ஞாயிறு, 23 ஜனவரி, 2011

அய்யா வைகுண்டர் வரலாறு - 9


9. வைகுண்டரின் தவமும் போதனையும்
- நெல்லை விவேகநந்தா -

சாமித்தோப்புக்குத் திரும்பிய வழியில் அய்யா வைகுண்டருக்கு பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரைப் பெரும் மக்கள் கூட்டம் பின் தொடர்ந்தது. அவரது போதனைகளால் ஈர்க்கப்பட்டு தானாகத் திரண்ட கூட்டம் அது.

நாடார் சமூகத்தில் அவதரித்த வைகுண்டர் பின்னால் ஒரு கூட்டமே திரண்டதை கண்ட ஆதிக்க ஜாதியினர் பொறாமையால் துடிதுடித்தனர். ‘ஒரு பைத்தியத்தின் பின்னால் பைத்தியக் கூட்டமே திரண்டு போகிறது...’ என்று ஏளனம் செய்தார்கள். இன்று மெக்காவில் சாத்தான் மீது கல் எறியும் இஸ்லாமியர், அன்று வைகுண்டர்மீது கல்லை எறிந்து அவமானப்படுத்தியதாகவும் தகவல் உண்டு.  

இப்படி, தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவோடும், ஆதிக்க ஜாதியினரின் அவமானங்களை எதிர் கொண்டும் சாமித்தோப்பு வந்து சேர்ந்தார் வைகுண்டர். அங்கே அவரை வரவேற்க முதல் ஆளாக வந்திருந்தார் பூவண்டர் என்ற யாதவர் (பசு மாடுகளைப் புனிதமாக கருதிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தினர், அவைகளை பராமரிப்பதற்கு என்று யாதவர் சமூகத்தினரை நியமித்து இருந்தனர். அந்தவகையில், சமஸ்தானத்தினர் அவர்கள் மீது மரியாதை வைத்திருந்தனர். பூவண்டர் போன்ற சிலர், சமஸ்தானத்தின் நிர்வாகப் பணிகளில் இருந்தனர்).

முத்துக்குட்டியாகச் சென்று, அய்யா வைகுண்டராக வந்தவரை பணிவோடு வரவேற்று, அவர் தங்குவதற்கு என்று தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பு ஒன்றையும் கொடுத்தார், பூவண்டர். அதை மகிழ்வோடு ஏற்ற வைகுண்டர், அந்தத் தென்னந்தோப்பில் ஒரு குடில் அமைத்து, சொந்த பந்தங்களை துறந்து தங்கினார். குறிப்பிட்ட நாளில் தவம் இருக்கவும் ஆரம்பித்தார். தவம் என்றால் ஒரு மாதமோ, இரண்டு மாதமோ அல்ல. தொடர்ந்து 6 ஆண்டுகள்!

‘ஏன் இந்த திடீர் தவம்?’ என்று அவரிடமே கேட்டபோது, ‘இது எனது இறைத்தந்தை எனக்கு இட்டளை’ என்று கூறி, கேட்டவர்கள் வாயை அடைத்து விட்டார். மாமரத்தின் அடியில் தவத்தைத் துவங்கிய வைகுண்டர், முதலில் 3 அடி அகலமும், 6 அடி ஆழமும் கொண்ட பள்ளம் தோண்டி, அதனுள் நின்று கொண்டு முதல் இரண்டு ஆண்டுகள் தவம் செய்தார். கலியுகத்தை அழித்து தர்மயுகத்தை தோற்றுவிப்பதற்கான ஆரம்பக்கட்ட முயற்சியாக அது அமைந்தது.

அடுத்த இரண்டு ஆண்டுகள் வீராசனம் இட்டு, தரையில் அமர்ந்து தவம் செய்தார். ஜாதி, மத வேறுபாடுகளைக் களையும் நோக்கில் இந்த இரண்டாம் வகை தவம் அமைந்தது.

தவம் மேற்கொண்ட இந்த காலக்கட்டத்தில், வைகுண்டரைத் தேடி பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வரத் தொடங்கினார்கள். அவர்களிடம் எதுவும் பேசாமல், செய்கைகள் மூலம் ஆசி வழங்கியவர், பசியைப் போக்கிக் கொள்ள வெறும் பால் மட்டுமே அருந்தி வந்தார்.

மூன்றாவது இரண்டு ஆண்டுகால தவத்தை, ஒரு கட்டிலில் கால் விரித்து அமர்ந்தபடி தொடங்கினார். ஒருவழியாக மூன்றாவது தவக்காலமும் நிறைவுற்று, வைகுண்டர் கூறியபடி 6 ஆண்டுகள் நிறைவடைந்தன.

தாழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் மகான் தோன்றியுள்ளார்; ஏன்... இறைமகனாக வந்துள்ளார்... என்பதை அறிந்த, 18 ஜாதியினரும் திரளாக சாமித்தோப்புக்கு வந்தனர். தன்னைத் தேடி வந்தவர்களை எல்லாம் ஒருசேர அமர வைத்து விருந்தளித்து மகிழ்ந்தார் வைகுண்டர். அவரிடம் சீடர்களாகவும் சிலர் சேர்ந்து, தாழ்த்தப்பட்ட சமுதாய முன்னேற்றத் தொண்டில் இறங்கினர்.

திருவிதாங்கூர் சமஸ்தானம் தாழ்த்தப்பட்டதாக அறிவித்த 18 ஜாதிகளிலும் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. அதனால் அவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதா? வேண்டாமா? என்று வெளியில் சொல்ல முடியாமல் தவித்தனர். அதனை உணர்ந்த வைகுண்டர், முதலில் 18 ஜாதியினர் இடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்று கருதினார். ஒன்றாக அமர்ந்து விருந்து உண்ண மறுத்தவர்களை ஒருவழியாக சமாளித்து விருந்துண்ணச் செய்தார்.

18 ஜாதியினரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை கண்ட வைகுண்டருக்குள், நிச்சயம் அவர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

அந்தக் காலத்தில், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்ற விதிமுறை இருந்தது. அதனால், பராமரிப்பு இல்லாத ஏரியிலோ, குட்டையிலோ நீரெடுத்து குடித்தனர் அவர்கள். இதை போக்குவதற்காக பொதுக்கிணறு ஒன்றை ஏற்படுத்தினார் வைகுண்டர். ‘முத்திரி கிணறு’ என்று அதற்கு பெயரும் சூட்டினார் (அய்யா வழி தர்மபதிகளுக்கு - கோவில்களுக்குச் சென்றால் இந்த புனிதக் கிணற்றை நீங்களும் பார்க்கலாம். முத்திரி என்றால் உத்தரவாதம் தருதல் அல்லது நியமித்தல் என்று பொருள்). அந்தப் பொதுக்கிணற்றில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒன்றாக தண்ணீர் எடுத்து மகிழ்ந்தனர்.

ஒருநாள் மாமரத்தின் அடியில் தியானத்தில் மூழ்கியிருந்த வைகுண்டர், தனது சீடர்களில் ஒருவரை அழைத்து, “நான் சொல்வதை அப்படியே எழுது” என்றார். அந்தச் சீடருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும், எழுத்தாணியையும், எழுதப்படாத பனை ஓலைச்சுவடிகளையும் வேகவேகமாக எடுத்து வந்தார். வைகுண்டர் சொல்லச் சொல்ல ஒன்றுவிடாமல் எழுதினார்.

தனது மானிட பிறப்பு, தனக்கு திடீரென்று ஏற்பட்ட நோய், மகாவிஷ்ணுவை தரிசித்த அனுபவம், அவர் தனக்கு கூறிய உபதேச மொழிகள்... இவற்றோடு உலக நடப்புகளையும், எதிர்கால நிகழ்வுகளையும் கணித்துக் கூறினார். ஒருவித பாடல் வடிவில் அவரது உபதேசங்கள் அமைந்திருந்தன.

“திருச்சம்பதியில் புக்கித் தீர்த்தக் கரையில் செல்ல
திரைவந்து இழுத்ததையோ சிவனே அய்யா...
அலைவாய் கரையில் இருந்து தலைமேலே கையை வைத்து
அம்மை அழுததை என்ன சொல்வேன் சிவனே அய்யா...
கடலிலே போன மகன் இன்னும் வரக் காணோமென்று
கதறியழுதாள் அம்மை சிவனே அய்யா...
கடலும் முழுங்கிட துறவர் வணங்கியெனைக்
கூட்டியங்கே போனாரே சிவனே அய்யா...
பாற்கடலில் எங்கள் அய்யா நாராயணம்
பள்ளிகொள்ளும் இடம் சென்றேன் சிவனே அய்யா...
மெய்யை நிலை நிறுத்தி பொய்யை அடியழிக்க
விடை தந்து அனுப்பினாயே சிவனே அய்யா...
பேயன் போவதை அன்னா பாருங்கோவென்று சிலர்
பிதற்றியும் வைக்கின்றாரே சிவனே அய்யா...
அடுத்தாரைக் காப்பதற்காய் பூவண்டன் தோப்பதிலே
அமர்ந்து இருந்தனையோ சிவனே அய்யா...” 

- என்று, திருச்செந்தூர் கடலில் தான் அடித்துச் செல்லப்பட்டு, வைகுண்டம் சென்று திருமாலை சந்தித்து உபதேசம் பெற்று, வைகுண்டராகத் திரும்பி சாமித்தோப்பு வந்து தவம் மேற்கொண்டது வரை குறிப்பிட்ட வைகுண்டர், மேலும் சொல்லத் தொடங்கினார். அவரது சீடரும் எழுதிக் கொண்டே போனார்.

இந்தப் பாடல் வரிகள் அய்யா வழி அருள் நூலில் இடம் பெற்றுள்ளது. இதைச் “சாட்டு நீட்டோலை” என்று அய்யா வழி பக்தர்கள் அழைக்கிறார்கள். இந்தச் சாட்டு நீட்டோலை உபதேசத்திற்கு பிறகுதான், உருவ வழிபாட்டுக்கு எதிராகவும், முதலாளித்துவத்துக்கு எதிராகவும் சிலிர்த்தெழுந்தார் வைகுண்டர். 

(தொடரும்...)
Share:

சனி, 15 ஜனவரி, 2011

ஆனந்த வாழ்வு அருளும் குட்டம் ஆனந்தவல்லி அம்மன்

 
குட்டம் ஆனந்தவல்லி அம்மன் கோவில்
ந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம் அது -

கம்பீரமாக காணப்பட்ட ஒரு குதிரையில் வேகமாக வந்தான் ஆங்கிலேய அதிகாரி ஒருவன். ஒரு கிராமத்தில் கோவில் முன்பு திரண்டிருந்த மக்கள் அருகே வந்து நின்றான். “ஏன் இங்கே இந்த கூட்டம்?” என்று விசாரித்தான்.
அந்த கிராம மக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்ததாக தெரிவித்தனர். 

“ஏன் இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்கிறீர்கள்? நீங்கள் எதுவும் கேட்டால், அந்த சாமி நேரில் அதை கொண்டு வந்து தரப்போகிறதா?” என்று கேலியாக கேட்டு சிரித்தான்.

அவனது பேச்சுக்கு மறுபேச்சு பேசிய அந்த கிராமமக்கள், தங்கள் ஊர் தெய்வத்தின் அருமை பெருமைகளை எடுத்துக்கூறினர். தங்கள் தெய்வம் தங்களுடன் பேசும் என்றும் தெரிவித்தனர். அதையெல்லாம் கேட்ட அந்த அதிகாரி வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டான்.

ஆனாலும், இவர்கள் சொல்வது எல்லாம் உண்மையாக இருக்குமா? என்று சந்தேகம். உடனே, “உங்கள் ஊர் அம்மனுக்கு பேசும் சக்தி உண்டு என்றால் என்னிடம் பேசச் சொல்லுங்கள்” என்றான்.

கிராமமக்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. கண்கண்ட தெய்வத்தையே சோதிக்கிறானே... இவனுக்கு என்ன ஆகப்போகிறதோ... என்று மனதிற்குள் நினைத்தவர்கள், “நீங்களே அந்த சாமியிடம் கேளுங்கள்” என்றனர்.

சற்று கோபமான அந்த ஆங்கிலேயன், குதிரையில் இருந்தபடியே, “ஏய் அம்மனே... இவர்கள் கூறுவதுபோல் நீ சக்தியுள்ள தெய்வம் என்றால், இப்போது என்னிடம் பேசு” என்று கிண்டலாக கத்தி சிரித்தான்.

அவனது ஏளனப் பேச்சுக்கு அந்த கணமே தண்டனை கிடைத்தது. கோவில் சன்னதிக்குள் இருந்து வேகமாக புறப்பட்டு வந்த ஒரு பேரொளி அவனது கண்களை குருடாக்கியது. குதிரையில் இருந்து கீழே விழுந்தான். குதிரையும் தனியாக வேகமெடுத்து ஓடியது.

அதிர்ந்து போனான் அந்த அதிகாரி. செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டி, அந்த அம்மனிடமே முறையிட்டான். மனம் திருந்திய அவனுக்கு அந்த அன்னையும் மன்னிப்பு வழங்கினாள். அவனது பறிபோன கண் பார்வை திரும்பக் கிடைத்தது.

மகிழ்ச்சியில் உள்ளம் பூரித்துப் போனான் அந்த ஆங்கிலேய அதிகாரி.
இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த கிராமம் வழியாகச் செல்லும் ஆங்கிலேயர்கள், தவறாமல் கண் பார்வையை மீட்டுக் கொடுத்த அந்த அன்னையையும் வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர், திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர் - கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள குட்டம் கிராமம். இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீஆனந்தவல்லி அம்மன்தான் மனம் திருந்திய ஆங்கிலேய அதிகாரிக்கு பார்வை கொடுத்த அன்னை.

அன்று மட்டுமல்ல, இந்த அன்னையின் சக்தி இன்றும் பிரபலம்.

நோய் தீர்க்கும் சஞ்சீவி மரம்


இக்கோவிலுக்கு முன்பு மிகவும் பழமை வாய்ந்த, பிரம்மாண்டமான புளியமரம் ஒன்று உள்ளது. இதை இந்த ஊர் மக்கள் சஞ்சீவி மரம் என்றே அழைக்கிறார்கள். வழக்கமாக புளியமரங்களின் இலைகள் இரவு நேரத்தில் மடிந்துபோய் காணப்படும். ஆனால், இந்த புளிய மரத்தின் இலை காலையில் உள்ளது போலவே விரிந்திருக்கும். அதனால், இதற்கு உறங்காப்புளி என்றும் பெயர் உண்டு.

தீராத எந்தவொரு நோயையும் போக்கும் வல்லமை இந்த சஞ்சீவி மர இலைக்கு உண்டு. இந்த கோவிலுக்கு தரிசனம் செய்ய வருபவர்கள், இந்த இலைகளை தவறாமல் சேகரித்து எடுத்துச் செல்கிறார்கள்.

இதேபோல், இந்த ஊரில் பிறந்து வெளியூர்களில் வசிப்பவர்களும், இந்த சஞ்சீவி மர இலைகளை சேகரித்து கொண்டு செல்கிறார்கள்.
எந்தவொரு நோய் வந்தாலும், முதலில் இந்த சஞ்சீவி இலையை அரைத்து குடித்து விடுகிறார்கள். இந்த இலைக்கு சக்தி உண்டு என்பதால், அவர்களது நோயும் சட்டென்று பறந்துபோய் விடுகிறது.

ஒருமுறை இந்த புளிய மரத்தில் பழுக்கும் பழங்களை சேகரிக்க ஒருவருக்கு ஏலம் கொடுத்தனர். ஆனால், அந்த ஆண்டு இந்த மரத்தில் துளிர்த்த புளியங்காய்கள் அத்தனையும் சரியாக பழுக்காமல் பயனற்று போய்விட்டன. தெய்வீக சக்தி கொண்ட இந்த மரத்தில் பழுக்கும் பழங்களை மக்களே பயன்படுத்த வேண்டும் என்பதே இங்குள்ள இறைவியின் திருவுள்ளம் என்பதை அறிந்த அந்த ஊர் மக்கள் அன்று முதல் இந்த புளியமரத்தின் பழங்களை ஏலம் விடுவதில்லை.

ஆடித் திருவிழா

இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமை நடைபெறும் திருவிழா பிரசித்திபெற்றது. இக்கோவிலுக்கும், அருகே உள்ள முத்து மாரியம்மன் சமேத சிவனணைந்த பெருமாள் கோவிலுக்கும் இணைத்து, பெருவிழாவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது.

அமைவிடம்

சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்குச் செல்ல, திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து நேரடி பஸ் வசதி உள்ளது. திருச்செந்தூரில் இருந்து கடற்கரை மார்க்கமாக (மணப்பாடு, உவரி வழி) கன்னியாகுமரி, நாகர்கோவில் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் இந்த ஊரின் வழியாகவே செல்லும். திருச்செந்தூரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் குட்டம் அமைந்துள்ளது.

கோவில் பூஜை நேரம் (தினமும்) : காலை 6 மணி, மதியம் 12 மணி, இரவு 8.

- நெல்லை விவேகநந்தா

Share:

சனி, 8 ஜனவரி, 2011

அய்யா வைகுண்டர் வரலாறு - 8


8. முத்துக்குட்டி வைகுண்டரான கதை
 - நெல்லை விவேகநந்தா -

தேவேந்திரன் மணிமுடி மீது ஆசைப்பட்டு தான் பேசிய பேச்சை சிவபெருமானும், திருமாலும், ஏன்... அந்த தேவேந்திரனும் கேட்டு விட்டான் என்பதை அறிந்த சம்பூர்ணதேவன் அதிர்ந்தே போய் விட்டான். பரதேவதையும் அதே நிலைக்குத்தான் ஆளானாள். இருவரும் குற்றத்தை உணர்ந்து தலைகுனிந்து நின்றனர்.

அப்போது திருமாலே திருவாய் மலர்ந்தார்.

“சம்பூர்ணதேவா! கடுமையாகத் தவம் இருந்தும் கடைசியில் இப்படி பேராசைப்பட்டு விட்டாயே... இந்தப் பேராசையினால் உங்கள் இருவரது தவமும் வீண் போய்விட்டது. ஆனாலும், நீங்கள் இருவரும் பூலோகத்தில் பிறக்கப் போகிறீர்கள். அதே நேரம் சில நிபந்தனைகள் உங்களுக்கு இருக்கும்...” என்றவர், அடுத்ததாக பரதேவதை பக்கம் தனது பார்வையை திருப்பினார்.

“பரதேவதை... சம்பூர்ணதேவனுடன் நீ இணைந்ததன் மூலம், உன் எமலோக கணவனுக்கும், அவன் மூலம் பிறந்த இரு குழந்தைகளுக்கும் துரோகம் செய்து விட்டாய். அதற்கான தண்டனை உனக்கு நிச்சயம் உண்டு. நீ பூலோகத்தில் பிறக்கும் போது உனக்காகவே உன் எமலோக கணவன் காத்திருப்பான். அவனை மணம் புரிந்து, அவனுக்கு எல்லா பணிவிடைகளையும் செய்வாய். அப்படி இருந்தும், அவன் உன்னை கொடுமைப்படுத்துவான். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை தொலைக்கும் நீ, ஒருகட்டத்தில் கணவனையே இழந்து விடுவாய். குழந்தைகளுடன் தனிமரமாக நிற்பாய்... அப்போது பூலோகத்தில் கலியின் கோரத் தாண்டவம் அதிகமாக இருக்கும். மக்கள் தவியாய் தவிப்பார்கள். அந்த கலியில் இருந்து மக்களைக் காப்பதற்காகவே சம்பூர்ணதேவன் அங்கே பிறப்பான். இருவரும் சந்தித்துக் கொள்வீர்கள். நீ பெற்ற குழந்தைகளை விடுத்து சம்பூர்ணதேவனோடு இணைவாய். ஊரே உன்னை தூற்றும். ஆனாலும், கடைசியில் நீ தெய்வத்தாய் என்று போற்றப்படுவாய்...” என்று திருமால் சொல்லி முடித்த போது, சம்பூர்ணதேவன் சோகத்தில் இருந்து மீளாமலேயே இருந்தான். தொடர்ந்து, அவன் பக்கம் திரும்பினார் திருமால்.

“நீ இந்திரன் மணிமுடி மீது பேராசை கொண்டது மிகப்பெரிய பாவச் செயல். அதற்காக நீ மானிடப் பிறவி எடுத்துத்தான் ஆகவேண்டும். 22 வயது வரை சாதாரண மனிதனாக பூலோகத்தில் வாழும் நீ, இன்னொருவனின் மனைவியாக இருக்கும் இதே பரதேவதையை மோகிப்பாய்... மணப்பாய். அதன்பிறகு, தீராத நோய் பாதிப்புக்கு ஆளாகி மரணத்திற்காக போராடுவாய். அப்போது நான் உனக்குள் இறங்கி, உன்னை மீட்டு தர்மத்தை நிலைநாட்டுவேன். உன்னை மனிதர்கள், கடவுள் நிலைக்கு போற்றும் அளவுக்கான தகுதியையும் கொடுப்பேன்...” என்று, திருமால் சொன்ன பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விட்டான் சம்பூர்ணதேவன்.

அதன்படி, சாமித்தோப்பில் பொன்னுமாடன் நாடார் மற்றும் வெயிலாள் அம்மையாருக்கு மகனாக, முத்துக்குட்டியாக பிறந்தார் சம்பூர்ணதேவன். பரதேவதையும் அதே பகுதியில் பிறப்பெடுத்தாள்.

இந்த முன்ஜென்ம உண்மைக் கதையை, வைகுண்டராக மாறிய முத்துக்குட்டி செந்தூர் கடற்கரையில் தனது பெற்றோரிடமும், உறவினர்களிடமும் சொன்ன போது, அதை அவர்களால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு 3 நாட்களாக காணாமல் போனவன், மீண்டும் உயிரோடு... கடல் நடுவே நடந்து வெளியே வந்தால்... நிச்சயம் அந்த முன்ஜென்மக் கதை உண்மைதான் என்று நம்பினர். அதை முழுமனதோடு ஏற்றுக் கொண்டனர்.

அப்போதுதான் அவரது உறவினர் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
“கடல் அலை இழுத்துச் சென்றது ஏன்? அதன்பிறகு என்ன நடந்தது?” என்று கேட்டார் அவர்.

அதற்கும் வைகுண்டரிடம் இருந்து சட்டென்று பதில் வந்தது.

“மகா விஷ்ணுவாகிய திருமாலின் ஆணைப்படி இரு அரூப (உருவமற்ற) முனிவர்கள் என்னைத் தங்களது தோள்களில் தாங்கிச் சுமந்து சென்றனர். அந்த காட்சி, நான் கடலில் தீர்த்தமாட எழுந்து செல்வதாக உங்களுக்கு தெரிந்தது. திடீரென்று காணாமல் போன போது கடல் அலைதான் இழுத்துச் சென்று விட்டது என்று கருதிவிட்டீர்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை. நான் சென்றது, மகாவிஷ்ணு வாசம் செய்யும் வைகுண்டத்திற்கு...  அங்கே எனது சரீரத்தை மகர அரங்கில் இருந்த ஒரு பெட்டகத்திற்குள் வைத்து குழந்தையாக்கினர். பின்னர், மும்மூர்த்திகளும் அதனுள் உறைந்து, ஒரே மூர்த்தியாக, ஓர் இளைஞனாக மாற்றினர். அந்த இளைஞனான என்னிடம், கலியுகம் பற்றிக் கூறி, அதை அழிப்பதற்கான வழியையும் தெரிவித்து, பரபிரம்மம் பற்றிய ஞானத்தையும் அருளினார் திருமால்.

மேலும், என்னைத் தனது மகன் என்று கூறிய திருமால், என்னை எப்போதும் பின் தொடர்வதாகவும் கூறினார். “வைகுண்டம் வந்த நீ, இனி வைகுண்டன் என்றே அழைக்கப்படுவாய். அய்யா என்றும் உன்னை இந்த உலகமே வழிபடும். பூலோகம் சென்று, கலியை வென்று வா...” என்று வழியனுப்பி வைத்தார். இப்போது, நான் உங்கள் மகன் மட்டுமின்றி, இந்த உலகில் உள்ள ஒவ்வொரு தாய்க்குமே மகன்தான்...” என்று, தனது பெற்றோரிடம் வைகுண்டர் சொல்லச் சொல்ல... அவர்கள் நடப்பது கனவா? அல்லது நனவா? என்று திகைத்துப் போயினர்.

எப்போது தர்மத்திற்கு சோதனை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்தப் பூமியில் அவதரிப்பேன் என்றார் கிருஷ்ண பரமாத்மா. அந்தக் கிருஷ்ண பரமாத்மா, திருமால், மகாவிஷ்ணுதான் இப்போது அய்யா வைகுண்டராக அவதரித்து இருக்கிறார் என்பதை அறிந்த பொதுமக்கள் உற்சாகம் ஆனார்கள். அய்யா வைகுண்டரின் போதனைகளுக்காக ஏங்கினர். அவர்களிடம், கரைபுரண்டு ஓடும் புது வெள்ளம் போல்,  சுதந்திர விடியலுக்காகப் போராடும் போராளி போல் பேசத் தொடங்கினார். குறிப்பாக, ஆன்மிக வழிபாடு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிப் பேசினார். அவர் கூறிய அனைத்தும் புதுமையாக இருந்தன.
  • கடவுள் என்ற பெயரில் பணத்தை அள்ளிக் கொடுக்காதீர்கள். அதுபோல், வாங்கவும் செய்யாதீர்கள்.

  • பூஜை என்கிற பெயரில் பணத்தை தண்ணீராகச் செலவு செய்யாதீர்கள். 

  • பூஜை என்று சொல்லி உயிர்ப்பலி கொடுக்க வேண்டாம்.

  • அன்பின் வடிவானவரே கடவுள். அவள், உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார்.

  • எல்லோரும் நியாயம் தவறாமல் நேர்மையாக வாழுங்கள். யாருக்கும் அஞ்சாதீர்கள்.
- இப்படி, புதுமையாக மக்கள் மத்தியில் முழங்கினார், அய்யா வைகுண்டர். அவரது உரை அடங்கிக் கிடந்த மக்களுக்கு புதுத்தெம்பைத் தந்தது. அவர்களுக்குள் புதிய எண்ணம் ஓடியது. தங்களின் அடிமை வாழ்வு மறைந்து மனிதனாக வாழப் போகிறோம் என்கிற புதிய நம்பிக்கை பிறந்தது. தொடர்ந்து, அவர் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் நடக்கத் தொடங்கினார். சாமித்தோப்பு நோக்கிச் சென்ற அவரைக் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கை கூப்பி வணங்கியபடி நின்றிருந்தனர் அங்கிருந்த மக்கள்.

(தொடரும்...)
Share: