சனி, 6 மார்ச், 2010

காமத்தால் களங்கப்பட்ட சரித்திரம்!


ண்களுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் கால் வைத்துவிட்ட இன்றைய பெண்கள், ஒரு காலத்தில் குழந்தை பெறும் இயந்திரமாகவே பயன்படுத்தப்பட்டனர். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளையே அன்றைய சமுதாயம் ஆவலோடு எதிர்பார்த்தது.

அந்த ஆண் குழந்தைகளே வளர்ந்ததும் கல்வி, கலைகளை கற்றனர். காவியங்கள் படைத்தனர். பெண்களை ஒட்டுமொத்தமாகவே ஒதுக்கிவிட்டனர்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு பெண்கள் எப்படி இருந்தார்கள்? 

பெண்களுக்கு சமுதாயத்தில் முக்கியத்துவம் கொடுக்காததால் அவர்கள் எல்லாம் கிணற்று தவளைப் போலவே எதுவும் தெரியாமல் இருந்தனர். அறிவான விஷயங்களை ஆண்கள் மாத்திரமே பேசினார்கள்.

ஒருக்கட்டத்தில், அந்த ஆண்களுக்கு, அவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்களும் "போர்" அடித்துவிட்டார்கள். அறிவுப்பூர்வமான விஷயங்கள் அந்த பெண்கள் தங்களுடன் பகிர்ந்து கொள்ளாததால் அவர்கள் மேல் வெறுப்புற்றனர்.

"இப்படி அறிவே இல்லாத பெண்ணிடமா செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும்?" என்றுகூட சிந்தித்தனர். அதற்கான மாற்றுத் தேடலையும் துவங்கினர்.

ஒரு மனித ஆண் மனித பெண்ணிடம்தானே உறவு வைத்துக்கொள்ள வேண்டும்? அதுதானே இயற்கையின் நியதியும்!

ஆனால், கி.மு.க்கு முந்தைய ஆணோ அந்த இயற்கையின் நியதியை தவிடுபொடியாக்க முயற்சித்தான். அதற்கான செயலிலும் இறங்கிவிட்டான். சில ஆண்கள் ஆண்களுடனேயே உடலால் இணைந்தனர். சில மாவீரர்களும், தத்துவ ஞானிகளும்கூட இதற்கு விதிவிலக்கல்ல.
கிரேக்க காவியங்களை அலசிப் பார்த்தால் இதற்கான ஆதாரங்கள் நிறையவே கொட்டிக்கிடக்கின்றன.

ஆணும், ஆணும் நேசித்த அந்த காமம் - காதலுக்கு "கிரேக்க காதல்" என்றே பெயரும் சூட்டிவிட்டார்கள்.

ஆண்களுக்குள் ஏற்பட்ட இந்த வினோத ஆசையால், ஆண்களின் அழகும், கவர்ச்சியும் பொங்கி வழியும் சிற்பங்கள் ஏராளமாக செதுக்கப்பட்டன. ஓவியங்களும் தீட்டப்பட்டன. ஏன்... இதை மையமாக வைத்து நாடகங்களும் எழுந்தன. ஆண் கடவுள்கள் மனித ஆண்களை காதலிக்கும் கதைகளும் கூட பரப்பப்பட்டன.

இப்படி ஆண்களை ஆண்கள் காதலித்த அதேநேரத்தில், குழந்தை பெற்றுக்கொள்ள பெண்களை தவறாமல் பயன்படுத்திக் கொண்டனர். தங்களால் கர்ப்பமுற்று ஒரு பெண் பெற்றெடுக்கும் குழந்தை ஆணாகவே இருக்க வேண்டும் என்றும் தங்கள் தெய்வத்தை வேண்டிக்கொண்டனர், அந்த கிரேக்க ஆண்கள்.

பண்டைய கிரேக்கத்தில் ஆண்கள் இப்படி இருக்க, இந்தியா, சீனா, எகிப்து போன்ற நாடுகளில் சில பெண்கள் உஷாராகவே இருந்தனர். தங்களுக்கு வந்த தடைகளையும் மீறி ஆண்களுக்கான கலைகளை கற்றுக்கொண்டனர்.

அவர்களை திருமணம் செய்து கொள்ள மறுத்த ஆண்கள், அவர்களுடன் கொஞ்சிப்பேசி மகிழ்வதில் மட்டும் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தனர். அவர்களை ஆசை நாயகியாக வைத்துக்கொள்ள ஆசைப்பட்டார்கள். சில ஆண்கள், வீட்டில் தனக்காக காத்திருக்கும் மனைவியை மறந்து பரத்தை என்று அழைக்கப்பட்ட இந்த ஆசைநாயகியுடன் பொழுதை போக்கினார்கள்.
இன்னும் சிலர் ஆசைநாயகி வீடே கதியென்று மூழ்கிப்போய் கிடந்தனர்.

இந்த ஆண்கள் ஆசைநாயகிகள் வலையில் வீழ்ந்துவிடக் காரணம், அந்த பெண்களின் தனித்திறமைகள்தான். அதேநேரம், அந்த ஆண்களின் மனைவியரோ கிணற்றுத் தவளையாகவே அறிவற்றவர்களாக இருந்தனர்.

இதற்கிடையில், ஆண் குழந்தைக்கு ஆசைப்படுவதில் உலகம் முழுவதும் உள்ள எல்லோரது விருப்பமும் ஒரேமாதிரியாக இருந்தது. ஆண் வாரிசு பிறக்கவில்லை என்றால், அந்த குடும்பங்களின் சொத்தை அரசே எடுத்துக்கொள்ளும் சட்டமும் ஆங்காங்கே நடைமுறையில் இருந்தது. அதனால், ஆண் குழந்தைக்காக பெண்கள் தவம் கிடந்தனர்.

அதையும் மீறி பெண் குழந்தை பிறந்தால் மனதை கல்லாக்கிக்கொண்டு அதை கொன்றனர். அரேபிய பாலைவன பகுதியில் வசித்த பெண்கள் தங்களது பெண் குழந்தையை பாலைவன மணலுக்கு அடியில் புதைத்துக் கொன்ற அதேநேரத்தில், இந்திய அம்மாக்களோ நெல் மணிகள், கள்ளிப்பால், அரளி விதை போன்றவற்றை கொடுத்து அந்த குழந்தைகளுக்கு முக்தி அளித்தனர்.

இதை ஒரு குற்றமாகவோ, பாவச் செயலாகவோ யாருமே கருதவில்லை. பெண்ணாக பிறந்தது, தங்களைப்போல் கஷ்டப்படாமல், அது காலாகாலத்தில் போய் சேர்ந்துவிடட்டுமே என்றுகூட எண்ணினார்கள்.

இப்படியே பெண் குழந்தைகளை கொன்று குவித்துக்கொண்டே போனால், அடுத்த சமுதாயம் எப்படி மலரும்? அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடுமே! - அவர்களும் சில நேரங்களில் இதை யோசித்தார்கள்.

அதனால், சில பெண் குழந்தைகள் அந்த பாதக கொலையில் இருந்து தப்பினர். ஆனாலும், சமுதாயத்தில் அவர்களுக்கு எந்தவித மதிப்பு-ம் கொடுக்கப்படவில்லை.

இப்படி பெண்கள் சமுதாயம் அடியோடு புறக்கணிக்கப்பட, காலப்போக்கில் அவர்கள் வேறு ஆயுதத்தை தூக்கினார்கள். அவர்களது உடல்தான் அந்த ஆயுதம்!

வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பெண்களில் சிலர் அப்போது தங்களது உடல் அழகின் மகிமையை உணர ஆரம்பித்தனர். தேவதாசி ஆனார்கள்.

சாதாரண பெண்கள் எந்த கலையும் கற்றுக்கொள்ளக்கூடாது என்ற தடை இருந்த அதேநேரத்தில், இந்த தேவதாசிப் பெண்கள் ஆண்களைப்போல் பல்வேறு கலைகளையும் கற்றனர். ஆயக்கலைகள் அறுபத்து நான்கையும் கற்றார்கள் என்றே சொல்லலாம்.

இதற்கான ஆதாரத்தை இந்திய காமசூத்ராவில்கூட காண முடிகிறது. "ஆயக் கலைகள் அறுபத்து நான்கும் தெரிந்திருந்தால்தான் ஒரு பெண் தேவதாசி என்ற அந்தஸ்தை பெற முடியும்" என்கிறது காமசூத்ரா.

இவ்வாறு தேவதாசி ஆன பெண்கள் அந்தந்த ஊரின் ஆண் தெய்வங்களை மணந்து கொண்டார்கள். அதனால், அவர்களது அந்தஸ்து உயர்ந்தது. தெய்வத்தின் மனைவி ஆனார்கள். ஒருக்கட்டத்தில் இவர்களை ஆண்கள் வியப்புடன் பார்த்தார்கள்.

இந்த தெய்வத்தின் மனைவியுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று தவியாய் தவித்தார்கள். அதற்காக எதையும் இழக்க அவர்கள் தயாரானார்கள். அந்த தேவதாசிகளுக்காக பணத்தை நீரென வாரியிறைத்தார்கள்.

நாளடைவில் அந்த தேவதாசிப் பெண்கள் தங்களுடன் இணைந்த ஆண்களை தங்களது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அவர்களை ஆட்டிப்படைக்கவும் ஆரம்பித்தனர். இந்த தேவதாசிகளிடம் பணக்காரன், பாமரன் மட்டுமின்றி அரசனே அடிமைப்பட்டு கிடந்தான்.
இதை பார்த்து வியந்த மற்ற பெண்கள் தங்கள் பாதையை மாற்றினர்.

தேவதாசிகளிடம் அழகும், அறிவும் கொட்டிக்கிடப்பதாக நினைப்பதால்தானே ஆண்கள் அவர்களைத் தேடி போகிறார்கள்? என்று எண்ணிய அவர்கள், தங்களது உடல் அழகை படிப்படியாக வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். ஆண்களிடம் கொஞ்சி கொஞ்சிப் பேசினார்கள். மார்பக அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். நடந்து செல்வதில்கூட மாற்றங்களை செய்தார்கள்.

இதற்கு உதாரணமாக ரஷ்யப் பெண்களையும், சீனப் பெண்களையும் கூறலாம். ரஷ்யப் பெண்கள் கால் விரல்களாலேயே நடக்க பழகினார்கள். சீனப் பெண்கள் பாதங்களை சிறு வயதில் இருந்தே இறுக கட்டி வைத்து, அதை சிறிய பாதமாகவே வைத்துக்கொண்டனர். அந்த சின்ன பாதத்தை சீன ஆண்கள் விரும்பி ரசித்தனர்.

- இப்படி படாத பாடுபட்டுதான் முன்னேறி இருக்கிறார்கள் பெண்கள்.


Share:

0 கருத்துகள்: