. பேசாம வண்டியை ஓரம் கட்டுங்க.”

ஆனந்தின் பேச்சில் கண்டிப்பு தெரிந்தது.

(தேனிலவு தொடரும்...)
Share:

இரண்டாம் தேனிலவு - 10

10. பஸ் பயணத்தில் காதல் ஞாபகம்!

நெல்லை விவேகநந்தா

ரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது திருநெல்வேலி புதிய பஸ் நிலையம். கோவை செல்லும் தனியார் சொகுசுப் பேருந்தில் குணசீலனும், அமுதாவும் அமர்ந்திருந்தனர்.

"மாப்ள திடுதிப்புன்னு ரெண்டு பேரும் ஊட்டிக்குப் போறீங்க. அங்கே எங்கே தங்குவீங்க? ரெண்டு பேரும் தனியா இருக்குறதுனால எந்த பயமும் இல்லீயே..." பஸ் புறப்படுவதற்கு முன்னர் தனது சந்தேகத்தை கேட்டாள் பாக்கியம்.

"பயப்படாதீங்க அத்த. இந்த ஹனிமூன் டிரிப் என்னோட மெட்ராஸ் ப்ரெண்ட்ஸ்ங்க அரேஞ் பண்ணினது. என்னோட மேரேஜிக்கு கிப்ட்டா, ஊட்டியில் உள்ள ஸ்டார் ஓட்டல் ஒன்றில் 5 நாட்களுக்கு ரூம் புக் செஞ்சிட்டாங்க. ஊட்டிய சுத்திப் பார்க்க ஆசைப்பட்டா, உடனே கார் வந்திடும். சாப்பிடனும்னாகூட அதுவும் போன்ல சொன்னாலே போதும்" என்றான் குணசீலன்.

"அப்போ பயப்பட எதுவும் இல்லன்னு சொல்றீங்க."

"ஆமா அத்த. மறுபடியும் சொல்றேன். நீங்க எதையும் நினைச்சுப் பயப்பட வேண்டாம். புதுசா மேரேஜ் ஆன எல்லோரும் போகக்கூடிய இடம்தான் ஊட்டி. 5 நாள் முடிஞ்சதும் திரும்பி வந்துடப் போறோம். அதுக்கு அப்புறம் இங்கே ஒரு வாரம் இருந்துட்டு, அடுத்து நேரா சென்னைக்குத்தான்.”

தனது இரண்டு வார டூர் பிளானை மாமியாரிடம் சொல்லி விட்டான் குணசீலன். அவன் முகத்தில் ஊட்டிக்குப் போகிறோம் என்கிற மகிழ்ச்சி நிறையவே கொட்டிக் கிடந்தது. ஆனால், அமுதாதான் வழக்கம்போல் மூஞ்சை தூக்கி வைத்துக்கொண்டு மவுனமே உருவாக அமர்ந்திருந்தாள்.

சரியாகக் காலை 10 மணி ஆனதும் பேருந்தை நகர்த்தினார் டிரைவர். பாக்கியமும், அவரது கணவர் தங்கதுரையும் டாடா சொல்ல... பதிலுக்குப் புதுமணத் தம்பதியர் இருவரும் டாடா சொன்னார்கள். பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த சொகுசுப் பேருந்து தங்க நாற்கரச் சாலையில் கோவை நோக்கி வேகமாகப் பயணித்தது.

காதில் ஹெட் செட்டை மாட்டிக்கொண்டு சூரியன் எப்.எம்.மில் பாட்டு கேட்டுக் கொண்டே வந்தாள் அமுதா. மெலடி சாங்ஸ் அவளுக்கு பிடிக்கும் என்பதாலோ என்னவோ, அப்போது அவள் கேட்டுக் கொண்டிருந்த நிகழ்ச்சி முழுவதும் மெலடி காதல் பாடல்களாகவே ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.

பாடல் ஒலிபரப்பாகி முடிந்ததும் நேயர்கள் லைவ் ஆகத் தொடர்பு கொண்டு, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய இளம்பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒலிபரப்பான நிகழ்ச்சி காதலர்களுக்கானது என்பதால் காதலர்களே பேசினார்கள்.

ஒரு பெண் பேசியது அமுதாவின் ஆழமான நெஞ்சைத் தொடுவதாக இருந்தது.

“வணக்கம். நீங்க எங்கேயிருந்து பேசுறீங்க.”

“நாங்குநேரி பக்கத்துல உள்ள ஒரு கிராமத்துல இருந்து பேசுறேங்க.”

“நீங்க நிகழ்ச்சியில என்ன சொல்லப் போறீங்க. குறிப்பாக, நீங்க யாரை லவ் பண்ணுறீங்க?”

“என்னோட மாமாப் பையனத்தான் லவ் பண்ணுறேன்.”

“சரி, உங்க பெயரை நாங்க தெரிஞ்சிக்கலாமா?”

“வேண்டாங்க...”

“சரி, அப்போ உங்க லவ்வர் பெயரையாவது சொல்லலாமே...”

“அவரு பேரு அசோக்.”

“உங்க பெயரைக் கேட்டா சொல்ல மாட்டேங்குறீங்க. ஆனா, உங்க லவ்வரோட பெயரை மட்டும் எப்படிச் சொல்றீங்க?”

“அது, அவருக்கு நான் வெச்ச பெயரு.”

தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பெண், இப்படிச் சொன்னதும், தன்னை அறியாமலேயே சீட் நுனிக்கு வந்து அமர்ந்தாள் அமுதா.

“உங்களோட லவ்வர் அசோக் கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம்னா எதை சொல்வீங்க?”

“நல்லாப் பேசுவாரு.”

“எல்லாப் பசங்களும், பொண்ணுங்ககிட்ட நல்லாப் பேசுவாங்களே...”

“நான் அப்படிச் சொல்ல வரல. நிறைய விஷயங்கள் பேசுவாரு. அவர் அவ்ளோ புத்திசாலி.”

“உங்க லவ்வர் புத்திசாலின்னா, கண்டிப்பா நீங்களும் புத்திசாலியாத்தான் இருப்பீங்க. நான் சொல்றது சரிதானே?”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. நான் கிராமத்துப் பொண்ணு. அவரும் கிராமத்துல பொறந்திருந்தாலும் இப்போ சிட்டியில வேலை பாத்துட்டு இருக்குறாரு.”

“என்ன வேலை பாக்குறாருன்னு சொல்லலாமா?”

“அய்யோ... நான் இப்ப உங்க கிட்ட பேசுறது எங்க வீட்டுல யாருக்குமே தெரியாது. விட்டா, நீங்க முழு அட்ரஸையும் வாங்கிடுவீங்க போல இருக்கே...”

“அப்படீன்னா... நாம பேச்ச மாத்திக்கலாம். நீங்க உங்க லவ்வர் கிட்ட எப்போ ஐ லவ் யூன்னு சொன்னீங்க-?”

“இன்னும் சொல்லல...”

“அவரு...”

“அவரும் சொல்லல.”

“வேற எப்படி, அந்தப் பையனை நீங்க லவ் பண்ணுறதா சொல்றீங்க?”

“ஐ லவ் யூன்னு சொன்னா மட்டும் அது காதல் இல்லீங்க. மனசுக்குள்ள பட்டாம்பூச்சி எல்லாம் பறக்கும்னு சொல்வாங்களே... அதுவும் காதல் இல்லீங்க. ரெண்டு பேரும் முழுமையா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டாலே அது தாங்க உண்மையான காதல். எங்களோட காதலும் அப்படிப்பட்டதுதான்.”

“நீங்க தொடர்பு கொண்டு பேசினதுக்கு ரொம்ப நன்றி. ஒவ்வொருத்தரோட காதலும் ஒவ்வொரு விதம்தான்னு சொல்லுது, கடைசியாக தொடர்பு கொண்டு பேசிய காலரோட காதல். காதல் பத்தி ரொம்ப அருமையா அவங்க சொன்னாங்க. அவங்களுக்காக இப்போ அழகான ஒரு சாங்க் வருது. கேட்டு என்ஜாய் பண்ணுங்க. தொடர்ந்து சூரியன் எப்.எம்.ல இணைஞ்சியிருங்க...”

சூரியன் எப்.எம். பெண் ரேடியோ ஜாக்கி பேசி முடிக்கவும், இசைஞானி இளையராஜா இசையில் வெளியான ஒரு பாடல் ஒலிபரப்பானது. கண்களை மூடி அந்த பாட்டை மனதிற்குள் கேட்டுக் கொண்டிருந்தாள் அமுதா. அந்தப் பாடல் முடியவும், ஹெட் செட்டை காதல் இருந்து எடுத்தாள். அவளது கண்களின் ஓரம் லேசாக ஈரமாகியிருந்தது.


(தேனிலவு தொடரும்...)
Share:

இரண்டாம் தேனிலவு - 9

                    
9. திடீர் திருமணம்!
                               
நெல்லை விவேகநந்தா

முந்தைய நாள் இரவை, கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள நண்பன் அண்ணாதுரையில் வீட்டில் ஷ்ரவ்யாவுடன் கழித்த ஆனந்த், ஊட்டி புறப்படுவதற்கு தயாரானான்.

"ஆனந்த்... இப்போ நீங்க ரெண்டு பேரும் நேரா கோவை புது பஸ் ஸ்டாண்டுக்குப் போங்க. அங்கிருந்து 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் இருக்கும். இப்போ சீசன் நேரம் என்பதால் டூரிஸ்ட் நிறையபேர் வருவாங்க. அதனால கூடுதலா பஸ் விட்டிருப்பாங்க. பஸ்ல போகப் பிடிக்கலன்னா, பிரைவேட்டா கார்ல கூட்டிட்டுப் போவாங்க. எப்படியும் ஐந்து ஆறுபேர் ஏறுவாங்க. அவங்க கார்ல போனா பஸ்ஸை விட கொஞ்சம் கூடுதலா செலவாகும். இன்னும் சவுகரியமா ஊட்டிக்கு இயற்கையை ரசிச்சுக்கிட்டே போகணும்னா நீங்களே ஒரு காரை புக் பண்ணி புறப்படுங்க. ஊட்டி ஜர்னியை நல்லா என்ஜாய் பண்ணலாம்..." குட்டி லெக்ட்சர் கொடுத்து ஆனந்த்தையும், ஷ்ரவ்யாவையும் தனது வீட்டில் இருந்து அனுப்பி வைக்க தயாரானார் அண்ணாதுரை.

லக்கேஜ் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து நிற்கவும், அவர்கள் ஏற்கனவே புக் செய்த டிராக் டிராக் கால் டாக்ஸி வந்து நின்றது. பளிச்சென்ற வெள்ளை நிற சீருடையில் வந்து இறங்கினார், கால் டாக்ஸி டிரைவர்.

அந்த டிரைவர் மட்டுமல்ல; கால் டாக்ஸியும் வித்தியாசமாக இருந்தது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் போலீசார் பயன்படுத்தும் கார் போன்றிருந்தது அது.

இருவரும் கால் டாக்ஸியில் ஏறுவதற்கு முன்பாக, ஷ்ரவ்யாவை தனியாக அழைத்தார் அண்ணாதுரையின் மனைவி ரஞ்சனி.

"ஷ்ரவ்யா... நீ ரொம்ப கொடுத்து வெச்சவம்மா. என்னோட ஹஸ்பன்ட், உன்னோட வருங்கால கணவரோட அஞ்சு வருஷமா மதுரையில் இருக்கும்போது வொர்க் பண்ணியிருக்காங்க. அவரைப் பத்தி என்கிட்ட நிறையவே என் ஹஸ்பன்ட் சொல்லி இருக்காரு. அவரை ரொம்ப தங்கமானவருன்னு சொல்லுவாரு. தன்னோட அத்தை மகளை அவர் லவ் பண்ணுறதாகவும் சொல்லி இருக்காரு. அவரோட அத்தை மகள் நீதான்ங்கறது எனக்கு மட்டுமல்ல, என் கணவருக்கும் நேற்றுதான் தெரியும். இப்போ, நீ தன்னந்தனியா அவரோட வந்தது, வெளியில உள்ளவங்களுக்கு வேணும்னா தப்பாத் தெரியலாம். உண்மையை சொல்லணும்னா, நீ அவரை நம்பி ஊட்டிக்கு தனியா, அதுவும் மேரேஜ்க்கு முன்னாடியே வந்ததை நான் தப்புன்னே சொல்ல மாட்டேன். ஏன்னா, அந்த அளவுக்கு நல்ல பையன் அந்த ஆனந்த். என் மனதுக்குள் சொல்ல தோணினதை சொல்லிவிட்டேன். ஊட்டி டிரிப்பை என்ஜாய் பண்ணிட்டு வாங்க. மேரேஜ் என்னிக்கின்னு கண்டிப்பா தகவல் சொல்லுங்க. உங்க மேரேஜ் எங்கே நடந்தாலும், அங்கே முதல் ஆளா நாங்க வந்து நிற்போம். வாழ்த்துக்கள்!" என்று சொல்லி, ஷ்ரவ்யாவை ஒரு அக்காளுக்கே உரிய பாசத்தோடு முத்தமிட்டு வாழ்த்தினார் ரஞ்சனி.

"ஸார்... லக்கேஜ் எல்லாம் எடுத்து வெச்சிட்டேன். இப்போ, நாம புது பஸ் ஸ்டாண்ட்தானே போகணும்?"

கால் டாக்ஸி டிரைவர் கேட்க... "ஆமாம்... அங்கேதான் போகணும்" என்றான் ஆனந்த்.

அவனும், ஷ்ரவ்யாவும் டாக்ஸியில் ஏறி அமரவும் வண்டி புறப்பட்டது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அந்த கால் டாக்ஸியின் சீட் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் பளிச்சென்று வெள்ளை நிறத்தில் இருந்தது. தலையில் வெள்ளை நிற தொப்பி அணிந்து கொண்டு பொறுப்பாக வண்டியை ஓட்டினார் டிரைவர்.

"வண்டியை இவ்ளோ நீட்டா வெச்சியிருக்கீங்களே எப்படி?" - ஆனந்த் டிரைவரைப் பார்த்துக் கேட்டான்.

"ஸார்... வண்டி ஓட்டும் போது பேசக்கூடாதுங்கறது எங்க நிறுவனத்தோட உத்தரவு. நீங்க இப்பத்தான் முதல் தடவையா எங்க நிறுவன கால் டாக்ஸியில் வர்றீங்கன்னு நினைக்கிறேன். இங்கே கால் டாக்ஸி புக் பண்ணுறவங்கள்ல நிறையபேர் டூரிஸ்ட்தான். அவங்க என்ஜாய் பண்ணுறதுக்கு ஊட்டிக்குப் போறாங்க. அவங்களை நாங்களும் சந்தோஷப்படுத்த எடுத்த முயற்சிதான் இது" என்று சொன்ன கால் டாக்ஸி டிரைவர், ஆனந்த் பக்கம் திரும்பவே இல்லை.

இதற்கு மேல் கேள்வி கேட்டு அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்த ஆனந்த், அதற்கு மேல் அந்த டிரைவரிடம் பேசவில்லை.

அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் கோவை புது பஸ் ஸ்டாண்ட் முன்பு வந்து நின்றது கால் டாக்ஸி.

ஆனந்தும், ஷ்ரவ்யாவும் இறங்கிக்கொள்ள, வண்டியின் டிக்கி பகுதியில் வைக்கப்பட்டு இருந்த லக்கேஜ்களை டிரைவரே எடுத்து வந்து கொடுத்தார்.

"அமவுண்ட் எவ்ளோ ஆச்சு?"

"ஒரு நிமிஷம் ஸார்..." என்ற டிரைவர், வண்டியில் பொருத்தப்பட்டு இருந்த ரீடிங் மீட்டரில் பச்சை பட்டனை அழுத்த, அது ஒரு வெள்ளை ரசீதை கக்கியது.

அந்த ரசீதை வாங்கிப் பார்த்த ஆனந்திற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. 68 ரூபாய் என்று அதில் பிரிண்ட் ஆகியிருந்தது.

"இவ்ளோதான் வாடகையா? நான் என்னவோ, எப்படியும் குறைஞ்சது 150 ரூபாயாவது கேட்பீர்கள் என்று அல்லவா நினைத்தேன்?" என்று கூறி, தனது முகத்தில் ஆச்சரிய ரேகையை ஓடவிட்டான். ஷ்ரவ்யாவும் அவனிடம் இருந்து ரசீதை வாங்கிப் பார்த்து, தன் பங்கிற்கும் வியப்பை வெளிப்படுத்தினாள்.

"நாங்க குறைவா கட்டணம் வாங்கல ஸார். இதுதான் சரியான வாடகை. இதற்கு மேலும் வாடகை கேட்டா, அவங்க ஏமாத்துறாங்கன்னு அர்த்தம்" என்று சொன்ன கால் டாக்ஸி டிரைவரிடம் 100 ரூபாய் ஒற்றை நோட்டை நீட்டினான். அவர் மூன்று பத்து ரூபாய் நோட்டுகளையும், இரண்டு ரூபாய் காயின் ஒன்றையும் கொடுத்து ஸ்மைலோடு தேங்ஸ் சொல்லியதோடு, ஹப்பி ஜர்னி என்று வாழ்த்துக்களையும் சொன்னார்.

அவரிடம் டிப்ஸ் என்று, 10 ரூபாய் நோட்டை ஆனந்த் நீட்ட... "உங்க பரந்த மனப்பான்மைக்கு நன்றி ஸார். எனக்கு நல்ல சம்பளம் தர்றாங்க ஸார். எனக்கு அதுவே போதும்..." என்று சொல்லிவிட்டு காரை ஸ்டார்ட் செய்து புறப்பட்ட நேர்மையான கால் டாக்ஸி டிரைவரை பிரமிப்போடு பார்த்துக் கொண்டு நின்றான் ஆனந்த்.

அந்த வெள்ளை நிற கால் டாக்ஸி சற்றுத் தொலைவில் இருந்த சிக்னலை கடந்து மறைந்த நேரம், சில கார் டிரைவர்கள் அங்கே வந்தனர். அவர்களில் ஒருவன் ஆனந்தை நெருங்கிக் கேட்டான்.

"ஸார்... ஊட்டிக்குத்தானே போறீங்க? பஸ்ல போனா கூட்டமாக இருக்கும். ஊட்டியோட அழகை ரசிக்க முடியாது. நீங்க ரெண்டு பேரும் தனியா கார்ல போனா எங்கே வேண்டுமானாலும் வண்டியை நிறுத்தி இயற்கையை ரசிக்கலாம்..." என்று தன்னிடம், தானாகவே முன்வந்து விளக்கம் தந்த டிரைவரை உற்றுப் பார்த்தான் ஆனந்த்.

"அதிகமாக பணம் கேட்டு ஏமாத்திடுவோம்னு பயப்படாதீங்க. எழுநூற்று ஐம்பது ரூபாய் கொடுத்தா போதும். எங்களோடு சேவையைப் பார்த்து கூடுதலா டிப்ஸ் கொடுத்தா மட்டும்தான் வாங்கிப்போம். மற்றபடி தொந்தரவு செய்ய மாட்டோம்" என்று, அந்த டிரைவர் விளக்கம் தர, ஷ்ரவ்யாவைப் பார்த்தான் ஆனந்த்.

"அவர் சொல்றதும் சரிதான். பஸ்ல போவதைவிட கார்ல போனா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்..." என்று ஷ்ரவ்யா சொல்ல, "சரி" என்றான் ஆனந்த்.

இருவரும் டாடா இன்டிகா காரில் ஏறிக்கொள்ள, கார் ஊட்டி நோக்கி வேகமாக பறந்தது.

கார், மேட்டுப்பாளையத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரம், திடீரென்று காரை நிறுத்துமாறு கூறினான் ஆனந்த்.

டிரைவரும் காரை ஓரமாக நிறுத்த, சாலையோரமாக இருந்த ஒரு சிறிய கோவிலுக்கு ஷ்ரவ்யாவை அழைத்துச் சென்றான் ஆனந்த்.

கோவிலுக்கு முன்பாக இருந்த ஒரு கடையில் மஞ்சள் கட்டிய தாலிக் கயிற்றை வாங்கிக்கொண்டவன், ஷ்ரவ்யாவின் கையை பிடித்துக்கொண்டு கோவிலுக்குள் சென்றான்.

ஆனந்தின் நடவடிக்கை திடீரென்று மாறியதால் பரபரப்பானாள் ஷ்ரவ்யா.

"ஆனந்த்... எதுக்கு தாலிக் கயிறு வாங்குறீங்க?"

"உன் கழுத்துல கட்டத்தான்."

ஆனந்த் இப்படிச் சொன்னதும், சட்டென்று பேச்சு வராமல் திணறினாள்.

"என்னோட கழுத்துல நீங்க ஏன் தாலி கட்டணும்?"

"காரணம் இல்லாம நான் எதையும் செய்ய மாட்டேன். எதுவும் பேசாம என்கூட வா. நாம ஊட்டியில் இருக்குற வரைக்கும் இந்த தாலிதான் நமக்கு வேலி..." என்று ஆனந்த் சொன்னபோதுதான், "ஓ... முன்னெச்சரிக்கைக்காக இப்படியொரு வேஷமா" என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் ஷ்ரவ்யா.

இருவரும் சென்றது ஒரு மாரியம்மன் கோவில். அங்கிருந்த அர்ச்சகரிடம் மஞ்சள் தாலிக் கயிற்றை கொடுத்த ஆனந்த், அதை அம்மனின் பாததில் வைத்து எடுத்து வருமாறு கேட்டுக் கொண்டான்.

முதலில் யோசித்த கோவில் அர்ச்சகர், திடீரென்று என்ன நினைத்தாரோ தாலிக் கயிற்றை வாங்கி, அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து, அதை ஒரு தட்டில் வைத்து, கையில் இரண்டு மாலைகளையும் எடுத்துக்கொண்டு கருவறைக்கு வெளியே வந்தார்.

தாலிக் கயிற்றை ஆனந்த் கையில் கொடுக்க... அவன், தனக்கு வலமாக நின்ற ஷ்ரவ்யாவை நிமிர்ந்துப் பார்த்தான். அவள் தலை குனிந்து கொள்ள... அவளது கழுத்தில் தாலியைக் கட்டினான்.

அந்த நேரத்தில் யாரோ ஒருவர் கோவில் மணியை அடிக்க, "ரொம்ப நல்ல சகுனம்... நீங்க ரெண்டு பேரும் தீர்க்காயுஷா வாழ்வீங்க" என்று அவர்களை வாழ்த்தினார் கோவில் அர்ச்சகர்.

ஆனந்த், ஷ்ரவ்யா கழுத்தில் தாலியை கட்டி முடித்ததும், அவர்கள் கையில் ஆளுக்கொரு மாலையை அர்ச்சகர் கொடுக்க, இருவரும் மாலை மாற்றிக் கொண்டு, அம்மன் சன்னதியில் ஜோடியாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியெழுந்தனர். அவர்களுக்கு விபூதி பூசிவிட்டு வாழ்த்தினார் அர்ச்சகர்.

அவர் வைத்திருந்த பூஜைத் தட்டில் 500 ரூபாய் நோட்டை காணிக்கையாக வைத்துவிட்டு, ஷ்ரவ்யா கையை பற்றிக்கொண்டு கோவிலை விட்டு வெளியேறினான் ஆனந்த்.

அர்ச்சகர் முகத்தில் இன்ப அதிர்ச்சி!


(தேனிலவு தொடரும்...)

Share: