வெள்ளி, 7 அக்டோபர், 2011

இரண்டாம் தேனிலவு பகுதி - 2


2. ஒரு மவுனத்தின் அழுகை

- நெல்லை விவேகநந்தா -


வுனமாக இருந்தாள் அமுதா. அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம்தான் ஆகிறது. ஆனால், அந்த கல்யாணக்களை மட்டும் ஏனோ மிஸ்ஸிங்.


"அம்மாடி... இப்படியே இங்கேயே பொறந்த வீட்டோட இருந்தரலாம்னு முடிவே பண்ணிட்டீயா?"


அமுதாவின் ஒரு வார மவுன விரதத்தைத் தானே முடித்து விடுவது போல் பேசினாள் அவளது அம்மா பாக்கியம்.


அமுதாவிடம் இருந்து மவுனமே பதிலாக வந்தது.


"ஆயிரத்தெட்டு பிரச்சனைங்க, மனஸ்தாபங்க இருந்தாலும் அதையெல்லாம் சமாளிச்சுதான் வாழணும். ஒருத்தனுக்கு வாக்கப்பட்ட பிறகு இப்படி குத்துக் கல்லாட்டம் பொறந்த வீட்டுல கெடக்குறது எந்தப் பொண்ணுக்கும் அழகே இல்ல. இத முதல்ல புரிஞ்சுக்க. எந்தவொரு தாய்க்கும் தன் பொண்ணு, புகுந்த வீட் டுல நல்லா வாழணும்னுதான் ஆசப்படுவா. ஆனா, உம் போக்கப் பாத்தா நீ அசைஞ்சு கொடுக்குற மாதிரியே தெரியலீயே... கூடப் பொறந்த அண்ணன் கல்யாணத்தை பார்த்தவதானே நீ? அவன் வெளிநாட்டுல சம்பாதிக்குறான். அவனோட பொண்டாட்டி, அதான் எம் மூத்த மருமக... இங்கே குடித்தனம் இருக்குற துப்பு இல்லாம பொறந்த வீட்டுல கிடக்குறா. என் வயித்துல பொறந்த உனக்குமா அவ புத்தி வரணும்?"


பாக்கியத்தின் அட்வைஸோடு சில அர்ச்சனைகளும் வேகமாக வந்து விழுந்தன.


ஆனால் அமுதாவின் முகத்தில் மறுபடியும் அதே மவுனம்.


அதைப் பார்த்த பாக்கியத்தின் முகம் இன்னும் வேகமாக சிவந்தது.


"உன்னோட வாழ்க்கை ஓஹோன்னு இருக்கனும்னு ஆசைப்பட்டேனே... நீ இப்படி பிடிவாதமா இருக்குறதப் பார்த்தா என்னோட ஆசையெல்லாம் பலிக்காமப் போயிடும் போலிருக்கே..." என்று புலம்ப ஆரம்பித்து விட்டாள்.


திடீரென்று எங்கிருந்து கோபம் வந்ததோ, அதுவரை மவுனம் காத்து வந்த அமுதா சட்டென்று ஆவேசமாகப் பேசினாள்.


"சும்மா புலம்பிட்டு இருக்காத. என்னோட கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கனும்ங்றதுல உன்னை விட எனக்கு நிறையவே அக்கறை இருக்கு. என்ன முடிவு எடுக்கணுங்றதும் எனக்கு நல்லாவே தெரியும்."


திடீரென்று வேகமாகப் பேசிய அமுதாவை வியப்பாகப் பார்த்தாள் பாக்கியம். மறுபடியும் அமுதாவே பேசினாள்.


"இப்போ உன் பேச்சையே கேட்குறேன். இன்னிக்கு அவரை வரச் சொல்லு. நான் என் புருஷன் வீட்டுக்கு கௌம்புறேன்."


அமுதாவின் இந்தப் பேச்சுக்குப் பிறகுதான் உற்சாகம் ஆனாள் பாக்கியம்.


அடுத்த நிமிடமே திருநெல்வேலி மாவட்டத்தில் கடற்கரையோரம் அமைந்திருந்த குட்டம் என்னும் கிராமத்தில் புதுமாப்பிள்ளை குணசீலனின் மொபைல் அலற ஆரம்பித்தது. சமீபத்தில் வெளியான சினிமாவின் குத்துப்பாட்டை மொபைலின் ரிங் டோனாக வைத்திருந்ததுதான் அதற்குக் காரணம்.


மொபைலின் பச்சைப் பட்டனை ஆன் செய்து காதில் வைத்த குணசீலன் பேச்சில் நிறையவே மரியாதை தெரிந்தது.


"யாரு... அத்தையா பேசுறீங்க?"


"ஆமாம் மாப்பிள்ளை. நான்தான் பாக்கியம்."


"சொல்லுங்க... அமுதா எதுவும் பேசினாளா? என்கிட்ட மனம் விட்டு பேச அவ தயங்கினதாலதான் அங்கே உங்க வீட்டுல விட்டுட்டு வந்தேன். மற்றபடி எ ந்த பிரச்சினையும் இல்லையே?"


"அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நீங்க இன்னிக்கே, இப்பவே இங்கே புறப்பட்டு வாங்க. மத்ததெல்லாம் நேரில் பேசிக்கலாம்."


"இதோ கிளம்பிடுறேன்..." தனது முடிவை உறுதியாகச் சொன்னான் குணசீலன்.


ஒற்றைப் பல்லை விடுக்கென்று நீட்டி அமைதியாய் சிரித்துக் கொண்டிருந்த லேண்ட் லைன் போனில் ரிசீவரை வைத்தாள் பாக்கியம்.


அக்கணமே அமுதாவை நோக்கி அவசரமாக சென்றாள்.


"நான் பெத்த மகளே... மருமகனை வரச் சொல்லிட்டேன். இப்போ அவரு கார்ல புறப்பட்டா இன்னும் ஒண்ணறை மணி நேரத்துல இங்கே வந்திருவாரு. மணி மூணு ஆகப்போகுது. காலையிலேயும் சாப்பிடல, இப்பவும் சாப்பிடல. வாய்க்கு ருசியா நானே ஆக்கி வெச்சிருக்கேன். சாப்பிட்டுட்டு தெம்பா இரு..." என்று எப்.எம். ரேடியோவை போன்று தொணதொணவென்று பேசிய அம்மா பாக்கியத்தை கோபத்தில் முறைத்தாள் அமுதா.


"போதும்மா. உனக்கு கல்யாணம் ஆகி புருஷனும் வந்துட்டார், கூடவே வாழ்றதுக்கு ஒரு குடும்பமும் வந்துட்டு. அங்கேயும் இப்படி முறைச்சிட்டு இருக்காத. பக்குவமாக நடந்தாதான் நல்ல மருமகள்னு சொல்லுவாங்க. இல்லேன்னே... எந்த சிறுக்கிக்கு பொறந்ததோ இங்கே வந்து உயிர வாங்குதுன்னு உன்ன மட் டுமில்ல, என்னையும் சேர்த்துதான் திட்டுவாங்க. இதுக்குமேல உன்கிட்ட சொல்றதுக்கு எதுவும் இல்லை. நீதான் இந்த வீட்டுக்கு மூத்தப் பொண்ணு. குடும்பம்ன்னா என்னன்னு உனக்கு தெரியாதது இல்ல. புரிஞ்சு நடத்துக்க. இப்போ, பானையில சாப்பாடு இருக்குது. கிடாக்கறிதான் ஆக்கியிருக்கேன். போய் சாப்பிடு. மருமகனும் இங்கே வந்துட்டு இருக்கறதுனால, அவருக்கும் நல்ல கிடாக்கறியா கொஞ்சம் எடுத்து வெச்சுக்க. இல்லேன்னா உன்னோட தங்கச்சியே எல்லாத்தையும் சாப்பிட்டுக் காலி பண்ணிடுவா..." என்று பரபரத்துவிட்டு அங்கிருந்து அகன்றாள்.


இருந்த இடத்திலேயே ஒட்டிக்கொண்டு 24 மணி நேரமும் நிற்காமல் வேலை செய்து கொண்டிருக்கும் சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள் அமுதா.


சரியாக பிற்பகல் 3 மணி ஆகியிருந்தது.


வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள். காலையிலும் சாப்பிடாததால் ஒட்டிப்போய் இருந்தது. சோகமான முகத்தைக் கழுவிவிட்டு சாப்பிடலாம் என்று நினைத்தவள் எழுந்து நடந்தாள். மதிய வெயிலில் கொஞ்சம் சூடாகிப்போன நீரில் முகத்தை கழுவி, டர்க்கி டவலால் துடைத்துக் கொண்டு பெட்ரூமுக்குள் வந்தாள்.


ஆளுயர கண்ணாடி பொருத்தப்பட்டு இருந்த பீரோவின் முன்பு வந்து நின்றவள், முகத்தின் முன்பு விழுந்த முடிகளை இரு கைகளாலும் இரு காதுகளுக்கும் பின்புறம் கொண்டு சென்று சிறை வைத்தாள். பக்கத்தில் இருந்த இசட் பவுடர் டப்பாவை எடுத்து வலது கையால் அழுத்தினாள். அடுத்த நொடியே வாசனை நிரம்பிய பவுடர் அவளது இடது கையில் கொட்டியது. பவுடர் டப்பாவை கீழே வைத்தவள், இரு உள்ளங்கைகளிலும் பவுடரை சரியாக தேய்த்து முகத்தில் அப்பி எல்லா இடங்களிலும் லேசாக மசாஜ் செய்து படர விட்டாள். தொடர்ந்து, தனக்குப் பிடித்த சிறிய ரக மெரூன் கலர் ஸ்டிக்கர் பொட்டை தனது இரு புருவங்களுக்கும் மத்தியில் சரியாக அழுத்தி வைத்தாள்.


பவுர்ணமி நிலவுக்கு பொட்டு வைத்தால் எவ்வளவு அழகாக இருக்குமோ அது போன்று இருந்தது அவளது வட்ட முகம். தனது அழகை தானே பார்த்து பொறாமை கொண்டவள், அந்த ஆளுயரக் கண்ணாடியில் எப்போதும் இல்லாத அளவுக்கு தன்னை விசித்திரமாகப் பார்த்தாள்.


நன்கு சிவந்த தேகம்தான் அமுதாவுக்கு. ஆனால், உயரம்தான் சராசரியைவிட கொஞ்சம் குறைவு. 25 வயது ஆனாலும், கல்லூரியில் படிக்கும் மாணவி போலவே தெரிந்தாள். கல்லூரிக்கு நேரடியாகச் சென்று படிக்கா விட்டாலும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி வழியில் பி.ஏ. வரலாறு படித்ததால், திருநெல்வேலியில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் நடைபெறும் மாதாந்திர வகுப்புகளில் மட்டும் பங்கேற்று இருக்கிறாள். அவளது கல்லூரி வாசனை அந்த அளவுக்கே! அவ்வாறு வெளியூர் சென்றால் மாத்திரம் சுடிதாருக்கு மாறிக்கொள்வாள். மற்றபடி, சேலை அல்லது நைட்டிதான் அவளது பிரதான ஆடை.


இப்போதும் அவள் மெரூன் கலரில் சேலை அணிந்திருந்தாள். அது அவளது அழகை இன்னும் மெருகூட்டிக் காண்பித்தது. உச்சந்தலையில் இருந்து கால்வரை பார்வையைப் படரவிட்டாள். இயற்கையாகவே அடர்ந்து வளர்ந்திருந்த கருமையான முடி இடுப்பு வரை நீண்டிருந்தது. பியூட்டி பார்லர் பக்கமே போகாமல் இயற்கை அழகில் ஒளிர்ந்தது அவளது முகம். கண் மை தீண்டாத கண் இமை முடிகள் பட்டாம்பூச்சாய் சிறகடித்தன. குவிந்த கன்னங்கள் ஆப்பிள் பழத்தை நினைவுபடுத்தின.


அளவான மூக்கு, அளவான கழுத்து. அதற்கு கீழேதான், அவளைப் படைத்த பிரம்மன் கொஞ்சம் நின்று யோசித்துவிட்டான் போலும். சராசரியை விடவும் கொஞ்சம் பெரியதாக, மற்றவர்களை ஜொள்விட வைத்தன அவளது மாதுளம் பழ மார்பகங்கள். அவள் மூக்கு வழியாக ஆக்சிஜனை உள்ளே இழுத்த போது, தானாக நிமிர்ந்த அந்த மார்பகங்கள் அவளையே அப்போது சிலிர்க்க வைத்தன.


அந்த மார்பகங்களுக்குக் கீழேப் பார்வையை நகர்த்தினாள். அங்கே விலகிப் போய் இருந்த சேலை அவளது குவிந்த இடுப்பு பிரதேசத்தையும், குழிந்த தொப்புளையும் அப்பட்டமாகக் காண்பித்தன. இலேசாக அந்த இடுப்புப் பகுதியை வருடிக் கொண்டாள் அமுதா.


"இவ்வளவு நேரமா அங்க என்னடி பண்ணிட்டு இருக்க?"


திடீரென்று பின்னால் இருந்து அம்மா பாக்கியத்தின் குரல் பலமாக ஒலித்ததால் அதிர்ந்து போனாள் அமுதா. சட்டென்று, இடுப்பில் விலகிப்போய் இருந்த சேலையை எடுத்து தொப்புளுக்கு மேலாகச் சொருகிக் கொண்டு பேசினாள்.


"பாத்தா தெரியல... கட்டுன சேலையை சரி செய்துட்டு இருக்கேன்."


"அது எனக்கும் தெரியுது. சீக்கிரம் போய் சாப்பிடு-. தட்டுல எல்லாத்தையும் எடுத்து வெச்சிருக்கேன்..."


பாக்கியம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளைக் கடந்து சென்று சமையல் அறைக்குள் புகுந்தாள் அமுதா.


வழக்கத்தைவிட சற்று கூடுதலாக சாப்பாட்டைத் தட்டில் போட்டு, பக்கத்தில் ஒரு கிண்ணம் நிறைய இறைச்சிக் கறியை வைத்திருந்தாள் பாக்கியம்.


'இவளுக்கு இன்னிக்கு என்ன ஆச்சு? என்னை இந்த வீட்டுல இருந்து அனுப்புறதுலேயே குறியா இருக்குற மாதிரி தெரியுது...' என்று, அம்மாவை மனதிற்குள் லேசாக திட்டிக்கொண்டே சாப்பிட அமர்ந்தாள்.


"வாணி... இங்கே வா..."


லிவ்விங் ரூமை நோக்கி ராக்கெட் வேகத்தில் பறந்த அவளது குரலுக்கு பதில் குரலும் அங்கிருந்து வந்தது.


"இதோ வந்துட்டேன் அக்கா..."


அடுத்த ஓரிரு நொடிகளில் அமுதா முன்பு வந்து ஆஜரானாள் அவளது கடைசி தங்கை வாணி.


அக்காவைப் போன்றே இவளது மேனியிலும் அழகு தாறுமாறாகக் கொட்டிக் கிடந்தது. 22 வயதான இவள் திருநெல்வேலியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். 'தங்கை நேரடி கல்லூரியில் நிறைய படிக்கணும், பட்டணத்துக்குப் போய் வேலை பார்க்கணும், கைநிறைய சம்பளம் வாங்கணும், மொத்தத்துல ஆண்களுக்கு நிகரா இருக்கணும்' என்கிற அமுதாவின் விருப்பம்தான் இவளது என்ஜினீயரிங் படிப்புக்குக் காரணம். அக்காவின் திருமணம் முடிந்த கையோடு, இவளது மாப்பிள்ளை பார்க்கும் படலத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டு வைத்திருக்கிறார்கள்.


"அமுதா... எதுக்கு என்ன கூப்பிட்ட?"


"கிச்சனுக்குப் போய் ஒரு தட்டு எடுத்துட்டு வா."


"சரிக்கா..." என்ற வாணி, அந்தத் தட்டை எடுத்து வந்து அமுதாவிடம் நீட்டினாள்.


அந்தத் தட்டில், தனக்குப் போட்டு வைத்திருந்த சாதத்தில் இருந்து பாதியை எடுத்து வைத்துவிட்டு சாப்பிடத் துவங்கினாள்.


அப்போது அவளது வீட்டு லேண்ட் லைன் போன் உதவி கேட்பது போல் வேகமாக கத்தியது. அந்த நிமிடமே அவளது அத்தைப் பையன் அசோக் நினைவும் அவளுக்கு வந்தது.


மதுரையில் தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல பதவியில் இருந்தான் அவன். சிறு வயதில் எப்போதோ ஒருமுறை 'இவளுக்கு அவன், அவனுக்கு இவள்' என்று சொல்லியிருந்ததால் இருவரும் உரிமையோடு பழகினார்கள். அதுவே அவர்களுக்குள் காதலாகவும் அரும்பியது. அந்தக் காதல் மலர்வதற்குள் அந்த காதல் பூவையே கிள்ளி எறிந்து விட்டார்கள். ஆம்... அமுதாவை அவசரம் அவசரமாக இன்னொருவனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள். அதனால்தான் இன்று சோகமாக இருக்கிறாள் அமுதா. சாப்பிடவும் அவளுக்கு பிடிக்கவில்லை.


உதவி கேட்டு கத்திய தொலைபேசியில் அசோக் அல்லாத வேறு யாரோ ஒருவர் பேசிக் கொண்டிருக்க... அமுதாவின் மனம் மட்டும் அவளையும் அறியாமல் அவனுக்காக அழுதது.


"என்னை இங்கே இப்படி தவிக்க விட்ட அந்த அசோக் மட்டும், நான் இல்லாமல் எப்படி சந்தோஷமாக வாழ்வான்?"



(இன்னும் வருவாள்...)


Share: