செவ்வாய், 28 செப்டம்பர், 2010

அந்த விஷயத்தில் இவர்கள் கொஞ்சம் 'வீக்'


காண்டம் அணியும் விஷயத்தில் இன்றைய இளைஞர்கள் தடுமாடுகிறார்கள் என்று சொல்கிறது சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட சர்வே ஒன்று.

செக்ஸ் மற்றும் அதனால் ஏற்படுகிற பெண் கருத்தரித்தல் குறித்து ஆண்கள், பெண்கள் இடையே இந்த சர்வே நடத்தப்பட்டது. திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத இளைஞர்கள், இளைஞிகள் இதில் பங்கேற்றனர்.

உடலுறவின்போது என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுகிறீர்கள்? கருத்தடை சாதனம் பயன்படுத்தினீர்களா?

எச்.ஐ.வி. எப்படி தொற்றுகிறது என்று தெரியுமா? என்கிற விழிப்புணர்வு கேள்விகளுடன், அவர்களது திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் அனுபவங்கள் பற்றியும் கேள்விகள் கேட்டனர்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் எய்ட்ஸ் பற்றியும், அது தொற்றும் விதம் பற்றியும் தெரிந்து வைத்திருந்தனர். ஆனால், எச்.ஐ.வி. தவிர்த்து பிற பால்வினை நோய்கள் பற்றிய விழிப்புணர்வு அவர்களிடம் குறைவாகவே இருந்தது. 31 சதவீத ஆண்களும், 12 சதவீத பெண்களுமே அதுபற்றி தங்களுக்கு தெரியும் என்று கூறியிருந்தனர். மற்றவர்கள் தெரியாது என்று கைவிரித்துவிட்டனர்.

கருத்தடை சாதனங்கள் பற்றிய கேள்விகளுக்கு ஆர்வமாகவே பதில் அளித்தனர். ஆணுறை மூலம் பாதுகாப்பான உடலுறவு மேற்கொள்ளலாம், எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம் என்ற விழிப்புணர்வை 77 சதவீத ஆண்களும், 39 சதவீத பெண்களும் பெற்றிருந்தனர். வாய் வழியாக உட்கொள்ளும் கருத்தடை மாத்திரை பற்றிய விஷயத்தில் ஆண்கள் கொஞ்சம் தடுமாறித்தான் போய்விட்டனர். 20 சதவீத ஆண்கள் மட்டுமே அதுபற்றி தங்களுக்கு தெரியும் என்றனர். பெண்களில் 24 சதவீதம்பேர் கருத்தடை மாத்திரை பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளதாக கூறினர்.

திருமணம் ஆனவர்களிடம், திருமணத்திற்கு முன்னர் இந்த விழிப்புணர்வு பற்றி தெரியுமா? என்று கேட்டபோது தெரியாது என்று கைவிரித்துவிட்டனர். அவர்களில் 22 சதவீத ஆண்களும், 6 சதவீத பெண்களும் செக்ஸ் மற்றும் கருத்தடை தொடர்பான விஷயங்களை கேள்விப்படவே இல்லை என்று அப்பாவியாகச் சொன்னபோது, இந்த காலத்திலும் இப்படி இருக்குதா? என்று மூக்கின் மேல் விரலை வைத்தனர் ஆய்வாளர்கள்.

ஆக, கூட்டிக் கழித்து கணக்குப் போட்ட அவர்கள், இந்திய ஆண்களும், பெண்களும் கருத்தடை சாதனங்கள் மற்றும் செக்ஸ் விழிப்புணர்வு பற்றி தெரியாமலேயே திருமண வாழ்க்கைக்குள் நுழைகின்றனர் என்ற முடிவுக்கு வந்தனர்.

திருமணத்திற்கு முன்னரான செக்ஸ் உறவு பற்றிய கேள்விக்கு பதில் அளித்தவர்களில் ஆண்கள்தான் மெஜாரிட்டி. 74 சதவீத ஆண்கள் தங்களது காதலியோடு பழகியதாகவும், அவர்களில் நான்கில் ஒரு பகுதியினரே காதலியுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டதாகவும் வாய் திறந்தனர்.

பெண்களைப் பொறுத்தவரை ஐந்தில் 3 பேர் காதலன்களுடன் காதல் வளர்த்ததாக கூறினர். ஆனால், அவர்களில் 10 சதவீதம் பேரே உடலுறவில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

மேலும், திருமணத்திற்கு முன்பு காதலியுடனோ அல்லது விலை மாதுடனோ அல்லது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பெண்ணுடனோ உறவு கொண்ட ஆண்களில் பெரும்பாலானவர்கள், தாங்கள் பாதுகாப்பாற்ற உறவில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். அதேபோல், பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தாங்கள் விரும்பாமலேயே அந்த உறவில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

ஆக, எங்கேயோ போய் கொண்டு இருக்கிறது இந்த உறவு. இந்த விஷயத்தில் இன்றைய இளைஞர்களிடம் போதிய விழிப்புணர்வு இன்னமும் ஏற்படவில்லை என்பதையே மேற்படி ஆய்வு உணர்த்துகிறது.

Share:

0 கருத்துகள்: