வியாழன், 4 பிப்ரவரி, 2010

தாய்ப்பால் மகிமை

பிறந்த குழந்தைக்கு முதல் உணவாக டாக்டர்கள் பரிந்துரை செய்வது அதன் தாய்ப்பாலைத்தான். அதில் இல்லாத சத்துக்களே கிடையாது.

தாயிடம் இருந்து முதன் முதலாக கிடைக்கும் பாலை சீம்பால் என்கிறார்கள். பிறந்த குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கும். சீம்பாலில் அந்த சக்தி அதிகமாக உள்ளது. அந்த சீம்பாலை குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் அதன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதனால், எளிதில் அந்த குழந்தையை எந்த நோயும் தாக்காது.

நீண்ட நாட்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்று ஆராய்ச்சிகளே நிரூபித்துள்ளன.

இதுமட்டுமின்றி, தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கும், குழந்தைக்கும் இடையேயான பாசப் பிணைப்பு பலப்படுகிறது. ஒரு தாயானவள், தனது குழந்தையை மார்போடு அணைத்து பால் ஊட்டும்போது, அந்த குழந்தைக்கு தாயின் அன்பு, அரவணைப்பு, பாசம், பாதுகாப்பு கிடைக்கிறது. இவை ஒரு குழந்தையின் நல்ல மன வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது.
இவை கிடைக்காத குழந்தைகள் சமூக விரோதிகளாக மாறி விடுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஆனால், இன்றைய அவசர உலகில், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவே நேரம் இல்லை. அதனால் விரைவிலேயே புட்டிப்பாலுக்கு தாவி விடுகிறார்கள். அத்துடன், தாய்ப்பால் சுரப்பும் அவர்களிடம் குறைந்துபோய் விடுகிறது.

அவர்கள், மனதை அமைதியாக வைத்திருந்தால் தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். தாய்ப்பால் சுரப்பில் பிரச்சினையே இருக்காது என்கிறார்கள் மருத்துவர்கள்.

தாய்ப்பால் சீராக சுரக்க வேண்டும் என்றால், அந்த தாய்க்கு முதலில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட வேண்டும்.

அதன்பின், குழந்தையானது மார்புக் காம்பை சுவைக்கும்போது புரோலாக்டின், ஆக்ஸிடோஸின் ஆகிய இரு ஹார்மோன்கள் அவர்களது உடலில் சுரக்கின்றன. புரோலாக்டின் பால் சுரக்க உதவுகிறது. இதேபோல், ஆக்ஸிடோஸின் பால் சுரப்பித் திசுக்களில் இருந்து பாலை வெளியில் கொண்டு வருவதற்கு உதவுகிறது.

பிரசவத்திற்கு பிறகு முதல் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரையில், குழந்தையானது தாயின் மார்பகக் காம்பில் வாய் வைத்து சுவைக்க தெரியாத காரணத்தால் அதிகம் பால் சுரப்பதில்லை. அதை தவறாக எண்ணக்கூடாது. குழந்தை நன்றாக சுவைக்க ஆரம்பித்தவுடன், தோண்ட தோண்ட கிணற்றில் சுரக்கும் தண்ணீர்போல் தாய்ப்பாலும் சுரக்க ஆரம்பித்து விடும்.
வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற அவசரம் - பதட்டம், மனநெருக்கடி, கோபம் போன்றவற்றுக்கு ஒரு தாய் ஆளானால் அவரிடம் தாய்ப்பால் சுரப்பு குறைந்து போகும். அதனால் தாய்மார்களே... உங்கள் மனதை எப்போதும் ரிலாக்ஸ் ஆக வைத்திருங்கள்.

மேலும், ஒவ்வொரு தாய்மார்களும் தாய்ப்பால் கொடுப்பது எப்படி என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கு சில டிப்ஸ் :

1. தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கும் முன் குழந்தையை மார்பகத்தோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகுதான் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

2. குழந்தையானது மார்பக காம்பை நன்றாக சப்பி பால் குடிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், குழந்தையானது தாயின் மார்பகக் காம்பை தனது வாயால் சரியாக பற்றி இருக்கிறதா என்று சரிப்பார்த்துக்கொள்ள வேண்டும்.

3. குழந்தை விருப்பப்படும் போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அது எவ்வளவு நேரம் விரும்பி பால் குடிக்கிறதோ, அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்.

4. தாய்ப்பால் குடித்த குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க முயற்சிக்கக்கூடாது.

5. குழந்தையை படுக்க வைக்கும்போது, அதை அரவணைத்தபடி தாயும் படுத்துக்கொள்ள வேண்டும்.

Share:

0 கருத்துகள்: