ஞாயிறு, 17 அக்டோபர், 2010

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்



ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அந்த நந்தவனத்தில் அன்றைய தினம் வழக்கத்திற்கு மாறாக பரபரப்பு தொற்றிக் கொண்டது. திடீரென்று அங்கிருந்து வந்த ஒரு குழந்தையின் அழுகுரல்தான் அதற்கு காரணம்.  அந்த நந்தவனத்திற்கு பூக்கள் பறிக்க வந்த பெரியாழ்வார், குழந்தையின் அழுகுரலைக் கேட்ட உடன் அந்த அழுகுரல் வந்த திசை நோக்கிச் சென்றார்.

அங்கிருந்த துளசி மாடத்தை அவர் நெருங்கிய போது அழகான பெண் குழந்தை ஒன்று அங்கே அழுதுக் கொண்டிருந்தது. ஓடிச்சென்று அந்தக் குழந்தையை அள்ளியெடுத்த அவர், அந்தக் குழந்தையை தன் நெஞ்சோடு அணைத்து கொஞ்சினார். குழந்தை அழுகையை நிறுத்தியது.

இறைவனே தனக்கு அந்த குழந்தையை அளித்ததாக கருதி ஆனந்தக் கூத்தாடினார். அந்தக் குழந்தைக்கு கோதை நாச்சியார் என்று பெயரிட்டு தன் குழந்தையாகப் பாசத்தை கொட்டி வளர்த்தார். 

அந்தக் குழந்தை வேறு யாருமல்ல. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள்தான்!

ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஆண்டாள் குழந்தையாக கண்டெடுக்கப்பட்ட நாள்தான் ஆடிப்பூரம் என்று இன்றும் கொண்டாடப்படுகிறது.

சிறு குழந்தையான ஆண்டாளுக்குத் தினமும் கண்ணனின் கதைகளை சுவைபட கூறுவார் பெரியாழ்வார். அதைக் கேட்டு வளர்ந்த ஆண்டாள், எப்போதும் கண்ணனின் நினைவாகவே இருந்தாள். 

பெருமாளுக்குத் தனது தந்தை தினமும் அணிவிக்கத் தொடுத்து வைத்திருக்கும் மாலையைத் தந்தைக்குத் தெரியாமல் தானே சூடிக்கொண்டு அழகு பார்ப்பாள். 

அருகே உள்ள கிணற்றைக் கண்ணாடியாக நினைத்து அதில் தன் அழகைப் பார்த்து ரசிப்பாள். பின்னர் மாலையைக் கழற்றி இருந்த இடத்தில் வைத்து விடுவாள். இந்த விபரம் எதுவும் தெரியாமல், அந்த மாலையைத் தான் பெருமாளுக்கு அணிவித்து வந்தார் பெரியாழ்வார்.


ஒருநாள் வழக்கம் போல் பெருமாளுக்கு உரிய மாலையை அணிந்து அழகு பார்த்துவிட்டுக் கழற்றி வைக்கும் போது அதில் ஆண்டாளின் தலைமுடி சிக்கிக் கொண்டது. ஆண்டாள் இதை கவனிக்கவில்லை. ஆனால், பெரியாழ்வார் இதைக் கவனித்து விட்டார்.

அவர், அந்த மாலையைப் பெருமாளுக்குச் சாற்றாமல் வேறு ஒரு மாலையை அணிவித்தார். ஆனால் அன்றிரவே பெருமாள் கனவில் தோன்றி, "முடி இருந்த மாலை உனது மகள் ஆண்டாள் சூடிய மாலை. அவள் சூடிக் களைந்த மாலையை அணிவதே எனக்கு விருப்பம். இனி அவள் அணிந்த மாலைகளையே எனக்கு அணிவிக்க வேண்டும்." என்று அருளினார். 

இதனால் ஆண்டாளுக்குச் "சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்" என சிறப்புப் பெயர் ஏற்பட்டது. 

அன்று முதல் இன்று வரை ஆண்டாள் சூடிய மாலையே வடபத்ர சயன பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இதற்கு "பூமாலை" என்று பொருள். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, ஆண்டாள், பட்டர்பிரான் புதல்வி, திருப்பாவை பாடிய செல்வி, வேயர்குல விளக்கு, ஆடிப்பூர நாயகி என வேறு பல சிறப்பு பெயர்களும் இவளுக்கு உண்டு.

திருமண வயதை அடைந்த ஆண்டாள் கண்ணனை அனுதினமும் நினைத்துத் தனக்கு ஏற்ற மணவாளன் அவன் தான் என உறுதி கொண்டாள். கண்ணனை நினைத்து மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி விரதம் இருந்து வணங்கி வந்தாள். இதையறிந்த பெரியாழ்வார், மகளின் அந்த விருப்பத்தை ஏற்ற போதிலும், "108 எம்பெருமான்களில் யாரைத் திருமணம் செய்ய விரும்புகிறாய்?" என்று கேட்டார். ஆண்டாளிடம் ஒவ்வொரு பெருமாளின் பெருமைகளையும் எடுத்துக் கூறினார்.

கடைசியில், ஸ்ரீரங்கநாதரின் சிறப்புகள் அவளுக்குப் பிடித்து இருப்பதாகவும் அவரையேத் திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினாள் ஆண்டாள். 

ஆண்டாள் விருப்பப்படி அவளுக்குத் திருமணம் செய்து வைக்க அவளை ஸ்ரீரங்கத்துக்கு பல்லக்கில் அழைத்துச் சென்றார் பெரியாழ்வார். தென் காவிரிக்கு அருகில் சென்ற போது ஆண்டாள் தன்னை ஏற்க இருக்கும் ரங்கநாதருக்கு எதிரே பல்லக்கில் சென்று இறங்கினால் கவுரவமாக இருக்காது என கருதினாள். அதனால் அந்த இடத்தில் இருந்து நடந்து செல்ல வேண்டும் என்று விரும்பினாள். 

அவளது விருப்பத்தை அறிந்த பெருமாளும் அவள் நடந்தால் பாதம் வருந்தும் என எண்ணி யாரும் அறியாதவாறு அவளை அங்கிருந்து ஆட்கொண்டார். 

பல்லக்கில் இருந்து ஆண்டாள் திடீரென்று மாயமாய்ப் போனதைக் கண்ட பெரியாழ்வார் திகைப்படைந்தார். பின்னர் தன் மகளை பெருமாள் அழைத்துக் கொண்டதை அறிந்த அவர் முறைப்படி தன் ஊருக்கு வந்து ஆண்டாளை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார். பெருமாளும் அதற்கு ஒப்புக் கொண்டார். 

அதன்படி பங்குனி உத்தரம் அன்று ஆண்டாளை ரெங்கமன்னார் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமணம் செய்து கொண்டார். இதன் அடிப்படையில் இன்றும் பங்குனி உத்திரம் நாளில் ஆண்டாள், ரங்கமன்னார் திருக்கல்யாணம் செய்து கொள்ளும் விழா சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. 

 -நெல்லை விவேகநந்தா.

(முத்துக்கமலத்தில் வெளியான எனது இந்த படைப்பை காண கீழே கிளிக் செய்யவும்)

Share:

0 கருத்துகள்: