சனி, 16 அக்டோபர், 2010

ரோஜா மருத்துவ பயன்கள்


ரோஜாப் பூவை விரும்பாத பெண்கள் யாரும் இருக்க முடியாது. காதலர்கள், தங்களது காதலை வெளிப்படுத்தும்போது பரிமாறிக் கொள்ளும் பொருட்களில் இந்த ரோஜாவும் ஒன்று. இதில் இருந்துதான் வாசனைத் திரவியமான பன்னீர் தயார் செய்யப்படுகிறது.

ரோஜாவிற்கு பன்னீர்ப்பூ, சிற்றாமரை என்ற பெயர்களும் உண்டு.

மருத்துவ பயன்கள் :

1. இன்று, சர்க்கரைநோய் என்கிற நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் ஏராளம். அவர்கள், ஆவாரம்பூ, ரோஜா மொக்கு, யானை நெருஞ்சில் - இவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். அந்த பொடியை பாலுடன் கலந்து காய்ச்சி, தினமும் இருவேளை குடித்து வந்தால் போதும். சர்க்கரைநோய் குணமாகிவிடும்.

2. வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்களின் வாயில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும். அவர்களிடம் முகம் கொடுத்து பேச முடியாது. இந்த பிரச்சினையில் இருந்து விடுபட, வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்ளும்போதே, அதனுடன் சிறிது ரோஜா இதழ்களையும் சேர்த்து மென்றுவர அந்த வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.

3. ரோஜா இதழ்களை சேகரித்து நிழலில் உலர்த்தி, நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி உட்கொள்ள கொடுத்துவர கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு சரியாகும். வாய்ப்புண்ணும் குணமாகும்.

4. ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலை, மாலை ஆகிய இருவேளை அப்படியே உட்கொண்டுவர சீதபேதி இரண்டொரு நாளில் குணமாகிவிடும்.

5. உலர்ந்த ரோஜா மொக்கு, சதக்குப்பை ஆகியவற்றை சமஅளவு எடுத்து இடித்து வைத்துக் கொள்ளவும். 200 மில்லி லிட்டர் தண்ணீரை நன்றாக காய்ச்சி, அதில் மேற்படி தூளைப் போட்டு மூடி வைக்கவும். 3 மணி நேரம் கழித்து வடிகட்டி அதை குடித்துவர, சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலி, அல்சர் ஆகியவை குணமாகும்.

6. ரோஜா மொக்கு 3 பங்கு, நிலவாகை இலை ஒன்றரை பங்கு, சுக்கு ஒரு பங்கு, கிராம்பு 1/4 பங்கு எடுத்து உலர்த்தி, ஒன்றிரண்டாக சிதைத்து, 4 பங்கு நீர்விட்டு காய்ச்சி ஒரு பங்காக வற்ற வைக்கவும். இதனை இரவில் செய்து வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் வடிகட்டி குடித்துவர மலச்சிக்கல் நீங்கும். மேலும், மூலநோய், உடல் களைப்பு ஆகியவையும் நிவர்த்தியாகும்.

7. ரோஜா இதழ்கள் தேவையான அளவு எடுத்து, அதனுடன் சமஅளவு பாசிப்பயிறும், பூலாங்கிழங்கு நான்கைந்தும் சேர்த்து மை போல் அரைத்துக் கொள்ளவும். இதனை, குளிப்பதற்கு முன் உடலில் பூசி, சுமார் 1/2 மணி நேரம் ஊற வைத்த பின்னர் இளவெந்நீரில் குளித்துவர சரும நோய்கள் அனைத்து அகன்றுவிடும். இதனை சோப்பிற்கு பதில் தினமும் பயன்படுத்திவர சருமம் பட்டுபோல் மிருதுவாவதுடன் கவர்ச்சிக்கரமான நிறமும் பெறலாம்.

8. ரோஜா இதழ்களை சேகரித்து தேனிலோ அல்லது சர்க்கரை பாகிலோ ஊற வைத்து தினமும் சாப்பிட்டுவர இதயம் வலிமை பெறும். மலச்சிக்கல் தீரும்.

9. ரோஜா மலரின் சாற்றை ஒற்றைத் தலைவலிக்கு பயன்படுத்தலாம். தலைவலி எந்த பக்கம் இருக்கிறதோ, அதற்கு நேரெதிர் நாசி துவாரத்தில் இதன் சாற்றை 2 துளிவிட உடனே தலைவலி மறைந்துபோகும்.


ரோஜாப்பூ சர்பத் செய்முறை :

ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீர் விட்டு கொதிக்க வையுங்கள். அதில், 1/2 கிலோ அளவு ரோஜா இதழ்களை போட்டு கிளறி மூடி வைத்து விடுங்கள். 12 மணி நேரம் கழித்து இதனை நன்றாக பிசைந்தால் குழம்புபோல் வரும். அதை வடிகட்டிக் கொள்ளவும்.

இதேபோல், வேறொரு பாத்திரத்தில் 700 கிராம் சர்க்கரையை போட்டு, அதில் 300 மில்லி சுத்தமான தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சுங்கள். பாகு பதத்திற்கு வந்ததும் அதில், ஏற்கனவே குழம்பு போல் வடிகட்டி வைத்த நீரை சேர்த்து மீண்டும் காய்ச்சுங்கள். அதனுடன், 90 மில்லி லிட்டர் பன்னீரை கலந்து இறக்கி ஆற வைத்து பத்திரப்படுத்துங்கள்.

இதில் 2-3 தேக்கரண்டி அளவு எடுத்து, அதனுடன் தண்ணீர் அல்லது பசும்பால் கலந்து குடித்துவர உடல் உஷ்ணம் தணியும்; ரத்தம் விருத்தியடையும்; களைப்பு நீங்கி உற்சாகம் பிறக்கும்; வயிற்றுவலி, வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.

- இதுதான் ரோஜாப்பூ சர்பத். இதற்கு ரோஜாப்பூ மணப்பாகு என்ற பெயரும் உண்டு.


ரோஜாப்பூ குல்கந்து செய்முறை :

ரோஜாப்பூவில் இருந்து குல்கந்தும் செய்யலாம். இது உடலுக்கு போஷாக்கு தரும் சிறந்த ‘டானிக்’ போன்றதும்கூட. அதன் செய்முறை :

நல்ல தரமான நிறமுள்ள பெரிய ரோஜாப்பூக்களை வாங்கி வந்து, அவற்றின் இதழ்களை மட்டும் தனியாக சேகரியுங்கள். பூவில் ஏதேனும் புழு, பூச்சிகள் இருந்தால் அந்த மலரை பயன்படுத்த வேண்டாம்.

இவ்வாறு சேகரித்த ரோஜா இதழ்களின் எடைக்கு 3 மடங்கு கற்கண்டு சேர்த்து, இரண்டையும் உரலில் இட்டு மெழுகு பதம் வரும் வரை இடித்துக் கொள்ளுங்கள்.

இதனை ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடியில் இட்டு, இதன் அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு தேனை விட்டு நன்கு கிளறி, காற்று புகாமல் மூடி வைக்கவும். இதுவே நல்ல தரமான குல்கந்து.

இதனை சிறுவர்கள் 1/2 தேக்கரண்டி, பெரியவர்கள் ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை ஆகிய இருவேளை சாப்பிட்டுவர ரத்தம் விருத்தியடையும்; ரத்தம் சுத்தமாகும்; மலச்சிக்கல் அடியோடு ஒழியும்; உடல் உள் உறுப்புகள் பலமாகும்; ரத்தபேதி, உடல் வெப்பம், வெட்டை மற்றும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்ற நோய்கள் குணமாகும்.

Share:

0 கருத்துகள்: