ஞாயிறு, 31 ஜனவரி, 2010

பாரதிக்கு உதவிய பராசக்தி

பாரதிக்கு உதவிய பராசக்தி

பராசக்தி மீது பாரதியார் அந்த அளவுக்கு பக்தி கொண்டிருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அதனால்தான் என்னவோ, பாரதியார் வாழ்வில் பல சுவராஸ்யமான சம்பவங்கள் நடந்தன.

அவற்றில் ஒன்று இந்த சம்பவம் :


பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
பாரதியார் வசித்த வீட்டின் முன்பு, தகர குவளையை வைத்துக்கொண்டு, குதித்தவாறே பாட்டுபாடியபடி ஆடிக்கொண்டிருந்தாள் ஒரு சிறுமி.
அவள், மேல் சட்டையின்றி குட்டைப் பாவாடை மட்டுமே அணிந்திருந்தாள். காலில் சிறிய சலங்கை அணிந்திருந்தாள். கழுத்தில் பாசி மாலைகளும் கிடந்தன. அந்த மாலையில் புலிப்பல்லும், பித்தளை, செப்பு காசுகளும் தொங்கிக் கொண்டிருந்தன. சிறுமியின் தோற்றம் அவளை குறத்தியின் மகள் என்பதை நினைவுப்படுத்தியது.

இவளது ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த பாரதியின் மகளான சிறுமி சகுந்தலா தந்தையை நோக்கி ஓடி வந்தாள்.

"அப்பா! இந்த பொண்ணு சட்டை போடாமல் இருக்கிறாளே ஏன்?" என்று பாரதியாரை நோக்கி கேட்டாள்.

"பாவம்! அவள் ஒரு ஏழை. சட்டை வாங்க பணம் இல்லையோ என்னவோ?" என்று அதற்கு பதில் அளித்தார் பாரதி.

உடனே, வீட்டுக்குள் ஓடிச் சென்ற சகுந்தலா தனது சட்டையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். வீட்டுக்கு வெளியில் ஆடிக்கொண்டிருந்த சிறுமியை நோக்கி சென்றவள், மேலாடையின்றி காணப்பட்ட சிறுமிக்கு அந்த சட்டையை கொடுத்தாள்.

"இந்த சட்டை உனக்குத் தான். நீ போட்டுக்கொள்" என்றாள் சகுந்தலா. அந்த சிறுமியும், இன்னொரு சிறுமியான சகுந்தலா கொடுப்பதை ஆசையுடன் வாங்கிக் கொண்டாள்.

மகளின் இந்த செயலை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் பாரதியார்.
அந்தநேரத்தில், ஒரு தட்டில் சாதத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்டார் பாரதியின் மனைவியான செல்லம்மாள்.

"எங்கே அந்த பிச்சைக்காரி?" என்று பாரதியாரை நோக்கி கேட்டார்.
"அவள் போய்விட்டாள். நாங்கள் தான் அவளுக்கு சட்டை கொடுத்து அனுப்பினோம்" என்று பதில் கூறினார் பாரதியார்.

"சட்டையா? யார் கொடுத்தது? நான் தான் அவளை இருக்கச் சொல்லி குரல் கொடுத்தேனே! அதற்குள் அனுப்பி விட்டீர்களே" என்று கேட்ட செல்லம்மாள், மகள் சகுந்தலாவை பார்த்து அப்போது கொஞ்சம் கடுமையாகவே பேசினார்.

"நாம இருக்கிற இருப்பில் தர்மம் வேறயா? உன் சட்டையை கொடுத்து விட்டாயே. இது உனக்கு நல்லா இருக்கா? பள்ளிக்கூடம் போக சட்டைக்கு என்ன செய்வாய்?" என்று மகளை செல்லமாய் கடிந்து கொண்டார் செல்லம்மாள்.

உடனே, பாரதியாரை நோக்கி திரும்பிய சகுந்தலா, "அப்பா... அம்மா கோபப்படுறாங்களே, நான் செய்தது தப்பா? தர்மம் தலை காக்கும்ன்னு நீங்க தானே சொன்னீங்க?" என்று அப்பாவியாய் கேள்வி கேட்டாள்.

"கவலைப்படாதே கண்ணம்மா! நமக்கு அந்த பராசக்தி ஒன்றுக்கு மூன்றாய் தருவாள். நீ செய்தது தப்பே இல்லை. இல்லாதவர்களுக்கு இருக்கிறவர்கள் கொடுப்பது தான் தர்மம்" என்று மகளைப் பார்த்து வாஞ்சையோடு கூறினார் பாரதியார்.


இதை கவனித்துக் கொண்டிருந்த செல்லம்மாள், "எப்படியோ போங்க; அப்பாவுக்கு ஏத்த பொண்ணு. அப்படியே அப்பாவின் குணத்தை உறிச்சுட்டு பொறந்திருக்கா..." என்று அலுத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.
தனது உயிரினும் மேலாக பராசக்தியை கருதினார் பாரதியார். அதனால், தான் ஒன்றுக்கு மூன்றாய் தருவாள் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

உண்மையில் அந்த நம்பிக்கை பொய்த்துவிடவில்லை. பாரதி கூறியபடியே, ஒரு சட்டை தானமாக கொடுக்கப்போய் மூன்று சட்டை சகுந்தலாவை தேடி வந்தது.

ஆம்! மறுநாள் சிறுமி சகுந்தலாவுக்கு பிறந்த நாள்.

பாரதியின் உறவினர் ஒருவர் அவளுக்காக மூன்று சட்டைகள் வாங்கிக் கொண்டு வந்தார்.
Share:

ஐம்பதிலும் காதல் வரும்...


னித வாழ்க்கையில் மிக மிக அழகான விஷயங்களுள் ஒன்று காதல். அழகான மனம் இருந்தால் போதும், அழகான ரசனை இருந்தால் போதும், காதல் தானாக வந்து எட்டிப் பார்த்து விடும்.

பஞ்சையும், தீக்குச்சியையும் அருகருகே வைக்கக்கூடாது என்பார்கள். அவை அருகில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் தீப்பற்றிக் கொள்ளும் விபத்து ஏற்படலாம். அதுபோன்று, இரு மனங்கள் மோதி விபத்துக்குள்ளாவதால் ஏற்படும் பாதிப்பு தான் காதல்.

பதினெட்டு வயதில் தான் ஒருவருக்கு காதல் வரவேண்டும் என்று கிடையாது. ஐம்பதிலும் காதல் வரலாம். ஏன் நூறு வயதை கடந்தாலும் அங்கே ஆத்மார்த்தமான, அனுபவப்பூர்வமான உண்மையான காதலை&பாசத்தை நாம் பார்க்கலாம்.

சில தம்பதியரை பார்த்தால் அவர்களது உண்மையான வயதை எளிதில் மதிப்பிட்டுவிட முடியாது. அந்த அளவுக்கு இளமையாக இருப்பார்கள். இன்னும் சில தம்பதியர் இருக்கிறார்கள். வயது குறைவாகத் தான் இருக்கும். ஆனால் தோற்றத்தில் ஐம்பதை கடந்தவர்கள் போல் தோன்றுவார்கள். ஏன் பிறந்தோம் என்பதுபோல் அவர்களது முகபாவனைகள் இருக்கும்.

இந்த வேறுபாடுகளுக்கு காரணம் என்ன? எல்லாம் மனம் தான்.

நான் இளமையாக இருக்கிறேன், சந்தோஷமாக இருக்கிறேன் என்று உங்கள் மனம் எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தால் நீங்கள் இளமையாக-சந்தோஷமாகத் தான் எப்போதும் இருப்பீர்கள். என்ன வாழ்க்கை இது? எதைச் செய்தாலும் நேர்எதிராகி விடுகிறதே என்று எண்ணினால் அது தான் மிஞ்சும்.

உங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதன்படி தான் நீங்கள் நடந்து கொள்வீர்கள். உங்கள் மனம் ஆரோக்கியமாக இருந்தால் நீங்களும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். மனதிற்கு ஒரு நோய் என்றால் அது உங்களுக்கும் தான்.

அன்பை வெளிப்படுத்த வயது ஒரு தடையே அல்ல. ஐந்து வயது குழந்தையிடம் நாம் வெளிப்படுத்தும் எதிர்பார்ப்பற்ற அன்புக்கும், பதினெட்டு வயதில் வெளிப்படுத்தும் இனம்புரியாத அன்புக்கும், ஐம்பது வயதில் ஆதரவான அரவணைப்பை தேடும் அன்புக்கும் வித்தியாசங்கள் இருந்தாலும் எண்ணங்கள் என்பது ஒன்று தான்.

அன்பை பரிமாறிக்கொள்ள வயது ஒரு தடையே கிடையாது. இளம் தம்பதியர் வாழ்வில் கணவன் ஆனவன் மனைவியிடம் பாசத்தை பொழிவது ஆரம்பத்தில் அதிகமாக இருக்கும். சிலர் மனைவியை தாங்கு தாங்கு என்று தாங்குவார்கள். திருமணம் ஆன புதிதில் இது நிறையவே இருக்கும்.

இதனால் தான் ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள் என்கிறார்கள். இந்த காலக்கட்டத்தில் மனைவி என்ன சொன்னாலும் கணவன் ஆனவன் கேட்பான். காரணம், சூழ்நிலைகள் அப்படி. சில முதல் பல ஆண்டுகளாக இல்லற வாழ்க்கை பற்றி கனவு கண்ட அவன் மனம், அப்போது அதை அடைந்துவிட்ட உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கும். அந்த சூழ்நிலையில் மனைவி எதை சொன்னாலும் அவனுக்கு வேதவாக்காக இருக்கும்.

எல்லோரையும் இப்படிப்பட்டவர்கள் தான் என்று சொல்லிவிட முடியாது. இளம் வயதிலேயே அனுபவ அறிவை வளர்த்துக் கொண்டவர்கள் எப்போதும் நிதானம் தவறி போய்விட மாட்டார்கள்.

இல்லற வாழ்வின் ஆரம்பத்தில் இனிக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் காலங்கள் நகர, நகர கசக்கத் தொடங்கிவிடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. காரணம், அப்போது அன்பு பற்றாக்குறை ஏற்படுவது தான்.

மனைவி வந்த புதிதில் அவளுக்கு அடிக்கடி மல்லிகைப்பூ வாங்கிக்கொடுத்து அசத்துபவர்கள், குழந்தைகள் பிறந்து ஆளான பிறகு, மல்லிகைப் பூவையே மறந்து விடுகிறார்கள். தெருவில் செல்லும்போது, பூ வாங்கலீயா... பூ வியாபாரி கூவும் திசை நோக்கி திரும்பும்போது தான் மலரும் நினைவுகளாக இளமைக்காலம் சற்று கண்முன் நிழலாடிவிட்டு மறையும். அன்று அப்படி இருந்த நானா, இன்று இப்படி மாறிவிட்டேன் என்ற யோசிக்க கூட அவர்களுக்கு அப்போது நேரம் இருக்காது. காரணம், இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கும் பரபர வாழ்க்கை தான்.

நீங்களும் ஐம்பது வயதிலும் மன அளவில் இளமையாய் இருக்கலாம். அதற்காக, ஒவ்வொரு மனைவியரும் தங்கள் கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி இங்கே பார்ப்போம் :

* உங்கள் கணவர் அலுவலகத்தில் பணிபுரிபவர் என்றாலும் சரி, சுயதொழில் செய்பவர் என்றாலும் சரி எப்படியும் டென்ஷன் இருக்கும். செய்யும் தொழிலை பொறுத்து டென்ஷன் குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கலாம். அதை வீட்டிலும் அவர் வெளிப்படுத்தலாம். அதனால், முடிந்தவரை கணவரை டென்ஷன் ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவர் டென்ஷனோடு வந்தால் அதை குறைக்கும் வகையில் இதமாக பேசுங்கள். ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லுங்கள். டென்ஷனின் வேகம் தணியும். பிரச்சினைகளுக்கு தீர்வும் கிடைக்கும்.

* சில பெண்கள் 40 வயதை தாண்டினாலே எல்லாம் முடிந்துவிட்டது என்று எண்ணிவிடுகிறார்கள். ஆடை விஷயத்திலும் அலங்காரத்தை தவிர்த்து எளிமைக்கு மாறிவிடுகிறார்கள். இந்த தோற்றத்தில் உங்களை உங்களவர் பார்க்கும்போது, நமது மனைவிக்கு வயது ஆகிவிட்டதோ என்று தான் தோன்றும். ஆள் பாதி, ஆடை மீதி என்பதை எல்லா பெண்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். முடிந்தவரை, இளமையான தோற்றத்தை தரக்கூடிய ஆடைகளையே அணியுங்கள். அதற்காக, காஸ்ட்லியான ஆடை தான் அணிய வேண்டும் என்பது இல்லை. சிம்பிளான ஆடையிலும்கூட நீங்கள் Ôயூத்Õ ஆக மின்னலாம். எல்லாம் உங்கள் பக்குவம் தான். நீங்கள் அந்த பக்குவத்தோடு நீங்கள் ஆடை அணிந்தால் கணவனை எளிதில் உங்கள் வசப்படுத்தலாம். திருமணம் ஆன புதிதில் எப்படியெல்லாம் உங்களை வர்ணித்தாரோ, அதே அளவுக்கு இல்லாவிட்டாலும் ஏறக்குறைய அதை நெருங்கும் அளவுக்கு உங்களை வர்ணித்து மகிழ்ச்சிப்படுத்தவார்.

* யாராக இருந்தாலும் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கத் தான் செய்யும். இரவில் படுக்கைக்கு செல்லும்போது அதுபற்றி மூச்சு விட்டுவிடாதீர்கள். படுக்க தயாராகும் முன் மனதை அமைதிப்படுத்துவது அவசியம். அதனால் படுக்கையறையில் கணவன் முன்பு பிரச்சினைகளை கொட்டாமல் இருப்பது தான் நல்லது.

* உங்கள் கணவர் பிறந்த நாள், உங்கள் திருமண நாள் போன்றவற்றை உங்கள் கணவர் மறந்திருந்தாலும், அதை சஸ்பென்சாக வைத்து, அந்த நாளில் அவருக்கு ஆச்சரியத்தக்க பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுங்கள். உங்கள் கணவர் விரும்பும் பரிசாக அது இருந்தால் இன்னும் நல்லது.

* உங்கள் கணவரது பெற்றோர், அதாவது உங்கள் மாமனார்-மாமியார் உங்களுடன் வசித்தால், அவர்களை அடுத்தவரது பெற்றோர் என்று எண்ணாமல் உங்கள் பெற்றோர் போலவே எண்ணிப் பாருங்கள், உபசரியுங்கள். இதை பார்க்கும் உங்கள் கணவர், என் மனைவி போல் எந்த பெண்ணும் இருக்க மாட்டாள் என்று புளங்காகிதம் கொள்வார்.

* பசி வந்தால் பத்தும் பறந்து போய்விடும் என்பார்கள். அப்படிப்பட்ட பசியை போக்குவதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பசியோடு வரும் கணவனுக்கு, அவரது வாய்க்கு ருசியாக, விதவிதமாக உணவு வகைகளை தயார் செய்து பரிமாறுவது கணவர் மனதில் உங்கள் மீதான மதிப்பை அதிகரிக்கச் செய்யும்.

* எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். உங்கள் கணவர் என்னென்ன எதிர்பார்க்கிறாரோ, அவற்றை எல்லாம் தெரிந்து, முடிந்தவரை அவர்களை நிவர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள். நீங்கள் அவரை எல்லா செயல்களாலும் மகிழ்ச்சிப்படுத்தும்போது, அவர் நிச்சயம் உங்களையும் மகிழ்ச்சிப்படுத்துவார்.

- இப்படியெல்லாம் நீங்கள் இருந்தாலும், உங்களவருக்கு 50 வயது ஆனாலும் ஐ லவ் யூ சொல்லத் தானே செய்வார்..?
Share: